ஆன்மாவை வெள்ளையாக்கு!

தன் சுவடை அழித்துக்கொண்ட சந்திரயோகி சித்தர்!

சித்தர்களைத் தேடிச் செல்லும் யாத்திரை, கோயில் பயணம்போல நமது விருப்பத்துக்கு உட்பட்டது அல்ல. அவர்கள் அனுமதித்தால் மட்டுமே அந்தத் தரிசனம் சாத்தியம். ‘வா... வராதே’ என்பதைக்கூட சித்தபுருஷர்களே தீர்மானிக்கிறார்கள் என்கிற சமிக்ஞையை அறிந்த சம்பவம் சமீபத்தில் நடந்தது.

சென்னை பெரம்பூர் மங்களபுரத்தில், ஐந்து லைட் பகுதியில் சித்தர் சந்திரயோகியின் சமாதி கோயில் இருப்பதை ஒரு பழைய புத்தகத்தில் படித்ததாக இந்திய ஆன்மிக கழகத்தின் செயலாளர் கே.தணிகாசலம் சொன்னதன் பேரில், சித்த யாத்திரையைத் தொடங்கினேன். வண்டியை ஸ்டார்ட் செய்துவிட்டு தெருவைக் கடக்கும்போது பின் டயர் பஞ்சர் ஆனது. சகுனங்கள் என்கிற மூட நம்பிக்கை மீது காதல் இல்லாக் காரணத்தால் பஞ்சர் ஒட்டிக்கொண்டு கிளம்பினேன். ஐந்து நிமிட பயணத்துக்குள் மீண்டும் பஞ்சரானது. டூ வீலர் பஞ்சர் ஒட்டும் இடம் தேடி, சரிசெய்து கிளம்ப அரைநாள் தாண்டியது.

பெரம்பூர் மங்களபுரத்தில் நுழையும் போது, ‘சந்திரயோகி சமாதி தெரு’ என்று எல்லாக் கடைகளின் விளம்பர பலகையின் கீழும் தெரு பெயர் பளிச்சிட்டது.

சித்தரின் பெயரில் ஒரு தெரு. படிக்கவே பரவசமாயிருந்தது. ஆனால், காய்கறி கடையிலிருந்து தங்க நகைக்கடை வரை விசாரித்தாயிற்று. அப்படி ஒரு சமாதி அங்கு இப்போது இல்லை. சந்திரயோகி சமாதி கோயிலின் சுவடே தெரியாதபடி, இன்று கட்டடங்கள் முளைத்து தெரு பெயரில் மட்டுமே சித்தர் சிரித்தார். ‘வராதே என்றுதான் பஞ்சர் ஆக்கினேன். மீறி நீ வந்தால் நான் பொறுப்பல்ல’ என்று யாரோ சொல்வதுபோல் இருந்தது. ‘நம்பிக்கையே மூடம்தான் நடக்காத வரை. இதில் தனியாக என்ன மூட நம்பிக்கை’ என்று இசையமைப்பாளர் இளையராஜா சொன்னது நினைவில் வந்தது. நமது ஆன்மிக வேர்களின் விலைமதிப்பை அறியா மக்களாகிப் போனோமா? இல்லை..

‘கோயிலாவ தேதடா குளங்க ளாவதேதடா

கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே

கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே

ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே’

என்கிற சிவவாக்கியர் வாக்குபடி, எல்லாம் மனத்துள்ளே என்றெண்ணுவதா? அதே தெருவில் ‘சந்திரயோகி சித்தா சரணம்’ என மனத்துள்ளே வணங்கி பயணத்தைத் தொடங்கினேன். இப்போது சித்தரின் சமிக்ஞைகள் பிடிபடலாயிற்று...

அதே பெரம்பூரில் இருக்கும் மதுரை சாமி சித்தர் சமாதியை பார்க்கத் திட்டமிட்டேன். செம்பியம், வீனஸ் தியேட்டர், 2வது குறுக்குத் தெருவின் வலது பக்கமுள்ள மதுரை சாமி மடத் தெருவில் சமாதி கோயில் இருப்பதை அறிந்து, அக்கோயில் பூசாரி வீட்டைக் கண்டடைந்து, அவர் வீட்டு வாசலில் நின்றேன். “வணக்கம் தம்பி. என் பேரு பாலு முதலியார். ‘பத்திரிக்கையிலிருந்து வருவாங்க. கோயிலைத் திறந்து காட்டுங்க. நாலு ஜனங்களுக்கு சாமி அருள் கிடைக்கட்டும்’னு ஒரு தம்பி வந்து சொன்னாரு. வாங்கப் போகலாம்” என்றபடி, கோயிலுக்கு அழைத்துச் சென்று திறக்கலானார். கோயில் வாசலில் இருந்த நாய் என்னைப் பார்த்து குரைக்கத் தொடங்கியது. அதுசரி... எனக்கு கோயிலைத் திறந்துக் காட்டச் சொல்லி யார் சொன்னது? நான் வருவது எனக்கே ஊர்ஜிதம் இல்லாத போது... பிறகு விசாரிக்கலாம் என்றது பத்திரிக்கை புத்தி.

மதுரையிலிருந்து வந்த சாமியார் என்பதால், இந்தச் சித்தரை மக்கள் ‘மதுரைசாமி’ என்றே பெயர் சூட்டி அழைக்கலாயினர். அப்போது இந்த ஊருக்கு செம்பியம் கிராமம் என்று பெயர். இப்போது கோயில் இருக்கும் இடம் ஏரிக்கரை. இங்கு ஏரிக்கரையில் சலவைத் தொழிலாளிகள் துணி துவைப்பர், இன்னொரு புறம் செங்கல் சூளை வேலை நடக்குமாம். மதுரை சாமி ஊருக்குள் சென்று வீடுவீடாக உணவை யாசகம் கேட்டு வாங்கி வந்த சாதங்களை மொத்தமாக கிளறி சலவைத் தொழிலாளிகளை கூப்பிட்டு வரிசையாய் உட்கார வைத்து உணவு பரிமாறுவாராம். ‘அக அழுக்கை அகற்றி ஆன்மாவை வெள்ளையாக்கு என குறியீடாய் சொல்லும் குடிமக்களே உண்பீர். உங்கள் பசியில் பகவான் இளைப்பாறுவார்’ என்றபடியே தனது அன்னதான கடமையை தினந்தோறும் செய்வாராம். சாமியின் மதிப்பை சட்டெனப் புரிந்துகொண்ட அந்த ஏழைகளால், மதுரை சாமியின் கீர்த்தி பரவத் தொடங்கியது. எல்லா பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு ‘ஓம் நமச்சிவாயம்’தான். எல்லா வியாதிகளுக்கும் ஒரே மருந்து சிவ திருநீறுதான் என்று சிவ மந்திரத்தை சொல்ல வைத்து அவர்கள் சொன்னதும் திருநீறு அளித்து அவர் நீக்கிய நோய்கள் ஏராளம். அவர் தீர்த்த பிரச்னைகள் தாராளம்.

ஒருநாள் எல்லோரையும் அழைத்து “என்னை சிவன் அழைக்கிறான். 6X6 குழி வெட்டுங்கள். நான் குழியில் உட்கார்ந்ததும் துணி வெளுக்க பயன்படுத்தும் சாலை என் மேல் கவிழ்த்து மண்ணை மூடிவிடுங்கள்” என்றாராம். அதனை உத்தரவாக ஏற்று செய்தார்களாம். அவர் ஜீவ சமாதி அடைந்தது ‘1901ஆம் வருடம், பிப்ரவரி தமிழ் சார்வரி - மாசி மீ - 8 மங்கள வாரம் காலை - அமாவாசை திதி, சதய நட்சத்திரம் கூடிய சுபதினத்தில்’ என்று கல்வெட்டு குறிப்பு சொல்கிறது.

“ஏரிக்கரையோரம் சூளை தொழில் செய்துவந்த மு.வேலு நாயக்கர் என்பவர், தனது சூளையிலிருந்து கல்கொடுத்து 1906ல் இந்தக் கோயிலைக் கட்டினாராம்” என்றார் பூசாரி பாலு. கொஞ்சம் அமைதியாய் என்னைப் பார்ப்பதும் பிறகு குலைப்பதுமாக இருந்தது அந்தக் கோயிலில் இருந்த நாய்.

“இது சக்தி வாய்ந்த சாமிங்க. ஒவ்வொரு பிரதோஷத்துக்கும் ஜனங்க வருவாங்க. லிங்கம் பிரதிஷ்டை செஞ்சிருக்கும் சாமி சமாதிக்கு பாலாபிஷேகம் பண்ணுவாங்க. ரொம்ப நாளா குழந்தை இல்லாதவங்களும் படிச்சு சரியான வேலையில்லாதவங்களும் வருவாங்க. இல்லாததை தர்றதில் இவருக்கு ஈடு இல்ல” என்று சித்தர் மதுரை சாமியின் பெருமை பேசினார் சித்தரின் பக்தை ஜோதி.

110 வருடம் பழமை வாய்ந்த சித்தரின் சமாதியில் தரிசனம் செய்வது பெரும் பேறு. விபூதி பூசி, ‘வஞ்ச நமன் வாதனைக்கும் வன் பிறவி வேதனைக்கும் அஞ்சி உனை அடைந்தேன். ஐயா! பராபரமே’ என்று தாயுமானவர் வேண்டியதையே நானும் வேண்டி கிளம்பினேன். விபூதி பூசிய என் முகம் பார்த்ததாலோ என்னவோ, அந்த நாய் குரைப்பதை விட்டுவிட்டு என் பின்னாலேயே வந்தது.

எனக்கு இந்த பைரவர்கள் மீது கொஞ்சம் பயம். திரும்பி திரும்பி பார்த்தபடியே வந்தேன். அனைவருக்கும் நன்றி சொல்லி, அடுத்த சித்தரைப் பார்க்கக் கிளம்பினேன். பாதி வழியில், ‘அடடா எனக்கு உதவ பூசாரியிடம் சொன்ன அந்த நபர் யார் என கேட்காமல் விட்டோமே என்ற எண்ணம் ஓடியது. பூசாரியும் ‘ஒரு தம்பி’ என்றுதான் சொன்னார்.

ஆக அவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை அது, ‘யாரோ ஒரு தம்பி’யாக இருக்காது. எல்லாம் அறிந்த தம்பிரானோ?

Comments

Post a Comment