திருவிளமர்

அழகே வடிவான ஆண்டவனை, இன்னும் அழகாக எங்கே காண்பது? அதுவும், படியெடுத்துத் தீட்டுவது போலன்றி, தாமேயாய், தம்மில் பேரெழிலாய் பரமன் காட்டும் பெருவேடத்தை எங்கே காண்பது?

அழகும் அருளும் ஒருசேர ஒளிகூட்டும் ஓவியத் திருவை எங்கே காண்பது?



- மானுடர்களான நமக்கு இரண்டு கண்கள் மட்டுமே; ஆயிரம் தலைகொண்ட ஆதிசேடனுக்கு எத்தனை கண்கள்; அத்தனை விழிகளாலும் அள்ளி விழுங்கிய பேரழகை எங்கே காண்பது?

வாருங்கள்; விளமர் செல்லலாம்; விள்ளாமல் துள்ளாமல் விரிசடையான் அழகை தரிசிக்கலாம்.

திருவிளமர் - மக்கள் வழக்கில் விளமல் என்று வழங்குகிற தலம்;

திருவாரூருக்கு அருகில், சொல்லப்போனால் திருவாரூரின் பகுதியாகவே திகழ்கிற தலம். திருவாரூர் - தஞ்சாவூர் சாலையில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அருகில் அமைந்துள்ளது. ஓடம்போக்கி ஆற்றின் தென்கரையில், வெகு கம்பீரமாகவும் பழைமையின் பெருமிதமாகவும் ஓங்கி நிற்கிற ஒய்யாரத் தலம்.

ஏழாம் நூற்றாண்டில், திருஞானசம்பந்தர் வருகை புரிந்த போது, இந்த இடம் நகராகவும் இருந்திருக்க வேண்டும்; விளா மரங்கள் நிறைந்த பகுதியாகவும் இருந்திருக்க வேண்டும். விளா மரங்களால் விளமர் என்ற பெயர்; நகர் என்பதால், ஞானசம்பந்தர் 'வளநகர்' என்கிறார்.



மத்தக மணிபெற மலர்வதொர் மதிபுரை நுதல்கரம்
ஒத்தக நகமணி மிளிர்வதொர் அரவினர் ஒளிகிளர்
அத்தக வடிதொழ அருள்பெறு கண்ணொடும் உமையவள்
வித்தகர் உறைவது விரிபொழில் வளநகர் விளமரே

- என்று சாதாரிப் பண்ணில், சீர்காழிச் செல்வப் பிள்ளை பாடியது காதில் ஒலிக்க, விளமர் செல்வோம், வாருங்கள்.

சிறிய கிராமம்; கோயிலைப் பற்றி ஊரில் விசாரிக்கும் போதே, 'எது, பதஞ்சலி மனோகரர் கோயிலா?' என்கிறார்கள். ஆமாம், சுவாமியின் திருநாமம், பதஞ்சலியுடன் தொடர்பு கொண்டது.

கோயில் வாசலில் நிற்கிறோம். கிழக்கு நோக்கிய கோயில்; எதிரில் குளம். அக்னி தீர்த்தம் என்று பெயர். கோயில் முகப்பு, கோபுரம் இல்லாவிட்டாலும் கம்பீரமாக இருக்கிறது. முகப்பின் ஒரு பக்கத்தில் விநாயகர். மறு பக்கத்தில் முருகர்; மயில் மீது அமர்ந்தவராக, கால் மேல் கால் போட்டபடி காட்சி தருகிறார். முகப்பைத் தாண்டி உள்ளே நுழைந்தால், வெளிப் பிராகாரம். இந்தப் பிராகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லை; தெற்குப் பகுதியில் மாத்திரம் நந்தவனம் அமைக்கப்பட்டுள்ளது.

உள்வாயிலுக்குச் செல்லும் பாதையில் பலிபீடம்; நந்தி. இந்தப் பாதைக்கு மேலே கூரை வேயப்பட்டுள்ளது. ஒற்றைமாட கோபுரம் கொண்டிருக்கும் உள் வாயிலைக் கடந்து சென்றால், உள்பிராகாரத்தை அடைந்து விடுகிறோம்.

பிராகாரம் மிக அழகு. தென்மேற்கு மூலையில், ஸித்தி விநாயகர் சந்நிதி. மூலவர் கருவறைக்கு நேர் பின்புறம் ஸ்ரீமகாலட்சுமி சந்நிதி. வடமேற்கு மூலையில் வள்ளி- தெய்வானை சமேத மயிலேறு சுப்பிரமணியர்; நான்கு திருக்கரங்களுடன் அபயமும் ஊரு ஹஸ்தமும் தாங்கியவராக தரிசனம் தருகிறார். வடக்குத் திருச்சுற்றில் கிணறு. இந்தச் சுற்றில் வலம் வரும்போது, அம்பாள் சந்நிதியையும் சேர்த்து வலம் வந்துவிடுகிறோம்.



வடக்குச் சுற்றில் வந்து, மீண்டும் கிழக்குச் சுற்றுக்குள் திரும்பும் இடத்தில், தனிக் கோயிலாக அருள்மிகு பைரவர் சந்நிதி. தெற்கே பார்த்த பைரவர்; நாய் வாகனத்துடனும் சாந்தமான திருவதனத்துடனும், அளவில் பெரியவராக நின்ற திருக் கோலத்தில் காட்சி தருகிறார்.

உள்பிராகார வலத்தை நிறைவு செய்து, எதிரில் தெரிகிற மூலவர் கருவறைக்குச் செல்லும் இடத்தில் நிற்கிறோம். பெரிய முகப்பு மண்டபம். அதைத் தாண்டி மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை; முகப்பு மண்டபத் திலேயே அம்பாள் சந்நிதியும் நடராஜ பீடமும் உள்ளன.

முகப்பு மண்டபத்துள் நுழைகிறோம். எதிரிலிருக்கும் மூலவரைப் பார்த்தபடி, ஒரு பக்கத்தில் பதஞ்சலி முனிவர்; இன்னொரு பக்கத்தில், சூரியன், பதஞ்சலி, வியாக்கிரபாதர்.

தாருக வனத்தில் பிட்சாடனராகத் தோன்றி, முனிவர்களின் ஆணவத்தைத் தகர்ந்தெறிந்த சிவப் பரம்பொருள், புலித் தோலை அரைக்கணிந்து, பாம்பு அணிகலன்களைச் சூடி, ஆனந்த தாண்டவம் ஆடி அருளினார். அந்தத் திருநடனத்தை, ஆனந்தமாகவும் மானசீகமாகவும் கண்டு களித்தார் திருமால். ஆதிசேடன் மீது அமர்ந்தபடி திருமால், இந்த ஆனந்தக் காட்சியைக் கண்டு புன்னகைக்க, ஆதிசேடனுக்கு அது என்ன என்று தெரிந்துகொள்ளும் ஆவல். திருமாலிடம் கேட்டார்; திருமால் சொன்னதைக் கேட்டு, தானும் காண ஆசை கொண்டார்.

திருமாலிடம் தன் ஆசையை ஆதிசேடன் தெரிவிக்க, சிவபெருமானை நோக்கித் தவம் செய்யும்படியும், அவர் அருளால் பூமிக்குச் சென்று பிறக்கும்படியும் திருமால் வழி சொல்லிக் கொடுத்தார். சிவபெருமான் அருளால், அத்திரி முனிவருடைய மனைவி அநசூயையின் கரங்களில் சிறு பாம்பாகத் தோன்றினார். அநசூயை, பாம்பென்று பார்த்துக் கைகளை உதற, அவளுடைய கால்களில் அஞ்சலி செய்து பாம்பு பணிய, பதங்களில்

அஞ்சலி செய்ததால், 'பதஞ்சலி' ஆக... ஆதிசேடனின் அவதார மாகப் பதஞ்சலி தோன்றினார்.

பரம்பொருளின் நடனக் காட்சி யைக் காணும் ஆவலை ஆதிசேடன் வெளிப்படுத்தியபோது, பூமியில் பிறந்து, ஏற்கெனவே அத்தகைய காட்சியைக் காண்பதற்காக சிதம்பரத்தில் தவம் செய்து கொண்டிருக்கும் வியாக்ர பாதருடன் இணைந்து அங்கேயே காத்திருக்கும்படி கூறினார் சிவபெருமான். அதன்படியே, பதஞ்சலியும் காத்திருந்தார். புலிக்கால் முனிவரான வியாக்ர பாதருக்கும், பாம்பு முனிவரான பதஞ்சலிக்கும், சிதம்பரத்தில், வியாழக்கிழமை, தைப் பூச நன்னாளில், திருநடனத் திருக்காட்சி கிட்டியது.

அதே பதஞ்சலி, திருவிளமர் திருத்தலத்துக்கும் வந்திருப்பார் போலும்! இங்கும் பதஞ்சலிக்கு அருளிய ஈசர்தாம் எழுந்தருளியிருக்கிறார்.

பதஞ்சலி இருந்தால், பக்கத்திலேயே வியாக்ரபாதரும் இருப்பார் எனும் வகையில், மண்டபத்தில் வியாக்ர பாதர் உருவம் உள்ளது. முகப்பு மண்டபத்தில் நின்று ஒருசேர சுவாமியையும் அம்பாளையும் தொழலாம். அம்பாள் சந்நிதிக்கு அருகில் நடராஜ சபை.

மகா மண்டப வாயிலில் நிற்கிறோம். சிறிய நந்தி; பலி பீடம். ஒரு பக்கம் உற்ஸவ மூர்த்தங்களுக்கான மேடை; இன்னொரு புறம் வாகனம் வைக்கப் பட்டிருக்கிறது. அர்த்தமண்டபம் தாண்டி பார்வையைச் செலுத்தினால்... ஆஹா, அருள்மிகு பதஞ்சலி மனோகரர்.

மடமாதுஎன வளர் மதில்அவை
எரிசெய்வர் விரவுசீர்ப்
பீடென வருமறை உரை செய்வர்
பெரியபல் சரிதைகள்
பாடலர் ஆடிய சுடலையில்
இடமுறை நடநவில்
வேடமது உடையவர் வியன் நகரது
சொல்லில் விளமரே

- என்று சம்பந்தர் பாடிப் பரவிய பதஞ்சலி மனோகரர் - வட்ட வடிவ ஆவுடையார். அலங்காரமாக தரிசனம் தருகிறார். 'விளமர் விளங்கும் வித்தகா' என்று வழிபட்டு நிமிர்கிறோம். மீண்டும் முகப்பு மண்டபம் அடைந்து, அம்பாள் சந்நிதி முன்பு நிற்கிறோம். அருள்மிகு மதுரபாஷிணி ஆன, யாழினும் மென்மொழி அம்மை. நின்ற திருக்கோலத்தில் அபயமும் வரமும் தாங்கியபடி கருணை காட்டுகிறாள். திரும்பவும் உள்பிராகாரத்தை வலம் வருகிறோம். சுவாமி கருவறை கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு (நின்ற கோலத்தில் சங்கு - சக்ரதாரியாக அருள் தருகிறார்), பிரம்மா (இவரும் நின்ற கோலமே), ஸ்ரீதுர்கை. தனி மண்டபத்தில் சண்டிகேஸ்வரர்.

முகப்பு மண்டப நுழைவாயிலின் மேல் பகுதியில், கயிலாசத் திருக் கோலத்தில் பார்வதி- பரமேஸ்வரர் காட்சி தர, பதஞ்சலியும் வியாக்ரபாதரும் நிற்கிற சிற்பம். திருவிளமர் தலத்தில், மார்கழி- ஆருத்ரா தரிசனம் விசேஷம். ஆருத்ரா (திருவாதிரை) திருநாளன்று, தியாகேசப் பெருமான், வியாக்ரபாதருக்கும் பதஞ்சலிக்கும் தம் இடது பாதத்தைக் காட்டியருளுவார். பிற நாட்களில், தியாகேசரின் இடதுபாதம் அலங்காரத்தில் மறைந்திருக்கும். ஆரூர் தியாகேசர் இடது பாதம் காட்டி அமர்ந்த தலம் இது. இதை ருத்ர பாத தரிசனம் என்பர். விளமர்- சிவபாதத் தலம். சக்தி பீடங்களில் ஸ்ரீ வித்யா பீடம்.

ஸ்ரீயாழினும் மென்மொழியாள் உடனாய ஸ்ரீபதஞ்சலி மனோகரரை வழிபட்டு அஞ்சலி செய்து பணிகிறோம். சுற்றிலும் காணப்படும் அமைதி, உள்ளத்துள்ளும் நிறைகிறது.

Comments