உண்மையான அன்பு என்பது ஆட்டத்தில் ஜெயித்துக் கிடைக்கும் மகிழ்ச்சி அல்ல; எதிராளியை ஜெயிக்க வைப்பதால் கிடைக்கும் மகிழ்ச்சி!''

பிரகாஷ் ரொம்ப நேரம் அமைதியாக இருந்தான். பிறகு ஏதோ நினைத்துக் கொண்டவனாக, 'என்ன இருந்தாலும் குழந்தைகளுக்கு அம்மாதான் ஒசத்தி. அப்பான்னா அடுத்ததுதான்!'' என்றான்.

இதை அவன் கூறியபோது, அவன் குரலிலும் முகத்திலும் தென்பட்ட வருத்தம் என்னை உலுக்கியது. அவனது ஐந்து வயது மகன் ஆர்யா தொடர்பானதாகத்தான் இந்த வருத்தம் என்று தோன்றியது. விவரம் கேட்டேன்.

'ஆர்யா ரொம்பப் புத்திசாலியா விளங்கணும்னு எனக்கு ஆசை. அதனால, அவனுக்காகவே பல விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டு வந்து சொல்லுவேன். போரடிக்காம சுவாரஸ்யமா சொல்லணும்னு நிறைய முயற்சி எடுத்துப்பேன். ஆனா, அவன் என்னிடம் பேசுவதைவிட என் மனைவியிடம்தான் நிறையப் பேசறான்; தன் எண்ணங் களைப் பகிர்ந்துக்கறான்!'' என்றான் பிரகாஷ்.

ஒரு கணம் எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆனால், என் குழப்பத்தைத் தெளிவாக்குவதுபோல் உடனடியாக ஒரு விஷயம் நடந்தது.

ஆர்யா அங்கு வந்தான். நான் கொடுத்த பிஸ்கட் பாக்கெட்டை முகம் மலர, 'தாங்க் யூ அங்கிள்!'' என்றபடி வாங்கிக்கொண்டான். பிறகு, என்னிடம், 'அங்கிள்! உங்களை ஒரு கேள்வி கேப்பேன். ஆந்தைக்கு இருட்டிலே கண்ணு நல்லா தெரியுமா? பகலிலே நல்லா தெரியுமா? கரெக்டா சொல்லுங்க பார்க்கலாம்!'' என்றான், சவாலான குரலில்.



நான் பதில் சொல்லத் தொடங்குவதற்கு முன்பாகவே பிரகாஷ் பாசம் பொங்க மகனிடம் பேசத் தொடங்கினான்... 'ஆர்யா கண்ணா, ஆந்தைக்கு இருட்டிலேதான்டா கண்ணு நல்லா தெரியும். அது ராத்திரியிலேதான் இரையைத் தேடித் தின்னும். இன்னொண்ணு தெரியுமா... ஆந்தையாலே தன் கழுத்தைக்கூட நல்லா திருப்பிப் பின்புறம் பார்க்க முடியும்!'' என்று அவன் சொல்லச் சொல்ல, ஆர்யாவின் முகத்தில் ஏனோ ஒரு சிறு வாட்டம். 'சரி, அம்மாவுக்குத் தெரியுதா பார்க்கலாம்!'' என்றபடி உள்ளே ஓடிவிட்டான்.

பிரகாஷ் என்னைப் பார்த்தான். 'பார்த்தியா? இதைத்தான் சொன்னேன்!’ என்ற பாவனை அதில் தெரிந்தது. என் மனதில் இருந்த சிக்கல் திடீரென விடுபட்டது. அப்போது என் நினைவுக்கு வந்தவர் பாவாஜி.

முன்னொரு காலத்தில் பாவாஜி என்றொரு பக்தர் திருமலையில் வசித்து வந்தார். தினமும் அங்குள்ள திருக்குளமான புஷ்கரணியில் மூன்று முறை குளிப்பார். அப்படிக் குளித்தவுடனேயே வேங்கடவனைத் தரிசித்து மெய்ம்மறந்து மகிழ்வார். இதுதான் அந்த பக்தரின் தினசரி நிகழ்ச்சி நிரலாக இருந்தது. பாவாஜியின் தினசரி நிகழ்வுகளில் மற்றொன்றும் உண்டு. அது சுவாரஸ்யமானது!

தினமும் வேங்கடவனைக் கண்குளிரத் தரிசித்துவிட்டுத் தன் குடிலுக்குச் செல்வார் பாவாஜி. அப்போதும் அவரது மனத்தில் திருமலை தெய்வம் குறித்த சிந்தனைகள் கிஞ்சித்தும் நீங்காது. வேங்கடவனைக் குறித்துப் பாடுவார்; ஆடுவார்; பிறகு, வேங்கடவனோடு தாயக்கட்டம் விளையாடுவார். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு, 'என்ன இது... ஒரே ஒருவர் மட்டுமே தாயக்கட்டம் விளையாடிக்கொண்டு இருக்கிறாரே! இவருக்கு மூளை பிசகிவிட்டதோ!’ என்று தோன்றும். ஆனால், பாவாஜியைப் பொருத்தவரை, அவர் தனியே விளையாடவில்லை. 'இது ஸ்வாமியின் ஆட்டம்; இது என்னுடைய ஆட்டம்’ என மாறி மாறி இருவருக்காகவும் தாயம் உருட்டி ஆடிக்கொண்டிருப்பார். தான் வெற்றியடைந்தால் மகிழ்ச்சியடைவார்; வேங்கடவன் வெற்றியடைந்தால், பெருமகிழ்ச்சி கொள்வார்.

அப்படி ஆடிக்கொண்டிருந்தபோது, ஒருநாள் அந்த அற்புதம் நிகழ்ந்தது. சட்டென ஓர் ஒளிவெள்ளம் பாவாஜியின் குடிலை நிறைத்தது. குடிலின் வாசலில் அற்புதமான வேங்கடேச விக்கிரகம் ஒன்று காட்சியளித்தது. 'என்ன பாவாஜி, நீயே ஆடுகிறாயே! இனி, என் ஆட்டத்தை நானே ஆடட்டுமா?' என்ற குரல் அதிலிருந்து ஒலித்தது.

பாவாஜி மெய்சிலிர்த்தார். அந்த விக்கிரகத்தைத் தன் கரங்களால் தூக்கினார். மான் தோல் ஒன்றின்மீது அதை மிகவும் சிரத்தையுடன் வைத்தார். பிறகு, அந்த விக்கிரகத்தின் அழகையே மெய்ம்மறந்து பார்த்து, ரசித்துக்கொண்டிருந்தார்.

'என்ன பாவாஜி, நான் கேட்டதற்கு பதிலே இல்லையே? எனக்காக ஆடப் போகிறாயா, அல்லது நானே ஆடட்டுமா?' என்ற குரல் விக்கிரகத்திலிருந்து மீண்டும் எழுந்தது. ஆனந்த மயக்கத்தோடு பாவாஜி வேங்கடவனின் உத்தரவை ஏற்று, தாயக்கட்டைகளை உருட்டிப்போட்டார்.

வேங்கடவனே தன்னோடு தாயம் ஆடப் போகும் அதிர்ஷ்டத்தை எண்ணி எண்ணிச் சிலிர்த்துப் போயிருந்த பாவாஜியால் விளையாட்டில் கவனம் செலுத்தமுடியவில்லை. தப்பும் தவறுமாக ஆடினார். நியாயமாக அவர்தான் ஆட்டத்தில் தோற்றிருக்க வேண்டும். ஆனால், நடந்ததோ வேறு! வேங்கடவனோ பாவாஜியின் தீவிர பக்தியில் தன்னையே மறந்திருந்தார். அவரது ஆட்டம் மேலும் தவறுகள் நிறைந்ததாக இருந்தது. எனவே, அந்த ஆட்டத்தில் வேங்கடவன் தோற்றுவிட்டார்.

இந்தக் கதையைப் பிரகாஷிடம் சொன்னபோது, பக்தி உணர்வு பொங்க அதைக் கேட்டுக் கொண்டான். இதற்குள் பிரகாஷின் மனைவி தீபா வீட்டு உள்வேலையை முடித்துக்கொண்டு கூடத்துப் பக்கம் வந்தாள். மகனைக் கூப்பிட்டு 'ஆர்யா, இப்ப கேளு உன் சந்தேகத்தை!'' என்றாள்.

எங்களிடம் கேட்ட அதே கேள்வியை அவளிடமும் கேட்டான் ஆர்யா. ஓரிரு நொடிகள் அவள் யோசிப்பது தெரிந்தது. பிறகு, 'இதென்ன கேள்வி... பகல்லதானே யாருக்குமே நல்லா கண்ணு தெரியும்? ஆந்தைக்கும் பகல்லதான் கண்ணு நல்லாத் தெரியும்'' என்றாள்.

ஆர்யாவின் முகத்தில் மிகுந்த மகிழ்ச்சி! 'ஐயே, ஏமாந்தியா? அதான் இல்லே! ஆந்தை இருட்டிலேதான் நல்லாப் பார்க்கும்'' என்றான்.

ஏமாந்தவள் போன்று முகத்தைச் சுருக்கிக் கொண்டு, 'அடேடே! அப்படியாடா கண்ணா? இது எனக்குத் தெரியாம போச்சே! உனக்கு எப்படித்தான் புதுப்புது விஷயங்களெல்லாம் தெரியுதோ? வெரிகுட்!'' என்று அதிசயித்தாள், பி.எஸ்ஸி-யில் விலங்கியலை முக்கியப் பாடமாக எடுத்திருந்த தீபா.

''அப்புறம் அம்மா... நம்மால உடம்பைத் திருப்பாம பின்பக்கம் பார்க்க முடியாதில்லே? ஆனா, ஆந்தை உடம்பைத் திருப்பாம கழுத்தை மட்டும் பின்பக்கம் திருப்பிப் பார்க்குமாம்! எங்க மிஸ் சொன்னாங்க!'' என்றான் ஆர்யா, கண்கள் விரிய.

''கெட்டிக்காரன்டா நீ! உனக்கு நிறைய விஷயங்கள் தெரிஞ்சிருக்கு. எனக்குத் தெரியலை, பாரேன்!'' என்று மகனை அணைத்துக்கொண்டாள் தீபா.

'இப்ப புரியுதா பிரகாஷ், உண்மையான அன்பு என்பது ஆட்டத்தில் ஜெயித்துக் கிடைக்கும் மகிழ்ச்சி அல்ல; எதிராளியை ஜெயிக்க வைப்பதால் கிடைக்கும் மகிழ்ச்சி!'' என்றேன்.

சில நேரங்களில் நம் அறிவாற்றலைக் காட்டுவதைவிட நமக்கு நெருங்கியவரை மகிழ்ச்சிப்படவும் பெருமிதப்படவும் வைப்பதுதான் முக்கியம் என்பதை பிரகாஷ் உணர்ந்துகொண்டுவிட்டான்.

Comments