புஷ்கலாநாதன்!

மதுரையில் வாழந்த வணிகர் ஒருவர், தன் மகள் புஷ்கலையுடன் பட்டு ஜவுளி வியாபாரத்துக்காக திருவாங்கூர் சென்றார். செல்லும் வழியில் ஆரியங்காவில் தங்க நேர்ந்தது. காலை எழுந்து திருவாங்கூர் செல்லப் புறப்பட்டபோது, மகள் புஷ்கலை, “நான் வரவில்லை. இங்கேயே இருக்கிறேன். வியாபாரம் முடிந்து நீங்கள் திரும்பும்போது, உங்களுடன் வருகிறேன்” என்றாள். மகளின் பேச்சை ஏற்று, நம்பூதிரியின் வீட்டிலேயே மகளைத் தங்கச் செய்து திருவாங்கூர் கிளம்பினார் தந்தை.

காட்டு வழியில் செல்லும்போது, ஒரு யானை அவருடைய பயணத்தைத் தடை செய்தது. அப்போது ஆரியங்காவில் குடிகொண்டுள்ள ஐயப்பன், ஒரு வேடனாக வந்து, காட்டு யானையை அடக்கி வியாபாரியின் உயிரைக் காப்பாற்றினார். அதற்கு நன்றி செலுத்தும் வகையில், அந்த வேடனிடம் தான் கொண்டு வந்த பட்டு வேஷ்டிகளைப் பரிசாகக் கொடுத்தார் அந்த வணிகர். அவற்றை அணிந்துகொண்ட வேடன், ‘எப்படி இருக்கிறது?’ என்று வியாபாரியிடம் வினவ, அவரும் மகிழ்ந்து, ‘மாப்பிள்ளை போல் இருக்கின்றீர்கள்’ என்று கூறினார். அது மட்டுமல்ல; ‘உனக்கு என்ன வேண்டுமோ கேள்’ என்றும் சொன்னார். ‘என்ன கேட்டாலும் தருவீர்களா?’ என்று வேடன் கேட்டான். ‘என் உயிரைக் காப்பாற்றிய உனக்கு, எது வேண்டுமானாலும் தருவேன்’ என்றார் வணிகர். ‘உங்கள் மகளை எனக்கு திருமணம் செய்து தர வேண்டும்’ என்றான் வேடன். ‘சரி’ என்று ஒத்துக்கொண்டார். பின்பு வேடன் மறைந்துவிட, திருவாங்கூர் அரண்மனைக்குச் சென்று, தான் கொண்டு வந்த பட்டு ஜவுளிகளை வியாபாரம் செய்து விட்டு, ஆரியங்காவு திரும்பினார். அங்கே நம்பூதிரியின் வீட்டில், மகள் புஷ்கலையைக் காணவில்லை.

சுற்றும் முற்றும் தேடிப் பார்த்து சோர்ந்து போனார். அப்போது நம்பூதிரி சொன்னார்: “ஐயப்பன் என் கனவில் வந்து வணிகரின் மகள் புஷ்கலையை நான் ஏற்றுக் கொண்டேன். அவளைத் தேட வேண்டாம். என்னோடு ஐக்கியமாகிவிட்டாள்,” என்று சொன்னதாகக் கூறினார்.

திருப்பாவை தந்த திருமகள், சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் போல, புஷ்கலையும் பக்தி மேலீட்டால் ஐயப்பனையே திருமணம் செய்துகொண்டு ஐக்கியமாகி விட்டார். ஆக, ஐயனுக்கு மணம் நிகழ்ந்த தலம் ஆரியங்காவு.

ஆரியங்காவு திருக்கோயிலின் கர்ப்ப கிரகத்தில், பகவான் மத கஜவாகன ரூபனாக அம்பாள் புஷ்கலையுடன் அமர்ந்து காட்சி தருகிறார். அருள்மிகு புஷ்கலாதேவி சௌராஷ்டிரா சமூகத்தின் தேவி என்பதால், நிச்சயதார்த்தம், நலுங்கு உற்சவம், திருக்கல்யாணம் ஆகியவை சௌராஷ்டிரா பாரம்பரிய முறைப்படி நடைபெற்று வருகிறது.

மார்கழி மாதம் முதல் தேதி அன்று திருவாங்கூர் தேவசம் போர்டு கருவூலத்தில் இருந்து, ஆரியங்காவு ஐயப்பனுக்கு அணிவிக்க யானை மீது திருவாபரணம் கொண்டு வரப்படுகிறது. அன்று தனுர்மாத சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது. மார்கழி மாதம் மூன்றாம் தேதியில் இருந்து தன்னோடு ஐக்கியமாக தவம் இருக்கும் புஷ்கலையின் தவக் காட்சியைக் காண, காளை வாகனம், சிங்க வாகனம், புலி வாகனம், யானை வாகனம் என தினமும் ஒரு வாகனத்தில் பவனி வருகிறார் சுவாமி ஐயப்பன்.

ஒவ்வொரு ஆண்டும் மார்கழி பத்து, பதினொன்று மற்றும் பனிரெண்டு தேதிகளில் மூன்று நாள் விழாவாக திருக்கல்யாண நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது. முதல்நாள், தாலப்பொலி ஊர்வலம்; இரண்டாம் நாள் திருக்கல்யாணம், மூன்றாம் நாள் மண்டல அபிஷேக பூஜை என களைகட்டுகிறது ஆரியங்காவு.




பரமன், பக்தியை மட்டுமே பார்க்கிறான். நபர், குலம், செல்வம், அழகு, அறிவு என்று சொல்லப்படும் சராசரிப் பெருமைகள், அவன் முன் பொருளற்றவை. ‘பக்தியோடு வாருங்கள்; உங்களையும் ஏற்பேன்’ என்று ஐயப்பன் உணர்த்துவதுபோலவே நடக்கிறது, ஆரியங்காவு திருக்கல்யாண வைபவம்!

ஆரியங்காவு திருக்கோயில் செங்கோட்டையில் இருந்து இருபது கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. செங்கோட்டையில் இருந்து பேருந்து ஜீப், வேன் மற்றும் இரயில் மூலம் சென்று அடையலாம்.

Comments