குரோதம் கொள்ளாதே மனமே!

டமையைச் செய்பவனுக்குத் தூய்மை, ஒழுக்கம் மற்றும் குரோதம் இல்லாமை ஆகிய மூன்றும் அவசியம். கடமையை சிறப்புற நிறைவேற்றவும் அதன் பலனை பரிபூரணமாக பெறவும் இந்த மூன்றும் உதவும்.

முன்னோர் ஆராதனையில், பணிவிடை செய்பவன் மட்டுமின்றி அதை ஏற்பவனும் இந்த மூன்று குணங்களையும் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறது தர்ம சாஸ்திரம் (அக்ரோதனை: சௌசபரை:). குரோதம்... நம் உள்ளத்தில் தோன்றும் பகைவன்! இந்த குணம், நம் உடலை நிலைகுலையச் செய்து விடும். பகைவர்கள் மீது நாம் கொள்ளும் குரோதம், நமது அழிவுக்கே காரணமாகி விடும். மனதில் எழும் குரோதத்தைக் கிள்ளி எறிந்து விட்டுப் பொறுமையுடன் இருந்தால் வெற்றி நிச்சயம் என்கிறது வேதம் (அக்ரோ தேன க்ரோதம்). கோபம் வந்தால் உதடுகள் துடிக்கும்; கண்கள் சிவக்கும்; பற்கள் நறநறக்கும்; பெருமூச்சு வாங்கும்; கொஞ்சம் நிதானித்தால் இவை அனைத்தும் தணிந்து விடும். ஆனால், குரோதம் அப்படியல்ல! உடலை ஒட்டு மொத்தமாக உலுக்கி, செயல்புலன்களை முழுவதுமாக செயல்பட வைத்த பிறகே அடங்கும்.
குரோதத்தின் பிடியில் சிக்கிய சிலர், தலையிலும் மார்பிலும் அடித்துக் கொண்டு தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்வர். இதுபோன்றவர்களை நீராட வைத்து, மனக் கொந்தளிப்பில் இருந்து நிதானத்துக்குக் கொண்டு வரவேண்டும் என்று அறிவுறுத்துகிறது தர்ம சாஸ்திரம்!

நரசிம்மரின் குரோதம், இரண்யகசிபுவின் குடலைக் கிழித்த பிறகே தணிந்தது. பரசுராமரின் குரோதம், அரசர்களின் தலையை கோடாரிக்கு இரையாக்கிய பிறகே தணிந்தது. ரத்த பீஜாசுரனின் ரத்தத்தை உறிஞ்சிய பிறகே அம்பாளின் குரோதம் நிலைக்கு வந்தது. சிவனாரின் குரோதம், மன்மதனை எரித்த பிறகு அடங்கியது. அர்ஜுனனின் குரோதம், காண்டீபத்தால் ஈசனின் தலையில் அடித்த பிறகே சாந்தமானது. அனுமனின் குரோதம், அக்ஷயகுமாரனைக் காலால் தேய்த்து நசுக்கிய பிறகே நின்றது.


குரோதம் கொட்டாவியைப் போன்றது; செயல்பட்ட பிறகே அடங்கும்! குரோதத்தின் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்பதால், அதைத் தவிர்க்கச் சொல்லி அறிவுறுத்துகிறது தர்மசாஸ்திரம். குரோதத்தில் ஆழ்ந்தவன் தன்னையே மறந்து போவான். தன்னையே மறந்த வனுக்கு, என்ன செய்கிறோம்... இதன் விளைவு என்ன... என்பதெல்லாம் எப்படித் தெரியும்? இவர்களுக்கு மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய நான்கும் ஒரு கட்டுக்குள் செயல்படாது!
குரோதத்தின் எதிரிடை பொறுமை. பொறுமை யைக் கடைப்பிடித்து மௌனமாக இருந்து விட்டால், குரோதம் ஒடுங்கும். மௌனத்தால் நம் புலன்களுக்கும் மனதுக்குமான தொடர்புகள் அறுபடும். அப்போது, குரோதம் செயலற்றுப் போகும்.

'குரோதம், உன்னை அலைக்கழிக்கும். அது, ரஜோ குணத்தின் வெளிப்பாடு' என்று அறிவுறுத்துகிறார் கிருஷ்ணர் (க்ரோத ஏக்ஷ: ரஜோகுண...).
தன்னை அவமதித்த நந்த மன்னன் மேல் குரோதம் கொண்டார் சாணக்கியர். இதனால் நந்த வம்சமே பூண்டோடு அழிந்தது. கண்ணகியின் குரோதம் மதுரையை எரித்தது! ஆக, புராண- இதிகாசங்கள் அனைத்தும் குரோதத்தின் விளைவுகளை விவரித்து, அதைத் தவிர்க்கச் சொல்லி அறிவுறுத்துகின்றன.

குரோதம் எனும் குணத்தால் தங்களது வேலையை, புகழை, தன்மானத்தை, குடும்பத்தை இழந்தவர்கள் உண்டு. முன்னேற்றத்தின் முதல் எதிரியே குரோதம்தான்! ஆளவும் வாழவும் பிறந்தவர்கள், இதில் சிக்கி அழிவைத் தேடிக் கொள்ளக் கூடாது. சிந்திக்கும் திறனையே மழுங்கடிக்கும் குரோதத்தைப் புறந்தள்ளுவதே நல்லது! 

ததீசி முனிவரின் மகன் பிப்பலாதன். தவத்திலும் ஒழுக்கத்திலும் சிறந்த இவனை, 'தந்தையை விஞ்சிய தனயன்' என்று எல்லோரும் போற்றினர்.
ஒரு நாள்... தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, தன் முதுகெலும்பை அளித்ததால் ததீசி முனிவர் இறந்தார். இதையறிந்த பிப்பலாதன், தன் தந்தையின் மரணத்துக்குத் தேவர்களே காரணம் என்று அவர்கள் மேல் கோபம் கொண்டான். அந்த கோபம், குரோதமாக வளர்ந்தது. தேவர்களை அழிக்க எண்ணினான். இதற்கு இறைவனின் அருள் வேண்டும் என்றுகருதியவன், சிவனாரை தியானித்து தவம் செய்தான். இதனால் மகிழ்ந்த பரமன் அவன் முன் தோன்றினார்.

அவரிடம், ''என் தந்தையின் மரணத்துக்குக் காரணமான தேவர்களை அழிக்க வேண்டும். அதற்கு தங்களின் அருள் தேவை!'' என்று வேண்டினான். புன்னகைத்த ஈசன், அரக்கி ஒருத்தியைத் தோற்றுவித்து அவனிடம் ஒப்படைத்தார். பிப்பலாதனை பணிந்து வணங்கிய அரக்கி, ''கட்டளையிடுங்கள்!'' என்றாள். ''தேவர்கள் அனைவரையும் விழுங்கி விடு!'' என்று ஆணையிட்டான் பிப்பலாதன். மறுகணம் அவனையே விழுங்க வந்தாள் அரக்கி! பிப்பலாதன் அதிர்ந்தான். ''என்னை ஏன் விழுங்க வருகிறாய்?'' என்று கத்தினான்.

உடனே அந்த அரக்கி, ''உலக உயிர்கள் அனைத்தின் உடலிலும்... கண்களில்- சூரியன்; கைகளில்- இந்திரன்; நாவில்- வருணன் என்று ஒவ்வொரு உறுப்புக்கும் உரிய தேவர்கள் குடியிருப்பர் (யாவதீர்வை தேவதா ஸ்தா ஸர்வா வேதவிதி ப்ராம்மணெ வஸந்தி). குறிப்பாக... நீ வேதம் ஓதுபவன்! 'வேதத்தில் தென்படும் அத்தனை தேவதை
களும் வேதம் ஓதுபவனிடம் ஒலி வடிவில் உறைந்திருப்பார்கள்' என்று வேதமே சொல்கிறது. சொர்க்கம் சென்று அங்குள்ள தேவர்களை விழுங்கு முன், முதலில் உன்னை விழுங்கி உன்னிடம் இருக்கும் தேவர்களை அழிக்கிறேன்!''  என்றபடி பிப்பலாதனை நெருங்கினாள்.

பிப்பலாதன் ஈசனைச் சரணடைந்தான். அவர், ''பிப்பலாதா! நான் சொல்வதைக் கவனமாகக் கேள்! குரோதத்தின் வசப்பட்டவன், பாபம் இழைக்கிறான். ஆராயாமல் தான் செய்யும் செயல்களால், தன்னையே அழித்துக் கொள்கிறான். இது தற்கொலைக்குச் சமமானது இல்லையா? இக- பர சுகங்களை நுகர வந்தவன், மரணத்தைச் சந்திக்கலாமா? அரக்கியிடம் இருந்து உன்னை  நான் காப்பாற்றலாம். அப்போது அவள், தேவலோகத்தில் வசிக்கும் தேவர்களை அழிப்பாள். இதனால் உலக உயிர்கள் பாதிப்படையுமே!

சூரியதேவன் அழிந்தால் நம் கண்களின் செயல் பாடுகள் தடைபடுமே! இந்திரனை அழித்தால் நம் கரங்கள் செயல் இழக்குமே!
கால்களுக்கு- விஷ்ணு; சிரசுக்கு- மகாதேவன்; வயிற்றுக்கு- அக்னி; கழுத்துக்கு- வசுக்கள்; நெற்றிக்கு- ருத்ரன்... என்று உறுப்புகளுக்கு பலம் தரும் தேவர்கள் குறித்து 'லகுன்யாசம்' எனும் மந்திரம் விவரிக்கிறது. இவர்களை அழித்தால், நம்மை நாமே அழித்தது ஆகி விடுமே! எனவே,
தேவதைகளிடம் குரோத குணம் காட்டாதே; குரோதம் உனக்கே முற்றுப்புள்ளி வைத்து விடும்!'' என்று விவரித்தவர், அவன் தந்தையின் மரணம் குறித்தும் விளக்கினார்: ''உலகை துயரத்தில் இருந்து மீட்கவே உன் தந்தையின் முதுகெலும்பை யாசித்தனர் தேவர்கள். அவரும் தன் யோக சக்தியால் உயிரைத் துறந்து, முதுகெலும்பைத் தந்தார். உலகை காக்க உறுதுணை புரிந்தார்.

அழியா புகழ் பெற்றார். இப்படிப்பட்ட தந்தைக்குப் பிறந்த உனக்கு குரோதம் கூடாது!'' இறைவனின் அறிவுரையால் தெளிவு பெற்ற பிப்ப லாதன், தேவர்களிடம் மன்னிப்பு வேண்டினான். மறுகணம் அரக்கி மறைந்தாள்.
பிப்பலாதனின் மனமாற்றத்தால் மகிழ்ந்த இறைவன், ''நீ தவம் இயற்றிய இடம், 'பிப்பலாத தீர்த்தம்' என்று சிறப்படையும். இங்கு நீராடுவோர் மோட்சகதி அடைவர்!'' என்று அருளினார்.

இதையடுத்து பிப்பலாதனுக்கு தன் பெற்றோரைப் பார்க்க வேண்டும் எனும் எண்ணம் தோன்றியது. தேவர்களை வேண்டினான். அவர்களின் அருளால், தந்தை ததீசி முனிவரும் தாயார் ஆதிதேயியும் புஷ்பக விமானத்தில் வந்து இறங்கினர்; பிப்பலாதனுக்கு தரிசனம் தந்து ஆசி வழங்கினர்.
பின்னர், தவத்தில் ஆழ்ந்த பிப்பலாதன், பிரம்ம ரிஷியாக விளங்கினான் என்கிறது புராணம். பிப்பலாதனின் குரோதம், உலகையே அழிக்கும் அளவுக்கு துணிந்தது. குரோத உணர்வுக்கு உரமிடாமல் இருப்பதே உத்தமம். மனதுள் குரோதம் தோன்றாமல் இருக்க, புராணங்களில் உள்ள நல்லுரைகளை ஏற்க வேண்டும். குரோதம் இல்லாத குணமே வாழ்க்கைக்கு மிகச் சிறந்த பாதுகாப்பு!

ததீசியின் முதுகெலும்புக்கு என்ன சிறப்பு?
பிப்பலாதனின் தந்தை ததீசி முனிவர். இவரின் பெற்றோர்: அதர்வ மகரிஷி- சாந்தி தேவி.
'ததீசி முனிவரின் முதுகெலும்பால் செய்யப்பட்ட ஆயுதத்தால் மட்டுமே விருத்திராசுரனை அழிக்க இயலும்' என்ற திருமாலின் ஆலோசனையை ஏற்று, ததீசியிடம் வந்து, உலக நன்மைக்காக அவரின் முதுகெலும்பை யாசித்துப் பெற்றானாம் இந்திரன்.
சரி... அசுரனை அழிக்கும் வல்லமை, ததீசியின் முதுகெலும்புக்கு வாய்த்தது எப்படி?
தேவ- அசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது, அவர்களின் ஆயுதங்களை வைத்திருக்குமாறு
ததீசியிடம் ஒப்படைத்தாராம் திருமால்.
இதன் பிறகு... நெடுநாட்கள் ஆகியும் எவரும் வந்து ஆயுதங்களைப் பெற்றுக் கொள்ளாததால், அவை அனைத்தையும் ததீசி முனிவர் விழுங்கி விட்டாராம். அவற்றின் ஒட்டுமொத்த சக்தியும் முனிவரின் முதுகெலும்பில் சேர்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன!

Comments