தேவகி கிருஷ்ணன்!

கிருஷ்ணனை-குழலூதுபவனாக, ருக்மணி சத்யபாமா சகிதனாக என்று வெவ்வேறு கோலங்களில் தரிசித்திருக்கிறோம். ஆனால், அம்மா தேவகியின் இடுப்பில் அமர்ந்தவனாக உள்ள கோலத்தைத் தரிசிப்பது ‘கோவா’வில்!

கோவா மாநிலம், பாண்டா தாலுகா மார்சல் என்ற பகுதியில் அமைந்துள்ளது இக்கோயில். குழந்தையிலேயே யசோதா தேவியால் வளர்க்கப்பட்ட கிருஷ்ணர், குழந்தைப் பருவத்தில் தேவகியுடன் இருப்பது எப்படி? இதற்கு, தலபுராணம் பதில் சொல்கிறது.

ஜராசந்தன், மகதத்தை ஆண்ட மன்னன். இவன் மகள்தான் கண்ணனின் மாமனான கம்சனின் மனைவி. தன் மாப்பிள்ளையான கம்சனை கிருஷ்ணன் வதம் செய்தபடியால், கடும் கோபம் கொண்டு மதுரா மீது பலமுறை போர் தொடுத்தான் ஜராசந்தன். இப்போரில் மதுரா கோட்டை சேதம் அடைந்தது. அதனால் சலிப்படைந்த கிருஷ்ணன், மக்களுடன் துவாரகா நோக்கி இடம் பெயர்ந்தார்.

அங்கே தேவகி, தன் மகன் கிருஷ்ணனை எப்போது காணப்போகிறோம் என்று வருந்தியபடி கோமண்டா பர்வதம் (துவாரகாவிலுள்ள ஒரு மலைப்பகுதி) நோக்கி வந்தாள். வழியில் திடீரென கிருஷ்ணரை நேருக்கு நேர் சந்தித்த தேவகியால், தான் கிருஷ்ணரைத் தான் காண்கிறோம் என்பதை நம்ப முடியவில்லை.

அப்போது கிருஷ்ணன் தன் தாய் தேவகி முன்பு சிறு குழந்தையாகக் காட்சியளித்தார். தேவகி, ஸ்ரீகிருஷ்ணரை இடுப்பில் தூக்கி மகிழ்ந்தாள். இவர்கள் சந்தித்த இடம்தான், தற்போது கோவா அருகேயுள்ள சூடாமணி தீவு. ‘சோடான்’ என்றும் அழைக்கப்படுகிறது. இன்றும் அங்கு கோயில் இருந்ததற்கான சுவடுகள் இருப்பதைக் காணலாம்.

பிற்காலத்தில், போர்த்துக்கீசியர்களின் படையெடுப்பால் கோவாவில் பல இந்துக் கோயில்கள் அழிக்கப்பட்டன. அப்போது மேயன் என்ற பகுதியிலிருந்த சிலை, தற்போதுள்ள பகுதிக்கு கொண்டு வரப்பட்டதாகக் கூறுகிறார்கள். இக்கோயில் கி.பி. 1974ம் ஆண்டு கட்டப்பட்டிருக்கிறது.

கிருஷ்ணருடன் சுமார் ஐந்தடி உயரத்தில், நின்ற கோலத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறாள் தேவகி. முழுவதும் கருங்கல்லால் செதுக்கப்பட்ட சிலை. கோயிலின் வெளிப்புறத் தோற்றமும் உள்புற அலங்காரங்களும் பக்தர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் வசீகரிக்கின்றன.

பூமிகா தேவி, லட்சுமி ராவல்நாத், மல்லிநாத், காத்யாயினி, சோடனேஸ்வர் ஆகியோர் தனிச் சன்னிதிகளில் காட்சி தருகின்றனர். ஆண்டுதோறும் ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் நடைபெறும் ‘மல்னி பூர்ணிமா,’ கோகுலாஷ்டமி மற்றும் நவராத்திரி போன்றவையும் இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படும் திருவிழாக்கள்.

தரிசன நேரம்: காலை 6.30 முதல் 1 மணி வரை, மாலை 3 மணி முதல் 8.30 வரை

செல்லும் வழி: கோவா தலைநகர் பனாஜியில் இருந்து 17 கி.மீ.. பஸ் வசதி உண்டு.

Comments