காளி தரிசனம்... கவலைகள் பறந்திடும்!

நடன நாயகனான சிவனார் அப்படிச் செய்வார் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை யாரும்! நடுவரான ஸ்ரீபெருமாள் மற்றும் தேவர்கள் என அனைவரும் அதிர்ந்தனர். சம்பந்தப்பட்ட தேவி, வெட்கித் தலைகுனிந்து நின்றிருந்தாள்.




பின்னே... சிவனார் வலது கையைச் சுழற்றி ஆட, அவளும் அவ்விதமே ஆடினாள். அவர் இடது காலைச் சுழற்றி ஆட, அவளும் அதற்கு இணையாக ஆடினாள். 'சபாஷ்! சரியான போட்டி’ என யாவரும் வியந்து நிற்கும் வேளையில், சட்டென்று தனது காதிலிருந்து குண்டலத்தை விழச் செய்தார் சிவனார். எல்லோரின் கவனமும் அதன் மீது விழ, கீழே விழுந்த குண்டலத்தைத் தனது கால் விரல்களால் பற்றி எடுத்த நடனநாயகன், அப்படியே காலை உயர்த்தி, காது வரைக்கும் தூக்கினார்; காலாலேயே குண்டலத்தைக் காதில் அணிந்துகொண்டார். இதைக் கண்டு விக்கித்து நின்றுவிட்டாள் தேவி. தனது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டாள். 'சபையில் அனைவரும் கூடியிருக்கும் வேளையில், ஒரு பெண்ணானவள் இப்படிக் காலைத் தூக்கி ஆடுவது எங்ஙனம் சாத்தியம்?’ என்று யோசித்தவளாக, வெட்கமும் அவமானமும் மேலிடத் தலைகுனிந்து நின்றாள் தேவி.




அந்த வெட்கமும் தலைக்குனிவும் அவளுள் கோபத்தைத் தூண்டின. இயலாமையுடன் கூடிய கோபம் ஆதலால், இன்னும் உக்கிரமானாள் தேவி. மகா காளியின் உருவெனத் திகழ்ந்தவள், விறுவிறுவென வனத்தின் எல்லைக்குச் சென்று நின்றாள். இன்றைக்கும் எல்லைக்காளியாக, தில்லைக் காளியாக கோயில்கொண்டபடி, அனைவருக்கும் அருள்பாலித்து வருகிறாள்.










தில்லை மரங்கள் சூழ்ந்த அந்தப் பகுதி தில்லை வனம் எனப்பட்டது. தற்போது சிதம்பரம் என அழைக்கப்படுகிறது. சிவனாரும் தேவியும் ஆடிய அந்த இடம்தான் பொற்சபை எனப் போற்றப்படுகிறது.




இன்றைக்கும், எங்கிருந்தெல்லாமோ தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, சிதம்பரம் திருத்தலத்தையும் ஆடல்வல்லான் ஸ்ரீநடராஜ பெருமானையும் தரிசித்துச் செல்கின்றனர். முன்னதாக, தனிக்கோயிலில் எழுந்தருளும் ஸ்ரீதில்லைக்காளியை தரிசித்துவிட்டுத்தான், ஸ்ரீநடராஜரை தரிசிக்கவேண்டும் என்பது ஐதீகமாம்!




சிதம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலை விலும், சிதம்பரம் ஸ்ரீநடராஜபெருமான் திருக்கோயிலில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது தில்லைக்காளியம்மன் திருக்கோயில்.




கோப்பெருஞ்சோழ மன்னன் காளிதேவியின் பெருமையை அறிந்து, இங்கே கோயில் கட்டி, தேவியை வழிபட்டு, போர்களில் வெற்றி வாகை சூடினான் என்கிறது ஸ்தல வரலாறு.




எட்டுத் திருக்கரங்களுடன், கரங்களில் ஆயுதங்கள் ஏந்தியபடி, ஒருகாலைத் தூக்கிய நிலையில், கடும் உக்கிரமாகக் காட்சி தருகிறாள் தில்லைக்காளி. இவளது உக்கிரத்தைக் கண்டு




அஞ்சிய தேவர்களும் முனிவர்களும் சிவனாரிடம் முறையிட்டனர். இதையடுத்து, 'உன்னைத் தரிசித்துவிட்டு என்னைத் தரிசிக்க வரும் அன்பர்களுக்கு அருள்புரிவேன்; உக்கிரம் தணிவாயாக!’ என சிவனார் அருளி, தேவியைச் சமாதானப்படுத்தினார். இதனை அறிந்த மன்னர், கடும் உக்கிரத்துடன் ஸ்ரீதில்லைக்காளியையும் சாந்த சொரூபினியாக ஸ்ரீதில்லையம் மனையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டாராம்! ஆகவே, கோயில் கருவறையில் குடிகொண்டிருக்கும் முக்கியத் தெய்வம், ஸ்ரீதில்லையம்மன்தான். ஆனாலும், தில்லைக் காளியம்மனே பரிகாரத் தெய்வமாக, பக்தர் பெருமக்களால் போற்றப்படுகிறாள்.




அற்புதமான ஆலயம். உள்ளே, மேற்குப் பார்த்தபடி சாந்த முகத்துடன் தில்லையம்மனும், கிழக்குப் பார்த்தபடி உக்கிரமாக தில்லைக் காளியும் தனித்தனிச் சந்நிதிகளில் தரிசனம் தருகின்றனர்.










கோஷ்ட தேவதைகளாக, கிழக்குப் பார்த்தபடி ஸ்ரீநாக வைஷ்ணவ ரூபினி, மேற்குப் பார்த்தபடி ஸ்ரீகடம்பவன தட்சிண சொரூபினி, வடக்குப் பார்த்தபடி நான்கு முகங்களுடன் ஸ்ரீபிரம்ம சொரூபினி ஆகியோர் காட்சி தரும் சக்தி மிக்க திருத்தலம் இது! இங்கு தில்லைக்காளியின் காவல் தெய்வமாக ஸ்ரீவீரனார் ஸ்வாமியும் உள்ளார். இந்தத் தலத்துக்கு வந்து வேண்டினால், நினைத்த காரியத்தை நடத்தித் தருவாள் தில்லைக்காளி என்கின்றனர் பக்தர்கள்.




திருமண தோஷத்தால் தவிப்பவர்கள், பிள்ளை பாக்கியம் இல்லையே என ஏங்குபவர்கள், செய்வினை மற்றும் பில்லி சூனியத்தால் அவதிப்படுபவர்கள், கடன் தொல்லையிலிருந்து மீளமுடியவில்லையே என கலங்கித் தவிப்பவர்கள், எதிரிகள் தரும் இன்னல்களிலிருந்து விடுபட என்ன வழி என விழிபிதுங்கிக் கிடப்பவர்கள் எல்லாம் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள், அமாவாசை மற்றும் பௌர்ணமி ஆகிய தினங்களில் இங்கு வந்து ஸ்ரீதில்லைக்காளியம்மனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, வெள்ளை நிற வஸ்திரம் சார்த்தி, குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட்டால், சகல நலனும் பெற்று, நிம்மதியும் சந்தோஷமும் பொங்க வாழலாம் என்று சிலிர்ப் புடன் தெரிவிக்கின்றனர் பெண்கள்.




திருமணத் தடையுள்ளவர்கள், இங்கு வந்து ஸ்ரீதில்லைக்காளியம்மனுக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் சார்த்துவதுடன், அவர்களின் வயதுக்குத் தக்கபடி (30 வயது எனில் 30 விளக்குகள்; 32 எனில் 32 விளக்குகள்) என விளக்கேற்றி, குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால், விரைவில் வீட்டில் கெட்டிமேளச் சத்தம் கேட்கும்; நல்ல, பண்பும் அன்பும் நிறைந்த கணவன் அமையப் பெறுவார்கள் என்பது நம்பிக்கை!




பிறகென்ன பெண்களே... தில்லைக்குச் சென்று ஸ்ரீகாளியை வழிபடுங்கள்; தீராத கவலைகள் யாவும் தீர்த்து வைப்பாள் தேவி!



Comments