'அறத்தை நடைமுறைப்படுத்த பொருளாதாரம் ஒரு பொருட்டல்ல. மனம் இருந்தால் போதும்'

விருந்தோம்பலை அன்றாட கடமை களில் ஒன்றாகச் சேர்த்திருக்கிறது வேதம் (அதிதி தேவோ பவ). தேவர்கள், ரிஷிகள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள், ஊர்வன ஆகிய அனைத்துக்கும் உணவளித்து விட்டு மீதம் இருப்பதை நாம் உணவாக ஏற்க வேண்டும் என்பது தர்ம சாஸ்திரத்தின் கட்டளை!
ஆனால், இது சாத்தியமில்லையே! ஆகவே, விலங்குகளில் நாய்; பறவைகளில் காகம்; ஊர்வனவற்றில் எறும்பு... இப்படி ஒவ்வொரு இனத்துக்கும் ஒரு பிரதிநிதியைப் பரிந்துரைத்து, இவற்றுக்கு உணவளித்தால் போதும் என்கிறது தர்மசாஸ்திரம். இதற்கு வைச்வ தேவம் என்று பெயர்.
விருந்தோம்பலை ஒரு வழிபாடாகவே செயல்படுத்துவது நம் நாட்டின் பண்பாடு. அதிதியாக வருபவனிடம் அந்த ஆதிநாராயணனே குடியிருக்கிறான். எனவே, வீடு தேடி வரும் அனைவருக்கும் இன பாகுபாடு இன்றி விருந்தளித்து உபசரிப்பதே பண்பு என்கிறது ஸனாதனம். 'மனிதனின் முதல் எதிரி பசி' என்று சுட்டிக்காட்டும் வேதம், 'ஒருவன் பிறரது பசியை தணிக்காமல், தனது பசியைக் கவனிப்பது பாபம்' என்கிறது.
சக மனிதர்களுக்கும் ஏனைய உயிர்களுக்கும் உணவு அளிப்பது, கடவுள் வழிபாடாக மாறிவிடுகிறது!
வனவாசத்தின்போதும், அதிதிகளாக வந்த முனிவர் குழாமுக்கு, கண்ணனின் உதவியுடன் விருந்தோம்பலை நடைமுறைப்படுத்தினாள் திரௌபதி என்கிறது புராணம்.
தனது குடிலுக்கு வந்த ஸ்ரீராமனை, விருந்தோம்பல் செய்து வழிபட்டாள் சபரி. கண்ணனுக்கு அக்ரூரர் அளித்த விருந்து மகிழ்ச்சியைத் தந்தது. இந்த அன்பர்கள் ஆண்டவனுக்கு விருந்தளித்தது இருக்கட்டும்... ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, தன் ஏழை நண்பன் குசேலனை உபசரித்து விருந்தளித்தாரே!

தங்களது வீடு தேடி வரும் வேதக் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் உணவு அளித்து மகிழ்ந்தார்கள் அன்றைய இல்லத்தரசிகள். அறுவடையின்போது நிலத்தில் உதிர்ந்து விழும் நெல்மணிகளை, பறவைகளுக்கு ஒதுக்குவார்கள், நம் விவசாயிகள். நம்மவர்களின் ரத்தத்துடன் ஊறிய பண்பு அது.
முன்னோர் ஆராதனையில் உணவுக்கு முன்னுரிமை, விழாக்களின்போது அன்னதானம், 'ஏகாதசியில் உண்ணாவிரதம்; துவாதசியில் பாரணை' ஆகிய சாஸ்திர நியதிகள் அனைத்துமே அதிதி உபசாரத்தை ஊக்குவிக்கும்.
இதுபோல... நம் வீட்டு சமையலிலும் விருந் தோம்பலுக்குத்தான் முக்கியத்துவம்! இதில் நாமும் பசியாறுகிறோம். வெண்ணெய்க்காகத் தயிர் கடையும்போது, மோர் கிடைத்து விடுகிறது என்று தர்மசாஸ்திரம் சொல்லும் (ஆதித்யாய பாக:...). 'இல்லறத்தில் இருப்பவர்கள், அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கும், வயதில் தங்களைக் கடந்த துறவிகளுக்கும் உணவளிக்க வேண்டும்' என்று இல்லறத்தில் உணவளிப்பதை நல்லறமாக உயர்த்திக் காட்டுகிறது சாஸ்திரம்.
உணவின் சேமிப்பு, பிறருக்கு விநியோகம் செய்வதற்காக இருக்க வேண்டும். ஸ்ரீராமனின் வழியனுப்பு விழாவில், விபீஷணன் சிறப்பு விருந்தோம்பலை நிகழ்த்தி வழிபட்டதாக ராமாயணம் கூறும். வேள்வியின்போது... அதிதி யாக வந்த வாமனரை, விருந்தோம்பலால் வழிபட்டு மோட்சம் அடைந்தான் மகாபலி.
அஸ்தினாபுரத்தில் வசித்த ஏழ்மையான குடும்பம் ஒன்று... அறுவடையான வயலில் சிதறிக் கிடக்கும் தானியங்களில் பறவைகள் எடுத்துக் கொண்டது போக, மீதம் உள்ளவற்றை சேகரித்து, உணவாக்கி உண்டது. அதாவது, உஞ்ச விருத்தியில் வாழ்ந்து வந்தது இந்தக் குடும்பம். ஏழ்மையிலும் விருந்தோம்பலைக் கடைப்பிடித்தனர் இவர்கள்.
ஒருமுறை கடும் பஞ்சம் ஏற்பட்டது! ஏழைக் குடும்பம் இன்னலை சந்தித்தது. பகல் முழுவதும் அலைந்து திரிந்தும் ஒருவர் பசியாறும் அளவே தானியம் கிடைத்தது. எனினும் கிடைத்ததை சமைத்து, கடவுளுக்குப் படைத்த பின், மீதமிருப்பதை பங்கிட்டு உண்டு வந்தனர். போதுமான உணவு இல்லாததால், அவர்களின் உடல் நலம் குன்றியது.
ஒரு நாள்... குடும்பத் தலைவனுக்கு போதுமான தானியம் கிடைத்தது. சமைத்ததும் இறைவனுக்குப் படைத்து விட்டு மீதமிருப்பதை பங்கிட்டு உண்பதற்காக அமர்ந்தனர். அப்போது வாயிலில் ஓர் அதிதியின் குரல்!
அந்த அதிதியை அன்புடன் அழைத்து வந்து, தனது பாகத்தை அளித்தான் குடும்பத் தலைவன்.விரும்பி சாப்பிட்ட அதிதிக்கு பற்றாக்குறை. உடனே, தனது பாகத்தை அளித்தாள் இல்லத் தலைவி. இதைக் கண்ணுற்ற அவளின் மகனும் தனது பங்கையும் சேர்த்து வழங்கினான். வந்தவர் அரைகுறையாக உண்டு செல்வதைப் பொறுக்காத அவர்களின் மருமகளும் தன் பங்கை அதிதிக்கு வழங்க முற்பட்டாள்.
அப்போது, ''நீ மிகவும் பலவீனமாக இருக்கிறாய். உனது பங்கு உன்னிடமே இருக்கட்டும்!'' என்று மாமனார் தடுத்தும் அவள் கேட்கவில்லை.
''தந்தையே... அதிதி என்பவர் நாராயணனின் வடிவம். அவருக்குப் பணிவிடை செய்யக் கிடைத்த அருமையான சந்தர்ப்பம் இது. நம் உயிருக்கு உயிரானது உணவு என்பது தெரியும். ஆனாலும் உயிருக்கு பயந்து, அதிதியை பசியுடன் வழியனுப்புவது பாவம். அறத்தை செயல்படுத்த அனுமதியுங்கள்'' என்றவள் தன் பங்கையும் அதிதிக்கு வழங்கினாள்.
ஆனால், அவள் வழங்கிய உணவை தூர எறிந்து விட்டு, தண்ணீர் தரும்படி கேட்டான் அதிதி. அதன்படி, நீர் எடுத்து வந்த குடும்பத் தலைவர் அதிர்ந்தார்! அவரது குடிசையே ஒளியில் மூழ்கியிருந்தது. அதிதியின் இடத்தில் தர்மராஜா காட்சி தந்தார். அவர்கள் செய்த
புண்ணியத்தின் பலன்.. அவர்கள் வானூர்தியில் ஏறிச் சென்று கடவுளுடன் இணைந்தனர். தர்மம் அவர்களை மகிழ்வித்தது.
மருமகள் தந்த பங்கு தேவைக்கும் அதிகமாக தென்பட்டது அதிதிக்கு. 'ஏற்கெனவே முழு திருப்தி எமக்கு' என்பதை உணர்த்தவே மருமகள் அளித்த உணவை வீசியெறிந்தார் அதிதி. அவரது திருப்தி, அவர் களுக்கு நிம்மதியைத் தந்தது. இப்படி, அறத்தை கடைப்பிடிப்பதில் அவர்களுக்கு இருந்த பற்றுதல், தர்மராஜாவை நெகிழ வைத்து, கடவுளோடு இணைக்கக் காரணமாயிற்று.
'தர்மம் தலைகாக்கும்' என்பது நான்குமறை தீர்ப்பு. உடலை வருத்தி, வேள்வியை ஏற்பவர்கள், அன்ன- ஆகாரம் இன்றி தவம் செய்பவர்கள், இறை நாமத்தில் லயித்திருப்பவர்கள், தர்மசாஸ்திரத்தின் கட்டளையை பிசகாமல் பின்பற்றுபவர்கள்... இவர்களுக்கு கிடைக்காத இன்பம் கூட, விருந்தோம்பல் செய்பவருக்கு கிடைக்குமாம்!
'அதிதி தேவோபவ' என்ற வேத வாக்கியத்தின் விளக்க உரையாக புராணம் சொல்லும் கதை இது.
இந்த ஏழைகளின் குடிலில் கீரிப்பிள்ளை ஒன்றும் வசித்தது. அதிதி (தருமராஜா) தரையில் வீசியெறிந்த உணவின் சிதறல்கள், கீரிப் பிள்ளையின் மீது பட... அதன் மேனியில் ஒருபாதி தங்க நிறமானது. பேசும் திறனும் பெற்றது கீரிப் பிள்ளை!
இந்த நிலையில் இந்திரபிரஸ்தத்தில் தர்மர் வேள்வி நடத்துகிறார் என்பதை அறிந்த கீரிப் பிள்ளை அங்கும் சென்றது. 'அங்கும் விருந்தோம்பல் நடக்கும். மீதி மேனியையும் தங்க நிறமாக்கலாம்' என்ற நப்பாசை அதற்கு! தன் எண்ணப்படியே விருந்தோம்பல் நடந்த இடத்தில் விழுந்து புரண்டது. ஆனால், அதன் உடலின் மீதி பாதி தங்க நிறமாக மாறவில்லை.
வருத்தம் அடைந்த கீரிப் பிள்ளை, தருமரிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியது... ''இங்கு நடந்த வேள்வி மிகப் பெரியது. ஆனாலும் அந்த ஏழையின் உணவில் இருந்த மகிமை இங்கு இல்லை!'' என்று ஆரம்பித்து விருந்தோம்பலின் பெருமையை விளக்கியது.
பிறரது துன்பத்தை அகற்றும் சேவையே சிறந்தது. தனது துயரத்திலும் பிறர் துயரைத் துடைக்கத் துடிக்கும் மனம் வேண்டும். அது, பிறவிப் பயனைத் தந்துவிடும்.
ரந்திதேவன் தன்னிடம் இருந்ததை எல்லாம் கொடையாக வழங்கி விட்டார். விருந்தோம்பல் முடிந்து, தான் உணவருந்த அமர்ந்தார். அப்போது பசியுடன் வந்தான் ஒருவன். தனது உணவை அவனுக்கு அளித்தார் ரந்திதேவன். அடுத்து, 'தாகம்' என்று வந்தான் ஒருவன். தான் அருந்த வைத்திருந்த தண்ணீரை அவனுக்கு அளித்தார் ரந்திதேவன். அவருக்கு பசி தெரியவில்லை. அவர்களது பசியைப் போக்கி விட்டோம் என்ற மகிழ்ச்சி இருந்தது.
'சேமிப்பு என்பது, வாரி வழங்குவதற்கே' என்கிற சாஸ்திரத்தின் கோட்பாடு, கொடையில் ஈடுபாடு ஏற்படுத்தி விருந்தோம்பலை ஊக்குவிக்கும். அது, 'அறத்தை நடைமுறைப்படுத்த பொருளாதாரம் ஒரு பொருட்டல்ல. மனம் இருந்தால் போதும்' என்ற எண்ணத்தை நம்மில் ஏற்படுத்தும்.
தருமரின் ஆடம்பரமான வேள்வியை விட தரத்தில் உயர்ந்தது குடிசைவாசியின் உணவு என்று கீரிப்பிள்ளை நமக்கு அறிவுறுத்துகிறது. அறத்தில் பற்று ஏற்பட, இளைஞர்கள் புராணங்களைப் படிக்க வேண்டும். அறத்தில்தான் அமைதி கிடைக்கும் என்பதை உணர வேண்டும். கோலாகலமான இந்தச் சூழலிலும்... மறக்காமல் புராணத்தை கொஞ்சம் புரட்டிப் பார்க்க வேண்டும்.
மிழ் நாட்டில், ராஜாஜி தலைமையில் புதிய மந்திரிசபை பதவியேற்கவிருந்த நேரம். ராஜாஜியின் ஆதரவாளரும் நெருங்கிய நண்பருமான கல்கிக்கும் மந்திரி சபையில் இடம் கிடைக்கும் என்று பலரும் நம்பினர்.
இந்த நிலையில் கல்கியை சந்தித்த அவரின் நண்பர் ஒருவர், மந்திரி பதவி குறித்து விசாரித்தார். உடனே, கல்கி பளிச்சென்று பதில் சொன்னார்:
''என்னைப் பொறுத்தவரை, கல்கி பத்திரிகையின் ஆசிரியர் பதவியை விட, வேறு உயர்ந்த பதவி எதுவும் இருப்பதாகவே நினைக்கவில்லை!''
_ புலியூர்

Comments