'உள்ளது போகாது இல்லது வாராது'

ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்ற முன்னோர்கள், 'கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்றும் அறிவுறுத் தினர். மனித வாழ்வில் ஆலயத்துக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்? ஆலயத்துக்குச் சென்றுதான் ஆண்டவனை வழிபட வேண்டுமா?
இல்லத்தில் இருந்தபடியே, இறைவனை நினைந்து நெகிழ்ந்தால் அவன் அருள் நமக்குக் கிடைக்காதா? கோவேந்தர்கள் முதல் கோடீஸ்வரர்கள் வரை ஆலயம் கட்டுவதில் ஆர்வத்தைக் காட்டியது ஏன்? ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி கோயில்கள் உருவாவது அவசியம்தானா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில்... நம் மூதாதையர்கள் முட்டாள்கள் இல்லை. ஆன்ம அனுபவத்துக்கு ஆலயங்கள் அவசியம் தேவை. ஆலயங்கள் சமுதாயத்தின் சந்திப்பு மையங்கள்.

துறவுக் கோலம் பூண்ட விவேகானந்தர், குமரி முனைக்கு வந்து சேர்ந்தார். 'பத்ரியில் இருந்து குமரி வரை நான் கண்களால் கண்டதெல்லாம் கோயில்கள், கோயில்கள், கோயில்கள்தான். கிராமத் துக்குக் கிராமம், ஊருக்கு ஊர், நகரத்துக்கு நகரம் ஆலயங்கள். பள்ளிகளும், தொழிற்சாலைகளும் இல்லாத ஊர்கள் உண்டு. ஆனால், ஆலயம் இல்லாத ஊர் இந்தியாவில் இல்லை' என்று வியந்து சொன்னார் சுவாமி. 'இந்தியாவின் ஆன்மா, மதத்தில் இருக்கிறது' என்று முழங்கியவர் அவர்.'ஆலயம்' என்பதற்கு, 'ஆன்மாக்கள் ஆண்டவனின் திருவடியில் லயிக்கும் இடம்' என்பது பொருள். 'கோயில்' என்றால், 'உயிர்களின் தலைவன் தங்கும் இடம்' என்று அர்த்தம்.

'இறைவன் எல்லா இடங்களிலும் இருப்பவன் தானே. அவனை ஏன் ஆலயத்தில் சென்று காண வேண்டும்?' என்ற கேள்வி எழுகிறது. நிலத்துக்கு அடியில் ஓடும் நீரோட்டம் கிணற்றில் தெரிகிறது. பசுவின் உடலெங்கும் வியாபித்திருக்கும் பால் மடிக்காம்பில் வழிகிறது. பால் வேண்டுபவன் காம்பை விட்டு விட்டுப் பசுவின் கொம்பை வருடக் கூடாது!



வேத காலத்தில் ஆலயங்கள் இல்லை. யாகங்களே மேற்கொள்ளப்பட்டன. மந்திரங்கள் உரைத்து, எரியும் நெருப்பில் நெய் ஊற்றுவதே வேதம் விளக்கும் வழிபாடு. பின்னாளில் பிறந்ததே விக்கிரக வழிபாடு. தியான நிலையில் இறைவனை வழிபட்டவர்க்கு, அந்தத் தியானம் உறுதிப்பட உருவ வழிபாடு தேவைப்பட்டது. உலகத் துன்பங்களில் உழலும் மனிதர்க்கு, சிறிது நேரமாவது நிம்மதியைத் தேடி, தெய்வத்தை வழிபட ஆலயமே எளிய மார்க்கமானது. எவரிடத்தும் இறக்கி வைக்க முடியாத இதய பாரத்தை இறைவனிடம் இறக்கி வைக்க மனிதன் முனைந்தபோது, உருவற்றவனுக்கு உருவம் ச(அ)மைத்தான்; பெயர் அற்ற பரம் பொருளுக்குப் பெயர்கள் வைத்தான்.

மனிதருடன் சேர்ந்து பிறந்ததுதான் துன்பம். ஆசைகள் பெருகப் பெருக அவற்றுடன் துன்பமும் பெருகி மனிதனைத் துடிக்க வைக்கிறது. தனது அறிவால், ஆற்றலால், செல்வத் தால், செல்வாக்கால் ஒரு துயரை வெல்லும் போது, 'தான்' எனும் ஆணவம் அவனுள் தலை நிமிர்கின்றது. எந்த வழியிலும் தீராதபடி வலிமையான துயரம் அவனைத் தாக்கும் போது, ஆணவத்தின் மீது அடி விழுகிறது. அடுத்த கணம், அவனுக்குள் ஆண்டவனைப் பற்றிய எண்ணம் எழுகிறது. ஆணவம் இருக்கும் வரை, நம் இதயத்தில் ஆண்டவனுக்கு இடம் இல்லை. ஆணவம் அழிந்து விட்டால், ஆண்டவன் தரிசனம் தரத் தவறுவது இல்லை. ஆன்ம வளர்ச்சிக்கு ஆணவம் தடைக்கல் என்பதை உணர்த்துவதே கஜேந்திரமோட்சக் கதை. பலருக்கும் தெரிந்திருக்கும்.

'நம்மால் முடியும்' என்று ஆணவம் கொள்பவன் நாத்திகம் பேசுகிறான். நினைத்தது முடியாதபோது, ஆணவம் அழிந்து ஆத்திகனாகிறான்.நம் உடலின் புறச் சின்னமே ஆலயம். உடல் அமைப்பை உணர்த்துவது போல் ஆலயம் அமைய வேண்டும் என்கிறது ஆகமம். ஆன்மாக்களின் பாசங்களை அகற்றி, முக்தியைப் பெற வழிகாட்டுவதே ஆகமம். 'ஊனுடம்பு ஆலயம்' என்று திருமூலர் சொன்னதில் ஆழ்ந்த அர்த்தம் உண்டு.

ஆகம விதிப்படி எழுப்பப்பட்ட ஆலயத்தில், மனித உடம்பின் பாதங்கள்- கோபுரம்; முழங்கால்- ஆஸ்தான மண்டபம்; துடை- நிருத்த மண்டபம்; தொப்புள்- பலி பீடம்; மார்பு- மகா மண்டபம்; கழுத்து- அர்த்த மண்ட பம்; சிரம்- கர்ப்பக்கிருகம். சிரத்தின் உச்சி- விமானம்.கோயில் கோபுரம் உயரமாக இருப்பதற்குக் காரணம் உண்டு. ஊர் மக்கள் பார்வையில் அது படும்போதெல்லாம் உள்ளத்தில் தெய்வீக உணர்வை ஊட்ட வேண்டும் என்பதற்காகவே ராஜகோபுரம் உயர்ந்து நிற்கிறது. 'கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்கிறது இந்து சமயம். அது வெறும் கற்களாலான கோபுரம் அன்று. அதுவே கடவுளின் ஸ்வரூபம். மனிதன், மன வாசலின் வழியே இறைவனை நாடி, உள் முகமாகப் போக வேண்டும் என்பதை உணர்த்துவதே கோபுர வாயில்.

ராஜகோபுரத்தைத் தாண்டினால், பலி பீடம் தெரியும். அவரவர் இதயத்தை அழுக்காக்கும் கீழான எண்ணங் களை அங்கே நின்று பலியிட வேண்டும். மேன்மை தரும் மேலான நினைவுகளுடன், கோயிலில் வலம் வர வேண்டும். மனதின் அதிர்வலைகளுக்கு ஏற்ப சுவாசம் மாறுபடும். கோயிலை வலம் வருதல், பிராணாயாமத்தை நெறிப்படுத்தும். கொடிக்கம்பத்துக்கு (துவஜ ஸ்தம்பம்) அடுத்திருப்பது தெய்வ வாகனம். இது, மூலப்பரம் பொருளை பார்த்தபடி இருக்கும். அந்த வாகனம் ஜீவாத்மாவின் குறியீடு. அங்கிருந்து கருவறையில் இருக்கும் பரமாத்மாவை நாம் கண்டு வணங்கி, உள் முகமாக முன்னேற வேண்டும். இதையடுத்து கர்ப்பக்கிருகம்; காற்றும், சூரிய வெளிச்சமும் இல்லாமல் இருண்டு கிடக்கிறது. ஞான வெளிச்சம் இல்லாமல் நம் இதயம் இருண்டு கிடப்பதற்கு அதுவே சாட்சி. மூல விக்கிரகத் துக்கும் நமக்கும் இடையே திரை மூடப்பட்டிருக் கிறது. கடவுளை, மனிதன் அடையாமல் தடுக் கும் மாயத்திரை அது. திரை விலகும் வரை மனிதன் காத்திருக்க வேண்டும்.

ஆணவம், கன்மம், மாயை எனும் திரைகளை முயன்று விலக்கினால்... அஞ்ஞான இருள் அகன்று, ஞான ஒளியில் தெய்வம் தரிசனமாகும். அந்த நேரத்தில் ஐம்பொறிகளும், புலன்களும் ஆண்டவனில் ஐக்கியமாக வேண்டும். அதற்காகத்தான்... கண்கொண்டு காண கற்பூர ஆரத்தியும், காதால் கேட்க மணியோசையும், வாத்திய முழக்கமும், மூக்கால் நுகர நறுமண தூபமும், ஸ்பரிசித்து மகிழ பரமனுக்குச் சாத்திய மலர்மாலையும், நாவால் சுவைக்க தேவனின் பிரசாதமும் ஆலய விருந்தாகிறது.

தோத்தாபுரி என்ற ஞானி, 'உருவத்தை விட்டு, அருவத்தை நோக்கி எப்போது நீங்கள் பயணப் படப் போகிறீர்கள்?' என்று பரமஹம்சரைக் கேட்டார். 'என் காளிமாதாவிடம்தான் அதைக் கேட்க வேண்டும்' என்றார் ராமகிருஷ்ணர்.

'கல்லை வழிபடுவதை விட்டு விடுங்கள் என்றல்லவா நான் சொல்கிறேன்' என்று கொஞ்சம் கோபத்துடன் குரல் எழுப்பினார் தோத்தாபுரி. 'அவள் ஆணையின்றி நான் எதுவும் செய்வதில்லை. அவளிடம் கேட்பதைத் தவிர வேறு வழியில்லை. இதோ, அவளிடம் போய் கேட்கிறேன்' என்று புறப்பட்டார் பரமஹம்சர்.

சிறிது நேரத்தில் திரும்பி வந்து, 'ஆன்மிகப் பயணத்தில் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைக்க அன்னை அனுமதி வழங்கி விட்டாள்' என்றார். அவருக்குக் கல்லும், காளியும் வேறு வேறல்லர். 'கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலேதெய்வம் வரும்' என்பது கண்ணதாசனின் அனுபவம்.

ஆலய வழிபாடு ஆத்ம சாதகத்தை வளர்க்கும். ஆத்ம சாதகம் வளர்ந்தால், லௌகீக ஆசைகள் குறையும். பற்றும் ஆசையும் அற்றுப் போனால், பரம்பொருள் இருக் கும் பாதை பளிச்சென்று தெரியும். கஸ்தூரிமானின் நறு மணம் அதன் உடம்புக்குள்ளேயே உற்பத்தியாகிறது. ஆனால், அந்த நறுமணம் எங்கிருந்து வருகிறது என்று தெரியாமல், அங்கும் இங்கும் அது ஓடித் தேடுகிறது. ஒரு வகையில் நாமும் கஸ்தூரிமான்கள்தான். இறைவன் இருக்கும் இடத்தை விட்டு, இல்லாத இடங்களில் தேடிக் கொண்டிருக்கிறோம்.

இறைவனை அறிவால் ஆராய்வதைவிட, அன்பால் உணர்வதே விவேகம். பரமஹம்சரின் அழகான கதையன்று உண்டு. 'சில மனிதர்கள் ஒரு மாந்தோப்பில் நுழைந்தனர். அங்குள்ள மரங்களின் இலைகள், தளிர்கள், கிளைகள் என்று ஒவ்வொன்றாக ஆராய்ந்தனர். அப்போது அங்கு வந்த வேறொருவன், எதுகுறித்தும் யோசிக்காமல், பழத்தைப் பறித்துச் சுவைத்தான். அவனல்லவா புத்திசாலி. நீ ஒரு பக்த னாக இருக்க விரும்பினால், கண்ணன் பிறந்தது மதுராபுரியா? பிருந்தாவனமா? என்ற கேள்வி தேவை இல்லை. கீதையில் உள்ள கடமையைப் பற்றியும், அன்பைப் பற்றியும் அறிந்தால் போதும்' என்றார் அந்த அவதார புருஷர்.

ருஷ்ய எழுத்தாளர் துர்கனேவ் எழுதிய ஒரு சிறுகதை 'அந்த ஊரில் முழு மூடன் ஒருவன் இருந்தான். ஒரு நாள், புகழ்பெற்ற ஞானி ஒருவரிடம் வந்து, 'நான், புத்திசாலியாக மாற என்ன வழி?' என்று கேட்டான். 'நீ உண்மையில் புத்தி சாலியாக வேண்டுமா? அல்லது புத்திசாலிபோல் தோற்றம் தந்தால் போதுமா?' எனக் கேட்டர் ஞானி. உடனே அந்த மூடன், 'எல்லோருக்கும் நான் புத்திசாலி போல் தோன்றி னால் போதும்' என்றான். அவன் செவிகளில், எதையோ ரகசியமாகக் கூறினார் ஞானி. அன்று முதல் அவனை, புத்திசாலியென்று ஊரே கொண்டாடியது. ஞானியிடம் ஒருவர் சென்று, 'அந்த மூடனை ஒரே நிமிடத்தில் எப்படிப் புத்திசாலியாக்கினீர்கள்?' என்று கேட்டார்.

'யார் என்ன சொன்னாலும், அதைப் பற்றி உனக்கு எதுவும் தெரியாமல் போனாலும் அதை மறுத்துப் பேசு என்றேன்; அவ்வளவுதான்! உண்டு என்று நிரூபிக்கத்தான் அறிவு தேவை. இல்லை என்று மறுக்க எதுவும் தேவை இல்லை' என்றார் புன்முறுவலுடன் அந்த ஞானி. அந்த வகை அறிவாளிகளே நம் ஊர் நாத்திகர்கள்.

'உள்ளது போகாது இல்லது வாராது' என்று நம்பும் இறை உணர்வாளர்கள் அன்பே வடிவான ஆண்டவனை ஆலயத்தில் தரிசித்து, அன்புருவாக நெகிழ்ந்து நிற்போம்.ஆன்மாக்கள் அன்பில் லயிக்கும் ஆலயமே நம் அழுக்குகள் களையும் பலிபீடம். ஆலயம் தொழுவது சாலவும் நன்று.

Comments