ஓங்கார மலையில் துவாதச லிங்கம்!

பிரம்மாண்டமாய் விரிந்து கிளை பரப்பி நிற்கிறது அந்த ஆலமரம். அதைச் சுற்றிலும், அழகழகான சிறு மண்டபங்கள். அவை ஒவ்வொன்றின் உள்ளேயும், காலங்கடந்த கடவுள் தத்துவத்தை உணர்ந்த, உணர்த்திய மஹாபுருஷர்களைக் காண்கிறோம்.

ஸ்ரீ ஆதிசங்கரர், ஆசார்ய ஸ்ரீமத்வர், ஸ்ரீமத் ராமானுஜர், ஸ்ரீகௌதம புத்தர், வர்த்தமான மகாவீரர். பெத்லஹேமில் அவதரித்த இயேசு கிறிஸ்து, சீக்கியர்களின் புனித நூலான கிரந்த சாகிப், இஸ்லாம் சமயத்தைக் குறிப்பதுபோல மசூதியின் வடிவம்.

இதைக் காணும்போது, ‘வழிபாட்டு முறைகள் வெவ்வேறாக இருந்தாலும், அதன்மூலம் அடையப்படும் பரம்பொருள் ஒன்றுதான்’ என்று, தத்துவங்கள் சொல்வதை உணர முடிகிறது.

இது, ஓம்ஹார் ஹில்ஸ் (தமிழில்: ஓங்கார மலை). பெங்களூரில் இருந்து மைசூர் செல்லும் வழியில், ராஜேஸ்வரி நகர் பகுதியில், கம்பீரமாய் எழும்பி நிற்கும் இந்த மலைப்பகுதியில்தான், அபூர்வமான இந்த காட்சியைப் பார்க்கிறோம். இங்கேதான், ஆச்சர்யமான துவாதசலிங்கத் திருக்கோவில் அமைந்திருக்கிறது.

‘அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய்’ விளங்கும் சிவபிரானின் பன்னிரண்டு தலங்களை, ‘ஜோதிர்லிங்கத் தலங்கள்’ என்று விசேஷமாகக் குறிப்பிடுவார்கள். சோமநாதபுரத்தில் சோமநாதர், ஸ்ரீசைலத்தில் மல்லிகார்ஜுனர், உஜ்ஜைனியில் மகாகாளர், நர்மதைக் கரையில் ஓங்காரேஸ்வரர், பரலியில் வைத்தியநாதர், மகாராஷ்டிர மாநிலத்தில் பீம சங்கரர், பனிபடர்ந்த இமயத்தில் கேதாரநாதர், தாருகாவனத்தில் நாகேஸ்வரர், காசியில் விஸ்வநாதர், கோதாவரிக் கரையில் த்ரியம்பகேஸ்வரர், ராமேஸ்வரத்தில் ராமநாதர்... என்று குறிப்பிடுவார்கள்.

நாடெங்கும் பல்வேறு இடங்களுக்குச் சென்று தரிசிக்க வேண்டிய இந்த மூர்த்திகளை, ஒரே இடத்தில் நாம் தரிசிப்பது, இந்த ‘ஓங்கார மலை’ பகுதியில்தான்.

வட இந்தியப் பாணியில் நெடிதுயர்ந்து நிற்கிறது ஆலய விமானம். உள்ளே சென்றால், பிரதான மூர்த்தியாகக் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீஓங்காரேஸ்வரர். ஓங்கார மலை என்று இந்த இடம் குறிப்பிடப்படுவதால், இவர் மூலஸ்தானத்தில் எழுந்தருளினார் போலும். இவரைத் தொடர்ந்து, பன்னிரு ஜோதிர்லிங்க மூர்த்திகளையும் அடுத்தடுத்து தரிசிக்கிறோம். பொதுவாக, ‘ஜோதிர்லிங்கம்’ என்பது சிறிய வடிவில்தான் காணப்படும். இங்கே, எல்லா மூர்த்திகளையும் பெரிய வடிவில் தரிசிக்கிறோம். இவர்கள் மட்டுமல்ல; ஸ்ரீவிஜயகணபதி, சுப்ரமணியர், கால பைரவர், சந்திரசேகரர், நடராஜர் என்று இன்னும் பல மூர்த்திகளையும் இங்கே தரிசிக்கிறோம்.

மத்ஸ்ய நாராயணன் என்ற பெயருடன் மச்சாவதார மூர்த்திக்கு தனிக்கோயில் அமைந்திருக்கிறது. நான்கு கரத்தினராக சங்கு, சக்கர, வரத, அபய நிலையில் அருள்பாலிக்கிறார் பெருமாள். செல்வம் அருள்பவளும், மங்களத்தின் வடிவானவளுமான திருமகள், வனதுர்கை, ஸ்ரீராஜராஜேஸ்வரி, நாகதேவதை, முனீஸ்வரன் என்று பல தெய்வ வடிவங்களும் இங்கே சன்னிதி கொண்டுள்ளனர்.

சுமார் 24 அடி விட்டம் கொண்ட பிரம்மாண்ட கடிகாரம் ஒன்றும் இங்கே நிறுவப்பட்டுள்ளது. ஒவ்வொரு மணி நேரத்துக்கும் இந்தக் கடிகாரத்தில் இருந்து ‘ஓம்’ என்ற சப்தம் கம்பீரமாக ஒலிக்கிறது.


பரமஹம்ச ஸ்ரீசிவபுரி மஹா ஸ்வாமிகளால் உருவான ஓங்கார ஆஸ்ரம சமஸ்தானத்தின் திருப்பணியின் வெளிப்பாடாக, ஒளி சிந்திக்கொண்டிருக்கிறது துவாதசலிங்கத் திருக்கோயில்.

மனத்தை லயிக்க வைக்கும் பரிபூரண அமைதியும், அழகும் பொலியும் ஓங்கார மலையை ஒரு முறை தரிசித்துப் பாருங்கள்... நமக்குள்ளேயும் ஓங்காரத் தொனி கேட்க ஆரம்பிக்கும்.

Comments