ரௌத்ர லக்ஷ்மி!

லக்ஷ்மி சாந்த வடிவினள் என்பார்கள். ஆனால், ரௌத்ர ரூபமாக இருந்து, அமைதிபெற்ற தேவியாக ஆந்திர மாநிலத்தில் விளங்குகிறாள் ஸ்ரீகனக மஹாலக்ஷ்மி!
விசாகப்பட்டினத்துக்கு அருகில், சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ‘புருஜுப்பேட்’ என்ற ஊரில் நடுநாயகமாக இந்தக் கோயில் அமைந்துள்ளது.
வியாழக்கிழமைகளில் ஸ்ரீமகாலக்ஷ்மி தேவியை தரிசிக்க ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுகின்றனர். இந்த ஊர் மக்கள், வீட்டின் ஒவ்வொரு விசேஷத்துக்கும் ஆதிலக்ஷ்மியின் அனுக்ரஹத்தைத்தான் முதலில் வேண்டுகிறார்கள்!
இந்த தேவி கோபமிக்க சக்தி ஸ்வரூபமாக, இங்குள்ள ஒரு கிணற்றில் பல யுகங்களாக மறைந்து இருந்தாளாம். கலியுக ஆரம்பத்தில், ஓர் அந்தணர் மோட்சம் தேடி இந்த வழியாக காசிக்குச் சென்று கொண்டிருந்தார். வழியில், ஒரு கிணறு! அதன் உள்ளிருந்து ஒரு பெண் குரல்! “என்னை வெளியில் எடுத்து கோயில் அமைப்பாயாக!” என்று சிம்ம கர்ஜனையுடன் கூறியது. கிணற்றை எட்டிப்பார்த்த அந்தணர் திடுக்கிட்டார். மிகவும் அழகான தெய்வாம்சம் பொருந்திய உருவம்! ஆனால் கண்களில் கனல்! “தாயே! என்னை மன்னித்துவிடு. நான் காசியை நோக்கி செல்கிறேன். முக்தி தேடிச் செல்லும் என்னிடம் கோயில் அமைக்க உடல் வலிமையும் இல்லை. பொருள் வசதியும் இல்லை.” என்று வேண்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்.
ஆத்திரமடைந்த தேவி, கோடரி போன்ற ஆயுதத்தை இடது கையில் எடுத்தாள்.
சாதுவை நோக்கிக் குறி வைத்தாள். இதை உணர்ந்த கயிலை நாதனான சிவபிரான், தேவியின் இடது கையைத் துண்டித்தார். அம்பிகையை, சினம் தணித்து சாந்த ரூபமாக மாறும்படி பணித்தார்! சங்கரனின் ஆணைக்குக் கட்டுப்பட்டு கருணை வடிவாக உருமாறினாள் மஹாலக்ஷ்மி! அங்கேயே அந்த முதியவருக்கு மோட்சமும் அருளினாள் என்கிறது தலபுராணம்.
‘புருஜு’ என்றால், அரசர்களின் கோட்டையின் வெளிப்பகுதி! விசாகப் பட்டினத்து அரசர்களின் குலதெய்வமாக - கோட்டையின் காவல் தெய்வமாக, விளங்கியிருக்கிறாள் இந்த வீரலெஷ்மி!
கோபுரம், விமானம் என்று தனிப்பட்ட, கோயிலுக்கு உரிய வெளி அமைப்புகள் ஏதும் இல்லை. சாலையின் நடுவில் சப்தம் நிறைந்த பகுதியில் தேவி கொலு வீற்றிருக்கிறாள். 1912ல், சாலையை அகலப்படுத்தும் பணிக்காக தேவியை வேறு இடத்தில் மாற்றி அமைத்தார்களாம். அப்போது ஊரில் ப்ளேக் நோய் தாக்கி பலர் இறந்துவிட்டார்களாம். தேவியை மறுபடி அதே இடத்தில் ஸ்தாபனம் செய்த பிறகுதான் நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாம். பிறகு, 1917ல் மீண்டும் ஒரு எளிய கோயிலை அமைத்து இருக்கிறார்கள்.
நாங்கள் ஒரு வியாழக்கிழமை மாலை ஆரத்தி சமயம் சென்றோம்! கோயிலில் பெண்கள் கூட்டம். ஓரிடத்தில் சப்த சதி பாராயணம் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. 7-8 பெண் குழந்தைகள் ஒரு குழுவாக பரதநாட்டியம் ஆடிக்கொண்டிருந்தனர். இவையெல்லாம் இறை பணியாக ஊர் மக்கள் செய்கிறார்கள்.
ஒரு கிணறு. அதன் அருகில் தேவி. அர்ச்சாவதாரத்தைப் பார்த்ததும் மனது திடுக்கிட்டது. வலது கையில் தாமரை! இடது கை முழங்கை வரை மட்டுமே தெரிகிறது. ஆனால் சர்வாலங்கார பூஷிதையாக முகத்தில் தேஜஸுடன் கனிவுடன் திகழ்கிறாள் ஆதிலக்ஷ்மி தேவி. தங்க கலசத்தில் கண்கள் திறந்து காணப்படுகின்றன! நமது ஊரில் அர்ச்சாவதாரம் சேதப்பட்டால் தகுந்த பூஜைகளும் பரிகாரங்களும் செய்து சிலையை மாற்றி விடுவார்கள்! இங்கு இந்த பின்னத்துடன் இருந்து தேவி சிறப்பு பெறுகிறாள்!
இந்தக் கோயிலில், பக்தர்கள் தாங்களே தேவிக்கு பூஜை செய்யலாம். குங்குமம், மஞ்சள் பொடி, மலர்கள் கொண்டு பூஜை செய்யலாம். புடைவை சார்த்தலாம். தேங்காயை உடைத்து, இளநீரை அபிஷேகம் செய்யலாம். குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி பக்தர்கள் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வதும் நடைபெறுகிறது!
ராஜராஜேஸ்வரி மற்றும் அஷ்டலெக்ஷ்மி உருவங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன! அருகிலேயே தேவி வெளிப்பட்ட கிணறு. அதற்கும் பூஜைகள் நடைபெறுகின்றன. சபரிமலைக்கு மாலை போடுவது போல் மார்கழி மாதத்தில் மாலை தீட்சை பெற்றுக்கொண்டு, 40 நாட்கள் அல்லது 48 நாட்கள் விரதம் கடைபிடிக்கிறார்கள். பச்சை ஆடை உடுத்தி, பச்சை மணி மாலை அல்லது துளசி மணிமாலை அணிந்து, விரதம் இருந்து கடைசி நாள் பஞ்சாமிர்த அபிஷேகம், குங்கும அபிஷேகம் செய்வித்து சிறப்பு பூஜைகள் செய்கிறார்கள். அந்த சமயத்தில் தினமும் ஒரு லட்சம் மக்கள் தேவியை தரிசனம் செய்வதாக சொல்கிறார்கள்.

Comments