அநாத ரக்ஷகி ஸ்ரீகாமாக்ஷி!

கீர்த்தனையின் இந்த வரியை (அனுபல்லவி) மட்டும் படித்தால், இது ஷ்யாமா சாஸ்திரி இயற்றியது என்று நினைக்கத் தோன்றும். அந்த காமாக்ஷி உபாஸகருக்கு நிகரான பாவத்துடன் நம்மை காஞ்சிக்கு அழைத்துச் செல்பவர் ஸ்ரீதியாகராஜர்! ஸ்ரீராமனை பிரத்யக்ஷமாக தரிசித்து புளகாங்கிதம் அடைந்தவர் என்றும், அதி அற்புதமான வாக்கேயக்காரர் என்றும் கொண்டாடப்படுகிற அதே ஸ்ரீதியாகராஜர் தான்! திருவையாற்றில் இவருக்கு ஆரம்பித்த ஆராதனை, உலகமெல்லாம் இன்று அனுசரிக்கப்படுகிறது என்றால், அது எப்பேர்ப்பட்ட விசேஷம்! அவர் இயற்றிய இந்த காமாக்ஷி கீர்த்தனையின் விசேஷத்துக்கு வருவோம். அப்படியே காஞ்சி காமாக்ஷி ஆலயத்துக்கும் செல்வோம்.

கீர்த்தனையின் ஆரம்பம் (பல்லவி):

விநாயகுனி வலெனு
ப்ரோவவே நிநு

விநா வேல்புலெவ-
ரம்மா

‘விநாயக பெருமானைப் போல் என்னையும் உன் குழந்தையாகக் கருதி காப்பாற்று. உன்னைத் தவிர வேறு யார் எனக்கு கதி?!’ என்று இறைஞ்சும் சரணாகதி!

காமாக்ஷியைப் பற்றிய கீர்த்தனையை விநாயகர் பெயருடன் ஏன் தொடங்கினார் தியாகராஜர் என்று ஒரு கேள்வியை நம்மிடம் கேட்டால், சற்றே திகைப்போம். அல்லது வெறும் புத்திபூர்வமாக யோசித்து, “விநாயகுநி என்று பல்லவி அமைந்தால், அனுபல்லவியில் ‘அநாத ரக்ஷகி’ என்று ஆரம்பிக்க சௌகரியமாக இருக்கும். ஒருவேளை அந்த அனுபல்லவி வரிதான் முதலில் அவருக்கு ஸ்புரித்ததோ என்னவோ...!” என்றுகூட பதில் சொல்லலாம். ஆனால், மிக மிக சுவாரஸ்யமான இந்தக் கேள்விக்கு, மிக மிக ஆதாரபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் பதிலை அளித்துள்ளார் காஞ்சி முனிவரான மகா பெரியவர்! திரு.ரா.கணபதியின் எழுத்தாக்கத்தில், ‘விநாயகுநி’ (வெளியீடு: வானதி பதிப்பகம்; நூலின் பெயர்: மஹாபெரியவாள் விருந்து) என்ற தலைப்புடனேயே பதிப்பிக்கப்பட்டுள்ள இக்கட்டுரை, இசை ஆர்வலர்களுக்கும் காமாக்ஷி பக்தர்களுக்கும் பெரு விருந்து!

எத்தனையோ முறை காமாக்ஷி தரிசனத்துக்காக காஞ்சி சென்றபோதிலும் நாம் கவனிக்க, தெரிந்துகொள்ளத் தவறிய நுணுக்கங்களையும் விஷயங்களையும் அதில் அவர் விவரித்துள்ளார். காமாக்ஷி ஆலயத்தில் உள்ள விநாயகர் சன்னிதிகள் வரிசைக்கிரமப்படி அந்த விவரணையில் வருகின்றன என்பதுடன், துண்டீரர் சன்னிதியின் விசேஷத்தையும் பதிவு செய்கிறார். துண்டீர மஹாராஜா அந்தப் பிரதேசத்தை ஆண்ட மன்னன். அவனுடைய தந்தை ஆகாச பூபதி பிள்ளை வரம் வேண்டி அம்பிகை காமாக்ஷியிடம் முறையிட, அவள் தன் குழந்தையான விநாயகனையே துண்டீரனாக பிறப்பித்து அருள் புரிந்தாளாம்! அம்பிகை இயற்றி வந்த அறங்களை துண்டீரர் தொடர்ந்து நிகழ்த்தினாராம். இந்த வரலாற்றைத் தெரிந்து கொண்டு காஞ்சிக்குச் செல்கிறபோது, நமக்குக் கிடைக்கும் தரிசனம் மேலும் உன்னதமான தாக இருக்கிறது.

சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையிலிருந்து கிளைத்து, காஞ்சிக்குள் நுழையும் பாதையிலிருந்தே கோபுர தரிசனம் கிட்டுகிறது. நகருக்குள் நுழைகிறபோதோ, ‘நகரேஷு காஞ்சி’ என்ற வசனமும், பல்லவ தலைநகரின் பெருமைகளும் கலைச்சிறப்பும் மனத்தைப் பூரிக்கச் செய்கின்றன. திரும்பிய பக்கமெல்லாம் கோயில்கள் இருந்தாலும், காமாக்ஷி கோயிலுக்கு அலாதி மகிமை.

நுழைவாயில் துவஜஸ்தம்பம் கடந்து, அகண்ட வெளிப்பிராகாரத்தைக் கடக்கிறபோது, பௌர்ணமி தினங்களில் உத்ஸவ காமாக்ஷி தங்கத் தேரில் உலா வரும் காட்சி மனத்திரையில் அந்தப் பூரண சந்திரனைப் போலவே மெள்ள உதித்துப் பொலிகிறது. உள் திருச்சுற்றில் நிற்கிறபோது, கார்த்திகை தீபத்தன்று சுற்றிலும் அகல் விளக்குகள் ஏற்றி காமாக்ஷியைக் கொண்டாடும் வைபவம் நினைவுக்கு வருகிறது; பின்னிரவில் நவாவ ரண பூஜையை முறைப்படி சிவாச்சார்யர்கள் செய்து முடிக்கக் காத்திருந்து, பொலியும் ஜோதியாக அமர்ந்துள்ள அம்பாளின் பிரசாதத்தைப் பெறும் அனுபவம் ஞாபகம் வருகிறது.

காமாக்ஷியின் சன்னிதி முன் சென்று நிற்கிறபோதோ, அனுபவங்களின் சுவடுகள் அனைத்தும் காணாமல் போய் விடுகின்றன. விளையாடிக் களைத்து தாய் மடியில் வந்து விழும் குழந்தையாக மாறிப் போகிறோம். பொது தரிசனத்துக்கான பார்வை மேடையென்பது கருவறையிலிருந்து சற்று தூரம்தான் என்றாலும், அங்கிருந்தே அன்னை நம்மை அரவணைத்துக் கொண்டுவிடுகிறாள்.

சிரஸில் பிறையும், கரங்களில் பாசஅங்குசமும், மலர்க்கணை கரும்புவில் ஏந்திய கீழ்க்கரங்களும், பத்மாசனத்தில் மலர்த்திய தாமரைப் பாதங்களும்... கற்சிலை என்று நம்பமுடியாத ஜீவகளையுடன் அருள்பாலிக்கின்றன. சிவாகார மஞ்சத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீராஜ ராஜேசுவரி திருக்கோலம்.

‘தராந்தோலித தீர்காக்ஷி’ என்று ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் கொண்டாடுகின்ற காதளவு நீண்ட கண்கள். ‘சலன்மீனாப லோசனா’ என்று அதே சஹஸ்ரநாமம் போற்றுகிற விழிகளின் நளினமான அசைவு. இரு கருமணிகளும் ஒருசேர, கண்களின் ஒரு கோடியிலிருந்து மறுகோடிவரை சென்று திரும்பும் தெய்வீக விந்தை. சிறப்பு அனுமதியுடன் அடுத்துச் செல்கிறபோது, இந்தக் காட்சி மேலும் பரவசமூட்டுகிறது. மூச்சு விடவும் மறந்து நெக்குருகி நிற்பது தவிர வேறென்ன செய்ய முடியும் இங்கே!

புஷ்ப பாரங்களும் பட்டும் ஆபரணங்களும் இந்த காமாக்ஷியை அடைந்துவிட்ட பெருமிதத்தில் பொலிகின்றன! “உன் காமங்களை (விருப்பங்களை) இங்கே விட்டுவிட்டு நிஷ்களங்கமாகத் திரும்பிப் போ!” என்று தைரியமூட்டும் அவள் வதனத்தின் புன்னகை நம் கடைவிழிகளை ஈரமாக்குகிறது.

கருவறையிலேயே அவள் பீடத்தின் மிக அருகே ஆதிசங்கரர் பூஜித்த ஸ்ரீசக்கரத்துக்கு புஷ்ப அர்ச்சனையும் குங்கும அர்ச்சனையும் நடக்கின்றன. அபிஷேகம் அம்பாள் திருவுருவுக்கு. குடம் குடமாகப் பாலைச் சொரிகிறபோது, அசையும் விழிகளின் கருமணிகள் இன்னும் தீர்க்கமாகத் தெரிகின்றன. பாலும் இதர திரவியங்களும் அவள் மேனியை நனைப்பதுபோல், அவளது கருணைப் பார்வை உலகையே நனைத்து உய்விப்பதை உணர்கிறோம். குங்குமப் பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டு, சன்னிதியின் வலப்புறம் உள்ள அரூப லக்ஷ்மி வடிவத்தில் சார்த்தி எடுத்து, அதை அணிந்துகொள்ள வேண்டும்! இதற்கான கதையை (புராணம்) காஞ்சி மகா பெரியவர் கட்டுரையைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்! இப்போது நாம் காமாக்ஷியின் கதைக்கு வருவோம்!

ஜம்புகேசுவரத்தில் (திருவானைக்கா) அம்பாள் நீரினால் லிங்கம் அமைத்து தவமியற்றியதுபோல், காஞ்சியில் காமாக்ஷி மணல் லிங்கம் அமைத்துத் தவம் செய்தாள். மாமரத்தின் அடியில் அவள் தவமிருக்க, ஈசன் காட்சி தந்து ஆட்கொண்டான் (ஏகாம்பர நாதன் - ஆம்ரம் - மா மரம்). தொடர்ந்து இப்பிரதேசத் தில் அறங்களை நிகழ்த்தும்படி அவளைப் பணித்தான். அதைத்தான் காமாக்ஷி இன்றளவும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறாள்.

ஆதிசங்கர பகவத்பாதர் இந்த ஆலயத்தில் வழிபட்டு காமகோடி பீடத்தை ஸ்தாபிக்க, அதன் தொடர்ச்சியாக இன்றளவும் காஞ்சி மடத்தின் இருப்பிடமாக இந்நகரம் இருந்து வருகிறது. காமாக்ஷியையும் காஞ்சி மடத்தையும் சேர்த்தே நினைக்கக்கூடிய ஸ்திதியை ஏற்படுத்தியிருக்கிறார் பகவத்பாதர்.

இக்கோயிலின் திருச்சுற்றில் நின்று கவனிக்கத்தக்க விவரங்களும் வழிபட அழைக்கும் சிறு சன்னிதிகளும் ஏராளம். ஆதி சங்கரருக்கு சிறப்பானதொரு சன்னிதி இருக்கிறது. உத்ஸவ காமாக்ஷிக்கென்று ஒரு தனி மண்டபம். அவளுடைய அலங்கார ஆபரணங்களைக் கண்டபிறகு உலகில் எந்தவொரு அழகான பொருள் உருவானாலும், அதை அவளுக்கே அளிக்க வேண்டும் என்று தோன்றிப்போகும். அழகை ஏற்பதில் அப்படி ஒரு பக்குவம்; திருத்தம்! இத்தனைக்கும் இந்த உத்ஸவ அம்பிகை பிற்காலத தில் உருவானவள்!* ‘அதனாலென்ன? காலத்தைக் கடந்தும் விஞ்சியும் நிற்பவள் அல்லவா இந்த காமாக்ஷி’ என்பது போல் நிற்கிறாள்.

‘அநாத ரக்ஷகி ஸ்ரீ காமாக்ஷி’ என்று தியாகராஜர் நெக்குருகி இங்கே நின்று பாடியிருப்பாரா? அல்லது அந்த மூலஸ்தானத்து காமாக்ஷியின் அண்மையில் அந்த மத்யமாவதி பெருகியிருக்குமா...? என்று வியக்கிறோம். அம்பிகையின் ‘மத்யமப் பகுதியான இடையை அலங்கரிக்கும் காஞ்சி (ஒட்டியாணம்) க்ஷேத்திரத்து தேவியைப் பாடியதால், மத்யமாவதி ராகத்தைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் தியாகராஜர்’ என்று காஞ்சி முனிவர் கூறியிருப்பது நினைவுக்கு வருகிறது.

எப்படியாயினும், சாந்த ரஸத்தை அளிக்கும் ராகம். அனைத்து ஜீவராசிகளும் அடைவதற்கு ஏங்கும் அந்த உணர்வினை அருளுமாறு காமாக்ஷியை வேண்டிக் கொள்கிறோம்.



முராரி ஸோதரி!

ராகம்: மத்யமாவதி

தாளம்: ஆதி

பல்லவி
விநாயகுநிவலெனு ப்ரோவவே நிநு

விநா வேல்புலெவரம்மா

அனுபல்லவி
அநாத ரக்ஷகி ஸ்ரீகாமாக்ஷி ஸு

ஜநாக மோசநி சங்கரி ஜனனி

சரணம்

புராணி தயசே வராலு மாகுநி

கிராஜேஸி ப்ரோசு ராஜதரி த்யா

கராஜ்உநி ஹ்ருதய ஸரோஜவாஸிநி

முராரி ஸோதரி பராசக்தி நநு

பொருள்:


உன் குழந்தையான விநாயகனைப் போல், என்னையும் பாவித்து கருணை புரிந்து காப்பாற்று. வேறு தெய்வம் ஏது!

அநாதைகளையும் ரக்ஷிப்பவளே; காமாக்ஷி! நன்மக்களின் பாவங்களைப் போக்கி, நலம் அருள்பவளே, அன்னையே!

பழைமையானவளே, தயையுடன் எங்களைக் காப்பாற்று. பிறைசூடியவளே! தியாகராஜனின் இதயத் தாமரையில் வீற்றிருப்பவளே! மகாவிஷ்ணுவின் சகோதரி! பராசக்தி!



Comments