ஊர் செழுமை;கோயில்!

வரும்  பிரதோஷம். பழைமை வாய்ந்த ஒரு சிவன் கோயிலுக்குப் போவோமா?” என்றார் நண்பர் . கவனிப்பாரில்லாத - சிதிலமான நிலையில் உள்ள பழைய கோயில்களை நாடிச் சென்று தரிசனம் செய்வது, எனக்குப் பிடித்தமான விஷயம்! அதனால், அவர் சொன்னபடி தி.நகரிலிருந்து கிளம்பினோம்.

சைதை, கிண்டி, ராமாவரம் வழியாக போன வண்டி, அடையாறு நதியைத் தாண்டியதும் பிரதான சாலையிலிருந்து பிரியும் சிறு செம்மண் சாலையில் திரும்பியது. குண்டும் குழியுமாகக் கிடந்த அந்த வழியில் வண்டி சென்றதில், உடலின் எலும்புகள் இடம்மாறிவிடுமோ என்று அஞ்சும் அளவுக்கு குலுக்கல். ஊருக்கு வெளியே போகும் பஸ்ஸானதால் கூட்டம் ஏறிக்கொண்டே இருந்தது.
வெயில், புழுக்கம் இவற்றை சகித்துக் கொண்டு இருந்த வேளையில், சூழ்நிலை பசுமையாகவும் ரம்மியமாகவும் மாறியது! எலுமிச்சை, வாழைத் தோட்டங்கள்; தென்னந்தோப்புகள், பசுமையான வயல் வெளிகள், தாமரை மலர்கள் மண்டிய தடாகங்கள்... ‘இது சென்னையின் புறநகர் தானா?’ என்று சந்தேகமே வந்துவிட்டது! கிராமத்து சாலை ஒன்றின் திருப்பத்தில் குளக்கரை அருகே இருந்த நிறுத்தத்தில் இறங்கினோம்.
சட்டென்று மாலைக் காற்றில் மிதந்து வந்தது புதுநெல்லின் நறுமணம். பரந்த வயல்வெளியின் விளிம்பில் நாங்கள். குளத்தில் கூட்டம் கூட்டமாக வாத்துகள் நீந்துவதும் கரையேறுவதும், திரும்ப நீரில் இறங்குவதுமாக விளையாடிக் கொண்டிருந்தன.
அந்தக் கிராமத்து தெருவின் வழியாக நடந்தோம். அக்கம் பக்கத்தில் கோபுரமோ விமானமோ, ஏன்? காவி வெள்ளை பட்டைகூட, கோவில் என்று அடையாளம் காட்டத் தென்படவில்லை! செங்கற்கள் இடிந்து விழுந்து ஒரு சுற்றுச் சுவர் மட்டுமிருந்த பகுதியில் மொட்டையாக நின்ற ஒரு கட்டட அமைப்பை கோவில் என்று காட்டினார் கண்ணன்.
சுற்றிலும் புதர்கள். மூலையில் ஒரு கிணறு. அதன் ஆழத்தில் நீர் சலசலத்தது. உளுத்துபோன கதவின் ஒற்றைத் தாழ்ப்பாளில் பெரிய பூட்டு. அண்டை வீட்டிலிருந்து அரை முழம் நீள சாவியைத் தந்தார்கள். கயிறும் வாளியும் கொண்டு ராட்டினம் இல்லாத கிணற்றில் தண்ணீர் மொண்டு கை, கால்களை சுத்தம் செய்து கொண்டு, கோயில் கதவைத் திறந்தோம். உள்ளே பதுங்கியிருந்த வௌவால்கள் வெளிச்சம் கண்டதும் பதறியோடின.
உள்ளே நுழைந்து, இருட்டுக்குக் கண்கள் சிறிது பழகியதும், அங்கிருந்த விளக்கு ஒன்றையும் ஏற்றினோம். மெல்லப் பரவிய வெளிச்சத்தில் புன்னகை தவழ தென்பட்டாள் அம்பிகை, பெயர் காமாட்சி. “இதோ நான் இங்கிருக்கிறேன்” என்று தரிசனம் தருகிறாள். பக்கத்துக் கருவறையில் லிங்கத் திருமேனியாய் நீலகண்டேஸ்வரர். பழைய கந்தல் வேட்டியில் எண்ணெய் பிசுக்கேறி காட்சி தருகிறார்.
இது நடந்து 15 ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்று அந்த தாமரைத் தடாகம் தூர்க்கப்பட்டு, பெரிய கல்வி நிறுவனம் நிற்கிறது! வாத்துகள் நீந்திய குளத்தின் பக்கத்தில், மாளிகை உருவாகியுள்ளது. பச்சை வயல்களும் தென்னந்தோப்புகளும் மறைந்து கான்கீரீட் காடுகள்! ஊர் செழிப்பாகி விட்டது. ஆனால், நீலகண்டே சுவரரும் காமாட்சி அம்பிகையும், கிட்டத்தட்ட அதே நிலையில்தான் இருக்கிறார்கள்.
கிழக்குப் பார்த்த சுவாமி சன்னதி. கருவறை, சிறிய அர்த்த மண்டபம், அதை ஒட்டிய சதுரமான மகா மண்டபம். மகா மண்டபத்து ஒரு மூலையில் சுயம்பு மூர்த்தியோ என்று தோன்றும் விநாயகப் பெருமான். இன்னொரு மூலையில் சண்டேசுவரர். சுவாமியை நோக்கிய வண்ணம் நந்தி. கோயிலுக்கு வெளியில், வடக்கில் விசாலமான குளம் இருந்த அடையாளமாக படித்துறைகள், குளக்கரையில் உள்ள சன்னதியில் தீர்க்கமான அமைப்புகளுடன் நவகிரக வடிவங்கள். கோயில் வாசலை ஒட்டினாற்போல சிறு நாகர் சன்னதி! இவ்வளவுதான் கோயிலே!
கோயில் கருங்கல் திருப்பணி. தூண்கள் விதானங்கள் எல்லாம் கருங்கற்கள். இவற்றைச் சுற்றி வளைத்துக் கட்டியது மட்டும் செங்கல் திருப்பணி! தூண்களில் சில அபூர்வ சிற்பங்கள்; ஒரு சிவயோகி, ஒரு புருஷா மிருகம்; மரத்தடியில் விளங்கும் சிவலிங்கம் என்று, கோயிலின் தொன்மையைச் சொல்லத் துடிக்கும் வடிவங்கள். விதானங்களில் மீன்கள், சூரிய சந்திரர்களை விழுங்கும் பாம்புகள், ஏதோ சரித்திரம் கூட இதில் ஊமையாய் ஒளிந்திருக்கிறதோ என்னவோ?
விசாலமான கருவறையில் வட்டவடிமான ஆவுடையாரின் மீது இரண்டு முழ உயரமுள்ள பாணம். இவர்தான் நீலகண்டேசுவரர்.
அம்பிகையின் கருவறை சிறியதுதான். அதன் நடுவில் பத்ம பீடத்தில் ஆளுயரத்துக்கு நின்ற கோலத்தில் காமாட்சி. பெயருக்கேற்ப அருள்சுரக்கும் நயனங்கள்; அகன்று பரந்த முகம்; தீர்க்கமான எடுப்பான நாசி; புன்னகை தவழும் உதடுகள்; குவிந்த மோவாய்; நான்கு திருக்கரங்கள். மேலிரண்டு கரங்களில் பாசம் அங்குசம். கீழிரண்டு கரங்களில் அபயவரதம். நேர்த்தியாக வடித்தெடுத்த ஆடையணிகள் நிறைந்த திருமேனி. நெற்றியில் புடைப்பு. முக்கண்ணியோ என்று தோன்றும்!

கெருகம்பாக்கம் என்கிற இந்த கிராமம், சென்னை போரூரை அடுத்து 5 கி.மீ. தொலைவில்தான் இருக்கிறது. புதுக்கோயில்களை அமைப்பதைவிட, இதுபோன்ற பழைய கோயில்களின் மேல் நம் பார்வை படருமா?

Comments