தங்கமாய் மிளிரும் ஈஸ்வரன்... தன்வந்திரியாய் அருளும் பெருமாள்!

தெய்வம் மனுஷ்ய ரூபேண... அதாவது, அடியவருக்கு அருள மனித வடிவிலும் வருவானாம் இறைவன்! அப்படித்தான், அந்த ஊருக்கு வந்து சேர்ந்தார் துறவி ஒருவர். வயல்கள் சூழ்ந்த ஊரின் அழகில் லயித்தவர், இங்கே சிதிலமடைந்து கிடக்கும் சிவாலயத்தைக் கண்டார்; கலங்கினார். ஆலயத்தின் சாந்நித்தியத்தை உணர்ந்தவர், அங்கேயே சில நாட்கள் தங்கினார்; தவத்தில் ஈடுபட்டார்.

எவருடனும் பேசாமல் தியானத்திலேயே மூழ்கியிருந்தவர், ஒருநாள்... இந்த வழியே சென்றவர்களை அழைத்தார். ''கோயில் கருவறைல, லிங்கத்துக்கு அடியில புதையல் இருக்கு. தோண்டுங்க... இந்தக் கோயிலுக்கு விமோசனம் கிடைக்கும்!'' என்று அருளினார்.

அவ்வளவுதான்! புதையல் விவரம் ஊரில் பரவியது. துறவி சொன்னதை வேதவாக்காகவே ஏற்றுக் கொண்டு லிங்கத்தின் அடிப்பாகத்தை தோண்டத் துவங்கினர்.

ஒன்று, இரண்டு, மூன்று... முப்பத்து நான்கு அடிகள் வரை தோண்டியாயிற்று. புதையல் தென்படவில்லை. அதேநேரம், அவர்களை வியக்க வைத்த ஒரு விஷயம்... கருவறையில் இருந்த லிங்க பாணம் 34 அடி ஆழம் பூமியில் வேரோடி இருந்ததாம்!



தேடி வந்ததென்னவோ பொன்னும் பொருளுமாக இருக்கும் புதையலை. ஆனால், இதுவல்லவோ உண்மையான புதையல்! 'அத்தனை மகத்துவம் வாய்ந்த ஆலயமா இது...' என வியந்து, லிங்கத் திருமேனியைத் தொழுது, துறவி இருந்த இடத்துக்கு ஓடோடி வந்தனர். துறவியைக் காணோம்!

வந்தது துறவியா... இறைவனா? யாருக்குத் தெரியும்? ஆனால் ஒன்று... ஊர்மக்கள் ஒன்று திரண்டு, கோயிலைப் புனரமைத்தனர்; காஞ்சிப் பெரியவர்களின் முன்னிலையில் பிரமாண்டமாக கும்பாபிஷேகம் நடத்தினர். இன்றைக்கும் சாந்நித்தி யம் பொங்க, அருள்பாலிக்கிறார் சிவனார்!

அற்புதமான இந்த லிங்கம் கொலுவீற்றிருக்கும் தலம்... திருமாதலம்பாக்கம். அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து தக்கோலம் செல்லும் வழியில், சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள இந்தத் தலம், திருமால் சிவபூஜை செய்த பெருமைக்குரியது.

ஜலந்திரன்... 'எனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதி யில் தோன்றும் ஒருவனால் மட்டுமே எனக்கு அழிவு நேர வேண்டும்' என்று சிவனாரிடம் வரம் பெற்ற அசுரன்! இப்படியரு வரம் எதற்காக? எல்லாம்... அசுர குரு சுக்கிராச்சாரியாரின் அறிவுரை! யாராக இருந்தாலும்... சொந்த இடத்தில் அவருக்கான செல்வாக்கும் பலமும் அதிகமாகத்தான் இருக்கும். அதுமட்டுமா? எதிரி, தனது ஆளுகைக்கு உட்பட்ட இடத்தில் இருந்தால் எளிதில் அடையாளம் கண்டு வீழ்த்திவிடலாமே! இதையெல்லாம் மனதில் கொண்டே இப்படியரு வரத்தைக் கேட்கச் சொன்னாராம் சுக்கிராச்சாரியார்.



அதன்படியே வரம் வாங்கி வந்த ஜலந்திரன், தேவர்களைக் கொடுமை செய்தான். தேவர்கள், திருமாலிடம் சரண் புகுந்தனர். அசுரனின் வரம் குறித்து அறிந்திருந்த திருமால், 'வரம் தந்த ஈசனே அசுரனை அழிக்க வல்லவர்' என்று முடிவு செய்தார்.

எனவே, பூலோகத்தில்- புண்ணியம் மிகுந்த திருமாதலம்பாக்கத்துக்கு வந்தார்.அசுரனின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த இந்த இடத்திலேயே, சகஸ்ரநாமம் கூறி சிவனாரை வழிபட்டார்.

அவரது பிரார்த்தனை பலித்தது. அசுர னின் வரப்படி... அவனை அழிக்க, அவனது இடத்திலேயே சுயம்புவாகத் தோன்றினார் ஈசன்; சூரியகோடி பிரகாசத் துடன் திருமாலுக்கு காட்சி தந்தார். 'விரைவில் ஜலந்திரன் அழிவான்' என்று அருள் புரிந்தார். அதன்படியே திருவிற்குடி தலத்தில் ஜலந்திரனை வதம் செய்தார். இன்றும்... பெருமாளுக்குக் காட்சி தந்த அதே ஜொலிஜொலிப்புடன் அருள்கிறார் ஸ்ரீதிருமாலீசர்!

கிழக்கு நோக்கிய ஆலயத்தில், தனித் தனிச் சந்நிதிகளில் அருள்பாலிக்கிறார்கள் திருமாலீசரும், அம்பாள் ஸ்ரீதிரிபுர சுந்தரியும். சோழர்களால் திருப்பணி கண்ட ஆலயம் என்கிறார்கள். நுழைவாயிலின் உள்புறமாக இரண்டு பக்கமும் உள்ள சூரிய- சந்திரரை தரிசித்து, பிராகார வலம் வருகிறோம். கோஷ்ட தெய்வங்கள், சப்த மாதர்கள் மற்றும் ஸ்ரீபைரவரை வழிபட்டு, ஸ்வாமி சந்நிதியை அடைகிறோம்.

கருவறை நுழைவாயிலின் இருபுறமும் உள்ள ஸ்ரீமுருகன்- ஸ்ரீகணபதியை வணங்கி விட்டு, மூலவரை தரிசிக்கிறோம். சதுர வடிவ ஆவுடையாருடன்... தோண்டத் தோண்ட சுமார் 34 அடிகள் வரை வேரோடியிருந்ததே... அதே லிங்கம்! அதர்மம் அழிக்க சுயம்புவாய் தோன்றி திருமாலுக்கு அருளிய திருமாலீசர்; அருள்மிகு பொன்னிற மேனிநாதன்!

... புவனங்கடந்தன்று பொன்னொளி மின்னும்
தவளச் சடைமுடித்த தாமரையானே... - என்று

திருமந்திரம் போற்றும் ஈசன் இவர்தானோ?

'ஆமாம்!' என்கிறார் கோயில் அர்ச்சகர் சிவசங்கரசிவம். அத்துடன், தீபாராதனை ஒளியில் லிங்க பாணத்தில் தெரியும் பிரம்ம ரேகையைச் சுட்டிக் காட்டுபவர், ''பெரும்பாலான சிவாலயங்களில்.. லிங்க பாணத்தின் நெற்றி பாகத்தில் மட்டுமே தென்படும் பிரம்ம ரேகை, இந்தத் திருமேனியில் பாணத்தின் பின்புறம் வரை நீண்டுள்ளது, விசேஷமான அம்சம்'' என்கிறார்.

பரவசத்துடன் மீண்டும் வணங்குகிறோம் திருமாலீசரை. ஆமாம்... ஆவுடையாரின் மீது சிறு உற்ஸவ விக்கிரகம் ஒன்று உள்ளதே?! ஆச்சரியம் மேலிட அர்ச்சகரிடமே கேட்டோம். ''அரியும் அரனும் சேர்ந்து அருள்பாலிச்ச கோயில் இது. பிற்காலத்தில்தான் தனித்தனியா சந்நிதியா அமைச்சிருக்காங்க. சிவன்கூடவே இருக்கணும்னு பெருமாள் நினைச்சாரோ என்னவோ... கொஞ்ச நாளைக்கு முன்னாடி, இந்தக் கோயில் தர்மகர்த்தாவோட நிலத்துல உழும்போது, இந்த பெருமாள் விக்கிரகம் கிடைச்சுதாம். அதை, கோயிலில் ஒப்படைக்க, கருவறையிலேயே அமர்க்களமா எழுந்தருளிட்டார் இந்தப் பெருமாள்!'' என்கிறார் சிலிர்ப்புடன்!

அம்பாள் திரிபுரசுந்தரி, கேட்டதைக் கொடுக்கும் கற்பக விருட்சம்! வெள்ளிக் கிழமைகளில் ஸ்ரீலலிதா சகஸ்ரநாம- குங்கும அர்ச்சனை செய்து அம்பாளை வழிபட, மலை போன்ற இன்னல்களும் பனி போல் நீங்குமாம்!

தேவார மூவராலும் வைப்புத் தலமாக வைத்துப் பாடப் பெற்ற தலம் இது என்கிறார்கள். இதற்குச் சான்றாக, 'தடவரைகந்த திண்டோட் ஜலந்திரன் கயிலை வெற்பில்...' எனத் துவங்கும் காஞ்சி புராணப் பாடலை சுட்டிக் காட்டுகிறார்கள்.

தந்தை ஜமதக்னி முனிவரின் கட்டளைப்படி, அன்னை ரேணுகாவின் தலையைக் கொய்ததால் தோஷத்துக்கு ஆளான பரசுராமர், இங்கே வந்து வழிபட்டு அருள் பெற்றாராம். ஆகவே, இங்கு வந்து வழிபட, பித்ரு கடன்கள் செய்யாததால் ஏற்பட்ட பாவங்கள் விலகுமாம். தவிர, ஏப்ரல் 1,2,3 ஆகிய நாட்களில் சூரிய ஒளி ஈசனின் மேனியில் படுகிறது. இந்த சூரிய பூஜையில் கலந்து கொண்டால் சர்ம ரோகம் நிவர்த்தியாகுமாம்.

மூன்று தல விருட்சங்கள் இந்தக் கோயிலுக்கு! திருமகளின் அருள் பிரசாதமான பூமாலையை அவமதித்ததால், துர்வாசரின் சாபம் பெற்றான் இந்திரன்; அவனது செல்வங்கள் பறிபோயின. சாபவிமோசனம் வேண்டிய இந்திரனுக்கு, ''திருமாலும் திருமகளும் அனுதினமும் சிவபூஜை செய்யும் தலத்துக்குச் சென்று வழிபடு! '' என்று அருளினார் முனிவர். அதன்படியே இங்கு வந்த இந்திரன், தீர்த்த நீராடி கரையேறும்போது, நெல்லி, துளசி, அகத்தி ஆகிய விருட்சங்கள்

தோன்றின. முறையே... ஈசன், திருமால், திருமகள் ஆகியோரின் அம்சமாகத் திகழ்ந்த விருட்சங்களைக் கண்டு சிலிர்த்தவன், மெய்யுருக திருமாலீசரை வழிபட்டு இழந்த செல்வங்களை மீண்டும் பெற்றானாம்.

நாமும் திங்கட்கிழமைகளில் இங்கே வந்து, திருமாலீசருக்கு சகஸ்ரநாம பூஜை செய்து, 11 முறை கோயிலை வலம் வந்து வழிபட, அனைத்து ஐஸ்வரியங்களும் கிடைக்கும்!

பிணி தீர்க்கும் பெருமாள்!

ஸ்ரீநிவாச பெருமாள் எனும் நாமத்துடன் தனிச் சந்நிதியில் அருள்கிறார் மகாவிஷ்ணு. சங்கு-சக்ரதாரியாக நான்கு திருக் கரங்களுடன் அருளும் ஸ்ரீநிவாசரின் விக்கிரகம், நவ பாஷாண மூர்த்தங்களுக்கு இணையான மகத்துவம் கொண்டதாம்.

இவருக்கு பாலபிஷேகம் செய்விக்கும்போது, பெருமாளின் திருமேனியும், வழிந்தோடும் பாலும் நீலநிறத்தில் தோன்றுவதை இன்றும் தரிசிக்கலாம். தன்வந்திரி அம்சமாக அருள்பாலிக்கும் இந்தப் பெருமாளுக்கு தொடர்ந்து 11 ஏகாதசி நாட்கள் அல்லது 11 சனிக்கிழமைகளில் பாலபிஷேகம் செய்து வழிபட்டு, அந்தப் பாலைப் பருகி வந்தால் சரும நோய்கள் நீங்குமாம். ஏகாதசித் திருநாளில் இவருக்கு சந்தான ஹோமம் செய்து வழிபட்டால் விரைவில் பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள்.

பூஜை, ஹோமம் முதலான விஷயங்களுக்கு, பக்தர்கள் முன்கூட்டியே ஆலயத்துக்குத் தகவல் தெரிவித்துவிட்டுச் செல்லலாம்.

ஆலய தொடர்புக்கு பி. சிவசங்கர சிவம் (99622 02019)

Comments