ஆன்மிகப் பாரம்பரியம் அழியலாமா?

இன்று சமூகம் மிகப்பெரிய கலாசாரக் கொந்தளிப்பைக் கண்டு கொண்டிருக்கிறது. இந்தப் போக்கைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்றால், நமது முனிவர்களும் முன்னோர்களும் விட்டுவிட்டுப்போன ஆன்மிக அறிவுப் பெட்டகத்தைக் கொஞ்சம் திறந்து பார்க்க வேண்டும்” என்கிறார் ஸ்வாமினி பரமானந்த சரஸ்வதி. மெய்யன்பர்களால் ‘அம்மாஜி’ என்று பாசத்துடன் அழைக்கப்படும் ஸ்வாமினி, அப்படிப்பட்ட அறிவுப் பெட்டகத்தை இன்றைய இளைய தலைமுறையிடம் திறந்துகாட்ட செயல்படுத்தும் திட்டம் தான் ‘பூர்ணவித்யா.’ சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்த அவரிடம் பேசினோம்.

“நீங்கள் குழந்தையாக இருந்தபோது, உங்கள் பாட்டி, புராண-இதிகாசகங்களிலிருந்து கதைகளைச் சொல்லி உங்களை வளர்த்திருப்பதை நினைத்துப் பாருங்கள். அதன் காரணமாக நல்ல பண்புகளும், ஒழுக்க நெறிகளும் நமது வாழ்க்கை முறை ஆனது. ஆனால், இன்றைய நிலை என்ன? நமது குழந்தைகளுக்கு கணினியும், ஐ பாடும், டெலிவிஷனும்தான் உலகமாகிவிட்டன. செல்லமாக தட்டி தூங்க வைக்கும் பாட்டிகள் இன்று இருந்தாலும், அவர்களிடம் கதை கேட்க பேரன், பேத்திகள் தயாராக இல்லை. பள்ளிகளில் முன்பு, வாரத்தில் ஒருநாள் ஒழுக்கநெறிகளைப் போதிக்க ஒரு வகுப்பு இருக்கும். இன்று மதிப்பெண் எடுக்க நடக்கும் போட்டியில், அந்த வகுப்புகள் காணாமல் போய்விட்டன. கலாசார அடிப்படையுடன் நற்பண்புகளைப் போதிக்கும் கல்வி இன்று இல்லை. நமது இளைஞர்களை நினைத்தால் கவலை எகிறுகிறது. நமது உயர்ந்த ஆன்மிக பாரம்பரியம் அழிந்துவிடுமோ என்ற பயம் ஏற்படுகிறது. நமது கலாசாரம் என்பது, வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நம்மை வழிநடத்திச் செல்லும் ஆசிரியனாகும்.
கர்மம் என்றால் என்ன? தர்மம் என்றால் என்ன? பிரார்த்தனை எப்படிச் செய்ய வேண்டும்? இதற்கான பதில்கள் நமது குழந்தைகளிடம் இல்லையென்பது ஒரு பக்கம் இருக்க, நமது பெற்றோர்களுக்கே அவைகளைப் பற்றிய சரியான புரிதல் இல்லையே. நமது குழந்தைகள் இன்றைய நாகரிக நெருக்கடியில் பல்வேறு கலாசார சூழல்களில் வாழ்கிறார்கள். முன்பு வாழ்க்கை லகுவாக இருந்தது. இப்போது சிக்கல் மயமாகிவிட்டது. காரணம், கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்; அதை அடைய கடைபிடிக்கப்படும் இயந்திரத்தனமான படிப்புடன் கூடிய கல்வி. அதனால் ஏற்படும் போட்டிகள், பொறாமைகள், கோபம், மன அழுத்தம்.
நமது இசை, நடனம், மொழி, உணவு என்று எல்லாவற்றிலும் நமது கலாசாரத்தின் பாதிப்பு உண்டு. ஒரு சின்ன உதாரணம். நமது இந்தியப் பெண்கள் தங்க நகைகள் அணிவது வெறும் அழகுக்காக மட்டுமல்ல; தங்கத்தை ‘லட்சுமி’யின் அம்சமாகப் பார்க்கிறார்கள். எனவேதான் மிகச் சுத்தமான 24 காரட் தங்கத்தை அணிய விரும்புகிறார்கள். கலாசாரங்களும், பாரம்பரியங்களும், நமது வேதம் மற்றும் உப வேதங்களை அடிப்படையாகக் கொண்டவைதான்.
உயர்ந்த ஆன்மிகத் தேடலை இன்று ஆசிரமவாசிகள் கையில் விட்டுவிட்டோம். ‘மனித குலம் ஒன்று என்று வஸுதேவக் குடும்பத் தத்துவம் இன்று பல காரணங்களால் உடைபட்டுப் போகிறது. பார்க்கும் இடமெல்லாம் பரம்பொருள் என்ற தத்துவமும் மறக்கப்படுகிறது. ஆத்மாவைப் பற்றிய விழிப்புணர்வு கிடையாது. தெய்விகத் தன்மை கொண்டதே நமது ஆத்மா. அதன் தெய்விகத் தன்மை எல்லையற்றது. ஒருவன் தனது உள்முக பயணத் தேடலில், இதை அடையாளம் காண முடியும். ஆனால், இப்படிப்பட்ட உயர்ந்த நிலையை அறியாமையில் இருக்கும்போது எப்படி அடைய முடியும்? இதற்கான மாற்றாக, எனது குரு ஸ்வாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் வழிகாட்டலில், தயார் செய்யப்பட்டதுதான் ‘பூர்ணவித்யா.’ இது நற்பண்பு மற்றும் ஒழுக்க நெறிகளைப் போதிக்கும் கல்வித் திட்டம்.
கொஞ்சம் விவரமாகச் சொல்லுங்கள்!
‘பூர்ண’ என்றால் முழுமை. வித்யா என்றால் ‘அறிவு.’ பூரண அறிவைத் தரும் கலாசார நற்பண்பு கல்விதான் பூர்ணவித்யா. நமது வேதத்தின் சாரமான வேதாந்தம், இசை, சமஸ்கிருதம், புராணம், இதிகாசங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இதற்காக ஆங்கிலம், தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் 71 புத்தகங்கள் தயார் செய்யப்பட்டிருக்கின்றன. இன்று இந்தியாவில் 130 பள்ளிகளில், ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் சுமார் 50,000 மாணவ-மாணவிகள் பூர்ண வித்யாவை பயின்று வருகின்றார்கள். வாரம் ஒரு வகுப்பு. இதைச் சொல்லித்தர அந்தந்த பள்ளி ஆசிரியர்களுக்கே நாங்கள் பயிற்சி கொடுக்கிறோம். இப்போது பூர்ண வித்யா, பள்ளிக்கூட அளவில் ஓர் இயக்கமாகவே மாறிவிட்டது. ஆன்மிக விழிப்புணர்வையும் சமூக ஒருமைத் தன்மையையும் உருவாக்கும் இந்தக் கல்வியை, மாணவ-மாணவிகளுக்கு கற்றுக்கொடுக்கும் பள்ளிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
மாற்று மதத்தினரும் பயிலும் நம் பள்ளிகளில், பூர்ணவித்யா ஏற்புடையதுதானா?
இந்த மண்ணுக்கே உரிய பாரம்பரியத்தை மாற்று மதத்தினர் உட்பட எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும். அதேபோல ஒவ்வொருவரும் பல்வேறு மதங்களின் பாரம்பரியங்களை புரிந்துகொண்டு, கலாசார முகங்களை தெரிந்துகொள்ள வேண்டும். இதனால், சமூகத்தில் பிரமிக்கத்தக்க நல்லிணக்கம் வளரும்.
பூர்ணவித்யா, மாணவ-மாணவிகளுக்கு மட்டும்தானா?
இல்லை; இளம் தம்பதிகளுக்கு ‘சுதம்பதி’ என்று ப்ரோக்ராம்; சுகுமாரா’ இளம் வாலிபர்களுக்கு; ‘சுகன்யா’ இளம் பெண்களுக்கு. இல்லத்தரசிகளுக்கு ‘சுர்ஹினி’ என்ற திட்டம். இப்படிப் பல கிராமங்களில் 10 நாட்கள் முகாம் போட்டு, இவற்றை மக்களுக்கு போதிக்கிறோம். 300 மையங்களில் இந்த முகாம்கள் நடக்கின்றன. எங்கள் ஆசை, மக்கள் இந்த பூர்ணவித்யா திட்டத்தை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான். இதனால் நம் ஆன்மிக பாரம்பரியம் பாதுகாக்கப்படுவதில், உங்கள் பங்களிப்பும் இருக்கும்.
ஸ்வாமினி பரமானந்த சரஸ்வதி:

ஸ்வாமினிக்கு பூர்விகம் கேரளா - பாலக்காடு. ஆன்மிகத்தில் ஈடுபாடு வரும்முன் அமெரிக்காவில் பணிபுரிந்திருக்கிறார். ஸ்வாமி தயானந்த சரஸ்வதியால் சிஷ்யையாக தீட்சை பெற்றவர். வேதம் மற்றும் சமஸ்கிருதத்தை ஆசிரமத்தில் மூன்று வருடம் குருகுல முறையில் கற்றுத் தேர்ந்தவர். உத்தராஞ்சல் மற்றும் திருவண்ணாமலையில் இருக்கும் தனது ஆசிரமத்தில், தேடிவரும் மெய்யன்பர்களுக்காக இவர் நடத்தும் ஆன்மிக பயிற்சி முகாம்கள் பிரசித்தம். ‘பூர்ணவித்யா’ பாடத்திட்டம் இவரது கைவண்ணம். ஆன்மிகம் தவிர, பெண்களுக்கு அதிகாரம், சுகாதாரம், மலைவாழ் குழந்தைகள் கல்வி என்று பல தளங்களில் சமூகத்தில் தனது பங்களிப்பைச் செலுத்துகிறார் இவர்!

Comments