நாகதோஷம் தீர்க்கும் ஸ்ரீசர்ப்ப நடராஜர்!

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்... என்று இறைவனின் ஐந்து தொழில்களையும் உலகுக்கு உணர்த்தும் அற்புத சிவரூபம் ஸ்ரீநடராஜ மூர்த்தம். இதில், பெருமானின் திருவடியில்... அஞ்ஞான ரூபமாக முயலகன்தானே வீழ்ந்து கிடப்பான்? ஆனால் ஒரு தலத்தில், நடனநாயகனின் திருவடியில் முயலகனுக்கு பதில் நாகம்! அது எந்தத் திருத்தலம்?!

திருச்சி- குணசீலம் சாலையில் நொச்சியத்தை அடுத்து உள்ளது திருவாசி. சிவனார், மண்ணை பொன்னாக்கி சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு அருளிய இந்தத் தலத்தின் அருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் ஆலயத்தில்தான்... திருவடியில் சர்ப்பத்துடன், தனிச் சந்நிதியில் அருள்கிறார் ஸ்ரீநடராஜர்.
கொல்லிமலை வளவன் என்ற அரசனின் மகளுக்கு தீராத வயிற்றுவலி. என்ன மருத்துவம் செய்தும் குணமாகவில்லை. பெரிதும் வருந்திய மன்னன், மகளை திருவாசிக்கு அழைத்து வந்து, 'நீயே பார்த்துக்கொள்' என்று இறைவனிடமே ஒப்படைத்துச் சென்றான். தென்னாடுடைய இறைவன், அந்தப் பெண்ணின் நோயை பாம்பாக மாற்றி தனது திருவடியில் போட்டு மிதித்ததாக தல புராணம் சொல்கிறது.
இன்றும், இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீசர்ப்ப நடராஜரை வழிபட... சர்ப்ப தோஷம், தீராத வயிற்றுவலி, மாதவிடாய் பிரச்னைகள், காய்ச்சல், குழந்தைகள் இரவில் வாய் உளறுவது ஆகிய பாதிப்புகளுக்கு நிவாரணம் கிடைக்கும் என்கிறார்கள்.
நோய் தீர பிரார்த்திப்பவர்கள், வாரந்தோறும் செவ்வாய் வெள்ளி என்று மட்டும் இல்லாமல், எல்லா நாட்களிலும் இங்கே வந்து வணங்கலாம். 9 அல்லது 11 வாரம் தொடர்ந்து வந்து வழிபட்டு பிரார்த்தனை நிறைவேறியதும் ஸ்வாமிக்கு அர்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்கின்றனர். மாவிளக்கு ஏற்றி வேண்டிக் கொள்ளும் பக்தர்களும் உண்டு.
திருவாதிரைத் திருநாள் இங்கே சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. அன்று, வீட்டில் களி படைத்து ஸ்ரீநடராஜ மூர்த்தியை வழிபடுவதுடன், திருவாசி இறைவனையும் தரிசித்து வழிபட்டால், நல்லதே நடக்கும்.
ஆலயத் தொடர்புக்கு: மோகன் குருக்கள் 0431-2908109 / 98656 64870

Comments