யோசித்தால்... வாய்ப்பின்மையில்கூட ஒரு வாய்ப்பைக் காண முடியும்.

சிறுவர்கள் சிலர், தெருவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன், ''அண்ணா... அண்ணா... ஒரே ஒரு தடவை அண்ணா!'' என்று கெஞ்சிக் கொண்டிருந்தான்.
''இதெல்லாம் உன்னால அடிக்க முடியாது. முதல்ல... பந்தை எடுத்துப் போடு!'' என்றனர். பாவம்... அந்தச் சிறுவனின் முகம் வாடி விட்டது.
எல்லாக் காலத்திலும் எல்லா விளையாட்டிலும் ஏதோ ஒரு சோனியான குழந்தை ஒதுக்கப் படுவது உண்டுதானே?!
மகாபாரதத்திலும் துரியோ தனன் சோனிக் குழந்தையாகக் காட்சியளிக்கிறான் ஓரிடத்தில்!
தருமர், அர்ஜுனன், துரியோதனன் முதலானோர் மரத்தில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பீமன், ''மரத்தில் ஏறி என்ன செய்கிறீர்கள்?'' என்று கேட்டான்.
உடனே மேலே இருந்தவர்கள், ''மரத்தில் உள்ள பழங்களைப் பறிக்கிறோம்'' என்றனர்.
''பழங்களைப் பறிக்க மரத்தில் தான் ஏற வேண்டுமா?'' என்று கேட்டான் பீமன்.
''பின்னே... 'பழமே பழமே மடியில் விழு' என்றால், பழம் விழுந்து விடுமோ?'' என்று கேலி செய்தான் துரியோதனன். மற்றவர்கள் சிரித்தனர்.
ஆனால்... அவர்களது கேலியையோ சிரிப்பையோ பொருட்படுத்தாத பீமன், ''பழமே பழமே விழு என்றால் பழம் விழும்... பார்க்கிறீர்களா?'' என்றான்.
பிறகு, 'பழமே விழு, பழமே விழு' என்று கூறியபடி மரத்தைப் பிடித்து உலுக்கினான். கிளைகளில் தொங்கிய பழங்கள் கீழே விழுந்தன. கூடவே... கிளைகளில் தொற்றிக் கொண்டிருந்த சிறுவர்களும் விழுந்தனர். துரியோதனனும் விழுந்தான்.

பீமனது பலத்தையும் தனது பலவீனத்தையும் கண்டு, பொறாமை புகையத் தொடங்கியது அவன் மனதில்! இங்கிருந்துதான் பாரதப் போருக்கான பகை ஆரம்பமானது என்பர்.
எல்லா காலத்திலும் பலவீனங்களில் இருந்தே பற்பல துன்பங்கள் தொடங்கு கின்றன. இன்றைய இளைஞர்களை நினைத்துப் பார்க்கிறேன். வாழ்க்கை விளையாட்டில்... சோனிக் குழந்தையாக ஒதுக்கப்பட்டு, முகம் வாடி, நகம் கடித்துத் தவிப்பவர்களே தென்படுகின்றனர்!
தனது பலவீனங்களை தானே வெல்ல முடியும் என்பதை இவர்கள் அறிய வேண்டும். உள்ளத்தில் உறுதியுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும்.
கடந்த ஐம்பதாண்டு கால அரசியல் நிகழ்வுகளும் சமுதாயத்தின் போக்குகளும் இளைஞர்கள் பலரையும் எதிலும் நம்பிக்கை யற்றவர்களாக மாற்றியிருக்கிறது.அரசியல்வாதிகள் மீது இவர்களுக்கு நம்பிக்கையில்லை.
லட்சியங்கள், கோஷங்கள், கொள்கைகள் ஆகியவற்றில் இளைஞர்களுக்கு ஒட்டுதல் இல்லை. ஆன்மிகத்தை எடுத்துக் கொண்டால், அத்தனையும் போலி என்று நினைக்கிறார்கள்.
நிலவு, சமுத்திரத்தில் அலைகளை எழுப்புவது போல் இந்தியா முழுவதும் ஒரு பேரலையை எழுப்பினார் காந்திஜி. இப்போதைய அரசியல் உலகில், இது போன்ற ஆரோக்கியம் உள்ள ஈர்ப்பு சக்தியைக் காண்பது அரிதாகி விட்டது. இளைய சமுத்திரம் உறைபனியாக உறைந்து கிடக்கிறது.
இது எதனால்? புதிய தலை முறையின் மனப்பான்மை இப்படி இருந்தால், நாளைய மாற்றம் எவ்விதம் சாத்தியம்?
அறிவுத் துறை, அரசியல், வணிகம், வேளாண்மை ஆகியவற்றில் எல்லாம் எதிர்காலத்தில் எத்தனையோ ஆரோக்கியமான மாற்றங்களை நாடு சந்திக்க வேண்டும். இத்தனை துறைகளிலும் இளைஞர்களது பங்கேற்பு எப்படி இருக்குமோ? நாளைய உலகில் நல்ல மாற்றம் வர வேண்டும் என்றால்... அது, இளைஞர் கள் கையில்தானே இருக்கிறது?!
ஒவ்வோர் இளைஞனும் முதலில் தன்னை நம்ப வேண்டும். குடும்பம் மற்றும் சமூகத்தில் பாதகமான சூழ்நிலைகள் பல இருக்கலாம்.
அவற்றையெல்லாம் மீறி சாதிக்கத் துடிக்கும் உற்சாகம், ஒவ்வொருவரின் ரத்தக் குழாய்களிலும் ஓட வேண்டும்.
அறிவுள்ளவர்களுக்கு எங்கும் எதிலும் வெற்றிக்கான வழி புலப் படவே செய்யும். அனுமன் வாழ்வில் ஒரு சம்பவம்.
ஸ்ரீராமன் பட்டம் சூடிய பிறகு, அவரின் அமைச்சர்கள்... அனுமனுக்கும் ஸ்ரீராமனுக்கும் உள்ள நெருக்கத்தைக் கண்டு பொறாமைப் பட்டார்களாம். எப்படியேனும் ஸ்ரீராமனிடம் இருந்து அனுமனைப் பிரித்து விட வேண்டும் என்று திட்டமிட்டார்களாம்!
அதன்படி, ஸ்ரீராமபிரானுக்கு அனுமன் செய்து வந்த சேவைகளை தாங்களே வலியச் சென்று செய்தனர். சகல வேலைகளையும் பிறர் அபகரித்துக் கொண்டதால், அனுமனின் சேவை ஸ்ரீராமபிரானுக்குத் தேவைப் பட வில்லை. ஆகவே, ஸ்ரீராமனும் அனுமனை அழைக்கவே இல்லை.
''பகவானே, தங்களுக்கான சேவையில் இருந்து என்னைப் பிரித்து விட்டனர். ஏன் இப்படி?'' என்று ஸ்ரீராமனிடம் வருத்தத்துடன் கேட்டார் அனுமன்.
''காலையில் கண் விழிப்பது முதல் இரவு தூங்கப் போகும் வரையிலும் உள்ள வேலைகளை எல்லோரும் பங்கு பிரித்துக் கொண்டு விட்டனர். ஆகவே, உனக்கென்று ஒரு வேலையும் இல்லையே!'' என்றார் ஸ்ரீராமன்.
சற்றே யோசித்தார் அனுமன். பிறகு, ''பகவானே! ஒருவர் கொட்டாவி விடும்போது, முகத்துக்கு நேரே சொடுக்குப் போட வேண்டும் அல்லவா?'' என்று கேட்டார். ஸ்ரீராமனும் ''ஆமாம்!'' என்றார்.
''இந்தப் பணியை எவரும் எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். இந்த சேவையை செய்வதற்காகவாவது அனுமதி தாருங்கள்!'' என்று வேண்டினார் அனுமன். ஸ்ரீராமனும் சம்மதித்தார். இதையடுத்து, ஸ்ரீராமபிரானுக்கு மிகவும் நெருக்கமாகி நிற்கும் நிலையைப் பெற்றார் அனுமன். யோசித்தால்... வாய்ப்பின்மையில்கூட ஒரு வாய்ப்பைக் காண முடியும்.
இளைஞன் ஒருவன், வேலை தேடி ஒவ்வோர் அலுவலகமாக அலைந்தானாம். எங்கும் வேலை கிடைக்கவில்லை. பார்த்தான் இளைஞன்... 'இங்கே வேலை காலி இல்லை!' எனும் அறிவிப்புப் பலகைகளை எழுதி விற்கும் வேலையை தனக்காக உருவாக் கிக் கொண்டான்.
எப்போதும் தனக்குப் பாதகமான சூழ்நிலைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தால், முன்னேறவே முடியாது. லட்சிய எல்லை ஒன்றை உருவாக்கிக் கொண்டு, நடைபோடுவதே நமது வேலை. நடக்க நடக்க பாதைகள் நீண்டு கொண்டே இருக்கும். முட்காடுகள், முட்டுச் சந்துகள், வேகத் தடைகள்... ஆகியவற்றையும் சந்திக்க நேரும். இதுபோன்ற தருணங்களில், நாம் செய்ய வேண்டியது... தயங்காமல் நடைபோடுவது மட்டுமே!
இதைக் கடைப்பிடிக்காமலும் துணிந்து பயணப்படாமலும் இருப்பதற்கு, வெளியே உள்ள தடைகளைவிட நம் மனதுக்குள் இருக்கும் தடைகளே காரணம். இந்த தடைகளைக் கண்டு, பலரும் சோர்ந்து போகின்றனர்.
ஒரு துளி வியர்வையை சிந்தி விட்டு, தன் மீது தங்க மழை பொழிய வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது. உடனடி பலன் கிடைக்காவிட்டால், பலரால் எந்தக் காரியத்தையும் தொடர முடிவதில்லை.
விவேகானந்தர் சொல்கிறார்: 'எந்த ஒரு லட்சியவாதியும்... அவன், தனது லட்சியத்தைச் சொல்லும்போது கேலி செய்யப்படுவான். தொடர்ந்து முன்னேறும்போது, உலகத்தாரால் அங்கீகாரம் செய்யப்படுவான். சாதித்து விட்டால், இகழ்ச்சி பாடிய அதே வாய்கள் துதி பாடும்.'
எல்லா துறைகளுக்கும் இது பொருந்துகிறது. தினசரித் தாள்களை (நாளிதழ்களை) விநியோகித்துக் கொண்டிருந்த அப்துல் கலாம், உலக அரங்கில் புகழ்பெற வில்லையா? ஏழ்மையைச் சந்தித்த லட்சுமி மிட்டல் முன்னேறவில்லையா?
பேருந்தில் முதியோருக்கென்று தனி இருக்கை ஒதுக்கியிருப்பது போல்... சமூகம், உங்களுக்காக நாற்காலியை ஒதுக்கீடு செய்து தரப் போவதில்லை. உங்கள் நாற்காலியை நீங்களே அடைய வேண்டும். அது மட்டுமல்ல... உங்களது நாற்காலியை நீங்களே தயாரிக்க வேண்டியதும் வரும். எதையும் விலை கொடுக்காமல் அடைய நினைப்பது குற்றம்; பாவம்; அதர்மம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஒரு வனத்தில்... காட்டுப் பன்றிகளின் அட்டகாசத்தால் மிகுந்த சேதம் ஏற்பட்டதாம்! அவற்றை வேட்டையாட பலரும் புறப்பட்டனர். ஆனாலும் அவர்களுக்கு, காட்டுப் பன்றிகள் அகப்படவே இல்லை.
வேட்டைக்காரர்கள் சோர்ந்து போனார்கள். கடைசியில் பெரியவர் ஒருவர், இந்தப் பன்றிகள் முழுவதையும் பிடிக்க முடியும் என்று முயற்சி செய்து, வெற்றியும் பெற்றாராம்! எப்படி வென்றார் தெரியுமா?
ஓரிடத்தில் உணவுப் பொருளைக் கொட்டி வைப்பது. அதைப் பன்றிகளைத் தின்ன விடுவது. மறுநாளும் அதேபோல் உணவை கொட்டி வைத்து, பன்றிகள் தின்று கொண்டிருக்கும்போதே... சுற்றிலும் வேலி அடைத்துக் கொண்டே வருவது. தின்று பழகிய பன்றிகள் உணவைத் தின்னும்போதே, வேலியை நாற்சதுரமாக அடைத்து விட்டால், பன்றிகள் மாட்டிக்கொள்ளுமே?! இப்படித்தான் பிடித்தாராம் பெரியவர்.
உழைக்காமல் பலனை எதிர்பார்க்கும் இளைய சமூகமே! உன்னைச் சுற்றியும் வேலிகள் உருவாகி வருகின்றன, உஷார்!

Comments