வைத்தியநாத சுவாமி

திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர், அப்பாவான சிவனாரின் பெயரை அப்படியே, மகனான முருகனுக்கும் சூட்டி விடுகிறார்...

உரத்துறை போதத் தனியான
உனைச் சிறிது ஓதத் தெரியாது
மரத்துறை போலுற்று அடியேனும்
மலத்திருள் மூடிக் கெடலாமோ
பரத்துறை சீலத் தவர்வாழ்வே
பணித்தடி வாழ்வுற்று அருள்வோனே
வரத்துறை நீதர்க் கொருசேயே
வயித்திய நாதப் பெருமாளே


வைத்தியநாத சுவாமி - இதுதான் இந்தத் தலத்தின் மூல நாயகரான சிவபெருமானின் திருநாமம். அப்பன் என்ன மகன் என்ன... அனைத்தும் பரம்பொருளே என்றுதான், அருணகிரியார் அப்படிப் பாடி விடுகிறார் போலும்!

ஆமாம்! ஸ்ரீவைத்தியநாதரும் ஸ்ரீதையல்நாயகியும் ஸ்ரீமுத்துக்குமாரரும் அருள் வழங்கும் வைத்தீஸ்வரன் கோயிலுக்குத்தான் செல்கிறோம், வாருங்கள்!

புள் (பறவை - ஜடாயு), இருக்கு (ரிக் வேதம்), வேள் (முருகன்), ஊர் (ஊர்ந்து வருவதால் சூரியனுக்கு இப்படி யரு பெயர்) ஆகியோர் பூஜித்ததால், புள்ளிருக்கு வேளூர்; ஜடாயு வழிபட்டதால் ஜடாயுபுரி; வேதம் வழிபட்டதால் வேதபுரி; கந்தன் வழிபட்டதால் கந்தபுரி; சூரியன் வழிபட்டதால் பரிதிபுரி; செவ்வாய் வழிபட்டதால் அங்காரகபுரி; அம்பிகை வழிபட்டதால் அம்பிகாபுரம்! உயிர்களின் வினையைத் தீர்க்க இறைவனார் வைத்தியநாதராக எழுந்தருளியிருப்பதால் வினைதீர்த்தான் கோயில்... இப்படிப் பல பெயர்களுடன் துலங்குகிற திருத்தலம்.

சோழ நாட்டின் காவிரி வடகரைத் தலம்; சீர்காழிக்கு அடுத்ததாக உள்ளது. சீர்காழிக்கும் மயிலாடுதுறைக்கும் இடைப்பட்ட ஊர். நாடிச் சுவடிகளைத் தேடி வருங்காலத்தை அறிவதற்கும், செவ்வாய் தோஷ நிவர்த்திக்கும், நோய் பரிகாரங் களுக்கும் உரிய தலம்.



ஊர் நடுவில் கம்பீரமாகக் காட்சி தரும் கோயில். உயர்ந்த மதில்; கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் கோபுரங்கள். மேற்கு வாசலே பலராலும் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கு ராஜகோபுர வாசல் வழியாக நுழைகிறோம். கோயில் வாசலில் நிறைய கடைகள்; மண்டபங்கள். வாகன மண்டபம் கடந்து உள் புகுகிறோம். இரண்டு கொடி மரங்கள். நமது கண்ணையும் கருத்தையும் கவரும் இவற்றில், ஒன்று பொன்னால் ஆனது, மற்றது வெள்ளி! அழகெனக் காட்சி தரும் கொடிமரங்களை வணங்கி மூலவரை நோக்கிச் செல்கிறோம்.

பிராகார வலம் வந்து, பிறகுதானே மூலவரிடம் செல்வோம்..? ஆனால் இங்கே, மூலவர் என்ற கணக்குக்கு ஒருவர்தாம் என்றாலும், வைத்தியநாதருடன் அம்பாளும் முத்துக்குமாரசுவாமியும் மிக மிக விசேஷமானவர்கள். ஆகவே, ஒவ்வொருவராக வழிபட்டுக் கொண்டே வருவோமா? மூலவர் அருள்மிகு வைத்தியநாத சுவாமி...

பத்திமையால் பணிந்து அடியேன் தன்னைப் பன்னாள்

பாமாலை பாடப் பயில்வித்தானை
எத்தேவும் ஏத்தும் இறைவன்தன்னை
எம்மானை என் உள்ளத்துள்ளே ஊறும்
அத்தேனை அமுதத்தை ஆவின்பாலை
அண்ணிக்கும் தீங்கரும்பை அரனையாகிப்
புத்தேளைப் புள்ளிருக்கும் வேளூரானைப்
போற்றாதே ஆற்ற, நாள் போக்கினேனே!

- என்று அப்பர் பெருமான் பாடிப் பரவும் வைத்தியநாதர். மேற்கு நோக்கிய சிறிய சிவலிங்க வடிவம். உலகைப் படைத்துக்

காக்கும் பரம்பொருள், மனிதர்களுக்கும் பிற உயிர்களுக்கும் உண்டாகும் நோய்களை நீக்குவதற்காகவும் தடுப்பதற்காகவும் தாமே வைத்தியநாதர் ஆக... அம்பிகை, கையில் தைலமும் சஞ்சீவி மூலிகையும் வில்வ மண்ணும் தாங்கி ஸ்ரீதையல்நாயகியாக உடன்வந்தார்.

இந்த நிகழ்வுக்குக் காரணமாக மற்றொரு சம்பவம்:

முருகப் பெருமான், தாரகாசுரனோடு போர் நடத்தி னார். அதில், காயமடைந்த தம் படைவீரர்களின் காயங் களைப் போக்கவும் உயிர்களைக் காக்கவும் திருவுளம் கொண்ட முருகப்பெருமான், கயிலைநாதரையும் அன்னை பார்வதியையும் எண்ணி வேண்ட, அவர்கள் உடனடியாக வைத்தியநாதரும் தையல்நாயகியுமாகப் புள்ளிருக்கு வேளூருக்கு எழுந்தருளினர்.

சூரியனும் வழிபட்ட திருத்தலம் இது! இதன் தொடர்ச்சியாக, சூரிய வழிபாடு நிகழ்ந்தேறுகிறது. புரட்டாசி மாதம் 19, 20, 21 தேதிகளிலும், மாசி மாதம் 19, 20, 21 தேதிகளிலும் அஸ்தமன காலத்தில் கதிரவக் கதிர்கள் இறைவன் திருமேனி மீது விழுகின்றன. கோபுரத்தின் ஊடாகக் கதிர்களை நீட்டி, பலிபீடம்- கொடிமரம்- நந்தி ஆகியவற்றைக் கடந்து, மூலவர் திருமேனியைத் தழுவுகிறான் கதிரோன்.

மூலவர் உள்பிராகாரத்தை வலம் வருகிறோம். மேற்குச் சுற்றிலிருந்து தொடங்கினால், வடமேற்கு மூலையில் செல்வ மகாலட்சுமி. வடக்குச் சுற்றில் திரும்பியவுடன், திருமுறைப் பேழை (சைவ நூல் களான பன்னிரு திருமுறைகளுக்கான சந்நிதி; இவற்றையே கடவுளாக வழிபடுவர்). அடுத்து நடராஜ சபை. சிவகாமியம்மை உடனிருக்க, மாணிக்கவாசகரும் காரைக்கால்

அம்மையும் உள்ளனர். தொடர்ந்து, அறுபத்து மூவர்; பஞ்ச லிங்கங்கள்; சஹஸ்ர லிங்கம்.

கிழக்குச் சுற்றில், பைரவர் சந்நிதி, நவக் கிரகங்கள். தொடர்ந்து ஸ்ரீராமர், ஜடாயு, அங்காரகன், சூரியன் உள்ளிட்ட பலரும் வழிபட்ட லிங்கங்கள். அடுத்து... அட, இவர் யார்? மருத்துவக் கடவுளான தன்வந்த்ரி.

அமுத கலசம் ஏந்தி, பாற்கடலிலிருந்து தோன்றிய தன்வந்த்ரி, கையில் கமண் டலமும் கதையும் ஏந்தியபடி, வைத்தியநாத சுவாமி சந்நிதிக்குப் பின்புறம் கோயில் கொண்டுள்ளார். இந்த மண்டபத்துக்கு தன்வந்த்ரி மண்டபம் என்றே பெயர். வைத்திய முறைகளை உலகுக்கு பரப்பு வதற்காகவே அவதாரம் செய்த ஆயுர்வேத பிதாமகரான இவர், தன்வந்த்ரி நிகண்டு, வைத்திய சிந்தாமணி உள்ளிட்ட நூல் களையும் அருளிச் செய்துள்ளார். மருத்துவ மேதையான தன்வந்த்ரி, வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்து ஸ்ரீவைத்தியநாதரை வழிபட்டு, தனது திறமையை வளர்த்துக் கொண்டாராம்.

தெற்குச் சுற்றில் திரும்பினால் ஜடாயு குண்டம். திருநீறு நிரம்பியதாக உள்ள குழி. ராவணனிடமிருந்து சீதையை மீட்கப் போராடிய ஜடாயுவின் சிறகுகளை வெட்டி, அவரை அரக்கன் வீழ்த்தினான். ராமன் வரும்வரை, குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த ஜடாயு, ராமன் வந்ததும், நடந்தவற்றைச் சொல்லி உயிர் நீத்தார். தந்தையாக பாவித்த ஜடாயுவுக்காக ஸ்ரீராமன், இறுதிக்கடன்கள் செய்த இடமே, ஜடாயு குண்டம். ராம- லக்குவர்கள், விஸ்வாமித்திரர், வசிஷ்டர் ஆகியோரது வடிவங்கள், ஜடாயு மண்டபத்தின் மேல் பகுதியை அலங்கரிக்கின்றன.



அடுத்து, வரிசையாக உற்ஸவ மூர்த்தங்கள்; வெகு அழகு. சோமாஸ்கந்தர், சிவகாமி உடனாய நடராஜர், சிங்காரவேலர், கங்கா விசர்ஜனர், பிட்சாடனர், கங்காளர், திரௌபதி, ஐயனார், பிரதோஷ நாயகர்,

துர்கை என்று பளபளக்கும் உற்ஸவர்களில், ஜடாயுவும் அங்காரகனான செவ்வாயும் உள்ளனர். ஏறத்தாழ ஒரு தனிச் சந்நிதியிலேயே உற்ஸவ செவ்வாய். இவருக்கு, செவ்வாய் தோஷ நிவர்த்திக்காக அர்ச்சனைகள் உண்டு. செவ்வாய்க் கிழமைகளில் ஆட்டு வாகனத்தின் மீது இவர் பிராகார உலா வருகிறார். அடுத்து வலஞ்சுழி விநாயகர், சோமாஸ்கந்தர்.

சுவாமியை வழிபட்டுவிட்டு, அம்பாளை வணங்கச் செல்கிறோம். அம்பாள் சந்நிதிக்கு எதிரில், சித்தாமிர்த தீர்த்தம்.

வைத்தீஸ்வரன்கோவிலுக்கு 18 தீர்த்தங்கள் இருப்பதாகப் புராணங்கள் குறிக்கின்றன. இவற்றுள் தலையாயது, சித்தாமிர்த தீர்த்தம். நான்கு யுகங்களின் பெருமை பெற்ற இது, அம்பா ளின் பார்வைக்கு உட்பட்டதாக, அம்பாளின் எதிரில் இருப்பது சிறப்பு. காலங்காலமாக சித்தர்களும் முனிவர்களும் இங்கே வந்து, எம்பெருமானுக்கு தீர்த்த நீர் கொண்டு அபிஷேக- ஆராதனை செய்தனர். பரமனாரின் திருமுடியிலும் திருவடியிலும் வழிந்தோடிய நீர், அமிர்தமாக இங்கே கலந்தது. சித்தாமிர்த தீர்த்தம் எனும் பெயர் கொண்டது.

கிருத யுகத்தில், காமதேனு, தன் பாலால் வைத்தியநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்தது; அப்போது பொங்கிப் பெருகி, அபிஷேக வாயிலிருந்து வழிந்தோடிய பாலை, பரம கருணா மூர்த்தியான பரமேஸ்வரர், இந்த தீர்த்தத்துள் கலக்கச் செய்தார். இதனால், கோக்ஷீர (பசுவின் பால்) தீர்த்தம் என்று பெயர். திரேதா யுக காலத்தில் அடியார்கள் பலர் இங்கே வந்தனர். தாகம் தணித்துக் கொள்ள தீர்த்த நீரெடுத்துப் பருகினர். நீர், கரும்பென இனித்தது. ஆதலால், இக்ஷூ (கரும்பு) தீர்த்தம் எனலானது. துவாபர யுகம் மற்றும் கலியிலும், இங்கு மூழ்கியதாலும், இதன் நீர் மேலே பட்டதாலும் உய்வடைந்தவர்கள் ஏராளம்!

சிவபெருமானை அழைக்காமல் யாகம் செய்த தட்சன், தனது தலை துண்டிக்கப் பட்டான். தவறை உணர்ந்து பிராயச்சித்தம் வேண்டினான். வைத்தியநாத சுவாமியின் சித்தாமிர்த குளத்தில் மூழ்கி எழுந்தால் பாவம் தீரும் என்பதை அறிந்து, இங்கே வந்து, சித்தாமிர்தத்தில் மூழ்கி, தலையும் உடலும் சேரப்பெற்றான்.

மூவாசையும் துறந்தவரான சதானந்தர், சித்தாமிர்தக் கரையில் தவம் செய்தார். தியானத்தில் ஆழ்ந்திருந்த போது, இரை தேடி வந்த பாம்பொன்று தவளையை துரத்தியது. பாம்பிடமிருந்து தப்பிக்க முயன்ற தவளை, முனிவர் மீது குதிக்க, தொடர்ந்து பாம்பும் தாவ... 'பரம்பொருளுடன் ஒன்றவிடாமல் செய்யும் பாம்பும் தவளையும் இந்த தீர்த்தத்தில் இல்லாமல் போக' என்று ஆணையிட... இன்றளவும் இந்த தீர்த்தத்தில் பாம்பும் தவளையும் தங்குவதில்லை!

அங்காரகனுக்கு ஒருமுறை உடல் நோய் உண்டானது. செங்குஷ்டம் தோன்றிப் பொலிவிழந்து, தட்டுத் தடுமாறி... சித்தாமிர்தக் குளத்துக்கு விரைந்து வந்து, நீராடி, வைத்தியநாதரை வழிபட்டு நோய் நீங்கப் பெற்றான். இப்போதும் செவ்வாய் பரிகாரத் தலமாக இந்த ஊர் விளங்குகிறது.

சித்தாமிர்த தீர்த்தத்துக்கு குன்றாத எழில் சேர்ப்பது, நடுவில் இருக்கும் நீராழி மண்டபம். தீர்த்த வரலாற்றுச் சுதைச் சிற்பங்களும், ரிஷப வடிவங்களும் அழகு. தீர்த்தத்தின் நான்கு புறமும் மண்டபங்கள்; கருங்கல் தளங்களில் அழகிய வேலைப்பாடுகள்.

சித்தாமிர்தக் கரையிலிருந்து நகர மனமின்றி நகர்கிறோம்

Comments