சித்தம் தெளிவிக்கும் சிவபிரான்

சென்னை ரெட்ஹில்ஸ் அருகில் உள்ள புழல் ஜெயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி எதிரேயுள்ள காந்தி சாலையில் 1 கி.மீ. தூரம் சென்றால், அருள்மிகு திருமூலநாதர் அன்னை சொர்ணாம்பிகை அருள் பாலிக்கும் திருக்கோயிலைத் தரிசிக்கலாம். சுமார் 1300 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட மிகப் பழமையான கோயில் என்று கூறுகின்றனர். 2010-ம் ஆண்டில் குடமுழுக்கு விழா நடந்திருக்கிறது.
கருவறையின் பின்னால் ஸ்ரீசக்தி கணபதி, ஸ்ரீசிவ லிங்கம், கஜலட்சுமி, ஸ்ரீவீரபத்திரர், வள்ளி தேய்வயானை சுப்ரமணியர், அஷ்டோத்திர லிங்கம், ஸ்ரீமகா சரஸ்வதி ஆகியோருக்கு தனித்தனியாக அழகான சன்னிதிகள் உள்ளன. திரும்பினால் வரிசையாக அறுபத்து மூன்று நாயன்மார்களின் சிலைகள்! சுவரில் வெள்ளையில் டைல்ஸ் ஒட்டி ஒவ்வொரு நாயன் மாரின் பெயரையும் எழுதி வைத்திருக்கிறார்கள்.
கருவறையினுள் நல்ல உயரமான பாண அமைப்புடன், லிங்கவடிவில் அருள்மிகு திருமூலநாதர். மேற் பகுதியில், நாகர் லிங்கத்தின்மீது குடை போன்று காட்சி அளிக்கிறார். இந்தச் சிலையை பதஞ்சலி முனிவர் பிரதிஷ்டை செய்ததாக சொல்கின்றனர்.
கருவறையின் இடப்பக்கத்தில் ஒரு சுரங்கம் இருக்கிறது. பண்டைக்காலத்தில் அரசர்கள் அர்த்தஜாம பூஜைக்காக இதன்மூலம் திருமுல்லைவாயிலில் உள்ள அருள்மிகு மாசிலாமணீசுவரர் திருக்கோயில், திருவொற்றியூரில் அருள்பாலிக்கும் திருவடிவுடையம்மன் திருக்கோயில் போன்றவற்றுக்குச் செல்வார்களாம். சுரங்கம் இப்பொழுது மூடப்பட்டிருக்கிறது.
அடுத்து அன்னை சொர்ணாம்பிகை. நல்ல உயரத்துடன் - சாந்தமான திருமுகத்துடன், புன்முறுவல் பூத்தவண்ணம் தரிசனம் அளிக்கிறாள். அடுத்து சுவர்ணாகர்ஷண பைரவர். இவரை வழிபட்டால், பொருளாதாரத்தில் ஏற்படும் மந்தத் தன்மை நீங்கும் என்கிறார்கள்.
வெளிப் பிராகாரத்தில் ஸ்ரீமகா கணபதி, சரபேஸ்வரர், பிரத்யங்கிரா தேவி, ஆஞ்சநேயர், நாகர் மற்றும் நவகிரக சன்னிதிகள். சித்தப்பிரமை, நரம்புக் கோளாறுகள், மன அமைதியின்மை, தூக்கமின்மை போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்கள், இக்கோயிலுக்கு திங்கள்கிழமை அல்லது அமாவாசை அன்று வரவேண்டும். முடிந்தவர்கள் ருத்ராபிஷேகம் அல்லது மகா அபிஷேகம் செய்து வேண்டிக்கொண்டால் இந்தக் கோளாறுகள் நீங்குகிறது என்கிறார்கள்.
ஆனி மாத பௌர்ணமி அன்று 64 மூலிகைகளால் அபிஷேகம் நடைபெறுகின்றது. அந்த அபிஷேக தீர்த்தத்தை பக்தர்களுக்குக் கொடுக்கிறார்கள். அதை உட்கொண்டால் கோளாறுகள் நீங்குகிறது என்பதும் நம்பிக்கை.
தினமும் இரவு 7.30 மணிக்கு நடக்கும் பள்ளி அறை பூஜை மிகவும் பிரசித்தம். இந்த பூஜையில் கலந்துகொண்டு மனமார பிரார்த்தித்தால், அவர்களின் மனக்குறை அகன்று மனச்சாந்தி பெறுகிறார்கள்.
தரிசனநேரம்:
காலை 6-11 மணிவரை,
மாலை 5-8 மணி வரை.

Comments