சரண்புகுந்த மாதரசி!

இந்திரபிரஸ்த நகரின் அரண்மனை. தர்மபுத்திரனுக்கு ஆசி வழங்கிய நாரதமகரிஷி சொன்னார்: “தர்மபுத்திரா! மேலுலகில் உன் தந்தை பாண்டுவைப் பார்த்தேன். அவர் ‘மகரிஷி, என் மகனிடம் ராஜ சூய யாகம் ஒன்றைச் செய்யுமாறு கூறுங்கள். ராஜசூய யாகம் செய்து, என் மகன் சக்கரவர்த்தி பதவியை அடைந்தால், நான் சிறந்த கதியை அடைவேன்’ என்றார். எனவே, நீ ராஜசூய வேள்வியைச் செய்.”

நாரதரின் வழிகாட்டுதலைச் சிர மேற்கொண்டு, தர்மபுத்திரன் ராஜசூய யாகம் செய்தான். யாகம், வெகு விமரிசையாக நடைபெற்றது. தேவர்களுக்கு அவிர்பாகம் அளிக்கப்பட்டது. முனிவர்கள் உபசரிக்கப்பட்டனர். நாரதரின் தேவகானம் ஒலித்தது. அன்னம் பாலிப்பு நடைபெற்றது.

சங்கொலி முழங்கிற்று. தானதர்மங்களுக்குக் குறைவில்லை. தர்மபுத்திரனை வலம்புரிச் சங்கின் தீர்த்தத்தால், கிருஷ்ணபகவான் அபிஷேகம் செய்தார். தர்மன் ‘சக்கரவர்த்தி’ என்ற பட்டத்தையும் பெற்றான்.

யாகத்தைக் காண வந்த துரியோதனாதியர் மனத்தில், பொறாமைத் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. யாகம் முடிந்த கையோடு, அஸ்தினாபுரம் திரும்பிய துரியோதனுக்குத் தூக்கமே இல்லை. பொறாமையில் வெந்து உருகினான். “இந்த அகிலத்தில் தர்மன் அடைந்துவிட்ட செல்வத்தை, இனி யாரால் அடைய முடியும்; நாம் சிறுமை அடைந்து விட்டோம்; இனி வாழ்ந்து பயனில்லை” என்று புலம்பித் தீர்த்தான். அருகிலிருந்தவர்கள் சொன்ன சமாதானங்கள் எல்லாம் எடுபடவில்லை. துரியோதனனின் மனநிலையை நன்கு புரிந்து வைத்திருந்த சகுனி, “துரியோதனா! கவலையை விடு; தர்மன் சேர்த்துள்ள செல்வத்தை எண்ணித்தானே கவலை கொள்கிறாய்? இன்று அவை அனைத்தும் தர்மனின் செல்வம்; நாளை அச்செல்வத்தை உன்னுடையதாக்குவேன்” என்றான்.

‘இது எப்படிச் சாத்தியமாகும்?’ என்று துரியோதனன் எண்ணிக் கொண்டிருக்கும்போது, சகுனி வழியும் சொல்லிக் கொடுத்தான்.

“அஸ்தினாபுரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய மண்டபத்தைப் பார்க்க வருமாறு, திருதுராஷ்டிர மகராஜன் பெயரால், விதுரர் மூலமாக ஓலை அனுப்பினால், பாண்டவர்கள் வந்து சேர்வார்கள். வந்த இடத்தில் தருமனைச் சூதாட அழைத்து, சூதில் தோற்கடித்து, அவர்கள் செல்வத்தை வென்று உனக்களிப்பேன்” என்றான் சகுனி.

சகுனியின் திட்டப்படியே, பாண்டவர்கள் அஸ்தினாபுரத்துக்கு வரவழைக்கப்பட்டார்கள். புதிய மண்டபத்தைப் பார்த்து மகிழ்ந்தார்கள்.பெரியோர்களை வணங்கி, ஆசி பெற்று அமர்ந்திருந்தார்கள்.

“பொழுதுபோக்காக கொஞ்ச நேரம் சூதாடலாம் வா” என்று தர்ம புத்திரனை அழைத்தான் சகுனி. தர்மனோ, சூதாடினால் என்னென்ன தீய விளைவுகள் ஏற்படும் என்றெல்லாம் எடுத்துச் சொல்லி ‘மதி உணர்ந்தவர் சூதின் மேல் வைப்பரோ மனம்’ என்றான்.

“காயை உருட்டி ஆடும் சூதுபோருக்கு அஞ்சும் நீ, எங்ஙனம் மோது போர் புரியப் போகிறாய்” என்று கர்ணன் ஏளனமாய்ப் பேசினான். வேறு வழியின்றி, தர்மன் சூதாட அமர்ந்தான்.

“நான் செல்வத்தைக் கொடுப்பேன்; என் மாமன் சகுனி சூது ஆடுவான்” என்றான் துரியோதனன். ஆட்டம் தொடங்கியது.

சகுனி காயை உருட்டினான். அந்த சூதுக்காய்கள் சகுனி நினைத்ததை சாதித்தன. சூதாடு களத்தில், தர்மபுத்திரன் முத்து மாலையையும், பொற்காசுகளையும், விலை மதிப்பற்ற ஆபரணங்களையும், யானை, குதிரைப் படைகளையும் தோற்றான்; அடுத்து, தன் நாட்டை வைத்துத் தோற்றான். இழந்ததை மீட்க வழியில்லாமல், நகுலன், சகாதேவன், பீமன், விஜயன் என்று தம்பிமாரை ஒவ்வொருவராக வைத்துத் தோற்றான். பின்னர் தன்னையும் பணயப் பொருளாக வைத்துத் தோல்வியைத் தழுவினான். துரியோதனனுக்கு அடிமைகள் என்ற நிலையில், தோளிலிருந்து அங்க வஸ்திரத்தையும் கீழே இறக்கி போட்டு, அவமானப்பட்டு நின்றனர் பாண்டவர்கள்.

சகுனி சொன்னான்: “தர்ம புத்திரா, ஏன் கவலைப்படுகிறாய்? அனைத்தையும் இழந்துவிட்டோமே! எதைப் பணயமாக வைத்து ஆடுவது என்று பார்க்கிறாயா? இழந்ததை மீட்க ஒரு வழிதான் இருக்கிறது. உன் மனைவி பாஞ்சாலியை வைத்து ஆடு” என்றான். தர்மனும் ‘பாஞ்சாலியைப் பணயமாக வைத்து ஆடி, இழந்ததை மீட்கலாம்’ என்று எண்ணினான். மாறாக பாஞ்சாலியையும் தோற்றான்.

துரியோதனன் உற்சாகமானான். பிரதிகாமி என்னும் தேரோட்டியை அழைத்து, “பாஞ்சாலி இனி நமக்கு அடிமை; அவளை அழைத்து வந்து, நம் அரண்மனையைக் கூட்டிப் பெருக்கி, சுத்தம் செய்யச் சொல்” என்றான். தேரோட்டி பாஞ்சாலியிடம் சென்று நடந்தனவற்றைச் சொன்னான். அவளோ “தர்மர் தன்னைத் தோற்றபின் என்னைத் தோற்றார் என்கிறாயே! அவ்வாறு செய்தால், என்னைத் தோற்க சட்டப்படி அவருக்கு உரிமை இல்லையே” என்று கேட்டாள். பிரதிகாமி திரும்பி வந்து, துரியோதனிடம் அதனைத் தெரிவித்தான்.

உடனே துரியோதனன், துச்சாதனனைப் பார்த்து, “தம்பி! அவளை இங்கே இழுத்துக் கொண்டு வா” என்று ஆணையிட்டான். துச்சாதனன் பாய்ந்து சென்று பாஞ்சாலியை, “சபைக்குப் புறப்படு” என்றான். அவளோ, “நான் சபைக்கு வரமுடியாத நிலையில் இருக்கிறேன். எனக்குக் கருணை காட்டு” என்று தன் நிலையைச் சொன்னாள். துச்சாதனனின் தாய் காந்தாரியிடம், “அம்மா என்னை இழுத்துக்கொண்டு போகப் போகிறார். காப்பாற்றுங்கள்” என்று அழுதாள். பயனில்லை. நீண்ட கருங்குழலை நீசன் துச்சாதனன் பற்றி இழுத்துச் சென்றான். இதனைக் கண்டவர்கள் எல்லாம், கண்முன்னே நடக்கும் அநியாயத்தைத் தடுக்க தைரியம் இன்றி, ‘என்ன கொடுமை இது’ என்று பார்த்திருந்தனர்.

பாஞ்சாலியை சபையில் கொண்டு போய் நிறுத்தினான் துச்சாதனன். “அவளது ஆடையைப் பற்றி இழு” என்றான் துரியோதனன். அவள் ஆடை குலைவுற்று நின்றாள். ‘ஆ!’ என்று அழுது துடித்தாள். ஆடவர்கள் கூடியிருக்கும் சபையில், தனக்கு ஏற்படப் போகும் அவமானத்தை எண்ணி, விம்மினாள். தன்னை யார் காப்பாற்றுவார்கள் என்று கலங்கினாள். ‘தன் கணவன்மார்கள் காப்பாற்றுவார்களா?’ என்று எதிர்பார்த்து, “என் விதியைப் பார்த்தீர்களா? இதற்காகவா என்னை அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து வேதச்சுடர்த்தீ முன் வேண்டி மணம் புரிந்தீர்கள்” என்றழுதாள். அடிமைகளைப் போல் நின்ற அவர்களால் துயரப்பட முடிந்ததே தவிர, துயர் துடைக்க முடியவில்லை.

சபையில் அமர்ந்திருந்த பிதாமகர் பீஷ்மரைப் பார்த்துக் கதறினாள். “பிதா மகரே! என் ஆடையைப் பற்றி இழுத்து, அவமானம் செய்கிறார்களே. உங்களுக்குத் தெரிந்த தர்மத்தில் ஒன்றை எடுத்துரைத்து, இந்த துன்பத்திலிருந்து என்னைக் காப்பாற்ற மனமில்லையா” என்று அரற்றினாள். அவரோ “இங்கு அநியாயம்தான் அரங்கேறுகிறது. என்றாலும், என்னால் அதனைத் தடுத்து நிறுத்த இயலவில்லை” என்று சொல்லித் தப்பித்துக் கொண்டார்.

பாஞ்சாலி சபையிலிருந்த ஆடவர்களில் யாராவது ஒருவர், இந்த இழி செயலைத் தடுத்து நிறுத்தி விடமாட்டார்களா என்றெண்ணினாள். சபையோரை கையெடுத்துக் கும்பிட்டாள். துரியோதனனைப் பகைத்துக் கொள்ள அவர்களுக்கு மனமில்லை என்பதை, அவர்களது மௌனம் சொன்னது.

நீதியையும், தர்மத்தையும் குழி தோண்டிப் புதைக்கத் துடிக்கும், அதர்மிகள் சூழ்ந்திருந்த சபையில் நியாயம் எடுபடுமா? பாஞ்சாலியின் கண்களில் அருவியாய் பெருகியது கண்ணீர்.

“ஏன் தாமதிக்கிறாய்? ஆடையை அவிழ்த்துவிடு” என்று ஒரு அசுரக்குரல் ஒலித்தது. புடவையின் தலைப்பைப் பற்றினான் பாவி துச்சாதனன். ‘இனி உதவுவார் இல்லை’ என்று, தன் பலத்தின்மேல் நம்பிக்கை கொண்டு, தன் தளிர்க் கரங்களால், ஆடையைப் பற்றிக் கொண்டாள் பாஞ்சாலி. மலர் போலும் கரங்கள் அவளுக்கு, ஆடையைப் பற்றி இழுப்பவனோ ‘மாடு நிகர்த்ததுச் சாதனன்.’ மாடு பற்றி இழுத்தால், மலர் என்ன ஆகும்? துச்சாதனின் முரட்டுத் தனத்துக்கு மலர் போன்ற பாஞ்சாலி ஈடு கொடுக்க இயலுமா! அவன் இழுக்கத் தொடங்கினான்.

அந்த நேரத்தில்தான் பாஞ்சாலி சரண் புகுந்தாள். “பகவானே! உன் தாள் மலரில் சரண் புகுந்தேன். இனி என்ன ஆனாலும் ஆகட்டும். நூற்றுக்கு நூறு ஆடவர்கள் கூடியிருக்கும் இந்த சபையில், என் ஆடை அவிழ்க்கப்பட்டு எனக்கு அவமானம் நேர்ந்தால், நான் உனக்கு சமர்ப்பணம் செய்யப் போவது அந்த அவமானத்தை. நீ எனக்குக் கருணை காட்டி, உன் அருளிச் செயலால், என் துயர் துடைத்தால், நான் உனக்குச் சமர்ப்பணம் செய்யப் போவது, காப்பற்றப்பட்ட என் தன்மானத்தை. இரண்டில் நான் எதை சமர்ப்பணம் செய்ய வேண்டும் என்பதை நீயே முடிவு செய்து கொள். இனி என் பலத்தில் எதுவுமில்லை” என்று சொல்லி, ஆடையைப் பற்றியிருந்த தன் கைகளை ஆகாயத்தை நோக்கி உயர்த்தி, “கோவிந்தா! கோவிந்தா! அபயம் அபயம்!” என்றாள்.

ஆறாகி இருதடங்கண் அஞ்சன

வெம்புனல் சோர அளகஞ் சோர

வேறான துகில்தகைந்த கைசோர

மெய்சோர வேறோர் சொல்லும்

கூறாமல் கோவிந்தா! கோவிந்தா! என்றரற்றிக் குளிர்ந்து நாவில்

ஊறாத அமிழ்தூற வுடல்புளகித் துள்ளமெல்லாம் உருகினாளே.

அழைத்த உடன் ஓடிவரும் ஆபத் பாந்தவன், துன்பத்தில் துவண்டு நின்ற பாஞ்சாலியின் கண்களுக்குக் காட்சி தந்தான். துச்சாதனன் இழுக்க இழுக்க, பாஞ்சாலியின் உடம்பில் இருந்து, வண்ண வண்ண ஆடைகள் வளர்ந்த வண்ணமிருந்தன. இழுக்க முடியாத துச்சாதனன் திணறிப் போனான். பகவான் பாஞ்சாலியின் மானத்தைக் காத்தான்.

சபையில் உள்ளோர் எல்லாம் இந்தக் காட்சியைக் கண்டு அதிசயித்து நின்றனர்.

‘தனக்கு தாங்கொண்ணாத் துன்பம் வந்து சேர்ந்துவிட்டதே, இதிலிருந்து மீள்வது எப்படி?’ என்று எண்ணிய பாஞ்சாலி, முதலில் சட்டத்தின் துணையை நாடி பேசிப் பார்த்தாள். பின், ஒரு பெண் துயர்ப்பட்டால், இன்னொரு பெண் உதவிக்கு வருவாள் என்று நம்பி, காந்தாரியின் உதவியை நாடினாள். தன்னை இழுத்துச் செல்ல வந்த துச்சாதனனிடம் மன்றாடினாள். தன் கணவன்மார் காப்பாற்றுவர் என்று கருதினாள். குலமுதல்வர் பீஷ்மர் அநியாயத்தை தடுத்து நிறுத்துவார் என்று எண்ணினாள். சபையில் உள்ள ஆடவர் யாராவது உதவ மாட்டார்களா? என்று ஏங்கினாள். எந்த வகையிலும் உதவி கிட்டாதபோது, தன் பலத்தின் மேல் நம்பிக்கை வைத்தாள். அதுவும் தோல்வி என்று தெரிந்தபிறகு தான், அவளுக்கு ஞானம் பிறந்தது, பகவானிடம் சரணாகதி செய்து கொள்ள வேண்டும் என்று.


ஏழு முனைகளில் முயற்சி செய்து பார்த்து, அத்தனையும் தோல்வி என்று தெரிந்தபின் ‘கண்ணா நீயே கதி’ என்று அவன் திருவடியில் சரண் புகுந்தாள். அவள் நினைத்தபடியே, பகவான், அவள் மானம் காத்தான்.

துன்பத்தில் மட்டுமல்ல; எப்பொழுதும் நம்மைக் காத்து இரட்சிக்கும் ‘இரட்சக சாமர்த்தியம்’ உடையவனல்லவா பகவான்! தஞ்சம் புகுந்தாரைத் தாங்கும் தயாபரனின் தாளிணைகளை நாமும் சரண்புகுவோம்

Comments