நாம் நினைப்பதையே தெய்வமும் நினைக்குமா?

ரமோ சாபமோ... முனிவர்களது வார்த்தைகள் நிச்சயம் பலிக்கும். காரணம்... அவர்கள், இறைவனை இதயத்தில் குடியிருத்தி வழிபடும் தவசீலர்கள். இறைவனின் எண்ணமே முனிவர்களின் வாக்காக வெளிப்படும் என்றும் சொல்லலாம். பிறருக்கு இழைக்கப்படும் துன்பம், அவர்களின் மனதில் ஆறாக் காயத்தை உண்டு பண்ணும். இதனால் ஏற்படும் வேதனையின் வெளிப்பாடு, சாபமாக உருமாறி துன்பத்துக்குக் காரணமானவரை பொசுக்கி விடும்.
ஆனால், இதுபற்றி எல்லாம் சிந்திக்க தயாராக இல்லை ஜனமேஜயன். உத்தங்க முனிவரின் மூலம், தன் தந்தை பரிட்சித்து பாம்பு கடித்து மரணம் அடைந்த தகவலைக் கேட்டது முதல், அவன் உள்ளத்தில் பழி உணர்ச்சியே மேலோங்கி இருந்தது.
முனிவர் ஒருவரின் கழுத்தில் இறந்து போன பாம்பை அணிவித்து அவமதித்த பரிட்சித்துவை, 'தட்சகன் தீண்டி மரணம் சம்பவிக்கும்' என்று அந்த முனிவரின் மைந்தன் சபித்துவிட்டான். இந்த சாபத்தை நிறைவேற்றும் கடமை தட்சகனுக்கு உண்டுதான்... ஆனாலும், அவனது வரம்பு மீறிய செயல்பாடுகளை ஜனமேஜயனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை!
பரிட்சித்துவுக்கு ஏற்பட்ட சாபம் பற்றி அறிந்த கச்யப முனிவர், அவனைக் காப்பாற்ற விரும்பி விஷமுறிவு மருந்துடன் வந்து கொண்டிருந்தார். அதே நேரம், பரிட்சித்தின் உயிரைப் பறிக்க தட்சகனும் வந்து கொண்டிருந்தான். ஓரிடத்தில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். உரையாடலின் போது முனிவரின் எண்ணத்தைத் தெரிந்து கொண்டான். 'இந்த முனிவரால் பரிட்சித்து உயிர் பிழைத்து விடுவானே; தனது கடமை பூரணமாக நிறைவேறாதே' என்று சிந்தித்த தட்சகன், கச்யப முனிவருக்கு வெகுமதி அளித்து அவரைத் திரும்பிப் போகச் செய்தான். பிறகு, எந்த இடையூறும் இன்றி பரிட்சித்தின் மரணத்தை நிறைவேற்றி விட்டான்.
இதுகுறித்தும் ஜனமேஜயனிடம் விவரித்தார் உத்தங்க முனிவர். மட்டுமின்றி, 'பிரபத்வரா' என்பவளின் கதையையும் அவனிடம் விளக்கினார்:
''விச்வாவசு என்ற கந்தர்வராஜனின் தொடர்பால், மேனகை ஒரு பெண் குழந்தையைப் பெற்றாள். அவதூறுக்கு பயந்து அந்தக் குழந்தையை ஸ்தூலகேச முனிவரின் ஆஸ்ரமத்தில் போட்டுவிட்டாள். அநாதையாகக் கிடந்த அந்தக் குழந்தைக்கு, 'பிரபத்வரா' என்று பெயரிட்டு வளர்த்தார் முனிவர்.
பிரபத்வரா பருவம் எய்தினாள். ஒருமுறை ருரூ என்ற கந்தர்வனைச் சந்தித்தாள். இருவரும் காதல் வயப்பட்டனர். அவளை மணம் செய்துகொள்வதாக வாக்களித்தான் ருரூ. ஆனால், எதிர்பாராதவிதமாக ஒருநாள் பிரபத்வராவை பாம்பு தீண்டி விட்டது. முனிவர் குழாம் துக்கத்தில் ஆழ்ந்தது. தகவல் அறிந்து ருரூவும் வந்தான். மிகவும் கலங்கினான். இந்த நிலையில், ஆகாய மார்க்கமாகச் சென்ற தேவதூதன் ஒருவன், முனிவர்களின் ஓலத்தைக் கேட்டு கீழிறங்கினான். விஷயத்தைக் கேட்டறிந்தவன், பிரபத்வராவை உயிர்ப்பிக்கும் உபாயத்தைச் சொன்னான். 'ருரூவின் ஆயுளில் பகுதியை பிரபத்வராவுக்கு அளித்தால் அவள் உயிர் பெறுவாள்' என்றான். அதன்படியே, தனது ஆயுளில் பாதியை பிரபத்வராவுக்குத் தந்து அவளை
உயிர்ப்பித்தான் ருரூ!
ஆக, உன் தந்தையைக் காப்பாற்ற இரண்டு வழிகள் இருந்தும், அவற்றை உனக்கு எட்டவிடாமல் செய்து பரிட்சித்தின் உயிரைப் பறித்து விட்டான் தட்சகன்'' என்றார் உத்தங்கர்.
தட்சகனின் செயல் அதர்மமானது என்று மனம் புழுங்கிய ஜனமேஜயன், நாக இனத்தையே அழிக்கத் துணிந்தான். சர்ப்ப யாகத்தை ஆரம்பித்தான்!
நாகங்களுக்கும் ஏற்கெனவே, 'தாயின் சொல்லை மதிக்காததால், வேள்வித் தீயில் விழுந்து மடிவீர்கள்' என்ற கத்ருவின் சாபம் இருந்தது. இதை தனக்கு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டான் ஜனமேஜயன்.
வேள்வி குறித்து விவரம் அறிந்த நாகங்கள் நடுங்கின. பாற்கடலைக் கடைய உதவிய வாசுகியும் இதற்கு விதிவிலக்கில்லை. உயிர் பிழைக்க பிரம்மனிடம் வழி கேட்டான். அவனைத் தேற்றிய பிரம்மதேவன், ''ஜரத்காரு ரிஷியின் புதல்வன் நாக குலத்தைக் காப்பாற்றுவான். ஆனாலும் துஷ்ட நாகங்கள் அழிவதைத் தடுக்க இயலாது'' என்று அருளினார்.
வாசுகிக்கு சற்றே ஆறுதலாக இருந்தது. ஜரத்காரு முனிவருக்கு தன் சகோதரியைத்தான் மணம் செய்து வைத்திருந்தான். இந்தத் தம்பதிக்கு ஒரு மைந்தன் உண்டு. அவர் பெயர்- ஆஸ்தீகன். இவனால் நாக குலம் காப்பாற்றப்படும் என்ற நிம்மதி வாசுகிக்கு!
அதேநேரம்... வேள்வி மந்திரத்தால் ஈர்க்கப்பட்ட நாகங்கள், கூட்டம் கூட்டமாக வேள்வித் தீயில் விழுந்து சாம்பலாயின! அழிவு நெருங்குவதை உணர்ந்த தட்சகன், இந்திரனை சரண் அடைந்தான். வேள்வியில் கலந்து கொள்ள வந்த இந்திரன், தன்னுடன் தட்சகனையும் மறைத்து வைத்து பாதுகாப்பு அளித்தான். ஆனாலும் ஒரு நிலையில்... வேள்வியின் உக்கிரத்தைக் கண்ட இந்திரன், இனியும் தட்சகனைக் காப்பாற்ற இயலாது என்பதை உணர்ந்தான். தட்சகனை யாகசாலையில் விட்டுவிட்டு வெளியேறினான்.
இந்த நிலையில், வாசுகியின் வேண்டுகோளை ஏற்று வேள்விச் சாலைக்கு வந்து சேர்ந்தார் ஆஸ்தீகன். வேள்வியில் பங்குபெற்றிருந்த முனிவர்கள் அவரை வரவேற்று உபசரித்தனர். வேள்வியையும் ஜனமேஜயனையும் புகழ்ந்தார் ஆஸ்தீகன். இதனால் உள்ளம் மகிழ்ந்த ஜனமேஜயன், ''தங்கள் விருப்பத்தை நிறைவேற்று கிறேன்'' என்று வாக்கு தந்தான்.
சூழலை உணர்ந்த ஆஸ்தீக ரிஷி, வேள்வியை நிறுத்தும்படி வேண்டினார். வேள்வி நின்றது. தட்சகன் தப்பினான்! வேள்வியில் உயிர் பிழைத்த மற்ற நாகங்களும் ஆஸ்தீகனை அடிபணிந்து வணங்கின. அது மட்டுமா? 'இந்த நிகழ்வை யார் சொல்கிறார்களோ அல்லது கேட்கிறார்களோ... அவர்களுக்கு நாக பயம் இருக்காது' என்று வரமும் தந்தன.
ஓர் இனத்தைக் காப்பாற்றிய பெருமை ஆஸ்தீகனை அடைந்தது; ஒருவனது தவறுக்காக அவன் இனத்தையே அழிக்க முற்பட்ட பாவம் ஜனமேஜயனை பற்றிக் கொண்டது. குற்ற உணர்வு அவன் மனதை வாட்டியது. நல்லவர்கள் அவனை வெறுத்தனர். அரசைத் துறந்து வனம் சென்றவன், இந்த்ரோத முனிவரை சந்தித்தான். இவனைப் பார்க்கவே விரும்பாமல் விலகிச் சென்றார் அவர். ஆனாலும் மீண்டும் அவரை அணுகி, தனது அறியாமையால் விளைந்த பாவத்துக்கு பரிகாரம் சொல்லும்படி வேண்டினான் ஜனமேஜயன்.
''வேதம் ஓதுபவர்களுக்கு பணிவிடை செய். அச்வமேத வேள்வியை நடைமுறைப்படுத்து. பாவம் விலகும்'' என்று அருளினார் முனிவர். அதன்படியே செய்து, ஜனமேஜயன் துயரத்தில் இருந்து மீண்டான் என்கிறது புராணம்.
இறைவனின் எண்ணமே முனிவர்களது வாக்காக வெளிப்படும் என்பார்கள் ஆன்றோர்கள். துஷ்டர்களையும் தூய்மைப்படுத்தும் முனிவர் களது இயல்புக்கு, அவர்களின் உள்ளத்தில் குடியிருக்கும் இறைவனே காரணம். துஷ்டரை அடக்கவும், நல்லோரைக் காக்கவும் சாப- அனுக்கிரகம் செய்ய முனிவர்களைக் கருவியாக பயன்படுத்துகிறார் இறைவன் என்றும் கூறலாம்! அவனின்றி அணுவும் அசையாது அல்லவா?
அனாதையாக விடப்பட்ட குழந்தையையும் அழிவை சந்திந்த நாக குலத்தையும் காப்பாற்றியது முனிவர்களின் நல்லுள்ளம். இந்த முனிவர்களைப் போல நம்மிலும் கருணை ஊற்று பெருக வேண்டும்; அகங்காரம் அழிய வேண்டும். கருணையே அமைதிக்கு அடித்தளம்; கடவுளை அடைவதற்கான முதல் நெறி!
இயல்பாக நம் உள்ளத்தில் ஊற்றெடுக்கும் கருணையே, அறத்தின் வழியில் வாழ்க்கை நடத்த உதவும். அறத்துக்குப் புறம்பான விஷயங்களை, இறைவன் அனுமதிக்க மாட்டார்!
பக்த பிரகலாதனை ஒழிக்க நினைத்த இரண்யகசிபு, சீதாதேவியை அடையத் துடித்த ராவணன், பாண்டவர்களை அழிக்க நினைத்த துரியோதனன் ஆகியோர், அறத்துக்குப் புறம்பாக செயல்பட்டதால் அழிவையே சந்தித்தனர்.
'நினைத்ததெல்லாம் நடக்கும்' என்ற இறுமாப்பு கூடாது. பரதன் அரசாள வேண்டும் என்று விரும்பி செயல்பட்டாள் கைகேயி. மற்றவர்களைப் போலவே அகத்தியரையும் கொன்று போடலாம் என்று திட்டம் இட்டனர் வாதாபியும் வில்வலனும். இவர்களின் எண்ணம் நிறைவேறியதா? இல்லையே! நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்!
'இறைவனின் உருவமற்ற வடிவம்... அறம். அதைக் காயப்படுத்துவது தகாது' என்கிறது தர்மசாஸ்திரம். அறம் போற்றிய ஸ்ரீராமன் எல்லோர் மனதிலும் நிலை பெற்றார். எந்த நிலையிலும் சத்தியம் தவறாத அரிச்சந்திரனும் அழியாப் புகழ் பெற்றான்!
நமது பல்வேறு இன்னல்களுக்கும், அன்பும் பண்பும் அறமும் நம்மை விட்டு விலகியதே காரணம். இந்த உயரிய பண்புகளை வளர்க்கும் பொக்கிஷங்களே நமது புராணங்களும் இதிகாசங்களும். இவற்றை இன்றைய இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்!

Comments