உணர்தலே முக்கியம்!

பல்வேறு சமயங்கள் - ஞானமே முக்தி, ஞானமே கடைசி நிலை என்று சொல்கின்றன. ஆனால், சைவ சித்தாந்தம் ஞானத்தை - வாசல், வாயில் என்று சொல்கிறது’ என்றார் சைவ சித்தாந்தம் பற்றிய தமது சொற்பொழிவில் கே.சிவக்குமார்.
அறிவு என்பது ஆனந்தத்தை அடைய ஒரு தகுதி. அவ்வளவுதான்! பசி என்பது உணவை உண்ண ஒரு தகுதி. ஆனால், உண்ணும் உணவு என்பதுதான் அனுபவம். அதாவது, பசி என்பது உணவு என்ற அனுபவத்தைப் பெற ஒரு தகுதி. அப்படித்தான், அறிவில்லாத பொருளுக்கு ஆனந்தத்தை அடையவே முடியாது. ஒரு மனிதனுக்கு துன்பம் என்பது இரண்டு வகையாக நேரிடும். ஒன்று, நேரிடையாக வருவது. மற்றொன்று, இன்பம் என்ற சட்டையைப் போர்த்திக் கொண்டு வருவது. கசப்பான மாத்திரையை sugar coated capsule என்பார்களே! அப்படித்தான் இன்பம் என்பதும். தனக்குள் துன்பம் என்ற கசப்புணர்வை உள்ளடக்கிக் கொண்டு வருகிறது. அது நமக்குத் தெரிவதில்லை. ஒரு குழந்தை என்பது அதன் பெற்றோர்களுக்கு இன்பத்தைக் கொடுக்கிறது. ஆனால், அதே குழந்தையை நம் குழந்தை, நம் உறவு என நாம் பார்த்துக்கொண்டே இருந்தால் நமக்குத் துன்பம்தான் வரும்.
சிவனுக்குப் பகைமையும் கிடையாது; உறவும் கிடையாது; வேண்டுதலும் கிடையாது; வேண்டாமை என்ற நிலையும் கிடையாது. மனிதர்களை கடவுள் தண்டிக்க வேண்டும் என நினைத்துவிட்டால், அதை பகைவர்களைக் கொண்டுதான் செய்யவேண்டும் என்பதில்லை. உறவுகளைக் கொண்டே செய்துவிடலாம். எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள, தெளிந்து கொள்ள நமக்கு ஞானம் வேண்டும்.
ஞானம் என்பது, ஏதோ புதிதாகத் தெரிந்து கொள்வது இல்லை. ஆங்கிலத்தில் knowledge மற்றும் wisdom என்ற இரண்டு வார்த்தைகளைச் சோல் வார்கள். ஒன்றைப் பற்றித் தெரிந்துகொள்வது knowledge, அறிவு. உணர்ந்து கொள்வது wisdom, ஞானம். நிலையாமை என்பது நம் அனைவருக்குமே நடக்கும் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். தாயார் போனார், தந்தையார் போனார், நானும் ஒருநாள் போகத்தான் போகிறேன் என்று நமக்குத் தெரியும். அப்படித் தெரிந்தும் கூட, இன்னிக்கு ஒரு லட்சம் போட்டா 50 வருஷம் கழிச்சு 1 கோடி கிடைக்கும்னு ஒருத்தர் சொன்னா, உடனே போடலாமேன்னு நினைக்கறோம். 50 வருஷங்கள் நாம உயிரோட இருப்போமா? இல்லை, அவர் உயிரோட இருப்பாரான்னு நாம நினைச்சே பார்க்கறதில்லை.
நிலையாமையைத் தெரிந்து வைத்திருந்தாலும், அதை உணர்வதில்லை. ஏழையைப் பார்த்து பணக்காரனா இருப்பவர் பரிதாபப்படலாம். பதவி என்பது இல்லாதவரைப் பார்த்து, பெரிய பதவியில் இருப்பவர் பரிதாபப்படலாம். ஆனால், செத்தவனைப் பார்த்து பரிதாபம் வேண்டுமா? தேவையில்லை. ஏனென்றால், என்றோ ஒருநாள் நமக்கும் அதே நிலைதான் வாய்க்கப்போகிறது.
நம்முடைய ஞானத்தில் உள்ள ஏதோ ஒரு குறைபாட்டால்தான் நமக்கு ஆனந்தம் என்பது கிடைக்கவில்லை என்பதை நாம் உணர வேண்டும். அறிவு என்பது தெளிவாக இருந்தால், துன்பம் என்பது வரவே வராது. தெளிவான அறிவை, அந்த சிவபெருமானிடம்தான் நாம் கேட்டுப் பெறவேண்டும்.
எது அசல், எது நகல், எது பொய், எது உண்மை, யார் நல்லவர், யார் கெட்டவர் என்று பகுத்தறியும் அறிவை இறைவன்தான் நமக்குத் தரவேண்டும். அவனால் மட்டும்தான் அந்த அறிவை நமக்குத் தர முடியும். அறிவில் தெளிவு என்பதுதான் அருள்.
துன்பம் என்பது எல்லாருக்கும் வரும். ஆனால், ஞானிகளுக்கும் சிவனடியார்களுக்கும் துன்பம் வரும் பொழுது,அவர்கள் அதற்காக கவலைப்பட்டுக் கொண்டு சோர்ந்து போகமாட்டார்கள். சிவபெருமான் மீது பக்தியும், அவன் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கையும் கொண்டிருப்பார்கள். அந்த ஞானமும் வைராக்கியமும் நம் ஒவ்வொருக்குள்ளும் இருக்க வேண்டும். அதைத்தான், சைவ சித்தாந்தம் உணர்த்திக் கொண்டிருக்கிறது."

Comments