கடவுளே தந்தை

பக்தன் என்பவன், பகவானின் குழந்தை! திருவண்ணாமலை மகான் யோகி ராம்சுரத்குமாரை, 'கடவுளின் குழந்தை' என்றே அழைப்பர். அவரும், தன்னை தரிசிக்க வரும் அன்பர்களிடம், 'என் தகப்பன் உன்னை ஆசிர்வதிக்கிறான்' என்றுதான் அருளுவார்!
மனிதர்கள் பலர் பணம், அறிவு, கலை ஆகியவற் றைத் தேடுவது போல் தவம், மந்திர ஸித்தி, அஷ்டமா ஸித்தி, பிறர் மனம் அறிதல், தூர தேசத்தையும் அறிதல் ஆகியவற்றைத் தேடுவோரும் உண்டு. பணம், அறிவு, கலை ஆகியவற்றால், புகழ் மற்றும் மரியாதை கிடைக்கும். இந்தப் புகழையும் மரியாதையையும் வைத்துக் கொண்டு சிலர் சும்மா இருக்கிறார்களா என்ன? இதே போல், கையில் தடி வைத்திருப்பவன், அதை வைத்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டான். எதையேனும் அல்லது எவரையேனும் தடியால் தட்டிக் கொண்டுதானே இருப்பான்!
ஸித்திகளை கைவரப் பெற்றவர்களும் இப்படித்தான்! இவர்களால் பிறருக்கு நன்மை மட்டுமே கிடைக்கும் என்று சொல்ல இயலாது. ஏனெனில்... இவர்கள், கடவுளின் மாயையை வெல்ல

முடியாதவர்கள். விருப்பு, வெறுப்பு, மகிழ்ச்சி, கோபம், விருப்பமானவர்கள், விருப்பமற்றவர்கள்... ஆகிய மனித குணங்கள், ஸித்து வேலை செய்வோருக் கும் உண்டு. தாங்கள் கைவரப் பெற்ற ஸித்தியைக் கொண்டு பிறருக்கு எப்படி நன்மை செய்தனரோ அதேபோல் கெடுதலும் செய்வார்கள்.
ஆனால், இறைவனின் குழந்தையான பக்தன் அப்படிப்பட்டவன் அல்ல! கடவுளின் அன்பைத் தவிர வேறு எதையும் பொருட்படுத்தாதவன். எளியோர் மற்றும் இயலாதோர் மீது கருணை காட்டுபவன்; துன்பப்படுவோர் மீது இரக்கம் கொள்பவன். அது மட்டுமா? ஆத்மார்த்தமான பக்தன், இறைவனின் மாயைகளை வென்றவன்.
ஒருவர் செய்த நன்மைக்காக, அவரிடம் பழகுவது சுயநலம்; ஆசை! எந்தக் காரணமும் இன்றி இறைவனிடம் கொண்டிருக்கும் பக்தியை, அன்பு அல்லது காதல் என்பர். இப்படியான பக்தர்களுக்கு தீங்கு எதுவும் நேராது. மாறாக, இவர்களுக்குத் தீங்கிழைக்க முற்படுவோர், பெருந்துன்பத்தில் சிக்கித் தவிப்பர். எப்படி என்கிறீர்களா?
வீதியில் விளையாடும் குழந்தையை எவரோ துன்புறுத்தி விடுகின்றனர். அந்தக் குழந்தை அழுதபடி வீட்டுக்கு ஓடி வருகிறது. அந்தக் குழந்தைக்கு,
தன்னை துன்புறுத்தியவர் யார்? எதற்காக துன்புறுத்தினார்? என்று எதுவும் தெரியாது. அந்தக் குழந்தை எதுவும் சொல்லாவிட்டாலும் கூட,
குழந்தையின் அழுகையைக் கண்டு கோபம் கொள்ளும் தந்தை, துன்புறுத்தியவனைத் தேடிப் போய் தண்டிப்பான்தானே?
இதேபோல், அனைத்தையும் தன்னிடம் அர்ப்பணித்து விடும் பக்தனைத் துன்புறுத்த எண்ணுபவர்களை, தந்தையைப் போல் வந்து தண்டிக்கிறான் கடவுள். ஆனால் அந்த பக்தன் என்ன செய்கிறான்? 'அவனை தண்டிக்காதே; மன்னித்து விடு' என்று பிரார்த்திக்கிறான். இதனாலேயே அவன்
தெய்வ நிலைக்கு உயர்ந்து விடுகிறான்.
திருவண்ணாமலைக்கு வருவதற்கு முன்பு வரை பகவான் யோகி ராம்சுரத்குமார், இந்தியா முழுவதும் சுற்றி வந்தார். அழுக்கு உடை; நேர் செய்யப்படாத தலை முடி; நீண்ட தாடி என இந்தியா முழுவதும் சுற்றியவர், ராம நாமத்தை இடைவிடாமல் முணுமுணுத்தபடியே இருப்பார். பிச்சை எடுத்தே சாப்பிடுவார்.
ஒரு முறை, அரியலூர் வழியாகச் சென்று கொண்டிருந்தார் யோகி ராம்சுரத் குமார். கொளுத்தும் வெயில்; கடும் தாகம் வேறு! சுற்றுமுற்றும் பார்த்தார். அருகில் கிணறு ஒன்று இருந்தது. கயிற்றுடன் கூடிய வாளியில் எவரோ நீர் இறைத்து வைத்திருந்தனர். விறுவிறுவென சென்றவர், தனது இரு கரங்களையும் வாளிக்குள் விட்டு, நீரை அருந்த முயன்றார்.
இதைக் கண்ட பெண்மணி ஒருத்தி, அவசரம் அவசரமாக ஓடி வந்தாள். 'அழுக்குப் பிச்சைக்காரன் ஒருவன், வாளி நீரில் கை விடுகிறானே...' என்று ஆத்திரத்துடன் கூச்சலிட்டாள். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள், கையில் தடியுடன் பரபரப்பாக ஓடி வந்தனர்.
'பிச்சைக்காரன்தானே... அடித்தால் கேட்பதற்கு எவரும் வர மாட்டார்கள்' எனும் ஏளனத்துடன் யோகி ராம்சுரத்குமாரை அடிக்க தடியை ஓங்கினர். இன்னும் சிலர் கைகளால் தாக்க முயன்றனர்.
ஆனால், யோகி ராம்சுரத்குமாரை தாக்க முற்பட்டவர்கள், ஓங்கிய கை ஓங்கியபடி அப்படியே சிலையாக நின்றனர். எந்த அசைவும் இன்றி நின்றவர்களைப் பார்த்து ஊரே அலறியது. 'இந்த பிச்சைக்காரன் ஏதோ மாய மந்திரம் பண்ணிட்டான்' என்று கூப்பாடு போட்டது.
உடனே யோகி ராம்சுரத்குமார், 'அறியாமல் தவறிழைத்த இவர்களை மன்னித்து விடுங்கள்' என பிரார்த்தித்தார். அவ்வளவுதான்... சிலையாய் நின்றவர்கள், சகஜ நிலைக்குத் திரும்பினர்.
இறைவனிடம் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்கு, எந்த துன்பம் வந்தாலும் தந்தையைப் போல் ஓடிவந்து காப்பாற்றுவான் இறைவன்!
சரி... நமது வாழ்வில் துன்பம் வந்தாலும் இறைவன் இப்படி பரிந்து கொண்டு வருவானா?
வருவான்; நிச்சயம் வருவான்! 'தெய்வத்தின் துணை எனக்கு வேண்டும்' என்று மனம் ஒருமித்து அழைத்தால், இறைவன் ஓடோடி வருவான்; நம்மைக் காப்பான்! இறைவனின் துணையை அடைவதற்கு, தன்னை முழுவதுமாக அவனிடம் அர்ப்பணிக்க வேண்டும் என்பதை உணர்ந்து, தெளிந்து, அதன்படி செயல்படத் துவங்கி விட்டால் தினம் தினம் திருநாள்தான்!

Comments

Post a Comment