ஆன்மீக கேள்வி -பதில்கள்

'தினமும் அதிதி ஒருவருக்கு போஜனம் அளித்த பிறகே, நாம் சாப்பிட வேண்டும்' என்று காஞ்சி மகா பெரியவாள் உட்பட பலரும் கூறியுள்ளனர். இன்றைய சூழலில், இதை செயல்படுத்துவது சாத்தியமா?



'அதிதிக்கு அன்னம் அளிக்க வேண்டும்' என்று பரிந்துரைக்கும் வேதம், இன்னும் ஒரு படி மேலே சென்று, 'பிறருக்கு உணவு அளிக்காமல், தான் மட்டும் உண்பவன் பாபத்தை உட்கொள்கிறான்' என்றும் எச்சரிக்கிறது (கேவலாகோபவதி கேவலாதி).
அதிதி உபசாரம் என்பது நம் பாரதத்தின் பண்பாடு. இயற்கை வளங்கள் அனைத்தும் அத்தனை உயிர்களுக்கும் உடைமை. நமக்குக் கிடைக்கும் உணவிலும் பிறரது பங்கு உண்டு. ஆகவே, பிறருக்கு... அதாவது, அதிதிக்கு உணவளிக்க வேண்டும் என்பது வேதத்தின் அறிவுரை.
இன்றைய நாகரிக வளர்ச்சி, அதிதியின் வருகைக்கு முட்டுக்கட்டை போடவில்லை. உணவு உண்டு என்பது தெரிந்தால், அதிதிகள் நிறைய கிடைப்பார்கள்! அன்னதானம் நடைபெறும் இடங்களில் அதிதிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். தர்மஸ்தலா போன்ற இடங்களில், அதிதிகளுக்கு பஞ்சம் இல்லை. (போஜன ஸ்யாதரோ ரஸ:).
ஒருவேளை, அதிதி கிடைக்காதபோது... அதற்கும் ஒரு வழி சொல்கிறது தர்மசாஸ்திரம். அரிசியை உலையில் சேர்ப்பதற்கு முன், சிறிதளவு எடுத்து அடுப்பில் உள்ள நெருப்பில் சேர்த்து விடுங்கள். அது, தேவர்களின் பிரதிநிதியான அக்னிக்கு அளித்ததாக ஆகிவிடும். சாதம் வடித்ததும்... சிறிதளவு அன்னத்தை காக்கைக்கு அளியுங்கள். மற்ற உயிரினங்களின் பிரதிநிதியாகக் கருதி, காகத்துக்கு அன்னம் இடுவதால் மிகுந்த பலன் உண்டு.
அடுப்பும் இல்லை; உலை நீரும் இல்லை; காகமும் வராது.... இப்படியரு இக்கட்டான சூழலில், 'கடமையைச் செயல்படுத்த முடியாமல், சூழல் என்னைத் தடுக்கிறது' என்று மனம் உருக கடவுளை வணங்குங்கள்; அதிதி போஜனம் செய்வித்த பலன் கிடைத்து விடும்.

திருமண பந்தத்தை சட்டத்தால் (விவாகரத்து) பிரிக்கின்றனர். புராண காலத்திலும் விவாகரத்து இருந்ததா?

விவாகத்தை ரத்து செய்வது சட்டமாகவே வந்து விட்ட பிறகு, அதை விமர்சிப்பது அழகல்ல. இருப்பினும் தங்களது சந்தேகத்தைப் போக்க சில வார்த்தைகள்...
'திருமண பந்தம் பிரிக்க முடியாத ஒன்று' என்பதே தர்மசாஸ்திரத்தின் கணிப்பு.
தர்மசாஸ்திரத்தின் கண்ணோட்டம் வேறு; சமூகக் கண்ணோட்டம் வேறு. அந்தக் காலத்தில் விவாகரத்து என்பதே இல்லை. ஏனெனில், குலம்- கோத்திரம், சொந்த- பந்தம், பரம்பரை, பண்பு ஆகியவற்றுக்கு தீங்கிழைப்பதை தர்மசாஸ்திரம் ஏற்கவில்லை. வீடு- வாகனம் முதலான நுகர் பொருட்களைப் போல், ஆண்-பெண் இணைப்பைப் பார்க்கவில்லை தர்மசாஸ்திரம்!
ஆதி காலத்திலிருந்து தொடரும் அர்த்தமுள்ள மரபுகளை வரவேற்கும் தர்மசாஸ்திரம், பிறப்புரிமைக்கும் மதிப்பு அளிக்கும். ஆனால் சமூகக் கண்ணோட்டம், மக்களது விருப்பத்துக்கே முன்னுரிமை அளிக்கிறது.
இன்னொரு விஷயம்... குழந்தையுள்ள பெண், விவாகரத்து பெற்று வேறொரு புதிய ஆடவனை கணவனாக ஏற்று வாழும் நிலையில்... முதல் கணவன் இறந்தால், அவள் விதவையாகி விடுகிறாள். அவனது இறுதிச் சடங்கை அந்தக் குழந்தை செய்ய வேண்டியிருக்கும். அதேநேரம்... இரண்டாவது கணவன் இறந்தால், கணவனை இழந்தவளாக அவள் கருதப்பட மாட்டாள்!
தர்மசாஸ்திரம்... விவாகரத்து பெற்று, புதிய இணையுடன் சேர்ந்து வாழ்பவர்களை, மாற்றுப் புருஷன் அல்லது மாற்றுப் பெண்ணுடன் குடும்பம் நடத்துபவர்களாகவே பார்க்கும். விவாகரத்தில் கிடைக்கும் நன்மையைவிட தீமையே அதிகம் என்பது அனுபவஸ்தர்களது கருத்து.
விவாகரத்து பெற்றவர்களின் குழந்தைகள், பெற்றோர் இருந்தும் அநாதைகளாக நிற்கும் அவலம் வேதனை அளிக்கிறது! சிந்தனைகளின் மாறுபாடு சட்டத்திலும் இருக்கும். பழைய சிந்தனையில் ஊறிய மனம், புதுச் சிந்தனையை வரவேற்காது. ஆனாலும் என்ன செய்ய... உலகில் மாறு பாடுகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும்!

மலேசியாவில் வசிப்பவள் நான். இங்குள்ள பெருமாள் கோயிலில், இரவு வேளையில் அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இது சரியா?

கமம், தர்ம சாஸ்திரம், ஸ்தல புராணம், வரலாற்று நிகழ்வுகள், சம்பிரதாயம், மரபு ஆகியவற்றின் அடிப்படையில் இறைவனுக்கான பணிவிடைகளில் மாறுதல் இருக்கலாம். குறிப்பிட்ட சில கோயில்களில் இருக்கும் மரத்தால் ஆன இறையுருவத்துக்கு அபிஷேகம் இருக்காது. இன்னும் சில கோயில்களில் அபிஷேகத்துக்கு முன்னுரிமை அளிக்காமல், விசேஷ நாட்களில் மட்டும் அதை (அபிஷேகம்) நடைமுறைப்படுத்துவர். காலையில் மட்டும் அபிஷேகம் நடைபெறும் கோயில்களும் உண்டு.
விதிகளுக்கு மாறாக, பக்தர்களின் விருப்பப்படி அபிஷேக- ஆராதனைகள் நடைபெறுவதும் உண்டு.
சிந்தனை மாற்றத்தால், வியாபார நிறுவனங்களாகி விட்டன சில கோயில்கள்! உண்டியல், விசேஷ பூஜைகள், சிறப்பு ஆராதனைகள் என்று பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொண்டு, பலருக்கு வேலைவாய்ப்பும் அளிக்கின்றன. வியாபாரமாகி விட்டால், அதற்குத் தகுந்தாற் போல் அலுவல்கள் மாறுவதும் இயல்பு. ஆக, இரவில் அபிஷேகம் நடப்பதில் தவறு இல்லை!

தெய்வத்தின் தீர்ப்பு, நீதிபதியின் தீர்ப்பு... இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

நீதிபதியின் தீர்ப்பு அரசியல் சாசனத்துக்குக் கட்டுப்பட்டது. சில தருணங்களில்... வக்கீல்களின் வாதாடும் திறன், சாட்சிகளின் சாமர்த்தியம், பொய்யான வாக்குமூலங்கள் ஆகியன நீதிபதிகளை ஏமாற்றிவிடக் கூடும்.
தெய்வத்தின் தீர்ப்பு அப்படியில்லை! எவராலும் இறைவனது தீர்ப்பை மாற்றி அமைக்க முடியாது. குற்றவாளியின் குணமும் அவனது மனநிலையும் இறைவனுக்கு நன்கு தெரியும். அரசன் முதல் ஆண்டி வரை எவராக இருப்பினும் தயவு தாட்சண்யமின்றி தண்டனை கிடைக்கும். மேல் முறையீடுகளும் கிடையாது!
அது மட்டுமா? இறைவனின் கோர்ட்டில் நிரபராதி கள் ஒருபோதும் தண்டிக்கப் படுவதில்லை.
நல்லோரைக் காப்பதும் பொல்லாதவரை ஒடுக்குவதும் இறைவனது வேலை (துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம்) தனது வேலையை செவ்வனே செய்பவர் கடவுள். 'பரித்ராணாய சாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம்' என்பதே கடவுளின் வாக்குறுதி!


ஆலயங்களில் யானைகளை வளர்ப்பதற்கு விசேஷ காரணங்கள் ஏதும் உண்டா?

லயம் என்பது, உயிரினங் களைப் பராமரிக்கும் இடம் அல்ல!
ஆனால், இறை அபிஷேகத்துக்கு தட்டுப்பாடின்றி பால் வேண்டும் என்பதற்காக பசுக் களையும்; விழாக் காலங்களில் இறை பவனிக்குத் தேவைப்படுமே என்று யானைகளையும் பராமரிப் பது உண்டு.
உற்ஸவ- விழாக்களுக்குத் தட்டுப்பாடின்றி கிடைக்கும் பட்சத்தில், யானைகளைக் கோயிலில் வைத்து வளர்க்கத் தேவையில்லை. கோயில் நிர்வாகத்தில் தேவையற்ற சுமையைத் திணிக்காமல், தேவைப்படும் தருணங் களில் யானையை வரவழைத்துக் கொள்வதே உத்தமம்.

வீட்டில் உள்ள கிணற்றை மூடிய பிறகு, அங்கு குடியிருந்தால் பாதிப்பு ஏற்படும் என்கின்றனரே... இது உண்மையா?


சில இடங்களில் ஆறடி தோண்டினாலே நீர் கிடைக்கும். சில நிலங்களில், பல அடிகள் தோண்ட வேண்டியிருக்கும். பருவம் தவறாமல் மழை பொழிந்தால், எல்லா இடங்களிலும் நிலத்தடி நீர் குறையாமல் இருக்கும்.
பாலைவனத்திலேயே நிலத்தடி நீர் உண்டு எனும்போது நாம் வீடு கட்டியிருக்கும் நிலத்தில் இல்லாமல் இருக்குமா என்ன? கிணற்றை மூடிவிட்டால்... அதில் இருக்கும் நீரும் நிலத்தடி நீராகி விடும். ஆகவே, கிணற்றை மூடிய இடத்தில் கூட வீடு கட்டிக் குடியிருக்கலாம். பாதிப்பு ஏதுமில்லை. தர்மசாஸ்திரம் இதை எதிர்க்கவில்லை.
ஆனால், கிணறு முழுமையாக மூடப்பட்டிருக்க வேண்டும். ஒருவேளை... கிணறை மூடுவதற்காக கொட்டப்படும் மண் சரிவர இறுகாமல் இருந்தால் ஆபத்து. இடைவெளி வழியே மழைநீர் இறங்கி, மண்ணின் இறுக்கம் மேலும் தளர்ந்து, கட்டடத்துக்கு பாதிப்பு நேரலாம்.
மற்றபடி, கிணறு மூடப்பட்ட வீட்டில் குடியிருப்ப தாலோ, அந்த இடத்தில் வீடு கட்டுவதாலோ எந்த பாதிப்பும் இல்லை.

வீட்டுக்குள் பருந்து நுழைவது போல் கனவு கண்டேன். பறவைகள்- விலங்குகளைக் கனவில் காண்பது நல்லதா?

எங்கள் வீட்டுக்குள் ஒன்பது புலிகள் நுழைவதாக கனவு கண்டேன். குறிப்பிட்ட எண்ணிக்கையில் புலிகளை கனவில் காண்பது, எதை குறிக்கும்? இதனால் ஏற்படும் பலன்கள் என்ன?

னவு என்பது நிஜம் அல்ல; மின்னல் போல மனதில் தோன்றி மறைவது!
'உடல்நலம் குன்றியதற்கான அறிகுறியே கனவு' என்பது ஆயுர்வேதத்தின் கருத்து. 'தளர்ச்சியுற்ற மனதின் வெளிப்பாடே கனவு' என்கிறது மனோதத்துவம். 'வருங்கால விளைவு களைச் சுட்டிக்காட்டுவதே கனவு' என்கிறது தர்மசாஸ்திரம் ('சொப்பன சாஸ்திரம்' என்ற தலைப்பில் விளக்கியுள்ளது). ஜோதிடம், 'கர்மவினைச் செயல்பாட்டின் ஆரம்பம்' என்று கனவு பற்றி சொல்கிறது. இல்லாத ஒன்று, இருப்பதை தோற்றி வைக்காது; அசத்தில் இருந்து சத்து முளைக்காது; நிழல் நிஜமாகாது!
விடிந்ததும் நீராடி இறைவனை வணங்குங்கள். எதிரிடையான பலன்கள் விலகும். கனவை நிஜமாக எண்ணி, அதையே அடிக்கடி அசை போட்டுக் கொண்டிருந்தால், சிந்தனை திசை மாறி இன்னல்களைச் சந்திக்க நேரும்.
உடல் ஓய்வெடுக்கும்போது மனமும் உறங்க வேண்டும். அப்படி மனம் உறங்கினால், கனவு வராது. இதற்கான வழியைத் தேடுங்கள்; நிம்மதி நிச்சயம்!

தர்ப்பையால் ஆன கூர்ச்சம்- பவித்ரம் அணிந்து யக்ஞங்கள் செய்கிறோமே... இதன் சிறப்பு என்ன?

_ர்மசாஸ்திரத்தை செயல் படுத்தும்போது, கையில் தர்ப்பை (பவித்ரம்) அணிய வேண்டும். 'பவித்ரம்' என்றால் தூய்மை! இயல்பாகவே தர்ப்பை தூய்மையானது. ஆகவே, பவித்ரம் என்பதே தர்ப்பையின் பெயராக விளங்குகிறது என்கிறது வேதம் (பவித்ரம் வை தர்பா:).
ஜபம் மற்றும் தானம் செய்யும்போது தர்ப்பபாணி யாக இருக்க வேண்டும். தாமரை இலையில் தண்ணீர் எப்படி ஒட்டாமல் இருக்கிறதோ, அதே போல் தர்ப்பை அணிந்திருப்பவனிடம் பாவம் ஒட்டாது என்கிறது தர்மசாஸ்திரம் (விப்யதெ நஸபாபேன பத்ம பத்ர மிவாம்பஸா). ஜபம் மற்றும் வேள்வியை செய்ய விடாமல் தடுக்கும் கண்ணுக்குப் புலப்படாத அரக்கர்கள், நம் கையில் உள்ள தர்ப்பை யைப் பார்த்ததும் விலகி ஓடுவர். முன்னோர் ஆராத னையில்... அரக்கர்களை விரட்ட, விருந்து படைக்கும் இடத்தை தர்ப்பையால் துடைப்பது உண்டு.
சங்கரனுக்கு சூலம், விஷ்ணுவுக்கு சக்கரம்... இதுபோல், சாஸ்திரம் பரிந்துரைக்கும் கடமைகளில் ஈடுபடுபவனுக்கான ஆயுதம் பவித்ரம்.
பூதம், பிசாசு, ப்ரம்மரஷஸ் ஆகியவை விரலில் தர்ப்பையைப் பார்த்ததும் மிரண்டு ஓடி விடுமாம்! ஆகவே, தூய்மை வேண்டியும் இடையூறுகளை அகற்றவும் தர்ப்பை அணிய வேண்டும். தர்ப்பை அணியும் விரலை, 'பவித்ர விரல்' என்கிறோம்.
பூமியின் ஆகர்ஷண சக்தியைத் தடுக்க தர்ப்பையால் ஆன ஆசனத்தில் அமருவது உண்டு. ஆகாயத்தில் இருக்கும் இடையூறைத் தடுக்க விரலில் தர்ப்பை வேண்டும் (தர்பேசுஆசுன:). கடமையைச் செய்வதற்கான பொருட்களைத் தூய்மைப்படுத்தவும் தர்ப்பையைப் பயன்படுத்துவர். அக்னி பரிசுத்தமானது என்றாலும் அதன் தூய்மையை வலுப்படுத்த தர்ப்பை உதவும்.
தேவதைகளின் இருக்கையான கும்பத்தில் கூர்ச்சம் இருக்கும். பித்ருக்களுக்கு அளிக்கும் அர்க்யமும் கூர்ச்சத்துடன் இணைந்திருக்கும். தர்ப்பையுடன் சேரும்போது பொருளின் தூய்மை மேம்படும்.மின்சாரம் பாயாத பொருட்களில் தர்ப்பையும் ஒன்று. ஆனால், மின்சாரத்தை விட பலமடங்கு செயல்திறன் கொண்டது தர்ப்பை. ஸ்ரீராமன் வீசிய தர்ப்பை, காகாசுரனை ஓட ஓட விரட்டிய கதை நாம் அறிந்ததே! 'தர்ப்பையில் சிந்திய நெய்யை நக்கியது பாம்பு. அதன் நாவை இரண்டாகப் பிளந்து தண்டனை அளித்தது தர்ப்பை...' என்கிறது புராணம். 'தர்ப்பை வளர்ந்த இடத்தில் நல்ல நீர் கிடைக்கும்; கிணறு தோண்ட தகுந்த இடமாக அமையும்' என்கிறார் வராஹமிஹிரர். மொத்தத்தில் தர்ப்பை... இயற்கையின் அன்பளிப்பு! அதன் பெருமையை அறிய தர்மசாஸ்திர நூல்களைப் படியுங்கள்; அசந்து போவீர்கள்!

Comments