'பசுபதி'யின் பசுபதி!

சிவபெருமானுடைய மடியில் விநாயகர், முருகன் போன்ற தெய்வக் குழந்தைகள் அமர்ந்திருக்கும் காட்சியை ஓவியங்களாகவும் சிற்பங்களாகவும் கண்டு மகிழ்ந்திருக்கிறோம். ஒரு சாதாரண மானிடன் சிவபெருமானுடைய மடிமீது அமர்ந்திருக்கும் காட்சியும் உண்டு என்றால் உங்களால் நம்ப முடியுமா?
அது நிஜம் எனில், அதற்கு அந்த மானுடன் எத்தனை ஜென்மங்களில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்? உண்ணுகின்ற ஊண் வெறுத்து, வற்றியும் புற்றெழுந்தும் ஆங்காங்கே தவமிருக்கும் கோடானுகோடி தவச் செல்வர்களும் அடையமுடியாத இந்த அரிதினும் அரிதான, பாக்கியத்தை அந்த மனிதன் தனது பக்தி ஆவேசத்தாலேயே அடைந்தான்.
சிந்தை, அணு ஒவ்வொன்றிலும் சிவபிரானை ஏந்தி உயிர் மூச்சோடு மூச்சாக அரன் நாமஸ்மரணை இழையோட, சிவசரணர்களாக வாழ்ந்த வீர மாகேஸ்வரர்களின் ஜீவ சரிதம் பேசும் கன்னட நாட்டில் போற்றிக் கொண்டாடப்படும் பசுபதி நாயனாரின் கதை இது.
திருவய்யலூரில் உள்ள, வீர சைவ மடம். சிவ மகாபுராணக் கதைகளை விதந்தோதிக் கொண்டிருந்தார் ஒரு பெரியவர். திருப்பாற்கடலைக் கடைந்த சம்பவத்தை விஸ்தாரமாக வர்ணித்துக் கொண்டிருந்தார். ‘ஆலாஹலம்’ என்கிற கொடிய விஷம் தோன்றி, அக்னிமயமான தன் விஷ ஜுவாலைகளை நாலாபுறமும் வீச, அதைக்கண்டு தேவர்களும் அசுரர்களும் ‘ஓலம்’ ‘ஓலம்’ என அபயக் குரலெழுப்பியவாறு திசைதோறும் சிதறியோட முனைகின்றனர்.
சிவபிரான் அவர்களின் அபய ஓலம் கேட்டு அங்கே பிரத்யட்சமாகி, அக்கொடிய நஞ்சினைத் தாமே விழுங்குகிறார்.
பெரியவர் இந்தக் கட்டத்தை விவரிக்கும்போது, கூட்டத்திலிருந்து ஒரு குரல், “ஐயா, இது மிக மிக அநியாயம். கதையை உடனே நிறுத்தும்...” என எழுகிறது.
“யாரப்பா நீ...”
“ஐயா, என் பெயர் பசுபதி...”
எழுந்து நின்ற மனிதனைப் பார்த்தால், இளம் வயது. அவன் தேகம் நடுங்கியது. குப்பென்று வியர்த்து வழிய, முகத்தில் பயமும் பதற்றமும் பரவியிருக்கும் கோலத்தில் காணப்பட்டான்.
“பசுபதி, ஏனப்பா கதையை நிறுத்தச் சொன்னாய்?”
“ஐயா, ஆலாஹலம் கொடிய விஷம் என்றும், அது உலக உயிர்களை மாய்க்கும் ஆற்றலுடையது என்றும், சகல வஸ்துக்களையும் அழித்தொழிக்கும் என்றும் கூறினீர்கள்...”
“ஆம்; அதுதான் உண்மை...”
“அவ்வளவு கொடிய விஷத்தை என் இதய நாயகன் பரமசிவன் ஏன் விழுங்க வேண்டும்...? இது யார் செய்த சதித்திட்டம்? அங்கே இருந்த சிவகணங்கள் அறிவற்றுப் போயினவா? சிவன் தலையிலுள்ள கங்கா மாதா, சந்திரன் போன்றோரின் மூளை மழுங்கிப் போயிற்றா? கணபதி, கந்தன் என்ன பிள்ளைகள்... அப்பன் விஷமருத்துவதை வேடிக்கை பார்த்தனரோ அவர்கள்...? திருமால், பிரமன் நமக்கென்ன என ஒதுங்கி நின்றனரோ! நந்திதேவன் என்ன செய்து கொண்டிருந்தார்? அத்தனைபேரும் பொறுப் பற்றவர்கள். அங்கே என்போல் ஒரு உண்மையான சிவசரணனும் இல்லைபோலும். நான் இருந்திருந்தால், இதை அனுமதிப்பேனா? சிவபிரானுக்கு நிகழ்ந்த இந்த அநியாயத்தை நான் தட்டிக் கேட்கப் போகிறேன். என் கேள்விக்குப் பதில் சொல்லாமல் எவரும் தப்பமுடியாது.”
பதற்றமும் ஆவேசமுமாகக் கடல் நோக்கி ஓடத் தொடங்கிய அவனைப் பார்த்து, “அப்பா பசுபதி, கொஞ்சம் நில். மிச்ச கதையையும் கேள். அன்னை பராசக்தி உன் போன்றே சிவபிரான் மீது அன்பும் அக்கறையும் கொண்டு, சிவன் கழுத்தைப் பிடித்து நெரித்தாள். அந்த ஆலஹால விஷம் சிவனின் வயிற்றுள் இறங்கவில்லை. கழுத்திலேயே தங்கிவிட்டது. அதனால்தான் சிவ பிரானை நீலகண்டன் என உலகோர் அழைக்கின்றனர்.”
“ஓஹோ! அந்த விஷம் இன்னும் அவர் கழுத்தில் தான் உள்ளதா? நல்லது. அதை உடனே துப்பிவிடுமாறு நான் சிவனை வற்புறுத்துகிறேன். உமது கதையைக் கேட்டு அமர்ந்திருக்க இனி எனக்கு நேரமில்லை...”
பசுபதி மிக வேகமாக மேற்குக் கடலை நோக்கி ஓடத் தொடங்கினான். அவனிடம் பதற்றம் தணியவில்லை. மனம், புத்தி, உணர்வுகள் சகலமும் ஒன்றிணைய, “ஓ சிவனே! என் முன் வாரும்; ஓ சிவனே, என் முன் வாரும்” என ஓலமிட்டபடி ஓடினான்.
உலகோர் சிரித்தனர், அவன் செயல் கண்டு. ஆனால், அவனுடைய ஏகாக் கிரக சித்தத்தின் வலுவை உணர்ந்த சிவபெருமான், பசுபதியின் முன் தோன்றினார்.
“மகனே பசுபதி, எங்கே கால்வலிக்க ஓடுகிறாய்?”
“ஆ! என் ஐயனா! ஐயனே, உம்மைக் காணத்தான் ஓடினேன். வந்துவிட்டீரா? வாரும். உடனே உமது கண்டத்திலுள்ள ஆலஹால விஷத்தைத் துப்பும்..”
“அது முடியாதப்பா. அக்கொடிய நஞ்சின் காற்றுப் பட்டாலே சகல உயிர்களும் மடிய நேரும். உலகம் ஒரு நொடியில் சுடுகாடாகும்.”
“ஆகட்டும் ஐயனே! எவர் மடிந்தால் எனக்கென்ன? என் ஐயன் விஷமருந்தி-ய தில் எனக்கு உடன்பாடில்லை. எல்லோரும் உம்மை ஏமாற்றிவிட்டனர். அதற்கான தண்டனையை இவ்வுலகம் அனுபவிக்கட்டும்.”
“பசுபதி, நீ நிலைமை தெரியாமல் பேசுகிறாய். உலகம் அழிந்தால், நீயும் தானே அழிந்துபோவாய்...”
“ஐயனே, நான் என்றிருந்தாலும் அழியக்கூடிய சாதாரண மானிடன். உமது நலனுக்காக நான் இக்கணமே அழியத் தயார். ஆனால், அந்தக் கொடிய நஞ்சு மட்டும் உமது வயிற்றினுள் செல்லநான் அனுமதிக்க மாட்டேன். நீர் உடனே துப்பிவிடும்.”
“அவ்விஷம் என் வயிற்றினுள் ஒருபோதும் செல்லாது. அதைத்தான் பார்வதிதேவி என் கழுத்திலேயே உருண்டு நிற்கும் படி செய்து விட்டாளே...”
“ஐயனே, என் அன்னை பார்வதி தேவியை இந்த விஷயத்தில் நான் பாதி தான் மன்னிக்க முடியும். அவர் நீர் விஷமருந்தும் முன்பே உம்மைத் தடுத்திருக்க வேண்டும். அதைச் செய்யாதது அவர் குற்றம். கழுத்தில் தங்கியுள்ள நஞ்சு எப்போது மிடறு விழுங்கும்போது உள்ளே செல்லுமோ, யாரறிவார்? அது உள்ளே செல்லாது என்பதற்கு யார் உத்தரவாதம் தருவர்? நான் இதையெல்லாம் ஏற்கமாட்டேன். ஒரேவழி நீர் அதைத் துப்புவதுதான். வேறு பேச்சே வேண்டாம்...”
விவாதம் நீண்டது. பசுபதியின் திடசித்தம் கண்டு சிவனே சிலிர்த்துப் போனார்.
“பசுபதி, உலக நலன் கருதி இந்த நஞ்சை நான் துப்ப மறுக்கிறேன். வேறு ஏதும் உபாயமிருந்தால், நீ சொல். அதனை நான் ஏற்கிறேன்...”
“அப்படியா? உம் பேச்சுக்கு நான் கட்டுப்படுகிறேன். அதற்காக நீர் எனக்கு ஓர் வரம் தரவேண்டும்.”
“கேள் மகனே நீ. என்ன வரம்... எதுவானாலும் தருகிறேன்.”
“நல்லது ஐயனே! நான் உமது மடிமீது எப்போதும் அமர்ந்திருக்க வேண்டும். இந்த வரத்தை அருளினால் போதும். நான் கணம்தோறும் கண் இமைக்காமல் உமது கண்டத்தையே கவனித்தபடி இருப்பேன். எந்தக் கணத்தில் அந்த நஞ்சுருண்டை வயிற்றினுள் நழுவத் தொடங்குகிறதோ, அப்போது நான் பாய்ந்து உமது கழுத்தை நெரித்து, அதைத் தடுப்பேன். இதைவிட்டால் வேறு வழி எனக்குப் புலப்படவில்லை.”’
எத்தகு அரிய-அமரத்துவம் வாய்ந்த, வரம் கேட்டுவிட்டார் பசுபதி!
இந்த விசித்திர வேண்டுகோளை அண்ணல் கறைக்கண்டன் ஏற்றார். தலையில் கங்கை, ஒருபுறம் சந்திரன், சரீரத்தின் இடப்பகுதி முழுக்க சக்திக்கு எனத் தன்னையே பங்கிட்டுக் கொடுத்த பரமசிவன், தனது வலப்புறத் தொடை மீது எப்போதும் பசுபதி நாயனார் வீற்றிருக்க, வரம் அருளினார் என்கிறது கன்னட நாட்டுப் பெரியபுராணமான பசவ புராணம்.

Comments