அம்பலக் கூத்தன்

கூத்து என்பதே ஆனந்தத்தின் வெளிப்பாடுதான். உள்ளத்தில் பொங்கித் ததும்பும் உற்சாக வெள்ளத்தை, உடல் அசைவுகள் மூலம், முக அசைவுகள் மூலம் உணர்த்தும் கலைதான் அது. அந்தக் கூத்தை பரமன் எதற்கு ஆடவேண்டும்? எதை நினைத்து அவன் பூரிக்கிறான்? எதனால் இவ்வளவு ஆனந்தம் அவனுக்கு என்றெல்லாம் கேள்வி எழத்தான் செய்கிறது. அதற்கான ஒரு காரணத்தை, குரு நமசிவாயரின் சரிதத்தில் பார்க்கலாம்.
ஒருசமயம் குரு நமசிவாய சுவாமிகள், ‘சபாநாயகர் பிச்சை கொடுத்தால், கட்டளை எப்போதும் தொடந்து நடைபெறும்’ என்று தில்லை மூவாயிரவர்களுக்காக தங்கத் தட்டினைக் கையில் ஏந்தி,
காதலுடன் சர்வ கட்டளையா உன்னுடைய
பாத மலர்ப்பூசை பண்ணவே - ஓது
குருவா யெனையாண்டு கொண்டவனே! பிச்சை
தருவா சிதம்பர நாதா
- என்ற வெண்பாவைப் பாடினார்.
அப்போது குரு நமசிவாயரின் வேண்டுகோளுக் கிணங்கி தங்கக் காசு ஒன்று அந்தத் தங்கத் தட்டிலே விழுந்தது. ‘நாம் அனைவரும் காணும்படியாக நடராசப் பெருமானே பிச்சையிட்டுள்ளார். எனவே நாமும் நன்கொடை அளிக்க வேண்டும்’ என்று அங்கு வந்திருந்த பெரும்பான்மை அடியார்களும் அன்பர்களும் பொன்னையும் பொருளையும் அந்தத் தங்கத் தட்டில் இட்டார்கள்.
குரு நமசிவாயர் அந்தத் தங்கத் தட்டினை தனக்கு முன் இருந்த அர்ச்சகர்களிடம் கொடுத்துவிட்டு, அங்கிருந்து புறப்பட முற்பட்டார். ஏனோ முடியவில்லை. ‘இதற்குக் காரணம் என்ன?’ என தில்லை மூவாயிரவர்களையே கேட்டார். அவர்கள் ‘நாங்கள் எதுவும் அறியோம்’ என்றனர்.
இதற்கு என்ன காரணம் என்பதை யோகசித்தி மூலம் கண்டறிந்தார் குரு நமசிவாயர். தில்லை மூவாயிரவர்களிடம், ‘சுவாமிக்கு அணிகலன்கள் இருந்ததுண்டா?’ என்று கேட்டார். சிறிது நேரம் சிந்தித்த அவர்கள், பதஞ்சலி, வியாக்கிரபாதர் காலத்தில் பெருமானுக்கு பாதச்சிலம்பும் கிண்கிணியும் இருந்தன என்று சொல்வார்கள். நாங்கள் கண்டதில்லை" என்றார்கள்.
இவர்கள் கூற்றினைக் கேட்ட குரு நமசிவாயருக்கு நடராசரின் சித்தம் புரிந்தது. சிற்பிகளை அழைத்தார். பெருமானுக்கு பாதச்சிலம்பும் கிண்கிணியும் வீர கண்டா மணியும் செய்யவேண்டும். அவற்றைச் செய்ய எவ்வளவு பொன் தேவைப்படும்?" என்று கேட்டார். இவற்றைச் செய்ய ஐம்பதினாயிரம் பொன் தேவை" என்றார்கள் சிற்பிகள்.
அவ்வளவுதான்! தங்கத் தட்டில் வந்து சேர்ந்திருந்த பொன்னையும் பொருளையும் எடுத்து சிற்பிகளிடம் கொடுத்தார். திருவாபரணம் செய்து முடிக்குமாறு கூறி அனுப்பினார். எதுவுமே நடக்காத மாதிரி, திருக் கோயிலின் ஒருபுறத்தில் சென்று அமர்ந்தார் குரு நமசிவாயர்.
தில்லை மூவாயிரவர்கள் திகைத்துப் போனார்கள். நாம் இவரைத் துணையாகக் கொண்டு நல்வாழ்வு வாழலாம் என நினைத்திருந்தோம். செல்வத்தை எல்லாம் சிலம்பும் கிண்கிணியும் வீரகண்டாமணியும் செய்யக் கொடுத்துவிட்டாரே!" என்று வருந்தினார்கள். சிலம்பும் கிண்கிணியும் வீரகண்டாமணியும் அணிந்துவிட்டால், அம்பலவாணர் இவருக்கு நடனம் செய்து காட்டுவரோ?" என்று தங்களுக்குள் நொந்து பேசினர்.
இவர்களின் பேச்சை குரு நமசிவாயரும் கேட்டார். ஆனால், பதில் சொல்லவில்லை. நாற்பதாம் நாள் சிலம்பும் கிண்கிணியும் செய்யப்பெற்று வந்துசேர்ந்தன. குரு நமசிவாயர் தில்லை மூவாயிரவரையும் பிறரையும் அழைத்தார்.
இப்போது தில்லை அம்பலக் கூத்தன் நடனம் செய்து காட்டினால் அனைவரும் காண்பீரோ?" என்றவாறே, நடராசப் பெருமானின் திருவடிகளில் சிலம்பும் கிண்கிணியும் அணிவித்தார். அனைவரையும் தரிசனம் செய்யச் சொல்லி,
அம்பலவா ஓர்கால் ஆடினால் தாழ்வாமோ
உம்பரெல்லாம் கண்டதென கொப்பாமோ - சம்புவே
வெற்றிப் பதஞ்சலிக்கும் வெம்புலிக்கும் தித்தியென
ஒத்துப் பதஞ்சலிக்கு மோ
என்ற பாடலைப் பாடினார். உடனே ‘கலகல’ வென்று ஓர் ஓசையை அனைவரும் கேட்டனர். அம்பலக் கூத்தன் நடனம் செய்யத் தொடங்கினான். ஆடல்வல்லானின் அசைவில்தான் உயிர்கள் இயங்குகின்றன என்பதை உணர்ந்தவர்களாக, அனைவரும் அவன் சன்னிதியில் கீழே விழுந்து வணங்கிக் கொண்டிருந்தார்கள். பெருமானின் தலையில் இருந்த கங்கை, அவர்களின் கண்களில் இருந்தும் பெருகிக் கொண்டிருந்தது.

Comments