ஆன்மீக கேள்வி -பதில்கள்

சிதம்பரம் ஸ்ரீநடராஜருக்கு ஏழு கால பூஜைகளாமே? அவை என்னென்ன? பூஜை காலத்தை வரையறுப்பது எப்படி?

கோயில்களில் காலை, உச்சி, அந்தி, அர்த்தஜாமம் என்று நான்கு கால பூஜைகள் நடைபெறும். காலை பூஜையுடன் நிறுத்திக் கொள்ளும் (ஒரு வேளை மட்டும்) கோயில்களும் உண்டு!
ஒரு நாளைக்கு... பகலில் நான்கு; இரவில் நான்கு என எட்டு யாமங்கள் (ஒரு யாமம்= மூன்று மணி நேரம்). பகல் நான்கு யாமங்களை வைத்து உதயாஸ்தமன பூஜை வழிபாடுகள் செய்வர். சிவராத்திரி போன்ற சிறப்பு நாளில், இரவு நான்கு யாமங்களில் நான்கு கால பூஜைகள் நடைபெறும்.
ரிஷிபஞ்சமி, பிரதோஷம் முதலான விரத நாட்களில் நான்கு கால பூஜைகள் நிகழும்.
ஆகமம் மற்றும் சம்பிரதாயத்தை இணைத்து கோயில் வழிபாட்டுக் காலங்கள் நிர்ணயிக்கப் படுகின்றன. இவற்றில் பூஜா கால எண்ணிக்கையில் மாறுபாடுகள் கொண்ட கோயில்களும் சில உண்டு. அவற்றில் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலும் ஒன்று. சில கோயில்கள் பொது விதிக்கு மாறுபட்டு, தனிச் சம்பிரதாயத்துடன் திகழ்ந்தாலும் அவற்றையும் ஏற்கலாம்.
சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரையிலான காலத்தை... ப்ராத: காலம் (காலை), ஸங்கவம் (முற்பகல்), மத்தியானம் (மதியம்), அபரான்னம் (பிற்பகல்), சாயம் (சாயங்காலம்) என்று ஐந்தாகப் பிரித்து வைத்தும் வழிபாடுகள் செய்வர்.
மார்கழி மாதங்களில் அதிகாலையில் விசேஷ பூஜைகள் நிகழும். அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி உள்ளிட்ட நாட்களில் இரவு வழிபாடுகளுக்கு சிறப்பு உண்டு. ராம நவமி நாளில் உச்சி கால வழிபாடு நிகழும். பண்டிகையின் வேளை, ஆகமத்தின் பரிந்துரை- இவற்றையட்டியே பூஜைக்கான காலம் வரையறுக்கப்படுகின்றன.


எந்தெந்த நாட்களில் முகச் சவரம் செய்யக் கூடாது?

முகச் சவரம் என்பது வெளிநாட்டவரிடம் இருந்து பெற்றுக் கொண்டது. தர்மசாஸ்திரத்தில் இதுகுறித்து இடம்பெற வாய்ப்பு இல்லை. சிகை அலங்காரத்துடன் இணைந்த முகச் சவரத்தை ஏற்றுக் கொள்ளும் (அத ச்மரூணி அதகேசான்).
வெள்ளைக்காரன் நம் நாட்டை ஆட்சி செய்த காலத்தில் தினமும் முகச் சவரம் உண்டு. அப்போதெல்லாம் சவரத்துக்குக் கால-நேரம் பார்க்கவில்லை. திருமணத்தின்போது, காலையில் எழுந்ததும் முகச் சவரம் செய்து கொள்வான் மணமகன்!
காபி அருந்துவது, சந்தியாவந்தனம் செய்வதுபோல், முகச் சவரம் என்பதை நித்ய கர்மாவாகவே ஏற்றுக் கொண்டு விட்டோம். இதில், சாஸ்திரத்தை அணுகுவது அழகல்ல!

மடம் போன்ற இடங்களில் நடைபெறும் ஸ்ரீசத்ய நாராயண பூஜையின்போது, அங்கு தரப்படும் கலச தீர்த்தத்தைக் குடும்பத்தாருக்கு வழங்கிய பிறகு, நமது வீட்டிலும் தெளிக்கலாமா?

தாராளமாகத் தெளிக்கலாம். ஆனால், ஸ்ரீசத்ய நாராயண பூஜையை வீட்டில் செய்வதே சிறப்பு. பூஜை நடைபெற்ற வீட்டில் தீர்த்தம் தெளிப்பதே பொருந்தும்.
பூஜை ஓர் இடம்; தெளிப்பது ஓர் இடம் என்பது சரியல்ல. வீட்டிலேயே செயல்படுத்தும் தகுதியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். சந்தர்ப்ப சூழ்நிலையால் பூஜையை மடத்தில் செய்வதைவிட, சந்தர்ப்பம் வாய்க்கும் போது வீட்டிலேயே செய்யலாமே? பூஜையை வீட்டில் செய்வதால், வளம் பெருகும்; ஐஸ்வர்யம் செழிக்கும்!


ஒரு கோயிலில், கருவறையில் இருக்கும் மூலவர் (அம்மன்) விக்கிரகம் சிதிலம் அடைந்துள்ளது. அதற்கு பதிலாக பஞ்ச லோக விக்கிரகத்தை வைத்து பூஜிக்கின்றனர். இது சரியா?

சிலை பின்னம் அடைந்திருந்தால்... அந்தக் குறையை அகற்றி கும்பாபிஷேகம் செய்ய வேண்டும்.
பஞ்சலோக விக்கிரகத்திலும் சாந்நித்தியம் உண்டு. எனவே, கருவறையில் வைத்து பூஜிப்பதில் தவறில்லை. ஆனால், பின்னம் அடைந்த மூலவர் விக்கிரகத்தை அப்படியே விட்டு விட்டு, பஞ்சலோக விக்கிரகத்துக்கு பூஜையைத் தொடர்வது சரியல்ல.
பாலாலயம் வைத்து, சிதைந்த சிலையை சரி செய்வதுடன், கும்பாபிஷேகம் செய்து சாந்நித்தியத்தை மீண்டும் இருத்த வேண்டும். அதுவரை, பஞ்சலோக விக்கிரகத்துக்கு பூஜை செய்யலாம். சிலையை மாற்றுவதற்காக வருஷக் கணக்கில் காலம் கடத்தக் கூடாது. சிவாச்சாரியரை அணுகி, அவரது பரிந்துரைப்படி செயல்பட வேண்டும்; நன்மை உண்டு.



திருவிளையாடல்கள் நிகழ்த்துவதை கடவுள் குறைத்துக் கொண்டு விட்டாரே, ஏன்?

சத்யம், தர்மம், நியாயம், பண்பு- இவற்றை கடைப்பிடித்துப் பழக்கப்பட்ட அன்றைய உலகில், அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தென்படும் சில தவறுகளை சரி செய்வதற்கு, இதுவரை கடவுள் நிகழ்த்திய திருவிளையாடல்கள் போதுமானவை.
ஆனால், அறத்தை விட்டு விலகி அவல நிலையை சந்திக்கும் இன்றைய சமுதாயத்துக்கு அவரது திருவிளையாடல் போதாது. அக்கிரமம் உச்சகட்டத்தை அடையும் போது, கல்கியாகத் தோன்றி சீர்திருத்தம் செய்வார்; பொறுத்திருங்கள்.
வீட்டுக்கு வர்ணம் தீட்டுவது, தண்ணீர் குழாயை சீர் செய்வது, கதவுகளை சரி செய்வது போன்ற வேலைகளை உரிய வேலையாட்களை அணுகி செய்து முடிப்போம். ஆனால் ஒட்டுமொத்த வீடே பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தால்? அந்த வீட்டை இடித்து விட்டு புதிதாக வீடு கட்ட இன்ஜினீயரை அணுகுவோம் அல்லவா! அதுபோல், உலகம் ஒட்டுமொத்தமாக சீரழியும் வேளையில், கல்கி வருவார்; அருள் புரிவார்.


எப்போதும் யோகத்தில் இருப்பவர் சிவபெருமான். அவர் , மன்மதனையே எரித்தவர் என்கிறது புராணம். அப்படியிருக்க, சிற்சில புராணச் சம்பவங்களில் சாதாரண மனிதரைப் போன்ற அவரது செயல்பாடுகளை ஏற்க முடியவில்லையே? மனதைக் கட்டுப்படுத்த முடியாதவரா ஈசன்?

கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பவர்கள், தனது சொந்த இயல்பை வெளிப்படுத்த மாட்டார்கள். நாடகத்தில் இருந்து விடுபட்டவன், சொந்த வாழ்வில் நடிகனாக மாற மாட்டான்.
சிவபெருமான் நடிகனாக இருக்கும்போது, பிட்டுக்கு மண் சுமந்தார். ஸ்வயமாக (இயல்பாக) இருக்கும்போது ஆலகால விஷம் உண்டு மக்களைக் காப்பாற்றினார். நடிகனாக இருக்கும்போது மாடு மேய்த்தார் கண்ணபிரான்; இயல்பாக இருக்கும்போது, கீதையை அருளினார். ஸ்ரீமந் நாராயணன், ராமனாகத் தோன்றியபோது சீதையின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்தார். யாதவ குலத்தில் உதித்த கண்ணன், யசோதைக்குக் கட்டுப்பட்டார்; சிசுபாலனின் இழிசொற்களையும் ஏற்றார். இப்படி, கடவுளின் தன்மை அவரது விருப்பப்படி செயல்படும்.
மனிதனிடம் இல்லாத ஒன்று தன்னிடம் இருப்பதால், இறைவனால் எப்படியும் நடந்து கொள்ள முடிகிறது. இது, அவருக்கு இழுக்கு அல்ல; சிறப்பு!


பெண்கள் சந்தனம் அரைப்பதும் பூஜைக்கு மணியடிப்பதும் சரியா?

கடவுளுக்குரிய பணிவிடைகளில் பெண்களுக்கு முன்னுரிமை உண்டு. இந்த பணிவிடைகள், அவர்களுக்கு ஆன்ம லாபத்தை அளிக்கும். கோபதாபம் இல்லாமல் பொறுமையாக பணிவிடை செய்யும் பாங்கு பெண்களிடம் உண்டு. சேவை செய்வதற்கும், பணிவிடை செய்வதற்கும் பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பவர்கள் இப்போதும் இருக்கின்றனர். நோய்வாய்ப்பட்டவர்களை பராமரிப்பதிலும், சிறுவர்களை பாதுகாப்பதிலும் பெண்களின் பங்கு அதிகம் என்பதை உணரலாம். எனவே, அவர்களும் பங்கு பெறலாம். சந்தனம் அரைப்பதும், மணியடிப்பதும் பூஜை செய்பவரின் வேலை. இதைச் செய்ய இயலாதவனுக்கு, மனமுவந்து உதவி செய்ய முற்படும் பெண்களை வரவேற்க வேண்டும். அதுவே பண்பு.


மகா சிவராத்திரிக்கு மறு நாள் எனது வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பை அடித்துக் கொன்று விட்டேன். (பரிகாரமாக இறந்து போன பாம்புக்கு கற்பூரம் ஏற்றி பால் ஊற்றி வணங்கவும் செய்தேன்). இதனால் தோஷம் ஏதும் விளையுமா? வேறு ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

தங்களையோ தங்கள் குடும்பத்தையோ எந்த தோஷமும் பாதிக்காது. கற்பூரம் ஏற்றி, பால் ஊற்றியதே பரிகாரம்தான்! நிம்மதியாக இருங்கள்.
ஒரு விஷயம்... எந்த உயிரினங் களையும் நாம் துன்புறுத்தக் கூடாது. இறைவன், பாம்பிடம் விஷத்தை வைத்தது அதன் தற்காப்புக்காக! எந்தப் பாம்பும் மற்றவர்களைத் துன்புறுத்தாது. பயத்தாலும் தற்காப்புக்காகவுமே அது மற்றவர்களை கடிக்கிறது.
அந்தக் காலத்தில், பாம்பைப் பிடித்து காட்டில் விட்டு விடுவர். இதை, தெய்வமாக வழிபடுவோரும் உண்டு. 'பாம்பு கடித்துவிடுமோ' என்று பயத்தில் அதை அழிக்கிறோம் நாம். இதுவும் தற்காப்புக்காகவே நிகழ்ந்தது. எனவே பாவம் ஒட்டாது.


முருகப் பெருமான், ஒரு பழத்துக்காகக் கோபித்துக் கொண்டு குன்றின் மேல் அமர்ந்ததாகச் சொல்கிறது புராணம். இதன் உட்பொருள் என்ன?

உருவமற்ற இறைவனின் உருவம்...இந்த உலகம். ஆறு, கடல், மலை என அனைத்தும் இறைவனின் உடல் உறுப்புகள். மலையில் ஈசனும் கடலில் ஆதி நாராயணனும் நித்யவாசம் செய்கின்றனர். 'காணப்படும் பொருள்களில் எனது சைதன்யம் மிளிர்கிறது' என்கிறார் பகவான் கிருஷ்ணர். இதை, தனது விஸ்வரூப தரிசனத்தால் புரிய வைத்தும் இருக்கிறார்.
புலன் அடக்கத்துடன் திகழும் ஞானக் குழந்தையை அறிமுகம் செய்ய, பழக் கதை பயன்படுத்தப்பட்டது.
முருகப் பெருமான் பிரணவத்துக்குப் பொருள் சொன்னவர்; அதே நேரம், இரண்டு மனைவியருடன் இணைந்து தாம்பத்தியத்தின் சிறப்பை எடுத்துரைத்தவர். அறுபடை வீடுகளில் அமர்ந்து பக்தர்களது ஐயப்பாடுகளை அகற்றுபவர்; எதிரிகளை அடக்கி ஆட்கொள்பவர்; அழகுக்கு உருவ விளக்கமாகத் திகழ்பவர்; என்றும் பிரம்மச்சாரியாக விளங்குபவர்!
கயிலாயத்தில் இருந்து வெளியேறவும், முருகப் பெருமானின் அத்தனை பெருமைகளையும் வெளிக் கொணரவும் பழத்தை பயன்படுத்தினார் ஈசன்; பக்தர்களை ஆட்கொள்ள தனது விளையாட்டைப் பயன்படுத்தினார் முருகப் பெருமான்.

Comments

  1. ஒரு காகம் பறக்க முடியாமல் எங்கள் வீட்டிலேயே தங்கி விட்டது. இதனால் துன்பம் ஏதும் நேருமா?

    ReplyDelete

Post a Comment