வசவப்பபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள்

ஒவ்வொரு திருத்தலத்திலும் எழுந்தருளியுள்ள இறைவனின் மூலவர் திருவடிவத்துக்கு, தல புராணம் உண்டு. இறைவனின் அவதாரம், மன்னர்களின் பக்தி ஈடுபாடு, மக்களின் வழிபாட்டு முறைகள்... என்று தல புராணம் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருக்கும்.
தலைமுறை தலைமுறையாகச் சொல்லப்பட்டு வரும் இந்தப் புராணக் கதைகளைக் கேட்டறிந்தால்தான், தலங்களின் சிறப்பையும் மூர்த்தியின் மகிமையையும் உணர முடியும். இப்படி புராணச் சிறப்பு மிக்க திருத்தலம்தான் - வசவப்பபுரம். இங்கு எழுந்தருளி உள்ள மூலவர்- வைத்த மாநிதி வரதராஜ பெருமாள்
எனப்படும் ஸ்ரீவரதராஜ பெருமாள். ஸ்ரீபூமிதேவி- ஸ்ரீநீளாதேவியுடன் இங்கே அருள் பாலித்து வருகிறார் பெருமாள்.
எங்கே இருக்கிறது வசவப்பபுரம்?

திருநெல்வேலி- தூத்துக்குடி சாலையில், திருநெல்வேலி ஜங்ஷனில் இருந்து சுமார் 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஆன்மிகச் சிறப்புகளுடன் வரலாற்று பெருமைகளையும் தன்னகத்தே கொண்ட திருத்தலம் இது!
சீமாற சீவல்லபன் எனும் மன்னன் இந்தப் பகுதியை ஆட்சி செய்த காலத்தில் (கி.பி. 835- 852) 'வீரபோசன் சதுர்வேதி மங்கலம்' என வசவப்பபுரம் அழைக்கப்பட்டது (நான்கு வேதங் களையும் கற்ற அந்தணர்கள் குடி இருக்கும் பகுதியை மன்னர்கள் காலத்தில் சதுர்வேதி மங்கலம் என்றே அழைத்தனர்). மன்னன் சுந்தர பாண்டியனது ஆட்சியில் (கி.பி. 1216) 'செய்து உண்க நாட்டுச் சதுர்வேதி மங்கலம்', 'வல்லப நாட்டு சதுர்வேதி மங்கலம்' என்றெல்லாம் அழைக்கப்பட்டது (வசவப்பபுரத்தை ஒட்டி செய்துங்கநல்லூர், வல்லநாடு ஆகிய ஊர்கள் இன்றும் உள்ளன).
வசவப்பபுரத்தில் அமைந்த ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலயத்தை 'திருமகரக் கோயில்' என முன்பு அழைத் தனராம்! இந்த ஆலயத்தை சீமாற சீவல்லபன் கட்டினான் என்றும், சுந்தர பாண்டிய மன்னன் இந்தக் கோயிலை விரிவுபடுத்தினான் என்றும் கல்வெட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. நாயக்கர்கள் காலத்தில், 'நரசப்பபுரம்' என அழைக்கப்பட்ட இந்தப் பகுதி, பின்னாளில் வசவப்பபுரம் என்று மருவியதாகச் சொல்வர். நாயக்க மன்னர்களது
காலத்தில் சிறப்புற்று விளங்கிய வரதராஜ பெருமாள் ஆலயத்தில், பிரதான விழாக்கள் எல்லாம் கோலாகலமாக நடைபெற்றனவாம்!
இதேபோல், இந்த ஆலயம் குறித்த புராண தகவல்களும் நிறையவே உண்டு. இங்கு, ஸ்ரீபூமிதேவி- ஸ்ரீநீளாதேவி சமேத ஸ்ரீவரதராஜ பெருமாள் குடிகொண்ட கதை வெகு சுவாரஸ்யம்! 'ரத்னகாரா மான்மியம்' எனும் வடமொழி நூலில் இந்தக் கதை அமைந்துள்ளது.
பகவான் பரந்தாமனின் திவ்வியமான திருவடிவத்தை எப்படியேனும் நேருக்கு நேராகத் தரிசித்து விட வேண்டும் எனும் ஆசை அந்த வணிகனுக்கு! தனது விருப்பத்தை பலரிடம் சொல்லி, 'பகவானை எப்படி வழிபட்டால், எனது ஆசை பூர்த்தியாகும்? ஸ்ரீமந் நாராயணனின் திவ்ய சொரூபத்தை தரிசித்து, பரமானந்த நிலையை அடைவதற்கு எனக்கு ஒரு வழி சொல்லுங்கள்' என்று வேண்டினான். இதைக் கேட்ட ஆன்மிக அன்பர்கள் சிலர், தங்களுக்குத் தெரிந்த வழிகளைச் சொன்னார்கள். வேறு சிலரோ... 'பகவானை நேருக்கு நேராகத் தரிசிக்க வேண்டுமாம்... ஆசையைப் பாரு' என்று அவனை விமரிசித்து, கேலி பேசினர். ஆனாலும் மனம் தளரவே இல்லை வணிகன்.
ஒருநாள்... வேத சாஸ்திரங்களில் தேர்ந்த பண்டி தர் ஒருவரிடம், தனது நெடுநாள் ஆசையைத் தெரிவித்தான். அதற்கு அந்த பண்டிதர், "பகவானைத் தரிசிக்கும் பாக்கியம் உனக்கு உண்டெனில், நிச்ச யம் தரிசிப்பாய். இந்தப் பிரபஞ்சத்தில் பகவான் இல்லாத இடம் எதுவுமில்லை. எல்லா இடங்களி லும் எல்லா வடிவங்களிலும் இறைவன் இருக்கிறார். உனது இறை பக்தி எனக்கு வியப்பைத் தருகிறது. அபூர்வ கல் ஒன்றை உனக்குத் தருகிறேன். அதை, பகவானின் திருவடிவாக எண்ணி தினமும் வழி பட்டு வா. உனது ஆசை நிறைவேறும்" என்றார்.
அடுத்த சில நாட்களில், சொன்னது படியே அந்தக் கல்லை வணிகனிடம் கொடுத்தார் பண்டிதர். கூடவே
மந்திரங்கள் சிலவற்றையும் உபதேசித்தார்.
பண்டிதரை வணங்கி பயபக்தியுடன் அந்த கல்லை பெற்றுக் கொண்டவன், அதை வீட்டுக்கு எடுத்து வந்து பூஜையறையில் வைத்து, பகவான் சொரூபமாகவே எண்ணி வழிபட்டு வந்தான். தினமும் அந்தக் கல்லின் முன் பயபக்தியுடன் நின்று,
பண்டிதர் உபதேசித்த மந்திரங்களை உச்சரித்து பூஜித்தான்.
நாட்கள் நகர்ந்தன. ஒரு நாள், அந்த தேசத்தின் படைத் தளபதியான பத்ரபாகு என்பவன் நகர் வலம் வந்தான். அப்போது, கல்லை வழிபடும் வணிகனைப் பற்றி அறிந்து, அவனைச் சந்தித்தான். "சாதாரண கல்லை கடவுளாக வழிபடுகிறாயாமே? சிற்ப சாஸ்திரம் மற்றும் ஆகம விதிப்படி அமைந்த கோயில்களுக்குச் சென்று, அங்கு உள்ள மூர்த்தங்களைத்தான் வணங்கி, உனது பிரார்த்தனையை முன்வைக்க வேண்டும். அதுவே உனக்கு நல்ல பலனைத் தரும்" என்றான் பத்ரபாகு.
ஆனாலும் தளபதியின் வார்த்தைகளை வணிகன் பொருட்படுத்தவில்லை. தனது வழிபாட்டை தொடர்ந்து கடைப்பிடித்து வந்தான்.
சில மாதங்கள் கழித்து, பத்ரபாகு மீண்டும் வணிகனை சந்தித்தான். அப்போதும் அவன் கல்லை
வைத்து வழிபடுவதை அறிந்து எரிச்சலுற்றான். "ஏற்கெனவே ஒரு முறை உன்னிடம் இது குறித்துப் பேசியும், இன்னும் நீ மாறவில்லை. இந்த நாட்டு மக்களை சரியான பாதையில் அழைத்துச் செல்லும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. உன்னை இப்படியே அனுமதித்தால், மற்றவர்களும் உன்னைப்
பின்பற்ற ஆரம்பித்து விடுவார்கள்" என்று கடுமை யாகச் சொன்ன பத்ரபாகு, பூஜை அறையில் வணிகன் வைத்திருந்த கல்லை எடுத்துக் கொண்டு போயேவிட்டான்!
படைத் தளபதியின் இந்த அடாவடிச் செயலை வணிகனால் தட்டிக் கேட்க முடியவில்லை. மனம் கலங்கினான்! கடவுளாக பாவித்து வணங்கி வந்த கல், பறிபோய்விட்டதே... என்று புலம்பினான். இதுகுறித்து மன்னரிடமே சென்று நியாயம் கேட் பது என முடிவு செய்தான்.
அதன்படி, அரண்மனைக்குச் சென்ற வணிகன், நடந்தவற்றை விளக்கி கண்ணீர் விட்டு அழுதான். உடனே படைத் தளபதியை அழைத்து விசாரித்தார் மன்னர். பத்ரபாகுவும் தன் தரப்பு நியாயத்தை எடுத்துரைத்தான்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மன்னர், என்ன தீர்ப்பு சொல்வது என்பது புரியாமல் தவித்தார். 'இந்த வழக்கில் தீர்ப்பு சொல்லப்படும் வரை, வழிபாட்டுக் கல் உன்னிடம் இருப்பது முறையல்ல. எனவே, அதை அரசவையில் ஒப்படைக்க வேண் டும்!' என உத்தரவிட்டார் மன்னர். அதன்படி, வழிபாட்டுக் கல்லை சபையில் சமர்ப்பித்தான் பத்ரபாகு.
அன்றிரவு... படுக்கையில் தூக்கம் வராமல், ஆழ்ந்த யோசனையில் இருந்தார் மன்னர். அப்போது, ஏதோ
பேச்சுக் குரல் கேட்டது. இதைக் கேட்ட மன்னர், 'இங்கு நம்மைத் தவிர வேறு எவரும் இல்லை; இதென்ன பேச்சுக் குரல்?' என்று திடுக்கிட்டார். அமைதியாக இருந்தபடி, காதை தீட்டிக் கொண்டு கேட்டான்.
'மன்னா... உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும். இயற்கைதான் இறைவன்; இறைவன்தான் இயற்கை. இயற்கையின் செயல்பாடுகள் அனைத்திலும் இறைவனை தரிசிக்கலாம். கல்லும் இயற்கையே! அது, பார்ப்பதற்குத்தான் திடப் பொருள். ஆனால், கல்லின் இடையே உருவாகும் வெடிப்பில் இருந்து நீர் கசிகிறது. கற்களின் உராய்வில் நெருப்பும் உருவாகிறது. தேரை எனும் உயிரினம் கல்லுக்குள் வாழ்கிறது. ஆக, பஞ்சபூதங்களின் செயல்பாடுகள் அனைத்தும் ஒரு கல்லுக்குள்ளேயே இருக்கிறது.
அப்படியிருக்க... சிறிய கல்லுக்குள் ஸ்ரீமந் நாராயணன் குடி கொண்டிருக்கக் கூடாதா? அந்த பரமாத்மா எல்லா இடங்களிலும் சிலா வடிவத்தில் எழுந்தருளி, தரிசனம் தருகிறார் என்பதை எப்படி மறந்தாய்? இந்த உலகில் உள்ள அனைத்துப் பொருட்களிலும் பகவான் இருக் கிறார். இது மட்டுமே இருப்பிடம் என்று தனியே எதுவும் இல்லை அவருக்கு! எங்கும் இருப்பார். 'சாதாரணமான ஒரு கல்லிலும் அவர் காட்சி தருவார்' என்று பக்தியுடன் ஒருவன் வணங்கி வந்தால், அவனுக்கு அதிலும் காட்சி கொடுப்பார்; காப்பாற்றி அருள்வார்' என்று அந்தக் குரல் தெரிவித்தது.
மன்னர், சிலிர்த்துப் போனார். 'இந்த வழக்கில் என்ன தீர்ப்பு தருவது? என்று குழம்பிய வேளையில், ஏதோவொரு சக்திதான் இந்த தீர்ப்பை நமக்கு உணர்த்தி இருக்கிறது. இது சாட்சாத் ஸ்ரீமந் நாராயணனால் வழங்கப்பட்ட தீர்ப்பு' என்று வியந்தார்; மனம் தெளிந்தார்.
மறுநாள் காலை! அரசவையைக் கூட்டினார் மன்னர். அந்த வழிபாட்டுக் கல்லை, வணிகனிடம் எந்த நிபந்தனையும் இன்றி ஒப்படைத்தார். "இனி, உனது விருப்பப்படி நீ வழிபடலாம். எதை இறைவன் என எண்ணி பூஜை செய்து வருகிறாயோ... அதில் இறைவனை நீ காண்பாய்" என்றார். இதைக் கேட் டதும் வணிகனின் கண்களில் இருந்து வழிந்தது கண்ணீர். நன்றியுடன் மன்னனை வணங்கினான்; தனது இல்லம் நோக்கி கிளம்பினான்.
இதையடுத்து, பழையபடி வழிபாட்டைத் தொடர்ந்தான்.
இறை வழிபாடு குறித்தும் அதனால் கிடைக்கும் பலன் குறித்தும் தனக்கு உணர்த்திய வணிகனையே, தனது ஆன்மிக குருவாக ஏற்றுக் கொண்டார் மன்னர். நாட்டு மக்களுக்கு இன்னும் பல நற்காரியங்
களைச் செய்தார்; தான- தருமங்களை அள்ளி வழங்கினார்.
மன்னரது செயலில் மகிழ்ந்த ஸ்ரீமந் நாராயணன், ஒருநாள்... மன்னருக்கு காட்சி கொடுத்தார். "உன் தேசமும் மக்களும் நலமும் வளமும் பெற, நீ குருவாக ஏற்றுக் கொண்டிருக்கும் அந்த வணிகனின் முன்னிலையில் பிரமாண்டமான யாகம் ஒன்றை நடத்து!" என அருளி மறைந்தார்.

மெய்சிலிர்த்து நின்றான் மன்னன். யாகத்துக்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆட்களை ஏவினான். சித்திரை மாத நன்னாளில்... நாட்டு மக்கள் பலரும் கூடியிருக்க, விண்ணை எட்டும் மந்திர கோஷங்களுடன், யாகம் சிறப்புற துவங்கியது. யாக பூஜையின் நிறைவு நாளில், தேவியருடன் காட்சி தந்தார் ஸ்ரீமந் நாராயணன். அனைவரும் ஆனந்தத்தில் திளைத்தனர்; இறை நாமத்தை உச்சரித்தபடி அவனை வணங்கினர்.
"பெருமாளே! கருணாமூர்த்தியே... எங்களுக்கு திருக்காட்சி தந்த இதே கோலத்தில்... தேவியருடன் இங்கேயே எழுந்தருள வேண்டும். உன்னைத் தரிசிக்க வரும் எண்ணற்ற பக்தர்களுக்கு திவ்ய தரிசனம் தரவேண்டும். யுகங்களைக் கடந்தும் நீ இங்கே குடிகொண்டிருக்க வேண்டும்" என்று பிரார்த்தித்தனர்.
"அப்படியே ஆகட்டும்" என்று அருளிய ஸ்ரீமந்நாராயணன், 'வைத்த மாநிதி பெருமாள்' எனும் திருநாமத்துடன் வசவப்பபுரத்தில் எழுந்தருளி னார். அவரே இன்று 'வரதராஜ பெருமாள்' என வழங்கப்படுகிறார்.
யாகம் நடத்திய மன்னரே இங்கு (வசவப்பபுரம்) ஆலயம் ஒன்றை எழுப்பி, நித்திய வழிபாடுகளை உருவாக்கினார். வைகாசன ஆகம விதிப்படி ஆறு கால பூஜைக்கு ஏற்பாடுகள் செய்தார். ஐந்து வகை கோத்திரங்களைச் சேர்ந்த அந்தணர்களை பல கிராமங்களில் இருந்தும் வரவழைத்துக் குடி அமர்த்தினார். விழாக்களும் விசேஷங்களும் துவங்கின.
இப்படி குடிமக்களின் உயர்வுக் காகக் கோயில் கட்டிச் சிறப்புப் பெற்ற மன்னர், 'கலியுகராமன்' என்றும், 'ஞானசமுத்திரம்' என்றும் அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
அந்தக் காலத்தில் சுமார் 600 வீடுக ளுடன் இங்கே அந்தணர்கள் வசித்து வந்தனராம்! அப்போது பூஜை- புனஸ்காரங்கள், வரதராஜ பெருமாள் ஆலயத்தில் கோலாகலமாக இருக்கு மாம். ஆனால், காலப்போக்கில் எல்லாமே காணாமல் போய் விட்டன!
ஆலயத்தின் பல இடங்கள் இன்று ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. தற்போது ஆலயத்தில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வருகிற 20.05.09 புதன்கிழமை அன்று காலை 6:00 மணிக்கு மேல் 7:30-க்குள் மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெறுகிறது.
இந்த ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று, சுமார் 130 வருடங்கள் ஆகி விட்டதாம். திரு விழாக்கள் நடைபெற்று சுமார் 60 வருடங்கள் ஆகிறதாம்! எத்தனையோ வருடங்கள் ஆராதிக்கப் படாமல் இருந்த புராதனச் சிறப்பு மிக்க இந்த வரத ராஜ பெருமாள், புதுப் பொலிவு பெற்று மீண்டும் அருள் பாலிக்க உள்ளார்.
ஆலய தரிசனம் செய்வோமா?
இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் பராமரிப்புக்கு உட்பட்டது இந்தத் திருக்கோயில். ராஜகோபுரம், கொடிமரம் ஆகியவை இல்லை. உள்ளே நுழைந்ததும் பலிபீடம், கருடாழ்வார் சந்நிதி. இடப் பக்கம் திரும்பினால், பிராகார வலம் துவங்குகிறது. பிராகாரத்தில் ஸ்ரீதும்பிக்கை ஆழ்வார் மற்றும் ஸ்ரீஆஞ்சநேயர் சந்நிதிகள்.
கருடாழ்வார் சந்நிதியைக் கடந்து உள்ளே நுழைந்தால், தூண்கள் நிறைந்த முன்மண்டபம். அடுத்து, மகா மண்டபம். ஜய- விஜய வீரர்கள் தரிசனம். ஸ்ரீராமானுஜர், பெரியாழ்வார், விஷ்வக்சேனர் ஆகியோரை இங்கே தரிசிக்கிறோம். அடுத்து அர்த்த மண்டபம், கருவறை.
கிழக்கு நோக்கிய கருவறையில் ஸ்ரீபூமி- நீளாதேவியுடன் நின்ற நெடும் பெருமானாக... சங்கு, சக்ரதாரியாக பிரமாண்ட தரிசனம் தருகிறார், ஸ்ரீவைத்த மாநிதி வரதராஜ பெருமாள். ஸ்ரீபூமி- நீளாதேவியர் தங்களின் ஒரு திருக்கரத்தில் தாமரை மலருடனும், இன்னொரு திருக்கரத்தை இடுப்பில் ஊன்றியவாறும் தரிசனம் தருகின்றனர். வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அருளும் கருணாமூர்த்தியான பெரு மாள், தேவியருடன் தரும் தரிசனம், கொள்ளை அழகு!
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நாகர் விக்கிரகம் வாங்கி ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதாக வேண்டிக் கொண்டால், பிரார்த்தனை பலிக்கிற தாம். ஆலயத்துக்குப் பின்புறம் நாக புஷ்கரணி தீர்த்தம் அமைந்துள்ளது.
தலம், மூர்த்தி, தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்பு கொண்ட இந்தத் திருக்கோயில் பல காலமாக பராமரிப் பின்றி இருந்து வந்தது பெரும் சோகமே!
மன்னர்கள் காலத்தில் பல திரு விழாக்கள் விமரிசையாகக் கொண்டா டப்பட்டுள்ள இந்தத் திருக்கோயில், சில மாதங்களுக்கு முன்பு வரை நித்திய வழிபாட்டுக்கே வழி இல்லாமல்தான் இருந்து வந்தது.
'வசவப்பபுரம் வரதராஜ பெருமாள் பக்த சபா அண்ட் வெல்ஃபேர் அசோஸியேஷன்' எனும் அமைப்பினரது முயற்சியால் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.
விரைவில் மகா சம்ப்ரோக்ஷணம் காண இருக்கும் ஸ்ரீவரத ராஜ பெருமாளை வணங்கி, அவரது திருவருளுக்குப் பாத்திரமாவோம்!

தகவல் பலகை
தலம் : வசவப்பபுரம்
மூலவர் : ஸ்ரீபூமிதேவி-நீளாதேவி சமேத ஸ்ரீவரதராஜ பெருமாள்
எங்கே இருக்கிறது?: நெல்லையில் இருந்து தூத்துக்குடி செல்லும் நெடுஞ்சாலையில், நெல்லையில் இருந்து சுமார் 17 கி.மீ. தொலைவில் இருக்கிறது வசவப்பபுரம். இங்கிருந்து வலப் பக்கம் பிரிந்து செல்லும் கிளைச் சாலையில் சுமார் ஒரு கி.மீ. பயணித்தால் ஆலயம் வரும். தூத்துக்குடியில் இருந்து வசவப்பபுரத்துக்கு சுமார் 32 கி.மீ. தொலைவு.
எப்படிப் போவது?: நெல்லை ஜங்ஷன் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் 11ஏ மற்றும் 19 ஆகிய பேருந்துகளில் பயணித்து வசவப்பபுரத்தை அடையலாம். தூத்துக்குடியில் இருந்தும் வசவப்பபுரத்துக்கு பேருந்து வசதி உண்டு.
நெல்லை பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோ மூலம் பயணித்தும் ஆலயத்தை அடையலாம்.
தொடர்புக்கு:
கிரிஜா வெங்கட், தலைவர்,
'வசவப்பபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள்
பக்த சபா அண்ட் வெல்ஃபேர் அசோஸியேஷன்',
18, பாலாஜி நகர், பத்தாவது தெரு, நங்கநல்லூர்,
சென்னை 600 061.
மொபைல் : 99406 88829
எஸ். ராமன் : 94861 90239

Comments