பக்தருக்கு அருளும் பாகம்பிரியாள்!

கோயில் எதிரே உள்ள வாசுகி தீர்த்தக் குளத்தில் நீராடி, ஈரத்துணியுடன் கோயில் பிரகாரம் நெடுகிலுமாக, தரை மீது சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து, எழுந்து அதேபோல மீண்டும் மீண்டும் நமஸ்கரித்து நகர்கின்றனர் பெண்கள். கையிலே வேப்பிலைக் கொத்து; நெற்றியில் விபூதி குங்குமம். “எல்லாப் பிணியையும் போக்கி, எங்களைக் காப்பவள் பாகம்பிரியாள். இதுவரை வந்து பயன் பெற்றவர்கள், வந்து கொண்டிருக்கும் பக்தர்களின் அனுபவங்களே இதற்குச் சாட்சி!” என்கிறார்கள் கோயிலுக்கு வந்திருக்கும் பக்தர்கள்.

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே திருவெற்றியூரில் அமைந்துள்ளது அருள்மிகு வன்மீக நாத சுவாமி சமேத பாகம்பிரியாள் ஆலயம். இத்திருத்தலத்தின் அனுக்கிரக மூர்த்தி, இறைவனின் இடது பாகத்தில் என்றும் இணைபிரியாது இருக்கும் பாகம்பிரியாள்தான்.

சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்துக்கு உட்பட்ட திருக்கோயில் இது. நெல் மற்றும் தானிய வருவாய் இங்கு தான் அதிகம் எனக் கூறுகிறார்கள். காரணம், பாகம்பிரியாள். ஐம்பது மைல் சுற்றளவுக்குள் வாழ்ந்து வரும் விவசாயிகள், ‘அளக்கா பொழில்’ஆக, நெல்லையும் தானியங்களையும் தாமாகவே முன்வந்து தாராளமாகக் கொண்டு வந்து கொட்டுகின்றனர் கோயில் மண்டபத்தில். நெற்பயிரையும், தானியங்களையும் பூச்சி, புழுக்களிடமிருந்து காத்து வருகிறாள் பாகம்பிரியாள் என்கிறார்கள்.

“சுவாமி வன்மீக நாதர், பழம்புற்று நாதர். அம்பாள் பாகம் பிரியாள், அபிபக்த நாயகி. இங்கு வந்து வேண்டிக்கொண்ட எவரும் வெறுங்கையுடன் திரும்பிச் சென்றதில்லை. வியாழக்கிழமை தங்கி, வெள்ளிக்கிழமை வழிபட்டுச் செல்வது, இங்கு மிக பிரசித்தம். ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இத்திருத்தலத்தில் தங்கியிருந்து, மறுநாள் வெள்ளிக்கிழமை வழிபட்டுச் செல்கின்றனர்” என்கிறார் கோயில் அர்ச்சகர் மணிகண்டசிவம்.

ஆகம முறைப்படி, பிரதிஷ்டை செய்யப்பட்ட பரிவார மூர்த்திகள் சூழ, கிழக்கு நோக்கி லிங்கத் திருமேனியுடன் காட்சியருள்கிறார் வன்மீக நாதர். தெற்கு நோக்கி காட்சி தருகிறாள் அன்னை.

“இந்தக் குளத்தைப் பற்றிய புராணக் கதையை, நான் கேள்விப்பட்டிருக்கேன். வாசுகிங்கற பாம்பை தாம்புக் கயிறாக்கி, தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டி பாற்கடலைக் கடையுறாங்க. வலி பொறுக்காம வாசுகி ஒத்துழைக்கலை. அதனால, சாபம் பெற்ற வாசுகி, திருவெற்றியூரில் ஒரு பழம்புற்றில் குடியேறி பாகம்பிரியாளைப் பூஜிக்குது. அவள் அருளால அந்தப் பாம்பே, வாசுகி தீர்த்தமா நிரம்பி, வாசுகி குளமாக ஆகிப் போச்சுங்கறாங்க.

அதனால், இந்த சுத்து வட்டாரத்துல யாரையாவது விஷப் பாம்பு தீண்டிட்டா, உடனே அவுங்களெ தூக்கியாந்து வாசுகி குளத்துல முக்கி எடுத்து, கோயில் வாசல்ல போட்டு, அவுங்க வாயில வேப்பிலையைத் திணிச்சுடுவாங்க. சித்த நேரத்துல அந்த ஆளு வாயிலேந்து விஷம் வெளியேறி பொழைச்சி எந்திரிச்சிடுவாரு. இது இன்னியவரைக்கும் நடந்து வர்ற நெஜம்!” என்கிறார் திருப்பாலக்குடியிலிருந்து நடை பயணமாக, தன் பிள்ளைகளுடன் வந்திருக்கும் சமயவள்ளி.

“தீராத நோயெல்லாம் தீர்த்து வைக்குறவ இந்த அம்பாள். பாகம்பிரியாள்கிட்ட வேண்டிக்கிட்டு யாரும் ஏமாந்ததில்லை. தென் பிரகாரத்துல ஸ்தல விருட்சமான வில்வ மரம் அமைஞ்சிருக்கு. அந்த மரத்துல தொட்டில் கட்டிப்போட்டு வேண்டிக் கிட்டா, அந்த வேண்டுதலை நிச்சயமா நிறைவேத்தித் தருவா இந்த பாகம்பிரியாள்!” இது தேவிப்பட்டினத்திலிருந்து வந்திருக்கும் பாண்டியம்மாள் அனுபவம்.


“எங்களின் ஒன்பது வயது பையனுக்கு மூளை சுரப்பி வளர்ச்சி சரியில்லை. பார்க்காத மருத்துவம் இல்லை. ரொம்பவே மன வேதனைப்பட்டோம். எங்க பக்கத்து வீட்டம்மா மகமாயி ராமசாமி. சென்னையிலேந்து இந்த கோயிலுக்கு நாற்பது வருசமா வந்துட்டு வர்றாங்க.

இப்ப அவுங்க சொல்லித்தான், நாங்க குடும்பத்தோட கோயிலுக்கு வந்து, மொட்டை போட்டுட்டு வேண்டிருக்கோம். எங்க பையன் குறையை, இந்த அம்பாள் நீக்கிடு வாங்கற நம்பிக்கை எங்களுக்கு நெறையவே இருக்கு!” என்கின்றனர் சென்னை மணப்பாக்கத்திலிருந்து வந்திருக்கும் கலா - சிவனேசன் தம்பதியினர்.

‘நம்பினார் கெடுவதில்லை’ என்றார் மகாகவி. அதை, பாகம்பிரியாளை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டம் உணர்த்திக் கொண்டிருக்கிறது.



Comments