ஆடி வரும் திருவாதிரை;ஓடி வரும் ஏகாதசி!

மாதங்களில் சிறந்தது என்று நாம் மார்கழியைக் கொண்டாட பலப்பல காரணங்கள் - திருப்பாவை, திருவெம்பாவை என வைணவ - சைவ மரபுகளின் தமிழ் மறைகளை இம்மாதத்தில் பாடுவதும் சிந்திப்பதும் புண்ணியமாகக் கருதப்படுகிறது. வானொலி, தொலைக்காட்சிகளில்கூட இரண்டும் அடுத்தடுத்து இடம்பெற்று அனைத்து தரப்பினரையும் ஈர்த்து பக்திகொள்ள வைக்கின்றன.

அறுபத்து மூவருள் ஒருவரான திருநாளைப் போவார் என்கிற நந்தனாரோ, ஒரே சமயத்தில் ஆடல் அரசையும், அரவணையரசனையும் தரிசித்து மகிழ்ந்திருக்கிறார். அதுவும் அக்னி பரீட்சை என்றும் கொடிய சோதனையில் வென்று, அகத் தூய்மையே தூய்மை என்பதை மெய்ப்பித்துவிட்டு சிதம்பரம் வருகின்ற நேரத்தில் அந்த விசேஷ பரவச அனுபவம் அவருக்குக் கிட்டுகிறது. நடராஜர் ஆலயத்தின் கொடி மரத்தருகே நிற்கிறபோது சித்சபேசனும் தில்லை கோவிந்தராஜனும் ஒருசேர காணக்கிடைக்கின்றனர். நந்தனாரின் பரவசத்தை கோபாலகிருஷ்ண பாரதியார் ஓர் அழகான கீர்த்தனையில் பதிவு செய்திருக்கிறார். ‘தில்லையம்பலத்தானை, கோவிந்தராஜனை தரிசித்துக் கொண்டேனே’ என்று தொடங்கி துளசி மணத்தையும் தும்பைப் பூ மாலைகளையும் இழைத்துச் செல்கிறது பாடல். ‘குரட்டைவிட்டுத் தூங்குபவனையும்’ ‘கொட்டு முழக்குக்கு ஆடுகிறவனையும்’ செல்லமாகக் சாடுகிறது. ‘அருமறைப் பொருளுக்கெட்டாத வடிவமிங்கே, ஆனந்த மூர்த்தியென்று ஆதரிப்பதுமங்கே’ என்று முடிகிறது!

இப்பாடல் போற்றும் இரு தெய்வங்களையும் நாம் மார்கழியில் சிறப்பாக நினைவுகூர்ந்து கொண்டாடுகிறோம். திருவாதிரை, வைகுண்ட ஏகாதசி தினங்களில், அதிலும் திருவாதிரை அந்த நடராஜ மூர்த்திக்கே சிறப்பாக உரியது. அவனது திருநட்சத்திரமான அன்றுதான், உலகம் புதிதாக சிருஷ்டிக்கப்பட்டது என்பது நம்பிக்கை.

மார்கழி திருவாதிரையன்றுதான் நடராஜப் பெருமான் மாணிக்கவாசகருக்கு தரிசனம் கொடுத்தார் என்பதால், சிதம்பரத்திலும் வேறு பல சிவாலயங்களிலும் ஒன்பது நாட்களுக்கு மாணிக்கவாசகர் திருவிழாவே நடைபெறுகிறது. இந்த தினங்களில் அவ்வடியாரின் திருவுருவச் சிலை பவனி வந்து, நடராஜர் முன் நிறுத்தப்பட்டு திருவெம்பாவை பாடல்கள் பாடப்படும். ஒவ்வொரு பாடலுக்குப் பிறகும் தீபாராதனை நடைபெறும்.

கண்கொள்ளாக் காட்சியாக இவ்வைபவம் முடிந்து, பத்தாம் நாள் நடராஜர் சிவகாமிக்கு அதிகாலையில் அபிஷேகம் நடைபெறுகிறது. அதன் பிறகு நிகழும் வீதியுலாவில் அம்பலவாணனுடன் அவன் அடியார்களான மணிவாசகரும் சுந்தரரும்கூட உடன் செல்கிறார்கள்.

பல்வேறு ஊர்களில், சுற்றப்பட்டுக் கோயில்களில் உள்ள ஒரே இடத்துக்கு ஊர்வலமாக எடுத்து வந்து ஆராதனை செய்யும் வழக்கம் இருக்கிறது. கும்பகோணத்தில் 22 நடராஜ பெருமான்கள் ஒன்று சேர்வார்களாம் திருவாதிரைக்கு!

சிதம்பரத்தில் திருவாதிரை அதிகாலை அபிஷேகம் நடை பெறும்போதுதான், நாம் நமது இல்லங்களிலும் திருவாதிரை நோன்பிருக்கிறோம். களி தயாரித்து நைவேத்தியம் செய்து, ஏழு காய் கூட்டுடன் உண்கிறோம். களியின் தாத்பர்யம் என்ன?

‘திருவாய் திற, ஒரு வாக்கு அளி’ என்று மாணிக்கவாசகர் பாடியதைத்தான் ‘ஒரு வாய் களி’ என்பதாக மாற்றி அர்த்தம் செய்து கொண்டுவிட்டோமா? அல்லது கேரளத்தில் ‘திருவாதிரைக்களி’ என்று (களி - மகிழ்ச்சிக்களிப்பு) சொல்வதைத்தான் ருசிக்கும் பசிக்கும் ஏற்ப அர்த்தம் பண்ணிக் கொண்டோமோ... எவ்வாறாயினும் பண்டிகையின் இனிமை பிரசாதத்திலும் சேர்கிறது!

மாத ஏகாதசி விரதமே மிகவும் சிலாகித்துச் சொல்லப்படுகிறது. ‘அன்றைய தினத்தில் உபவாஸம் இருக்கிற பாக்கியம் கண்ட கண்டவருக்கெல்லாம் கிடைத்துவிடாது; அதற்கு நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும்’ என்று பொருள்பட ஒரு கீர்த்தனையே இயற்றியுள்ளார் புரந்தரதாஸர். பிரதி மாதமும் அமாவாசை, பௌர்ணமிகளிலிருந்து பதினொராம் நாள் வருவது ஏகாதசி திதி. திரும்பிப் பார்ப்பதற்குள் ஓடி ஓடி வந்துவிடும். அவ்விரு தினங்கள் உபவாஸம் இருந்தால் வயிற்றுக்கு ஓய்வு என்பதுடன், மனமும் அடங்கி, இறை நினைவில் லயிக்கும் என்பதாலேயே வழக்கம் உருவாகியிருக்கிறது போலும்.

அதிலும் மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசிக்கு இரவு முழுதும் கண் விழித்திருக்கும் விரதமும் சேர்ந்து கொள்கிறது சினிமா பார்ப்பதற்கோ சொக்கட்டான் ஆடுவதற்கோ அல்ல! திருமாலை நினைத்து, நற்கதி அருள பிரார்த்திப்பதற்கு.

ஸ்ரீரங்கம் முதலான வைணவ தலங்களில் வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய பத்து நாட்களுமே வைபவம்தான். பகல்பத்து ராப்பத்து என்று இரவும் பகலும் பாசுரம் ஓதி பெருமாளுடன் ஆழ்வார் ஆசார்யர்களையும் எழுந்தருளப் பண்ணி வழிபடும் அழகான மரபு, இன்றும் பக்தி சிரத்தையுடன் கடைப்பிடிக்கப்படுகிறது.

குருகூர் நம்பி, சடகோபன் என்றெல்லாம் பெயர்கள் கொண்ட நம்மாழ்வாருக்கு ஆழ்வார்திருநகரியில் (திருக்குருகூர்) ஆரம்பித்து, இந்த விதரணையான விழா, பத்தாம் நாள் அதிகாலை, ஆலயத்தின் சுவர்க வாசல் கதவு திறக்கப்படும். நம்மாழ்வார் அன்று வைகுண்டம் ஏகுவதாக ஐதீகம். அதே வாசல் வழியே நுழைந்து பெருமாளை தரிசிக்கும் பக்தர்களுக்குப் பரமபத பாக்கியம் கிட்டும் என்றும் நம்பிக்கை. கூட்டம் முட்டி மோத கேட்கவா வேண்டும்!

திருவாதிரையில் சிவனடியாரான மாணிக்கவாசகருக்குச் சிறப்பு என்றால், வைகுண்ட ஏகாதசியில் நம்மாழ்வாருக்கே முக்கியத்துவம்.

இந்தப் புண்ணிய தினங்களில் நாமும் இறைவனுடன்கூட அவனது மெய்யடியார்களையும் நினைந்துருகிப் பிரார்த்திப்போம். பக்தி என்பதை நாம் இன்று அறிவது அவ்வடியார்கள் மூலமாகத்தானே!

திருவாய் திற, ஒரு வாக்கு அளி!

திருநாளைப்போவாராகிய முனிவர் அக்கினியில் குளித்தெழுந்து கனகசபையில் வந்து மனமுருகி ஆனந்தம்பெருகி நமது ஆண்டவராகிய நடேசமூர்த்தியையும் கோவிந்த ராஜரையும் சேர்த்துத் தோத்திரம் செய்கின்றார். (நந்தனார் சரித்திரம்)

ராகம்-சுரடி; தாளம் - சாபு.

பல்லவி:

தில்லையம்பலத்தானைக் கோவிந்தராஜனைத்

தரிசித்துக் கொண்டேனே

அனுபல்லவி:

தொல்லுலகமும் படியளந்து மனதுக்கேற்கும்

தொண்டர்கலிகள்தீரக் கருணைப்பொழியுமெங்கள் (தி)

சரணங்கள்:

தும்பைப்பூமாலைகள் தொடுத்துக்கொடுப்
பதிங்கே

துளஸிக்கொழுந்தெடுத்து தொட்டுக்கொடுப்
பதங்கே

அம்பலரஹஸியம் அறிந்துகொள்ளுவதிங்கே
அஷ்டாக்ஷரமென்று அன்புசெய்வதுமங்கே
பிட்டுவடையுடனே நைவேத்யமுமிங்கே
புளியோதனம் தயிரன்னம் படைப்பதங்கே
கொட்டுமுழக்குடனே கூத்தாடுவதிங்கே
குரட்டைவிட்டுத் தூங்கிக் கொண்டிருப்பது மங்கே. (தி)

தேவாரமும்திரு வாசகப்படிப்பிங்கே
திருவாய்மொழியோதி ஸேவித்திருப்பதங்கே
நாவில்பஞ்சாக்ஷரம் நாடிக்கொள்ளுவதிங்கே
நாராயணாவென்று நம்பிக்கொள்வதுமங்கே (தி)

சொல்லறியாத்திருக் கூட்டம்கூடுவதிங்கே
தோத்திரத்துக்கேற்பக் கருடஸேவையுமங்கே
அல்லும்பகலும் அன்ன தானசிறப்பிங்கே
அய்யங்கார்கள்கூடு மாரவாரமங்கே (தி)


தேனும்புழுகும்பாலும் தேடிக்கொள்ளுவதிங்கே
சிறக்கபணிகள் பூட்டும் சிங்காரமுமங்கே
மானும்மழுவுடனே மகிழ்ச்சிகொள்ளுவதிங்கே
வலம்புரிசங்கு சக்கரமும்தரிப்பதங்கே (தி)

பரமசிவனேயென்று பாடிக்கொள்ளுவதிங்கே
பாலகிருஷ்ணாவென்று பணிந்துகொள்ளு
வதங்கே
அருமறை பொருளுக்கெட் டாதவடிவமிங்கே
ஆனந்தமூர்த்தியென்று ஆதரிப்பதுமங்கே (தி)

Comments