உலகம் உய்ய ஒரு நாடகம்!

.
சிவ ஸ்தலங்களைப் பாடலுக்குள் அடக்குவது என்பது பெரும் சவால்! அதற்கு அகடதிகடனா சாமர்த்தியம் வேண்டும். முக்கூர் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் அடிக்கடி சொல்வதைப் போல, அந்த சாமர்த்தியம் பரம்பொருளான எம்பெருமானுக்குத்தான் இருக்கிறது! அதனால்தான் சிருஷ்டியனைத்தையும் தன்னுள் அடக்கிய அவனால், உள்ளங்கை அளவு ஆலிலையின் மேல் தன்னை இருத்தி அடக்கிக்கொள்ள முடிகிறது! இந்த அகடதிகடனா சாமர்த்தியத்தை அந்த எம்பெருமான் முத்துஸ்வாமி தீக்ஷிதருக்கும் சிறிது படியளந்திருப்பான் போலும். அதைக் கொண்டு அவர், மிக பிரும்மாண்டமான, சொல்லுதற்கரிய பெருமைகள் வாய்ந்த ஸ்ரீரங்கத்தின் சிறப்புகளை, ஒரு அழகான கீர்த்தனைக்குள் அடர்த்தியாக இசைத்திருக்கிறார். வானளாவ நிற்கும் ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தின் கம்பீரமும் நுணுக்கங்களும் இந்த ‘ரங்கநாயகம்’ கீர்த்தனையிலும் உண்டு!
“ரங்கநாயகி சமேதமாகத் திகழும் ஸ்ரீரங்கநாயகனை தியானிக்கிறேன்” (ரங்கநாயகம் பாவயே ஸ்ரீரங்கநாயகி சமேதம்) என்று மிகப்பொருத்தமான நாயகி ராகத்தில் பாடலை அமைத்துள்ளார் தீக்ஷிதர் (எம்பெருமானின் முன்னிலையில் அனைத்து பக்தர்களும் நாயகிகளே!). இந்த ராகத்தின் நுணுக்கமான முடுக்கு சங்கதிகள், காவிரி நதியின் சிற்றலைகளைப் போல் ரங்கநாதனை அலங்கரிக்க, கீர்த்தனையின் நிதானமும் கம்பீரமும் அப்படியே அந்தக் கோயில் நகரத்தின் அகண்ட பரப்பையும் சிறப்பையும் எதிரொலிக்கின்றன.
வாகன வசதிகள் இல்லாத காலத்தில் தலம் தலமாகச் சென்று, கோயில் அமைப்பையும், தெய்வத்தின் சிறப்பையும் தமது கீர்த்தனைகளில் ஆவணப்படுத்திய முத்துஸ்வாமி தீக்ஷிதருக்கு என்ன எதிர்பார்ப்புகள் இருந்திருக்க முடியும்? தமது கீர்த்தனைகள் இறைவனுக்கு அலங்காரமாகி மானுடத்தை உயர்த்த வேண்டும் என்பதைத் தவிர, வேறொன்றும் இருந்திருக்க வாய்ப்பில்லை.
அதனால்தான் இன்றும் நாம் ஸ்ரீரங்கம் செல்கிறபோது தீக்ஷிதரின் ரங்கநாயகம் கீர்த்தனையை நினைக்காமாலே இருக்க முடிவதில்லை; தியாகராஜரின் ‘ஓ ரங்கசாயி’ பாடலை அகச் செவியில் கேட்காமல் இருக்க முடிவதில்லை! ஆழ்வார்கள் அரங்கனைக் குறித்து உருகிப் பாடிய பாசுரங்களுக்கும் ஆசார்யர்கள் வடித்துள்ள சுலோகங்களுக்கும் நிகராக இந்தக் கீர்த்தனைகள் திகழ்கின்றன.
தியாகராஜர் ராம பக்தர். ஸ்ரீராமரின் குல தெய்வ விக்ரஹமான ரங்கநாதனை அவர் பணிந்து பாடியதில் வியப்பில்லை. முத்துஸ்வாமி தீக்ஷிதர் சக்தி உபாஸகர்; முருகப்பெருமானால் ஆட்கொள்ளப்பட்டவர். அத்வைத பரம்பரையைச் சேர்ந்த அவர், வைகுண்டம், ரங்கநாதன், ஸ்ரீரங்கம் கோயில் என்ற மூன்றினையும் ஒன்றாகக் கண்டு பாடியிருக்கிறார்! மூன்று என்றால் விசிஷ்டாத்வைதம் அல்லவா!
அரங்கம் என்றாலே நாடகம் நடக்கும் இடம்தான். பிரபஞ்ச நாடகத்தை நடத்துவிக்கும் ஸ்ரீரங்கநாதன் இங்கே காவிரியும் கொள்ளிடமும் தாலாட்ட, துயில் வளர்வதுபோல் நடித்துக் கொண்டிருக்கிறான்! அவன் இங்கு வந்து சேர்ந்ததே கூட ஒரு சுவாரஸ்யமான நாடகம்தான்!
ராவணனைக் கொன்று வீபீஷணனுக்குப் பட்டம் கட்டியாயிற்று. ராம-லக்ஷ்மணர்கள் சீதையுடன் அயோத்தி திரும்பி வருகிறார்கள். அங்கே ஸ்ரீராம பட்டாபிஷேகம். இலங்கையிலிருந்து விபீஷணனும் வந்திருக்கிறார். அந்தக் கோலாகலத்தைக் காணவந்த அவனுக்குத் தகுந்த பரிசொன்றை வழங்க விரும்பி, ராமன் தனது குல மரபினர் பூஜித்து வந்த அரங்கனோடு கூடிய விமானத்தையே தந்துவிடுகிறான்! விபீஷணனும் அதனை எடுத்துக்கொண்டு புறப்படுகிறான். வழியிலே, காவிரியில் நீராடுவதற்காக நிற்கிறான். கையில் இருக்கும் ரங்கநாதனை, காவிரி கொள்ளிடம் இடைப்பட்ட பகுதியில் இறக்கி வைத்துவிட்டு, அனுஷ்டானங்களை முடித்துத் திரும்பினால், வைத்ததை மீண்டும் எடுக்க முடியவில்லை! வேறு வழியின்றி விபீஷணன் அரங்கனை அங்கேயே விட்டுவிட்டு, இலங்கை திரும்புகிறான். போகும் முன், இலங்கை நோக்கியே (தெற்கு) அரங்கநாதனின் அருள்பார்வை எப்போதும் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு கிளம்ப, எம்பெருமானும் அதற்குச் சம்மதித்து தெற்கு முகமாகத் துயில் கொள்கிறான். ராமன் கொடுத்ததும், விபீஷணன் பெற்றதும், அரங்கன் எழ மறுத்ததும், பின் தெற்கு நோக்கித் திரும்பியதும் எல்லாமே சுவையான நாடகம்தான். தென் தமிழ்நாட்டில் ஒப்புயர் வற்ற ஒரு க்ஷேத்திரம் உருவாக வேண்டும். அதைச் சுற்றிலும் ஓர் அரிய அருமையான பக்தி பாரம்பரியம் மலர வேண்டும், ரங்க நாயகம், ஓ ரங்கசாயி போன்ற கீர்த்தனைகள் உருவாக வேண்டும், உலகம் உய்ய வேண்டும் என்பதற்காக நிகழ்ந்த நாடகம்!
சப்த லோகங்களைக் குறிக்கும் சப்த (ஏழு) பிராகாரங்களைக் கடந்துதான் அரங்கன் சன்னிதியை அடைய வேண்டும். வெளிப்பிராகாரங்கள் நகர மயமாகிவிட்டன. உள் சுற்றுக்களில் உயிர்க்களை ததும்பும் சன்னிதிகள், இருக்கின்றன. இவற்றுள் வேணுகோபால சுவாமி கோயில் அகழ்வாராய்ச்சித் துறையின் பராமரிப்பில் இருக்கிறது. அமைப்பிலும் அழகிலும் அபூர்வமானது. இதற்கு எதிர் புறமாக பாண்டுரங்கனுக்கு ஒரு சன்னிதி. ரங்க மண்டபம், கார்த்திகை மண்டபம் என்று பலவற்றைப் பார்த்துக்கொண்டே போகலாம்.
கம்பராமாயணத்தில் உள்ள நரசிம்ஹ அவதார பகுதி மிக நீண்டு இருக்கிறது என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்ததாம். அப்பகுதியை இந்த ஸ்ரீரங்கம் கோயில் நரசிம்ஹர் சன்னிதியிலே பாராயணம் செய்தார்களாம். அப்போது நரசிம்ஹர் கர்ஜனை எழுப்பி அதனை ஆமோதித்தாராம்! விசேஷமான இந்த சன்னிதி மட்டுமின்றி, கம்ப மண்டம் என்ற பெயருடன் ஒரு மண்டபமும் இருக்கிறது. தீக்ஷிதரும் தமது கீர்த்தனையில் பிரஹலாதனைக் குறிப்பிடுவதன் மூலம் இந்த நரசிம்ஹர் சன்னிதியைப் பதிவு செய்கிறார்.
ஆழ்வார்களும் ஆசார்யர்களும் கவிச் சக்கரவர்த்தியும் வாக்கேயக்காரர்களும் நடந்து, வாழ்ந்து, பாடிப் பரவிய பிரதேசத்தில் நாமும் நடந்து செல்கிறோம் என்கிற நினைப்பே சிலிர்ப்பூட்டுவதாக இருக்கிறது. அரங்கனைக் காண அலைமோதும் கூட்டம்! பக்தர்கள் வரிசை எங்கு ஆரம்பித்து, எங்கு முடிகிறது என்று சொல்ல முடியாத அளவுக்கு நீண்டு வளைந்து செல்கிறது. ‘ரங்கா! ரங்கா!’ என்று கூவிக்கொண்டு, எதிர்பார்ப்பும் ஆவலும் ததும்ப நகரும் வரிசையில் நாமும் சேர்ந்து கொள்கிறோம். அதோ கருடாழ் வார் - ஆஜானுபாகுவாக இருந்தாலும் அடிபணியும் பாவனையில் இருக்கிறார். நம் மனமும் பணிகிறது. கொடி மரத்தை ஒருவாறு கடந்து கர்ப கிருஹத்தை நெருங்கிக் கொண்டிருக்-கிறோம். விபீஷ ணன் ஸ்ரீராமனிடம் பெற்று இழந்த பிரணவாகார விமானத்தின் கீழ் அமைந் துள்ள கருவறையில் ஆதிசேஷன் மேல் அறிதுயில் கொண்டிருக்கிறான் அரங்கன். வெள்ளிக் கவசமும் கண் மலர்களும் சாற்றியிருக்கிறார்கள். அவனது கருமேனியை அவை அழகாக வடிவெடுத்துக் காட்ட, நிலைப்படியை அடையும்போது திருமேனி முழுவதுமாக தரிசனமாகிறது. ஒயிலாகத் தலைக்குயரம் கொடுக்கும் வலக்கரம், நீண்டு துவளும் இடது கரம், செவ்வரியோடிய அப்பெரிய வாய கண்கள், உலக ரகசியங்களை ஒன்றுவிடாமல் அறிந்தும் அறியாததுபோல் மாயப் புன்னகையில் மலர்ந்துள்ள திருவாய் ‘ரமாந்தரங்கம்’ என்று தீக்ஷிதர் வர்ணிக்கும் மூலவர் அருகில் ஸ்ரீதேவி- பூதேவி இல்லை. அன்னியோன்னிய ஹ்ருதய வாஸினியாக திருமார்பில் மட்டுமே லக்ஷ்மி. ரங்கநாயகி தாயார், கமலவல்லித் தாயார், துலுக்க நாச்சியார் என்று அரங்கனுக்கு தேவியர் இருந்தாலும் அவர்களைத் தனித்தனிச் சன்னிதிகளுக்கு சென்றே நாம் தரிசிக்க வேண்டும். இப்போதைக்கு அரங்கனை தரிசித்த பரவசமே நம்மைத் திக்குமுக்காடச் செய்கிறது.
‘இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்!’
என்று தொண்டரடிப் பொடியாழ்வார் அடித்துச் சொன்னதில் ஆச்சர்யமென்ன!
ஆனால் ஆழ்வார்களின் பக்குவம் நமக்கேது? பணிந்து நின்று சடாரி சாற்றப்பெறும்போதும், துளசி தீர்த்தத்தை அருந்தும்போதும் பதறி பதறி வேண்டிக் கொள்கிறோம்.
பெருந்துயில் வளர் பொன் அரங்கா விழி
மலர்ந்தருள் மணிரங்கா!
செந்திருமகிழ்ந்துறை அந்தரங்காவல்
வினைகளைந்தெனை ஆள் அரங்கா!
அறிந்தும் அறியாமலும் செய்த பிழைகளைப் பொறுத்து, தடுத்தாட்கொள்ளும் தயை நிதி அல்லவா?
நமது வேண்டுதலைக் கேட்டு, பள்ளி கொண்ட பெருமாள் முன் நிற்கும் உத்ஸவ ரங்கன் சிரிப்பதாகத் தோன்றுகிறது. அவனருகே ஸ்ரீதேவி - பூதேவி நாச்சியர்களும் சிரிக்கின்றனர்.
நமக்குப் பின் காத்திருக்கும் பக்தர்களுக்கு வழிவிட்டு நகர்ந்தாலும் அரங்கனை மனக்கண்ணில் படம்பிடித்து, நெஞ்சத் திரையில் நிலை நிறுத்திக்கொள்கிறோம். அவரை இங்கே விட்டுச் சென்ற விபீஷணனும் அதைத்தான் செய்திருப்பான் போலும்!

ராகம்:
நாயகி; தாளம்: ஆதி பல்லவி: ரங்கநாயகம் பாவயே ஸ்ரீ ரங்கநாயகி சமேதம் ஸ்ரீ (ரங்க...)
அனுபல்லவி: அங்கஜதாத மனந்தமதீதம் அஜேந்த்ராத்யமரனுதம் ஸததம்
உத்துங்க விஹங்கதுரங்கம் க்ருபாபாங்கம் ரமாந்தரங்கம் ஸ்ரீ (ரங்க...)
சரணம்:
ப்ரணவாகார திவ்யவிமானம் ப்ரஹ்லாதாதி பக்தாபிமானம்
கணபதி ஸமான விஷ்வக்ஸேனம் கஜதுரகபதாதிஸேனம்
தினமணிகுல பவராகவாராதனம் மாமகவிதேஹ முக்திஸாதனம்
மணிமயஸதனம் சசிவதனம் பணிபதி சயனம் பத்மநயனம்
அகணிதசுகுண கணநதவிபீஷணம் கனதரகௌஸ்துப மணிவிபூஷணம்
குணிஜனக்ருத வேதபாராயணம் குருகுஹமுதித நாராயணம் ஸ்ரீ (ரங்க...)
பொருள்: ரங்கநாயகியுடனான ரங்கநாதரை தியானிக்கிறேன். மன்மதனின் தந்தை; ஆதி - அந்தம் அற்றவன், அனைத்தையும் கடந்தவன்; பிரமன் மற்றும் இந்திராதி தேவர்களால் போற்றப்படுபவன்; கருடனை வாகனமாகக் கொண்டவன்; கருணை நிரம்பிய கண்களையுடையவன்; லக்ஷ்மிக்கு அந்தரங்கமானவன்.

பிரணவாகார விமானத்தை உடையவன். பிரஹலாதன் முதலான பக்தர்களால் வணங்கப்பட்டவன். விநாயகருக்கு ஈடான விஷ்வக்ஸேனரை ஸேனாபதியாய் உடையவன். முப்படைகள் உடையவன். சூரிய குலத் தோன்றலான ஸ்ரீராமனால் பூஜிக்கப்பட்டவன். முக்தியைத் தரவல்லவன். நவரத்தினங்கள் இழைத்த ஆலயத்தில், சந்திரன் போன்ற முகப்பொலிவுடன் ஆதிசேஷன் மீது துயில்பவன். தாமரைக் கண்ணன். ஒப்பற்ற குணவானான விபீஷணனால் பூஜிக்கப்பட்டவன். கௌஸ்துப மணியை அணிந்துள்ளவன். வேத பாராயணம் செய்யும் குணவான்களின் இறைவன். குருகுஹனுக்கு மகிழ்வூட்டும் ஸ்ரீமன் நாராயணன்.

Comments