தங்க ஆபரணங்களை விற்ற வாரியார்!

ப்போது வடலூரில் உள்ள வள்ளலாரின் சத்திய ஞான சபையின் திருப்பணியை, அவர் மீது அதீத பக்தி கொண்ட வாரியார் சுவாமிகள் மேற்கொண்டிருந்தார்.
ஒரு முறை, கோயில் வேலையில் ஈடுபட்டிருந்த ஊழியர்களுக்கு, அந்த மாதச் சம்பளத்தை வழங்குவதற்குப் பணமின்றித் தவித்தார் வாரியார். 'எப்படியும் 3,500 ரூபாய் தேவை. என்ன செய்வது?' என்று யோசித்தவர், தான் அணிந்திருந்த தங்க ஆபரணங்கள் சிலவற்றை அடகு வைப்பது என முடிவு செய்தார். அதன்படி அடகு வைத்து, அனைவருக்கும் சம்பளத்தை வழங்கினார். 'வயலூர் முருகன் இப்படி சோதிக்கிறானே...' என்று கலங்கிய வாரியார், திருப்பணியில் மூழ்கினார்.
ஒரு நாள் வாரியாரின் இல்லத்துக்கு தன் துணைவியாரை அழைத்துக் கொண்டு ஒருவர் வந்தார். இருவரும் வாரியாரை வணங்கினர்.
''என்ன விஷயம்?'' என்று கேட்டார் வாரியார்.

''சிதம்பரம் அருகில் உள்ள தெம்மூரைச் சேர்ந்தவன் நான். என் பெயர் ராஜமாணிக்கம். இவள் என் மனைவி...'' என்றவர், குறிப்பிட்ட தேதியைச் சொல்லி, ''தாங்கள், எங்கள் ஊரில் சொற்பொழிவாற்ற வேண்டும். இதற்குப் பிரதி உபகாரமாய் வள்ளலார் மண்டபத் திருப்பணி வேலைக்கு என்னால் முடிந்த அளவு உதவுகிறேன்'' என்று தெரிவித்தார். புன்னகையுடன் இதற்குச் சம்மதித்தார் வாரியார்.
குறிப்பிட்ட அந்த நாளில் வாரியார் சுவாமிகள் தெம்மூருக்குச் சென்றார். அன்று அடைமழை. மழையைக் கண்டதும் கலங்கிப் போனார் சுவாமிகள். 'கூட்டம் அதிகமாக வரும்; நிறைய பேர் காணிக்கை செலுத்துவார்கள். அதை வைத்து, சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்தவர் நமக்கு நிதி வழங்குவார். ஆனால் இப்படி மழை வெளுத்துக் கட்டுகிறதே... இதென்ன சோதனை?' என சிந்தித்தவர் முருகப் பெருமானை மனதுள் நினைத்து வணங்கினார்.
ஒரு வழியாக, மழை நின்றது. ஈரத் தரையில் சாக்கு, ஓலை ஆகியவற்றை விரித்து, அதன் மேல் வாரியார் சுவாமிகள் அமருவதற்கு ஆசனம் அமைத்தனர். சிறிது நேரத்திலேயே அங்கே பெருங் கூட்டம் கூடியது! ஈரம், சேறு என எதைப் பற்றியும் கவலைப்படாமல் தரையில் அமர்ந்தனர். சுவாமிகளது சொற்பொழிவை ஆர்வத்துடன் கேட்டனர். நீண்ட நேரத்துக்குப் பிறகு, தன் உரையை நிறைவு செய்தார்.
தன் துணைவியாருடன் சுவாமிகளுக்கு அருகே வந்தார் ராஜமாணிக்கம். அழகிய பெரிய தட்டு ஒன்றில் பழங்கள், வெற்றிலை-பாக்கு ஆகிய வற்றை எடுத்து வந்தவர், வாரியார் சுவாமிகளிடம் வழங்கி நமஸ்கரித்தார். முருகப் பெருமானை வணங்கியபடியே அதைப் பெற்றுக் கொண்டார். அதில் நூறு ரூபாய் நோட்டுகள் நிறையவே இருந்தன. பணத்தை எண்ணிப் பார்த்த சுவாமிகள், ஆச்சரியப்பட்டுப் போனார்.
தங்க ஆபரணங்களை 3,500 ரூபாய்க்கு அடகு வைத்து, அன்று சம்பளம் கொடுத்தார் அல்லவா! இப்போது வழங்கியுள்ள தொகையும் 3,500 ரூபாய்தான்!
வயலூர் முருகப் பெருமானையும் வள்ளலாரை யும் வணங்கி மகிழ்ந்தார் வாரியார் சுவாமிகள்!

Comments