பிறர் துயர் துடைப்பதே சிறந்த அறம்!

ன்மைகள் பெருக வேண்டும்; தீமைகள் அகல வேண்டும். இது ஈடேறுவதற்கான வழிகளைச் சொல்வது வேதம். புலன்கள், சிற்றறிவு மற்றும் யூகங்களால் அறிய முடியாத தகவலைத் தர வல்லது வேதம்.
உலக இயக்கத்துக்கு உதவுவது மட்டுமின்றி, அத்தனை உயிரினங்களையும் திருப்திப்படுத்தி மகிழவும் வைக்கிறது வேதம். இதுவே உயர்ந்த அறம். இதை முறையாகக் கடைப்பிடித்த ஸ்ரீராமன், தருமர் போன்றவர்கள் உதாரண புருஷர்களாகத் திகழ்ந்தனர். 'வேள்வியைக் கடைப்பிடித்தால், சொர்க்க சுகத்தை அடையலாம்' என்ற வேத வாக்குக்கு இணங்க... நூறு வேள்விகளைச் செய்த நகுஷன் எனும் அரசன், இந்திர பதவி பெற்றதாகக் கூறுகிறது புராணம்.
வேதத்துக்குப் புறம்பான செயல்பாடுகள், தீமையையும் அதன் பலனாக நரகத்தையும் அளிக்கும். 'ஒருவனது செயல்பாடுகளே அவன் பெறும் நன்மை- தீமைகளுக்குக் காரணம்' என்பது வேதத்தின் அறிவுரை. ஆம், அறத்துடன் இணைந்த வாழ்வே மகிழ்ச்சிக்கு ஆதாரம்! அறத்தை காப்பவர்கள் நாம்; நம்மைக் காப்பது அறம். நமக்கு நாமே பாதுகாப்பை உறுதி செய்து கொள்கிறோம் என்பதே இதன் கருத்து.
பிற உயிர்களை மகிழ்விக்கும் செயலானது, நமது மகிழ்ச்சிக்குக் காரணமாகிறது. பொது நலம், சுய நலனை பூர்த்தி செய்யும் என்று போதிக்கும் ஸனாதனம், பொது நலனில் அக்கறை காட்டச் சொல்கிறது. மனிதன் மட்டுமின்றி அனைத்து உயிர்களும் மகிழ வேண்டும் என்பதே அதன் விருப்பம்.
தயாளு என்ற அரசன் அறநெறி வழுவாதவன்; வேள்விகள் மூலம் மக்களின் நன்மையை வேண்டியவன்; வள்ளல் தன்மையும் இரக்க குணமும் மிகுந்தவன். தர்மாத்மா என்று எல்லோரும் இவனைப் புகழ்ந்தனர். பிறரது மகிழ்ச்சியைக் கண்டு தான் மகிழும் இயல்பு கொண்ட இந்த அரசனின் வாழ்வு முடிவுக்கு வந்தது. அவனை அழைத்துச் செல்ல எம தூதர்கள் வந்தனர். இந்த ஜீவனை சொர்க்கத்தில் சேர்க்கும் பொறுப்பு, எம தூதர்களுக்கு!
ஆனால், அரசன் தயாளு தன்னையும் அறியாமல் ஒரே ஒரு தவறு இழைத்திருந்தான். இதற்கு தண்டனை தர விரும்பினார் எமதர்மன். ஆகவே, தயாளு அரசனை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் வழியில், அவனுக்குநரகத்தைக் காட்டும்படி கட்டளையிட்டார். எம தூதர்களும் அதன்படியே செய்தனர். நரகில் வதைபடும் ஜீவன்களின் துன்பத்தைக் கண்டு மனம் கலங்கினான் அரசன். இதுவே அவனது தவறுக்குத் தண்டனையானது.

கும்பீ பாகம், அசிபத்ரவனம், ரௌரவம் முதலான நரக உலகங்களின் பட்டியல் கருட புராணத்தில் விளக்கப்பட்டுள்ளன. தவறுக்குத் தக்கபடி நரகில் தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன என்கிறது தர்மசாஸ்திரம். திரை மறைவில் நிகழும் தவறுகளும் கணக்கு எடுக்கப்பட்டு, தண்டனை வழங்கப்படும் இடம்தான் நரகம்.
பிறர் சொத்தைத் தனதாக்கிக் கொள்ளுவதும் பிறருக்குக் கிடைக்க வேண்டிய உயர்வை சட்டத்தின் போர்வையில், தான் அடைந்து மகிழ்வதும் தவறு!
தினமும் காலையில் வாக்கிங் செல்வது அவனது வழக்கம். ஒரு நாள், பாதையில் துணிப்பை ஒன்று கிடப்பதைக் கண்டான். அதை எடுத்துப் பார்த்தான். உள்ளே... கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுகள்! ஆச்சரியம் அடைந்தவன், எவரேனும் தன்னைக் கவனிக்கிறார்களா என்று சுற்றும்முற்றும் பார்த்தான். எவரும் இல்லை என்றதும் அந்தப் பணத்தைத் தனதாக்கிக் கொண்டான். அனாதையாகக் கிடந்த பணம் தன்னுடையதே என்று உரிமை கொண்டாடினான். ஆனால், இது தவறு என்கிறது தர்மசாஸ்திரம். சமூகம் இவனைத் தண்டிக்காவிட்டாலும் எமதர்மனின் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது.
அந்த அலுவலகத்தில் பதவி உயர்வு கேட்டுப் பலரும் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், செல்வாக்கு மிக்க பெரியவர் ஒருவரது சிபாரிசு ஏற்கப்பட்டு, தகுதியான ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு வேறு ஒருவருக்குக் கொடுக்கப்பட்டது. சிபாரிசு செய்தவரது தவறை சமுதாயம் கண்டுகொள்ளாமல் இருக்கலாம்; ஆனால், எமதர்மனின் தண்டனை அந்தப் பெரியவருக்கு கிடைத்தே தீரும்!

இப்படியான ஒரு தவறுதான் தயாளு அரசனிடம் இருந்தது. அதன் விளைவாக... சொர்க்க சுகத்தை அனுபவிக்கும் முன், நரகில் ஜீவன்கள் படும் துன்பத்தைக் கண்டு வருந்தும் நிலை ஏற்பட்டது அந்த அரசனுக்கு. சொர்க்கத்துக்கு செல்லும் முன்பே தவறுக்கான தண்டனையை அனுபவித்தான் அவன்.
பாரதப் போரில், 'அஸ்வத்தாமா என்ற யானையை அழித்தான் ஒருவன்' என்று தர்மரைச் சொல்ல வைத்தார்கள். அது, அஸ்வத்தாமா (துரோணரின் மகன்) இறந்து விட்டதாகப் போர்க்களத்தில் இருப்பவர்களை நம்ப வைத்தது. உண்மை பேசும் தர்மர், சூழலின் காரணமாக பொய் சொல்ல நேர்ந்தது. இதற்குத் தண்டனையும் கிடைத்தது என்கிறது மகாபாரதம்.
தயாளு அரசனும் அப்படியே! தவறுக்கான தண்டனையாக அனுபவிக்க நேர்ந்தது. எமதர்மனின் கட்டளைப்படி அவரை நரகத்தின் வாயிலில் நிறுத்தினர் எமதூதர்கள். அங்கு, துன்பத்தில் கூச்சலிடும் மனிதர்களைக் கண்டு அரசனின் மனம் வேதனை அடைந்தது. கழுவில் ஏற்றப்பட்டவன், கொதிக்கும் எண்ணெயில் வறுபடுபவன், பழுக்கக் காய்ச்சிய இரும்புத் தூணை அணைப்பவன்... என்று தண்டனை அனுபவிக்கும் ஒவ்வொருவரது அலறல் சத்தமும் அரசனைக் கலங்கடித்தது. அங்கிருந்து நகர்ந்து செல்ல விரும்பினான் அவன்.
அப்போது நரகத்தில் இருந்தவர்கள், ''அரசே! தயவு கூர்ந்து இன்னும் சற்று நேரம் இங்கு இருங்கள். தங்களின் மேனியைத் தழுவி வரும் காற்று, எங்கள் உடலைத் தழுவி எங்களது துயரத்தைப் போக்குகிறது. இதம் தரும் காற்று தொடர்ந்து கிடைக்க நீங்களே அருள வேண்டும்!'' என்று மன்றாடினர்.
உடனே, ''நான் இங்கு இருப்பது தங்களுக்கு மகிழ்ச்சி தரும் எனில், இங்கேயே தங்கி விடுகிறேன்'' என்ற அரசன் அங்கேயே தங்கிவிட முற்பட்டான். தர்ம சங்கடத்துக்கு ஆளான எமதூதர்கள், தங்கள் தலைவனின் கட்டளையை நினைவூட்டினர். ''அரசே! தவறு செய்த ஒவ்வொருவரும் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும் என்பது விதி. தாங்கள் செய்த அறத்துக்காக, சொர்க்கலோகத்தில் தங்களுக்குத் தனி இடம் காத்திருக்கிறது. வாருங்கள்'' என்று அழைத்தனர்.
ஆனால் அரசனோ, ''சொர்க்க சுகம் எனக்குத் தேவையில்லை. நான் இங்கு தங்கினால் இவர்கள் மகிழ்வார்கள் எனில், இந்த நரகமே எனக்கு சொர்க்கம். மற்றவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வாய்ப்பு இங்கே கிடைக்கிறது. இதனால் ஏற்படும் நிறைவு, சொர்க்கத்திலும் கிடைக்காது. என்னை வற்புறுத்தாதீர்கள்!'' என்றான்.
இக்கட்டான சூழலை அறிந்த எமதர்மனும் இந்திரனும் நேரில் தோன்றி, சொர்க்கம் வருமாறு அரசனை அழைத்தனர். ''நரகத்தில் தவிக்கும் இந்த ஜீவன்கள் விடுபடும் வரை இங்கிருந்து நகர மாட்டேன்!'' என்று மறுத்தான் அரசன்.
''இவர்கள் அனைவரும் பாவம் செய்தவர்கள். ஒரு புண்ணியமும் செய்யாத இந்த பாவிகளை எப்படி விடுவிக்க முடியும்?'' என்று கேட்டார் எமதர்மன்.
தயக்கமே இன்றி சட்டென்று சொன்னான் அரசன்: ''நான் சேமித்த புண்ணியம் அனைத்தையும் தானமாக அளிக்கிறேன். இவர்கள் அனைவரையும் சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லுங்கள். அவர்களுக்கு பதிலாக நான் இங்கேயே தங்கி விடுகிறேன்.''
அவரது விருப்பம் நிறைவேற்றப்பட்டது. பிறகு, ''அரசே! தாங்கள் அளித்த புண்ணியத்தின் பலனால், அத்தனை பேரும் இங்கிருந்து விடுவிக்கப்பட்டு சொர்க்கம் செல்லத் தயாராகி விட்டனர். இப்போது, நீங்களும் வரலாம் அல்லவா?'' என்று கேட்டான் இந்திரன்.

''நான்தான் எனது புண்ணியம் முழுவதையும் தானம் அளித்து விட்டேனே. இனி எப்படி சொர்க்கத்துக்கு வர முடியும்?'' என்று கேட்டான் அரசன்.
அதற்கு இந்திரன், ''கொடை அளிப்பதால் புண்ணியம் பெருகுமே தவிர குறையாது. தங்களது புண்ணியத்தை தானமாக அளித்தீர்கள் அல்லவா? அதுவே பெரும் புண்ணியமாக மாறி விட்டது. தானத்தின் வாயிலாக ஒட்டுமொத்த நரகவாசிகளையும் கரையேற்றிய பெருமைக்கு உரியவர் தாங்கள். தவிர, மற்றவர்களது துயரைத் துடைப்பது சிறந்த அறம் என்பதையும் நிரூபித்து விட்டீர்கள். எனவே, சொர்க்கம் வரும் தகுதி தங்களுக்கு உண்டு!'' என்றான்.
கற்ற கல்வியை மற்றவருக்கு அளிக்க அளிக்க கற்பிப்பவனது கல்வியறிவு மேன்மேலும் வளரும் என்று பர்த்ரு ஹரி கூறுவார் (வ்யயே கிருதே வர்த்ததெ...). கொடை வழங்குவதும் அப்படியே! அது, புண்ணியத்தை மென்மேலும் பெருக்கும்.
மகாபலி ஒட்டுமொத்தமாக அனைத்தையும் வாமனருக்கு கொடையாக அளித்தான். இந்தப் புண்ணியமே அவனை, கடவுளுடன் இணைத்தது.
பிறர் துயரத்தில் பங்கு பெறுவது பெருமை ஆகாது; அவர்களது துயரத்தை ஒட்டுமொத்தமாக ஏற்பதே பெருமை. இதை நடைமுறைப்படுத்திய தயாளு அரசனின் அறவழியை நாமும் பின்பற்றி சிறப்படைய வேண்டும்.
அறம்- 32
ழைகளுக்கு சத்திரம்.இறைபாடல்கள் ஓதுவார்க்கு உணவளித்தல்.சமயச் சான்றோருக்கு உணவிடுதல் பசுவுக்கு உணவிடுதல்.சிறையில் வசிப்பவருக்கும் உணவு.பிச்சைக்காரர்களுக்கு உணவிடுதல். தின்பண்டம் நல்கல். தரும உணவு (அன்னதானம்). கர்ப்பிணிகளுக்கு உணவளித்தல். குழந்தைகளை வளர்த்தல். குழந்தைகளுக்கு பால் கொடுப்பது. அனாதை பிணங்களை எரியூட்டல். அனாதைகளுக்கு உதவுதல். கல்வி சாலைகள் அமைத்தல். நோயாளிக்கு மருத்துவம். துணி வெளுப்போருக்கு உதவி. முடி திருத்துவோருக்கு உதவி.
கண்ணாடி தானம். காதோலை தானம். கண் மருந்து அளித்தல். தலைக்கு எண்ணெய் கொடுத்தல். திருமணம் செய்து வைப்பது. பிறரது துயரை தீர்ப்பது. தண்ணீர்ப் பந்தல் அமைத்தல். ஆன்மிக சாலைகளுக்கு உதவி. நல்வழியில் செலுத்துவது. வனத்தை பாதுகாப்பது. கால்நடைகளின் திணவை போக்க கல் நட்டு வைப்பது. விலங்குகளுக்கு உணவு, ஊர் பொது காளைகளை பராமரித்தல், ஆபத்தில் உள்ளவர்களின் உயிரைக் காப்பது. கன்னிகா தானம்!

Comments