மனக்கோயில் கட்டிய மகான்

இரண்டு மகான்கள். இந்த இருவருமே, தங்கள் மனத்தில் கோயில் கட்டி, கடவுளை அங்கே குடிவைத்திருந்தார்கள் என்பதுதான் ஒற்றுமை. திருமாலாகிய கண்ணனுக்குக் மனக்கோயில் கட்டினார் ஒருவர். சிவனுக்கு மனக்கோயில் கட்டினார் இன்னொருவர்.
இறைவனை மனக்கோயில் கட்டி வழிபட்ட இந்த இருவரையுமே, நாம் கோயிலில் வைத்து இன்று வழிபடுகிறோம். இவர்கள் இருவருமே தெய்வ நிலையை அடைந்துவிட்டார்கள். வரலாற்றில் ஒருவர் ஸ்ரீஅரவிந்தர். புராணத்தில் ஒருவர் பூசலார் நாயனார்.
சிவபக்தனான காஞ்சி மன்னன் காடவர் கோன் ஒரு கற்கோயில் கட்டினான். தான் கட்டிய ஆலயத்துக்குக் கும்பாபிஷேக நாள் குறித்தான். விடிந்தால் குடமுழுக்கு. இறைவனைத் துதித்தவாறே உறங்கப்போனான்.
ஆழ்ந்த உறக்கம். அதில் ஒரு கனவு. சிவன் அவனுக்குக் காட்சி தந்தார். பொன்னார் மேனியனாய், புலித் தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ் சடைமேல் மிளிர் கொன்றை அணிந்து கங்கையும் பிறைமதியும் தலையில் சூடிச் சிவம் கனவில் வந்த அழகு, கண்ணைச் சொக்கச் செய்தது. சொக்கேசனல்லவா அவன்? தரிசித்தவர்களை எல்லாம் சொக்க வைப்பதுதானே அவன் இயல்பு?
“அன்பனே!” என்று மன்னனை அழைத்தான் மகாதேவன். “என்ன என் தெய்வமே?” என்று ஆவலோடு கேட்டான் தரிசனப் பரவசத்தில் திளைத்திருந்த மன்னன்.
“நீ குறித்த கும்பாபிஷேக நாளைத் தள்ளிப்போடு. நாளை அதற்கு நான் வர இயலாது. நாளை நான் கலந்துகொள்ள வேண்டிய இன்னொரு கும்பாபிஷேகம் இருக்கிறது அப்பனே! உன்னைப்போல் இன்னொருவனும் எனக்காகக் கோயில் கட்டி வருகிறான். அவன் நாளை கும்பாபிஷேகம் வைத்திருக்கிறான்.”
காடவர்கோனுக்குத் திகைப்பு. ‘கோயில் கட்டுவது என்பதென்ன சாமான்யமா? எத்தனை செலவாகும்? எத்தனை பேரின் ஒட்டுமொத்த உழைப்பு தேவைப்படும்? யாரோ தனி நபர் கோயில் கட்டியிருக்கிறாராமே? சாத்தியமா அது? அரசனான எனக்கே என்னைப் பிடி, உன்னைப் பிடி எனச் செலவு இழுக்கிறது. இதென்ன இறைவன் புதுக் கதையாகச் சொல்கிறான்?’
மன்னனின் எண்ண ஓட்டத்தை உணர்ந்த இறைவன் நகைத்தான்.
“மன்னனே! உன் செல்வச் செருக்கைக் கொஞ்சம் சுருட்டிவை. திருநின்றவூரில் எனக்காகக் கோயில் கட்டும் பூசலார் நாயனார் உள்ளக்கோயில் கட்டுகிறார். உள்ள கோயில்களிலெல்லாம் உயர்ந்தது ‘உள்ளக் கோயில்’தான் என்பதை நீ அறிவாயா? எனக்கு ஆலயம் அமைக்கும் அற்புதமான திருப்பணி, அவர் மனத்தின் உள்ளே எத்தனை காலமாக நடக்கிறது தெரியுமா? ஒவ்வொரு கருங்கல்லாக எண்ணத்தால் எடுத்தெடுத்து வைத்து அவர் கட்டிய மனக்கோயிலுக்கு நாளை கும்பாபிஷேகம். நான் அதற்குக் கட்டாயம் போயாக வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறேன். நீ கட்டிய கற்கோயில் கும்பாபிஷேகத்துக்கு இன்னொரு நாள் வருகிறேன்.”
கனவு கலைந்தது. காடவர்கோன் தூக்கிவாரிப் போட்டு எழுந்து உட்கார்ந்தான். என்ன கனவு இது! கனவல்ல, இது உண்மையாகத்தான் இருக்க வேண்டும். யார் அந்தப் பூசலார்? நாளை நேரில் திருநின்றவூர் செல்வோம்.
மறுநாள்... கும்பாபிஷேகத்தை ஒத்தி வைத்துவிட்டு, பரிவாரங்களுடன் திரு நின்றவூர் சென்றான். பூசலாரின் இல்லம் எது என்று தேடி விசாரித்துக் கொண்டு போனான். ஓர் எளியவரின் இல்லத்தை மன்னன் தேடிச் செல்வது எதற்காக என்று தெரியாமல் மக்கள் கூட்டம் மயங்கியது.
பூசலாரை நேரில் கண்ட அக்கணமே, அவர் மிக உயர்ந்த பக்தர் என்பதை உணர்ந்தான் மன்னன். அவர் பாதங்களில் விழுந்து பணிந்தான். பூசலார் கூச்சத்தால் காலை நகர்த்திக் கொண்டார். “எதற்கு வந்தாயப்பா?” என்று வினவினார்.
“நீங்கள் மனக்கோயில் கட்டிக் கொண்டிருக்கிறீர்களாமே?”
“ஆம். அதை நீங்கள் எப்படி அறிந்தீர்கள்?”
பூசலார் வியப்புடன் வினவினார். அவர் கொஞ்ச காலமாகவே யாரும் அறியாமல் தன் மனத்துக்குள் சிவனுக்கு ஓர் ஆலயம் நிர்மாணித்து வருகிறார் என்பது மெய்தான். கற் கோயில் கட்ட அவரிடம் ஏது செல்வம்? ஆனால் மனக் கோயிலுக்கு பக்திச் செல்வம் இருந்தால் போதுமே?
ஒருநாள் தன் மனத்துக்குள் ஆயிரக்கணக்கான சிற்பிகளை வரவழைப்பார். இன்னின்ன இடத்தில் கோயிலின் பிராகாரங்களில் சிற்பங்கள் இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று தெரிவிப்பார். சிற்பிகள் கற்களைக் கொண்டு அடுக்குவார்கள். உளியின் சத்தம் ஓயாமல் காதைப் பிளக்கும். எல்லாம் மனத்துக்குள்தான். பிறகொரு நாள் நான்கு பேரைக் கூப்பிட்டு, சிவன் கோயில் நந்தவனத்துக்குக் கிணறு வெட்டச் சொல்வார். கோயிலுக்கு என்றொரு குளம் வேண்டாமோ? அதை வெட்டவும் ஆட்களை வரவழைப்பார். அதுவும் மனத்துக்குள்தான். ஒவ்வொரு கல்லாக அடுக்கி அடுக்கிப் பல்லாண்டுகளாகப் பார்த்துப்பார்த்து அவர் கட்டிய மனக்கோயில் அது. அதற்குத்தான் இப்போது கும்பாபிஷேகம்!
‘ஆகா. என்ன பக்தி! என்ன பக்தி! இதுவல்லவோ பக்தி! செல்வச் செருக்கால் நான் கட்டும் கற்கோயிலைச் செல்வமிருந்தால், யார் வேண்டுமானாலும் கட்டலாம். ஆனால் பூசலாரைப் போன்ற உன்னதமான பக்தரன்றி யாரால் மனக் கோயில் கட்டமுடியும்?’
காடவர்கோன் பணிவன்போடு அன்று பூசலார் கட்டிய மனக்கோயிலின் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டான். இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட அந்தக் கோயிலும், அதனுள் உறையும் காடவர்கோனின் வழிபடுதெய்வமான சிவபிரானும் அவர் உடலிலேயே இருப்பதால், அவரை விழுந்து வணங்கி மெய்சிலிர்த்தான். மறுநாள், தான் நடத்திய கற்கோயில் கும்பாபிஷேகத்தை நிகழ்த்தி வைக்கப் பூசலாரையே அழைத்துச் சென்றான்.
மன்னனும் சிவபக்தனாக வாழ்ந்த காலம் அது. பக்தன் என்றறிந்ததும் ஓர் ஏழையின் பாதங்களில் விழுந்து வணங்கிய அடக்கம் அந்த மன்னனின் பெருமை. அடக்கத்தையே ஒரு மயிலிறகாகத் தன் மணி முடியில் சூட்டிக்கொண்ட பண்பாளன் அவன்.
பூசலார் நாயனார் வரலாறு, பெரிய புராணத்தில் பதினெட்டுப் பாடல்களில் சொல்லப்படுகிறது. ‘நின்ற ஊர்ப் பூசலார்தம் நினைவினை உரைக்க லுற்றாம்’ என்ற முன்னுரைப் பாடல், ‘பூசலார் பொன்தாள் போற்றி’ என்ற முடிவுரைப் பாடல் இரண்டையும் விட்டுவிட்டால், பூசலார் நாயனாரின் சரிதம் பேசுபவை 16 பாடல்கள்தான். அந்தப் பதினாறே பாடல்களில் சேக்கிழார் மிக அழகாக மனக்கோயிலின் மகத்துவத்தை பூசலார் வரலாற்றில் வைத்து விவரிக்கிறார். கிணறு வெட்டி, பொருட்களை ஒவ்வொன்றாய்த் தேடித் திரட்டி, கல் எடுத்து, சிற்பிகளைக் கொண்டு சிற்பங்கள் செய்வித்து எனப் பூசலார் படிப்படியாக மனக்கோயில் கட்டும் தெய்விக வரலாறு நம் உள்ளத்தை உருக்குகிறது.
அது புராண காலம். ஆனால் சுதந்திர காலத்தில் வாழ்ந்த ஸ்ரீஅரவிந்தர் எப்படி மனக்கோயில் கட்டினார்?

Comments