தேவி தரிசனம்... பாப விமோசனம்

குமரி மாவட்டத்தின் கடைக்கோடியில், களியக்காவிளையில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது மலையடி எனும் கிராமம். நாகர்கோவிலில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவு. மலையடிவாரத்தில் அமைந்திருப்பதால் ஊரின் பெயரும் மலையடி என்றே வழங்கப்படுகிறதாம்.
பாண்டவர்களில் ஒருவனான பீமன் இங்கிருக்கும் மலையை சங்கிலியால் கட்டியிழுக்க முயன்றானாம். இன்றும் இந்த மலையின் பாறை ஒன்றில், ராட்சத சங்கிலி பதிந்த தடம் உள்ளதைக் காணலாம். இந்த ஊர், சில சரித்திரச் சம்பவங்களுக்கும் சாட்சியாக திகழ்கிறது.
திருவிதாங்கூர் மகாராஜா மார்த்தாண்ட வர்மாவை எதிரிகள் கொல்லத் திட்டமிட்டனராம். அவர்களிடம் இருந்து தப்பித்து, மன்னரின் உறவினர்கள் இந்த மலைக் குகைகளில்தான் ஒளிந்து இருந்தனராம்.
புராணப் பெருமையும் சரித்திரச் சான்றுகளும் நிறைந்த இந்த மலைக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது ஸ்ரீபகவதி அம்மன் ஆலயம்!

ஒருகாலத்தில், இந்தப் பகுதி மக்கள் பனையேறும் தொழிலைச் செய்து வந்தனர். இங்கே வசிக்கும் பெண்கள், திருமணம் முதலான விசேஷங்களுக்கு செல்லும்போது அணிவதற்குகூட நல்ல புடவையோ, நகை களோ இல்லையாம். இந்த வேளையில் பூ, வாழைப் பழம் மற்றும் வெற்றிலை எடுத்துச் சென்று, மலைமீது கோயில் கொண்டிருக்கும் அம்மனை தரிசிப்பார்கள்.
அவளிடம், ''அம்மா! கல்யாண விசேஷத்துக்குப் போகணும்; பட்டுச் சேலையும் வளையலும் நகையும் கொடுத்தா, கல்யாணம் முடிஞ்சதும் திருப்பிக் கொடுத்துடறேன்'' என்று வேண்டிக் கொண்டு, திரும்பிப் பார்க்காமல் சென்று விடுவார்களாம். மறுநாள், ஆலயத்துக்குச் சென்றால், அவர்கள் கேட்ட அனைத்தும் இருக்குமாம். அம்மன் தந்த புடவையையும் நகைகளையும் அணிந்து கொண்டு, விசேஷத்துக்குச் செல்வார்கள்; விசேஷம் முடிந்ததும் அம்மன் தந்த பொருட்களை அவளிடமே பத்திரமாகச் சேர்த்துவிட்டு, வணங்கி வழிபட்டுச் செல்வார்களாம்.
இந்த அம்மன், தனது பக்தர்களுக்கு வைத்த இரண்டு நிபந்தனைகள்... கோரிக்கையை சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் செல்ல வேண்டும்; தான் கொடுத்த பொருட்களை பத்திரமாகத் திரும்பத் தர வேண்டும் என்பதுதான்!
ஆனால் ஒருமுறை... பக்தர் ஒருவருக்கு விபரீத ஆசை எழுந்தது. பக்தர்கள் வேண்டிக்கொண்டபடி, அவர்கள் கேட்ட பொருட்களை அம்மன் எப்படி கோயிலில் கொண்டு வந்து வைக்கிறாள் என்பதை அறிய ஆசைப்பட்டார். ஒருநாள் பனை மரத்தின் உச்சியில் ஏறி அமர்ந்து கொண்டு, அம்மன் சந்நிதியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது, பக்தர் ஒருவரது கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, தட்டு ஒன்றில் புடவை மற்றும் நகைகளை எடுத்து வந்து, அம்மனே கோயிலில் வைப்பதைக் கண்டார்; சிலிர்த்துப் போனார். உற்சாகத்தில் 'நான் அம்மனைப் பாத்துட்டேன்' என்று குரல் கொடுத்தார்.
அவ்வளவுதான்... ஆவேசமான அம்மன், உக்கிரத்துடன் அவனைப் பார்த்தாள். அவன் உட்கார்ந்திருந்த பனைமரம் அப்படியே பிளந்து விழ, அவன் இறந்து போனான்! அதுமட்டுமின்றி, தான் சொன்னதை இந்த ஊர்மக்கள் கேட்கவில்லையே... எனும் ஆத்திரத்துடன் அந்த இடத்தில் இருந்து வெளியேறினாள் அம்மன்!
காலங்கள் ஓடின! அம்மனின் சாந்நித்தியத்தை உணர்ந்திருந்த மக்கள், அம்மன் மீண்டும் மலையில் குடிகொள்ள வேண்டும் என்று 40 நாள் கடும் விரதம் இருந்தனர். அதன்பிறகு அம்மனின் அருளால், மலையில் கோயில் அமைத்து அன்னை பகவதியை குடியமர்த்தினராம்.
மலை உச்சியில் இருக்கும் அம்மன் ஆலயத்தின் அருகிலேயே அழகிய குளமும் உள்ளது. தண்ணீர் வற்றாத குளம் இது என்கிறார்கள். அடிவாரத்தில் இருந்து சுமார் 200 படிகள் ஏறிச் சென்றால், ஸ்ரீபகவதி அம்மனை தரிசிக்கலாம். முற்காலத்தில் மலையின் மீது ஏறிச் செல்ல பாதையோ படிக்கட்டுகளோ கிடையாதாம். பிற்காலத்தில்... அம்மனின் அருளால் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறிய சந்தோஷத்தில், ஆலயத்துக்குச் செல்ல படிக்கட்டுகள் அமைத்தனராம் பக்தர்கள்.
இயற்கை எழிலோடு பக்தி மணமும் கமழத் திகழும் மலையடி அம்மன் கோயிலுக்குச் சென்று தரிசித்து வந்தால், மனம் முழுதும் நிம்மதி நிறைந்திருப்பதை உணரலாம்.

Comments