புனித பூமியில் மனித தெய்வங்கள்

அந்தப் பரதேசி, ஊர் ஊராகத் திரிந்து, திருமலைக்கு வந்து சேர்ந்தான். கையில் காசில்லை; தங்குவதற்கு இடமும் இல்லை! வாடிப் போயிருந்தவனைப் பார்த்து, கோயிலின் தாசி புரந்தரி இரக்கப்பட்டாள். அவனது பார்வையின் கூர்மையும், முகத்தின் தேஜஸும் கண்டு வியந்தவள், அவனைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று தங்கவைத்தாள்.

அங்கிருந்தபடி, ஸ்ரீவேங்கடாசலபதியை அனுதினமும் பாமாலைகளால் ஆராதித்தான் அவன். காலில் சலங் கையும் கையில் வீணையுமாக எங்கோ நள்ளிரவில் புறப்பட்டுச் செல்லும் புரந்தரி, விடியும்போது வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள்.

ஒருநாள், அவளிடமே அவன் அதற்கான காரணத்தை வற்புறுத்திக் கேட்க, ''என் பாடலுக்கு இறைவனும், அவ னுடைய சங்கீதத்துக்கு நானும் சேர்ந்து ஆடுவோம். அதற் காகவே எவரும் இல்லாத வேளையில், வேங்கடவனின் ஆல யத்துக்குச் செல்கிறேன்'' என்றாள். அதைக் கேட்டுச் சிலிர்த் தவன், அவளது பாதங்களைப் பற்றிக்கொண்டான். தன்னை யும் அழைத்துச் செல்லும்படி கெஞ்சினான். அவளும் சம்மதித்தாள்.

அன்றிரவு, புரந்தரியும் அவனும் கோயிலுக்குச் சென்ற னர். ஆலயக் கதவுகள் தாமாகவே திறந்தன; அதைக் கண்டு அதிர்ந்தான் அவன். கருவறைக்கு எதிரில் உள்ள மண்டபத்தில் அமர்ந்த புரந்தரி, வீணையை இசைத்துப் பாடத் துவங்கினாள். அப்போது அங்கே காட்சி தந்த வேங்கடாசலபதி, அவளது பாடலுக்கு அபிநயம் பிடித்து ஆடினார்! இவை அனைத்தையும் தூண் மறைவிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த பரதேசி, பரவசமானான்! அதை யடுத்து புரந்தரி ஆட, இறைவன் பாடத் துவங்கினார். உடனே பரதேசி முகம் சுருக்கினான். 'நிறுத்து உன் சங்கீதத்தை! இது வெறும் அபஸ்வரம்’ எனக் கூச்சலிட்டான். சங்கீதத்தில் பாண்டித்யம் பெற்றவன் அவன்.

பரதேசியின் செயல் கண்டு நடுங்கிப்போனாள் புரந்தரி. ஆனால் இறைவனோ, அந்தப் பரதேசியைத் தடுத்தாட் கொண்டார். அதில் உருகிப் போனவன், எல்லாவற்றுக்கும் காரணமான புரந்தரியையே குருவாக ஏற்றான்; ஞானமும் பெற்றான்! அந்தப் பரதேசிதான், உலகத்தாரால் 'புரந்தரதாஸர்’ எனக் கொண்டாடப்படும் இசைஞானி.

கர்நாடக மாநிலத்தில், க்ஷேமபுரா எனும் ஊரில், வணிக ரான வரதப்ப நாயக்கருக்கும் அவருடைய மனைவி லீலா வதிக்கும் கி.பி.1484-ஆம் ஆண்டு பிறந்தார் புரந்தரதாஸர். பெற்றோர் வைத்த பெயர் ஸ்ரீநிவாசன். சங்கீதத்திலும் சாஸ் திரத்திலும் புலமை பெற்று விளங்கிய ஸ்ரீநிவாசன், 16-ஆம் வயதில், சரஸ்வதிபாய் என்பவளை மணந்தான்.



அவனது 20-வது வயதில் பெற்றோர் இறந்துவிட, தந்தையின் தொழிலை நடத்தத் துவங்கினான். முத்து, ரத்தினம் என விலையுயர்ந்த கற்களை வாங்கி விற்றதுடன், லேவாதேவியிலும் ஈடுபட்டான். 'நவகோடி நாராயணன்’ என அனைவராலும் அழைக்கப்பட் டான். ஏகத்துக்கும் பணம் புரண்டது; ஒரு கட்டத்தில் பணப் பைத்தியமானான். பேராசையும் கஞ்சத்தனமும் அவனது குணங்களாயின. மனைவி சரஸ்வதி வருந்தினாள். இல்லறத்தின் பயனாகப் பிறந்த மகள் ருக்மிணியின் வரவுகூட, அவனது மனதில் எந்த மாறுதலையும் ஏற்படுத்த முடியவில்லை.

ஒருநாள்... ஸ்ரீநிவாசனின் கடைக்கு முதியவர் ஒருவர் வந்தார். 'மகனுக்கு உபநயனம் செய்யவேண்டும்; பொரு ளுதவி செய்யுங்கள்’ என்று யாசித்தார். ஆனால், ஸ்ரீநிவாசன், அவரை அடித்து விரட்டிவிட்டான்.

பிறகு அந்த முதியவர், ஸ்ரீநிவாசனின் வீட்டுக்குச் சென்று, அவன் மனைவியிடம் நடந்தவற்றைச் சொல்லி உதவி கேட்டார். உடனே அவள் தனது வைர மூக்குத்தியைக் கழற்றிக் கொடுத் தாள். அந்தப் பொல்லாத கிழவன், மூக்குத்தியை எடுத்துக்கொண்டு ஸ்ரீநிவாசனிடம் வந்து, 'இதை அடகாக எடுத்துக்கொண்டு, பணம் தாருங்கள்’ என்றார். 'அட... இது மனைவியின் மூக்குத்தியைப் போலல்லவா இருக்கி றது!’ என்று சந்தேகித்தவன், கிழவரை காத்திருக்கச் சொல்லிவிட்டு, வீட்டுக்கு ஓடோடி வந்து மனைவியிடம், 'எங்கே உன் மூக்குத்தி? சீக்கிரம் கொண்டு வா!’ என்று பரபரத்தான்.

கலங்கித் தவித்தவள், உள்ளே சென்று கண்ணீர் மல்க இறைவனைத் தொழுதாள். அந்த நிமிடமே அவளது கைகளில் பளபளத்தது மூக்குத்தி! அதிர்ச்சியும் ஆச்சரியமு

மாக உறைந்துபோனவள், கணவனிடம் அந்த மூக்குத்தியைக் கொண்டு வந்து கொடுத்தாள். அதனை வாங்கிப் பார்த்தவன் மலைத்து நின்றான். பின்னே... அப்படியரு ஜொலிஜொலிக்கும் வைரத்தை இதுவரை பார்த்ததே இல்லையே, அவன்?! பிறகு, ஒருவாறு சுதாரித்துக்கொண்டு, ''இது உன்னுடையது அல்ல... ஏது, இந்த மூக்குத்தி?'' என்று கோபமாக விசாரித் தான். அவள் பயந்து, நடந்தவற்றை விளக்கினாள்.



அதைக் கேட்டதும், கடைக்கு விழுந்தடித்துக்கொண்டு ஓடினான். அங்கே கிழவரைக் காணோம்! மாறாக, பணப் பெட்டியிலும், நகைகளிலும் நறுமணம் வீசியது. 'ஐயோ, அழியும் செல்வத்தின் பின்னால் அலைந்து, பிறவியை வீணடித்தேனே’ என்று புலம்பினான்; கதறினான். அவனது நாவிலிருந்து, 'ஆ லேகரா’ எனும் முதல் கவிதை, பாடலாக வெளிவந்தது. பணப் பைத்தியமாக இருந்த ஸ்ரீநிவாசன் ஒழிந்தான்; இறைப்பணிக்காகவே, தன்னை அர்ப்பணித்தான்.

அவனது செல்வங்கள், வறியவர்களுக்கு போய்ச் சேர்ந்தன. சொத்து- சுகங்களைத் துறந்த ஸ்ரீநிவாசன், மனைவி, மகளுடன் யாத்திரை மேற்கொண்டான்.

1525- ல், மகான் வியாசதீர்த்தரால் தீட்சை கொடுக்கப்பட்டு, தன்னந்தனியனாகத் திருமலைக்கு வந்தான். அங்கே, புரந்தரியை குருவாக ஏற்றான்; புரந்தரதாஸனாக மாறினான். 'இசையால் மக்களை நல்வழிப்படுத்தி உய்வாயாக!’ எனும் இறைக் கட்டளையை ஏற்றார் புரந்தரதாஸர்; அவரிடமிருந்து தேனெனப் பிரவாகித்தன பாடல்கள். தென்னகம் முழுதும் யாத்திரைகள் மேற்கொண்டு, கன்னடம் மற்றும் சம்ஸ்கிருத மொழியில், ஸ்ரீபாண்டுரங்கனையும் திருவேங்கடவனையும், ஆயிரக்கணக்கான பாடல்களால் பாடித் தொழுதார். அனைவரும் இறையருளைப் பெறுவதற்கான நெறிமுறைகளை தனது பாடல்கள் மூலம் வலியுறுத்தினார். ஏழு ஸ்வரங் களையும் கொண்டு, மாயா மாளவ கௌள ராகத்தில் அவர் பாடியதைக் கேட்டுப் பரவசமானார்கள் மக்கள்.

கர்னாடக சங்கீதத்தில் 'பத்ததி’ எனப்படும் புதிய வழிமுறையை வரையறுத்துத் தந்ததே புரந்தரதாஸர்தான். கீர்த்தனைகள், சூளாதிகள், லக்ஷண, லக்ஷிய கீதங்கள் ஆகியவற்றை இயற்றி, சங்கீதத்துக்குப் பெரும் தொண்டாற்றிய புரந்தரதாஸர், 'சங்கீதப் பிதாமகர்’ எனப் போற்றப்படுகிறார். இவரது பக்தியில் நெகிழ்ந்த பாண்டுரங்கன், முதியவராக வந்து, இவருடைய மகளின் திருமணத்தை நடத்தி வைத்த தாகவும், இன்னும் பல அற்புதங்களை நிகழ்த்தியதாகவும் செவிவழிக் கதைகள் சொல்லப்பட்டு வருகின்றன.

சங்கீதத்தையும் ஹரி பக்தியையும் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த புரந்தரதாஸர், 1564-ஆம் வருடம், ஹம்பியில் பாண்டுரங்கனின் திருவடியில் கலந்தார். எம்.எஸ்.சுப்பு லட்சுமியின் குரலில் ஒலிக்கும், 'ஜகதோத் தாரண...’ எனும் ஸ்ரீகிருஷ்ணரின் லீலைகளை விவரிக்கும் கீர்த்தனை, எம்.எல்.வசந்தகுமாரியின் குரலில் ஒலிக்கும் வேங்கடவனைப் பற்றிய 'வேங்கடாசல நிலையம்...’ எனும் கீர்த்தனை ஆகியவற்றின் மூலம் புரந்தரதாஸர் நம்மிடையே இன்றும் வாழ்ந்து வருகிறார்.

Comments