ஆசையை அடக்கினால் சத்தியம் நிலைக்கும்!

வாய்மையே வாழ்க்கையை உயர்த்தும்; மனம் படைத் தவர் அனைவரும் வாய்மையுடன் விளங்க வேண்டும்' என்று அறிவுறுத்தும் வேதம், 'பொய் உரைத்தவனை தண்டிக்க வருண தேவதை காத்திருக்கிறாள்!' என்று எச்சரிக்கவும் செய்கிறது (அநிருதெ கலுவை...).
வாய்மையை, 'முழு அறம்' என்று தர்மசாஸ்திரம் போற்றுகிறது. உபநிடதமோ, வாய்மையை பரம் பொருளின் வடிவாகவே பார்க்கிறது (ஸத்யம் ஞான மனந்தம் ப்ரம்ம).
இந்த உலகம் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டே இயங்குகிறது (சத்யே னோத்த பிதா பூமி:...). சத்தியத்தை இழப்பவன், எல்லாவற்றையும் இழக்கிறான்! அரிச்சந்திரன், தசரதர், ஸ்ரீராமன், பீஷ்மர், தருமர்... என சத்தியத்தைக் கடைப்பிடித்து உயர்ந்த புராணக் கதாபாத்திரங்கள் ஏராளம். சாவித்திரியின் சத்தியம், விதியை அவளின் காலடி யில் விழ வைத்தது. மகாத்மா காந்தியின் சத்தியம் நமக்கு விடுதலை வாங்கித் தந்தது.
ஆசைகளே சத்தியத்தில் இருந்து நம்மை நழுவ வைக்கும். ஆசையை அடக்கினால், நம்மில் சத்தியம் நிலைக்கும். அரிச்சந்திரன், ஆசைகளை விட்டவன். எனவே, சத்தியம் அவனைப் போற்றியது. துன்பச் சுமைகள் அழுத்தினாலும் பொறுமையுடன் அவற்றை ஏற்று, ஒருபோதும் சத்தியத்தைக் கைவிடாமல் வாழ்ந்தவன்; தனது வாழ்க்கையையே ஒரு பாடமாக எல்லோருக்கும் போதித்தவன்.

பேச்சில் மட்டுமின்றி, செயலிலும் உண்மை வேண்டும் என்று உபதேசிக்கும் தர்ம சாஸ்திரம்,
'தேவைக்கு அதிகமாக பொருளைப் பதுக்கி வைப்பவன் பொய்யன்- திருடன்!' என்கிறது! இல்லத்தின் தேவைக்கு ஒரு பசுமாடு போதும் எனும் நிலையில், நூற்றுக்கணக்கான பசுமாடுகளைப் பராமரிப்பது தவறு. அதுபோல், நமது உணவுத் தேவைக்கு ஒரு கலம் நெல் போதும்; பல மூட்டை களை சேமித்து, பதுக்குதல் கூடாது.
'ஒருவனது தேவைக்கும் அதிகமான பதுக்கல்... மற்றவர்களது அடிப்படைத் தேவைகளையும் பறிக்கும் செயலாகும். இயற்கையால் எல்லோருக்கும் பொதுவாக வழங்கப்பட்டதை தனதாக்கிக் கொள்பவன், உண்மைக்குப் புறம்பாக செயல்படுகிறான்' என்று சாருசர்யை எனும் நூலில் விளக்குகிறார் போஜராஜன்.
தருமர் உருவில் தென்பட்ட சத்தியம், காட்டுக்குத் துரத்தப்பட்டது. இதற்குக் காரணம் துரியோதனன்! ஆசைகளின் உந்தலால் சத்தியத்தில் இருந்து விடுபட்ட துரியோதனன், கடைசியில் துன்பத்தைச் சந்தித்தான். மாற்றான் உடைமையையும் தனது உடைமையாக்கிக் கொள்ள நினைத்தவன்... முடிவில், தனது உடைமையை மட்டுமின்றி உயிரையே இழந்தான். சத்தியமோ, கிரகணத்தில் இருந்து
விடுபட்ட முழு நிலவாக ஜொலித்தது!
பதவியேற்கும் வைபவத்தின்போது சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்வர். திருமணத்தை நிச்சயம் செய்வது, 'சத்ய ப்ரதிக்ஞை' ஆகும். எழுத்து வடிவில் அமைந்த ஒப்பந்தப் பத்திரம், சத்தியத்துக்கு முன்னுரிமை அளிக்கும். 'நான் சொல்வது உண்மை என்று உறுதியளிக்கிறேன்' என்ற வரிகள் அதற்குச் சான்று.
பண்டைய காலத்தில், நம்பிக்கையான ஒருவரிடம் தங்களது உடைமைகளை ஒப்படைத்து விட்டு காசி யாத்திரைக்குச் செல்வர். திரும்பி வந்து, அவற்றைப் பெற்றுக் கொள்வர். இந்தக் கொடுக்கல்- வாங்கல், எந்த வித பத்திரங்களும் இல்லாமல், 'சத்ய ப்ரதிக்ஞை'யில் நிகழும். அவர்களிடம் இருந்த வாய்மை அப்படி!
உளப் பூர்வமான வாய்மொழி சத்தியம், உயர்வானது. 'மனத் தெளிவுடன்... உண்மையாய் விளங்கும் இறைவனின் பெயரை அசை போடு. அந்த உண்மை, உடலில் இருக்கும் உபாதைகளில் இருந்து உன்னை விடுவிக்கும். இது சத்தியம்!' என்று கண்ணன் சத்திய ப்ரதிக்ஞை செய்வதாக கூறுகிறது புராணம் (அச்யுத... சத்யம் சத்யம் வதாம்யஹம்). உளமாரப் பாராட்டுகிறேன், உளமார நன்றி செலுத்துகிறேன்... என்பன போன்ற வழக்குச் சொற்கள், 'உள்ளத்துடன் இணைந்தது உண்மை' என்பதை சுட்டிக்காட்டுகின்றன.
நீதிமன்ற வழக்குகளில்... நேரில் கண்டவன் கூறும் சாட்சிக்கு முக்கியத்துவம் உண்டு. கண் பார்ப்பது மனதில் பதியும். மற்ற புலன்களுக்கு, நிகழ்வுகளை அப்படியே மனதில் பதிய வைக்கும் திறன் இருக்காது. 'பார்த்தது உண்மை' என்கிறது வேதம் (க்ஷ§ர்வை சத்யம்).
மகரிஷிகளான சங்கனும் விகிதனும் சகோதரர்கள். தனித்தனியே ஆசிரமம் அமைத்து, தர்ம சாஸ்திரத்தின் கட்டளைகளை மதித்து வாழ்ந் தனர் (இவர்களே தர்ம சாஸ்திரத்தைத் தொகுத்து அளித்தவர்கள்). ஒருமுறை, தன் அண்ணனைப் பார்க்க அவரது ஆசிரமத்துக்குச் சென் றார் விகிதன். அங்கு சங்கன் இல்லை. வெகுநேரம் காத்திருந்த விகிதனுக்கு, பசி வயிற்றைக் கிள்ளியது!
ஆசிரமத்தைச் சுற்றி வந்தவரது கண்களில் மரத்தில் தொங்கிய மாம்பழங்கள் தென்பட்டன. ஒன்றைப் பறித்து உண்டார். அப்போது உள்ளே நுழைந்த சங்கன், தம்பியைப் பார்த்து மகிழ்ந்தார். ஆனால், விகிதனின் கையில் இருந்த மாம்பழத்தைக் கண்டதும் அவரது மகிழ்ச்சி காணாமல் போனது. "இந்தப் பழம் எங்கிருந்து கிடைத்தது?" என்று தம்பியிடம் கேட்டார்.
"தங்களது ஆஸ்ரமத்தில் இருக்கும் மரத்திலிருந்து பறித்தேன்!" என்று உண்மையை உரைத்தார் விகிதன்.
"உரிமையாளரின் அனுமதியின்றி அவரது பொருளை எடுத்துக் கொள்வதை, தர்மசாஸ்திரம் எப்படி விளிக்கும்?" _ கேள்வியைத் தொடர்ந்தார் சங்கன்.
"திருட்டு!"_ விகிதன் பதிலளித்தார்.
"திருட்டுக் குற்றம் புரிந்தவனை என்ன செய்வது?"
"அரசனிடம் ஒப்படைத்து தண்டனை பெற்றுத் தர வேண்டும்!" என்ற விகிதன், "குற்றவாளி தகுந்த தண்டனையை அனுபவித்து விட்டால் அவன் தூய்மை அடைவான். குற்றத்தை மறைத்து தண்டனையில் இருந்து தப்பித்து விட்டால், மரணத்துக்குப் பிறகு எமதர்மனிடம் சிக்கி, துயரத்தைச் சந்திக்க நேரும்!" என்று சாஸ்திர நுணுக்கத்தையும் விவரித்தார்.
"அப்படியானால்... எனது அனுமதியின்றி மாம்பழத்தை பறித்த நீயும் குற்றவாளிதானே?! அரசனிடம் சென்று தவறை ஒப்புக் கொண்டு, உரிய தண்டனையை அனுபவித்து விட்டு வா!" என்றார் சங்கன்.
அண்ணனின் ஆணைப்படியே மன்னனைச் சந்திக்க அரண் மனைக்குச் சென்றார் விகிதன். அவரை சிறப்பாக வரவேற்றார் மன்னன்.
"குற்றவாளியாகிய என்னை வரவேற்பது முறையல்ல!" என்ற விகிதன், அரசரிடம் தனது குற்றத்தைக் கூறி, தக்க தண்டனை அளிக்கும்படி வேண்டினார்.
"தங்களது சிறிய தவறை மன்னித்து விட்டேன்!" என்றார் மன்னன்.
உடனே, "அரசன் என்பவன் தர்மசாஸ்திரத்தின் படி நடக்க வேண்டும். ஒருவனை தண்டிப்பதிலோ மன்னிப்பதிலோ தன்னிச்சையாகச் செயல்படக் கூடாது. சாஸ்திரத்தின் அறிவுரைப்படி மக்களை வழி நடத்திச் செல்ல முயற்சிக்க வேண்டும். அவர்கள் தவறு செய்தால் தண்டிக்க வேண்டும். இதுவே தர்மசாஸ்திரத்தின் கட்டளை. நான், மன்னிப்பு வேண்டி வரவில்லை. என் அண்ணனே எனது
தவறை சுட்டிக்காட்டி இங்கு அனுப்பி வைத்தார். எனது தூய்மையைத் தக்க வைக்க தண்டனையை நிறைவேற்றுங்கள்!" என்றார் விகிதன்.
அவரது பேச்சில் இருந்த நியாயத்தை உணர்ந்த மன்னன், தண்டனை அளித்தான். விகிதனின் கரங்கள் வெட்டப்பட்டன. அவர் வருந்த வில்லை.
கைகளை இழந்த நிலையில் வந்த விகிதனைக் கண்டதும் கண்களில் நீர் மல்க கட்டியணைத்துக் கொண்டார் சங்கன். பிறகு, இருவரும் மதிய வேளை கடமைகளை நிறைவேற்ற ஆற்றங்கரைக்குச் சென்றனர். நதியில் நீராடிய பிறகு... விகிதன், வழக்கம்போல் நீரை அள்ளி இறை வழிபாடு செய்ய முயற்சித்தபோது, வெட்டுப்பட்ட அவரின் கரங்கள் மீண்டும் முளைத்திருந்தன!
'அண்ணனின் திருவருளே இதற்குக் காரணம்' என்று கருதினார் விகிதர்.
எனவே, "அண்ணா... இழந்த கரங்களை மீண்டும் அளிக்கும் வல்லமை தங்களுக்கு இருப்பதை உணர்கிறேன். அப்படியிருக்க, தாங்களே தண்டனையை நிறைவேற்றி விட்டு, என் கரங்களை மீண்டும் வளரச் செய்திருக்கலாமே? அரசனிடம் அனுப்பியது ஏன்?" என்று கேட்டார் விகிதர்.
"சட்டத்தை நிறைவேற்ற வேண்டியவன் அரசன். அது அவனது அறம். குற்றவாளியைத் தண்டிக்கும் அரசனை பாவம் பற்றாது. அதே நேரம்... நான், உனக்கு தண்டனை
அளித்தால், உன்னை துன்புறுத்திய பாவம் என்னைப் பற்றிக் கொள்ளும்! கருணை காட்டுவது உயர்ந்த பண்பாடு. ஆனால், குற்றம் புரிந்தவனிடம் கருணை காட்டுவது பொருந்தாது. தண்டனையின் மூலம்... செய்த பாவம் அவனை விட்டு விலகும். அவன் தூய்மை பெறுகிறான். அதன் பிறகு அவனிடம் கருணை காட்டுவது கடமை. எனவே தான்... தண்டனைக்குப் பிறகு, கடவுளை வேண்டி உன் கரங்கள் மீண்டும் முளைக்க வழி செய்தேன்!" என்றார் சங்கன்.
உண்மையை நடைமுறைப்படுத்தும்போது, நம்மிடம் ஒட்டியிருக்கும் பாவக் கறைகள் அகலும். எனவே, தவறு செய்தவன் குற்றத்தை ஒப்புக் கொண்டு தண்டனையை ஏற்று, தன்னை தூய்மையாக்கிக் கொள்வதே சிறப்பு. உண்மையை கடைப்பிடிக்கும் ஆர்வம் இருப்பவர்களுக்கு மட்டுமே இது இயலும்!
இன்றைய இளைஞர்கள், உண்மையைப் பற்றிக் கொண்டு, வாழ்வில் உயர்வடைய வழிகாட்டும் தர்மசாஸ்திரத்தின் போதனைகளையும் ஏற்று சிறப்புற வேண்டும்.

தசோபநிஷத்!
உபநிடதங்கள்- இறைவனைக் குறித்து துதிக்கும் வேத பாகம் (உப= அருகில்; நி= செம்மை; சத்= அடையப்பட்டது என்று பொருள்). இவற்றை வேதாந்தம் என்றும் வேத சிரம் என்றும் போற்றுவர்.
நான்கு வேதங்களில் இருந்தும் 1,108 உபநிடதங்கள் தோன்றின என்பர். இவற்றுள் 108 விசேஷம். இவற்றிலும் சிறப்பு வாய்ந்த 10 உபநிடதங்களை, 'தசோபநிஷத்' என்று சிறப்பிப்பர். அவை: ஈச, கேன, கட, ப்ரச்ன, முண்டக, மாண்டூக்ய, தைத்ரிய, ஐதரேய, சாந்தோக்ய மற்றும் பிருக தாரண்யக உபநிடதம் ஆகும்.

Comments