முன்னோருக்குரிய கடமைகளைச் செய்து பலன் பெற வேண்டிய தலம், திலதர்ப்பணபுரி!

உறிய கோயில்தான் என்றாலும், அருள்பெருக்காக இங்கே எழுந்தருளியிருக்கிறார் ஸ்ரீமுக்தேஸ்வரர். கொடி மரம், பலிபீடம், நந்தி என ஆலயத்துக்கு உண்டான அமைப்புடன் கூடிய திருக்கோயில். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழைமையான கோயில் என்பதை, அதன் அமைப்பிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.

விநாயகப்பெருமான், ராம-லக்ஷ்மணர்கள், அவர்கள் பிரதிஷ்டை செய்த சிவலிங்கத் திருமேனிகள், ஆறுமுகர், பைரவர், நவகிரக சன்னிதி, கஜலட்சுமி என்று பிராகாரத்தில் பலப்பல சன்னிதிகளைத் தரிசிக்கிறோம். கருவறை கோஷ்டத்தில், தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, எட்டு கரங்களுடன் துர்கை ஆகிய மூர்த்திகளையும் தரிசிக்கிறோம்.

இந்தத் தலத்துக்கு ‘திலதர்ப்பணபுரி’ என்ற பெயர் ஏற்பட ராமன்தான் காரணம். ராவணனால் கவர்ந்து செல்லப்பட்ட சீதாபிராட்டியை மீட்க, ராவணனுடன் போரிட்டார் கழுகரசனான ஜடாயு. அந்தப் போரில் தம் உயிரையும் இழந்தார். அந்தக் கழுகுக்கு, ஸ்ரீராமன் எள்ளைக் கொண்டு தன் தந்தையான, தசரதனுக்குச் செய்வதுபோன்றே தர்ப்பணம் செய்தார். திலம் என்றால் எள். எள்ளைக் கொண்டு தர்ப்பணம் செய்த இடம் என்பதே, ‘திலதர்ப்பணபுரி’ என்று பெயர் கொண்டது. அதுவே தற்போது மருவி, சிதலைப்பதி என்று வழக்கில் இருக்கிறது.

பித்ருதோஷம் இருந்தால், வீட்டில் மங்கலங்கள் தடைபடும். திருமணத் தடை, தொழிலில் நஷ்டம், வருமானக் குறைவு, அமைதியின்மை போன்ற துன்பங்கள் வீட்டைப் பாதிக்கும். காரணம் புரியாத அந்தத் தடைகள் நிவர்த்தியாக, வழிபட வேண்டிய பரிகார ஸ்தலம் இது.

வருடந்தோறும் செய்யத் தவறிய தர்ப்பணத்தைச் செய்யும் நாளாக ‘தை அமாவாசை’, ‘அடி அமாவாசை’ நாட்களைக் குறிப்பிடுவர். ஆனால், சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்ந்து இங்குள்ள முக்தீஸ்வரப் பெருமானை வணங்குகின்றனர். அதனால், இங்கு எல்லா நாளுமே அமாவாசைதான். அதனால், எந்தத் திதியிலும், இங்கு பித்ரு தர்ப்பணம் செய்யலாம் என்பது தனிச்சிறப்பு! அதற்காகாவே, பக்தர்கள் எப்போதும் வந்து கொண்டிருக்கிறார்கள்.

அபூர்வமான மனிதமுக விநாயகர் இங்கு காணும் இன்னொரு ஆச்சர்யம். பார்வதி தேவியால் முதன்முதலில் உருவாக்கப்பட்டவர் இவர்தான். பிறகுதான், சிவபிரானால் யானை முகம் பொருத்தப்பட்டு, வேழ முகனாக உருக்கொண்டார். அதனால், நரமுக விநாயகர் என்றும் ஆதிவிநாயகர் என்றும் இவர் வழிபடப்படுகிறார். கஜ முகாசுரனைக் கொல்வதற்கு முன் விநாயகரின் கோலம் இது என்றும் சொல்கிறார்கள்.

இங்கே, ஸ்ரீராமனாகவும்; லிங்கோத்பவர் இருக்குமிடத்தில் கோஷ்டத்திலும்; ஸ்ரீதேவி பூதேவி சகிதராக தனிச்சன்னிதியிலும் என்று மூன்று கோலத்தில் காட்சியளிக்கிறார் திருமால். சுவர்ண வல்லி என்ற பெயருடன் தனிச்சன்னிதி கொண்டிருக்கிறாள் அம்பிகை. நின்ற திருக்கோலம். நான்கு திருக்கரங்களுடனும், அருள் பொங்கும் விழிகளுடனும் காட்சியளிக்கிறாள். ‘சொர்ணம்’ என்றால் ‘தங்கம்.’ தங்க நகைத் தொழிலில் ஈடுபடுபவர்கள், வீட்டில் தங்கம் தங்குவதே இல்லை என்று வருந்துபவர்கள், ‘பொற்கொடியம்மை’ என்றும் போற்றப்படும் சுவர்ணவல்லியை வழிபட்டால் நிச்சயம் பலனுண்டு.

இந்தப் பலன்களை அருளும் மூர்த்திகளை தன் பரிவாரமாகக் கொண்டு மூலஸ்தானத்தில் அருள்பாலிக்கிறார் ஸ்ரீமுக்தீஸ்வரர். அவந்திகா, மதுரா, மாயா என்று முக்தித்தலங்கள் ஏழை வரிசைப் படுத்துவதுண்டு. அவற்றைப் போன்றே, இந்த திலதர்ப்பணபுரியும் முக்தி அளிக்கும் தலம். இங்கே அரசலாறு, கங்கையைப் போன்றே வடக்கு நோக்கிப் பாய்கிறது.

பொதுவாகவே, நதிக்கரையோரமாக அமையும் தலங்கள், மிகச்சிறந்த பரிகாரத்தலங்களாக விளங்கும். அந்த வகையில், பித்ருதோஷம் நீங்கவும், தங்கம் வீட்டில் தங்கவும், வீட்டில் மங்கலம் பெருகவும் வழிபாடு செய்யும் சிறப்புத்தலமாக விளங்குகிறது திலதர்ப்பணபுரி. அங்கே அருள் வெளிச்சம் பாய்ச்சிக்கொண்டிருக்கிறார் ஸ்ரீமுக்தீஸ்வரர்.


இருப்பிடம்:

திருவாரூர் மாவட்டம் பேரளத்திலிருந்து சுமார் 5 கி.மீ.; சரஸ்வதிக்கான தனிக்கோயில் உள்ள கூத்தனூரிலிருந்து 2 கி.மீ.; பேருந்து வசதிகள் உண்டு.

தரிசன நேரம்:

காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை; மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.

Comments