கண்ணதாசன் தத்துவத் துளிகள்-2

வெவ்வேறு அறிஞர்களின் சிந்தனைகள், ஒரே மாதிரி அமைந்துவிடுவதுண்டு. இரண்டு கவிஞர்களின் கவிதைக் கருவிலோ அல்லது கற்பனையிலோகூட, ஒற்றுமைகள் தெரியும். மிக அபூர்வமாக, முன்னோரின் கவிதை வரிகளை அப்படியே எடுத்துக் கவிஞர்கள் கையாளுவார்கள்.

கம்பனே இதற்கு விதிவிலக்கில்லை. சீவக சிந்தாமணியின் சாயலையும், திருக்குறளின் கருத்துக்களையும், சில இடங்களில் முழுக்குறளையுமே பயன்படுத்தியிருக்கின்றான் கம்பன்.

இலக்கியங்களை அப்படியே உள்வாங்கி, அந்தக் கருத்துக்களைத் தனது திரைப்பாடல்களில் பல இடங்களில் கண்ணதாசன் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால், இந்தப் பாடல் வித்தியாசமானது. மகாகவி பாரதியின் கவிதை வரிகளை அப்படியே பல்லவியாகப் பயன்படுத்தி இயற்றப்பட்ட பாடல் இது. பாடல் அமைந்த கதைச் சூழல், பாரதியின் கவிதைக்கே பெருமை சேர்த்தது.

கண்ணனைப் பலவிதமாகக் கற்பனை செய்து கவிதைகளை எழுதினான் பாரதி. தனது நண்பனாக, குருவாக, சீடனாக, வேலையாளாக என்று பலவிதமாகக் கற்பனை செய்தவன், காதலனாகவும், காதலியாகவும், குழந்தையாகவும் கற்பனை செய்தான்.

பெண் குழந்தையாகக் கற்பனை செய்த கண்ணனுக்கு, ‘கண்ணம்மா’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்தான் பாரதி. கண்ணம்மாவைக் கொஞ்சுவதாகக் கற்பனை செய்து அவன் இயற்றிய கவிதை, ‘சின்னஞ்சிறு கிளியே... கண்ணம்மா! செல்வக் களஞ்சியமே...’ என்று தொடங்கும். இந்தக் கவிதையில் வரும் அழகிய வரிகள் இவை:

உன் கண்ணில் நீர் வழிந்தால் - என் நெஞ்சில்

உதிரம் கொட்டுதடீ!

என் கண்ணில் பாவையன்றோ? கண்ணம்மா!

என்னுயிர் நின்னதன்றோ?

இந்த வரிகளை, வயதான கணவன் தன் மனைவியை நோக்கியைப் பாடும் காட்சியில், பல்லவியாக வைத்தார் கவிஞர். பெற்று, வளர்த்து, படிக்க வைத்து, வேலை வாங்கிக் கொடுத்து ஆளாக்கிவிட்ட பிள்ளைகள் அனைவரும் உறவை முறித்துப் பிரிந்து சென்ற பின்னர், அன்புடன் தன்னைக் காக்கும் மனைவி மட்டுமே துணை என்ற நிலையில், கணவன் பாடும் பாடல் இது. தொடர்ந்து வரும் கவிஞரின் வரிகள், பல்லவியாக அமைந்த பாரதியின் வரிகளுக்குக் குறைவின்றி அமைந்திருந்தன.

உன்னைக் கரம் பிடித்தேன் - வாழ்க்கை

ஒளிமயமானதடி!

பொன்னை மணந்ததனால் - சபையில்

புகழும் வளர்ந்ததடி!

‘உன்னை மணந்ததனால் நான் வாழ்வில் உயர்வடைந்தேன்... பெருமை பெற்றேன்’ என்று வாழ்க்கைத் துணை சொல்வதனைவிட, ஓர் உயர்ந்த பாராட்டு உண்டா என்ன? ஓர் ஆண் இதனைச் சொல்வது இன்னும் சிறப்புடையதுதான்!

‘என்னை ஏளனமாக எண்ணுபவர்களை, நான் தலை நிமிர்ந்து எதிர்கொள்வதன் காரணம், என் மனைவி பெருமைக்குரியவளாக இருப்பதே...’ என்று ஓர் ஆண் சொல்வதாக வள்ளுவன் எழுதவில்லையா என்ன...?

சாலையில் செல்லும்போதோ, அல்லது பயணம் செய்யும் வண்டியிலோ அல்லது ஓர் உணவகத்திலோ.... ஏதோ ஒரு பொது இடத்தில், முன்பின் பார்த்திராத இரண்டு ஜோடிகளைப் பார்க்கின்றீர்கள். திருமணமாகி ஒரு மாதம்கூட நிறையாத ஜோடி ஒன்று. திருமணமாகி ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் கடந்து விட்ட ஜோடி ஒன்று. இரண்டு தம்பதிகளுமே கை கோர்த்தவாறு சிரித்துப் பேசிக்கொண்டே செல்கின்றார்கள்.

இரண்டுமே கண்ணுக்கும் மனத்துக்கும் நிறைவான காட்சிகள்தான். ஐயமில்லை. ஆனால், வயது முதிர்ந்த தம்பதியினர் மகிழ்ச்சியுடன் போவதைப் பார்க்கையில், நெகிழ்ச்சியும், மதிப்பும் நமக்குச் சற்று அதிகமாகத் தோன்றுவதை அனுபவித்திருக்கின்றீர்களா? காரணம் என்ன?

இளம் ஜோடி மகிழ்ச்சியாக இருப்பதற்குப் பல காரணங்கள் உண்டு. எதிர் காலம் அவர்கள் கண் முன்னே கனவாக விரிந்து கிடக்கும். ஆனால், ஐம்பது ஆண்டுகள் பின்னால் கிடக்கும் தங்கள் வாழ்க்கையினை நிறைவாக வாழ்ந்திருந்தால் தவிர, முதிய தம்பதியினர் மகிழ்ச்சியாக இருக்க வாய்ப்பில்லை.

இன்பங்களும் துன்பங்களும், ஏற்றங்களும் இறக்கங்களும் அவர்கள் வாழ்விலும் சுழற்றி அடித்திருக்கும். ஆனால், எல்லா நிலையிலும் அவர்கள் ஒருவரையொருவர் தாங்கிப் பிடித்திருக்கின்றார்கள் என்பதன் அடையாளமே, இந்த வயதிலும் அவர்களின் மகிழ்ச்சிக்குக் காரணம்.

இந்தக் கருத்துக்களை அப்படியே கண்ணதாசனின் வரிகளில் காணுங்கள்:

காலச் சுமைதாங்கி - போலே

மார்பில் எனைத் தாங்கி,

வீழும் கண்ணீர் துடைப்பாய் - அதிலென்

விம்மல் தணியுமடி!

ஆலம் விழுதுகள் போல் - உறவு

ஆயிரம் வந்துமென்ன?

வேரெனெ நீயிருந்தாய் - அதில் நான்

வீழ்ந்து விடாதிருந்தேன்!

புதிதாகத் திருமணமான ஓர் ஆணும் பெண்ணும், அவர்கள் மிகவும் மதிக்கும் பெரியவர் ஒருவரைப் பார்க்க வந்தனர். ‘எங்களுக்குள் ஒரு கருத்து வேறுபாடு இருக்கிறது. நீங்கள்தான் வழிகாட்ட வேண்டும்’ என்றான் கணவன்.

‘ஐயா...! எங்களுக்குக் குழந்தை வேண்டும் என்று நான் மிகவும் விரும்புகின்றேன். ஆனால் இவரோ, ‘வேண்டவே வேண்டாம்... நாம் இருவர் மட்டுமே ஒருவருக்கொருவர் துணையாக இருந்து விடலாம்’ என்கின்றார். எந்த முடிவை எடுப்பது? குழப்பமாக இருக்கின்றது’ என்றாள் மனைவி.

‘அம்மா...! இருவரும் பேசி, மனம் ஒத்து, இரண்டில் எந்த முடிவை வேண்டுமானாலும் எடுக்கலாம்; பிழையில்லை. ஆனால் எந்த முடிவை எடுத்தாலும், எதிர் காலத்தில் நீங்கள் வருத்தப்படுவதை மட்டும் தவிர்க்கவே முடியாது’ என்றார் பெரியவர்!

வயிற்றில் தாய் சுமக்க, தந்தை தோளில் சுமந்து வளர்த்த பிள்ளைகள் முரண்பட்டு நிற்பதுபோன்ற சோகம் ஏதுமில்லை. பிழை யார் பக்கம் இருந்தாலும் அல்லது இரண்டு பக்கமும் இருந்தாலும், மனத்தில் ஏற்படும் ரணம் சாதாரணமில்லை.

முள்ளில் படுக்கையிட்டு - இமையை

மூட விடாதிருக்கும்

பிள்ளைக் குலமடியோ - என்னைப்

பேதமை செய்ததடி!

பேருக்குப் பிள்ளையுண்டு - பேசும்

பேச்சுக்கு சொந்தமுண்டு!- என்

தேவையை யாரறிவார்? -

உன்னைப் போல்

தெய்வமொன்றே அறியும்!

எல்லா வலிகளுக்கும் அன்பு மருந்தாகும். ஆனால், அன்பு தரும் வலிக்கு மருந்து உண்டா என்ன...?

மனத்தில் வலியுடன் துடிக்கும் கணவன், காலமெல்லாம் தன்னைத் தாங்கிப் பிடிக்கும் மனைவியை, ‘தெய்வம்’ என்று வாழ்த்துவதாக அமைத்தார் கண்ணதாசன்! அதிலும் ஒரு நுட்பம் உண்டு; ‘தெய்வம் போல் நீ அல்ல; உன்னைப் போல் தெய்வம்’ என்கிற உள்ளார்ந்த உருக்கம், பெண்மைக்கு அவர் சூட்டிய பொன்மகுடம்!


பிறருக்கு அன்பு காட்டுவதும், பிறர் தன் மீது காட்டும் அன்பினை மதித்துக் காப்பாற்றிக் கொள்வதுமே மனிதனின் பண்புகள். ஆனால், பொதுவாக மனிதன் இன்று எப்படி இருக்கிறான்...? இதைக் காட்டும் கவிஞரின் சொற்கள்...

Comments