கண்களைக் கவரும் ஸ்ரீதண்டாயுதபாணி!

ந்திய தேசம், ஆன்மிகம் ததும்பும் பூமி. நாயன்மார்கள், ஆழ்வார்கள் மற்றும் அருளாளர்கள் இறைவனைப் போற்றிப் பரவிய பூமி. இங்கு, எத்தனையோ ஆலயங்கள்... வழிபாட்டு மன்றங்கள்! காலம் காலமாக, வைத்திய சிகிச்சை முறைகள் இருந்தாலும், இறைவனை இடையறாது வணங்கினால், தீராத பிணிகளும் தீரும் என்பதை பன்னெடுங்காலமாக நிரூபித்து வரும் புண்ணிய பூமி இது!
தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் பலர், இறை வழிபாட்டின் அவசியத்தை உணர்ந்து, தங்களது பகுதிகளில் எண்ணற்ற ஆலயங்களை ஸ்தாபித்தனர். அதுமட்டுமின்றி, பிற தேசங்களை வென்றதன் அடையாளமாக அங்கும் ஆலயங் களை அமைத்தனர். குடிமக்களின் குறைவில்லா வாழ்வுக்கு, இந்த ஆலயங்களில் உள்ள கடவுளர்கள் அருள்பாலித்தனர்.

இப்படி சேர, சோழ, பாண்டியர்கள், நாயக்கர் கள் மற்றும் பல்லவர்கள் உள்ளிட்டோர் தமிழகத் தில் பிரமாண்ட திருக்கோயில்களைக் கட்டி புண்ணியம் தேடிக் கொண்டனர். இவற்றில் சோழர்களின் பங்கு மகத்தானது. சோழப் பேரரசர்கள் தாங்கள் ஆட்சி செய்த பகுதிகளில் ஏராளமான ஆலயங்களைக் கட்டி, அவற்றின் நிரந்தர வழிபாட்டுக்கு நிவந்தங்களையும் ஏற்படுத்தினார்கள்.
சோழ நாட்டில் உள்ள திருக்கோயில் ஒன்றையே இந்த இதழ் 'ஆலயம் தேடுவோம்' பகுதிக்காகத் தரிசிக்க இருக்கிறோம்.
முத்துப்பேட்டைக்கு அருகே உள்ள சிறு கிராமம், சித்தமல்லி. இங்குதான் அருள்மிகு அபிராமி அம்மன் சமேத அருள்மிகு குலசேகர ஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்ளது. கட்டடக்கலை நுட்பம் மற்றும் புராணம் சார்ந்த வழிபாட்டுக்கு உதாரணமாகத் திகழ்கிறது இந்த ஆலயம்.
எங்கே இருக்கிறது சித்தமல்லி?
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் இருந்து முத்துப்பேட்டை செல்லும் சாலையில் உள்ள கிராமம் சித்தமல்லி. மன்னார்குடியில் இருந்து சுமார் 28 கி.மீ. தொலைவு. முத்துப்பேட்டையில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவு. இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட திருக்கோயில் இது.
11-ஆம் நூற்றாண்டில் மன்னன் குலசேகர பாண்டியன் இந்த ஆலயத்தைக் கட்டுவித்தானாம். பிற்கால சோழ மன்னனான 3-ஆம் ராஜராஜன் காலத்தில் கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் கட்டப் பட்டதாகவும் தகவல் உண்டு. தவிர, 3-ஆம் ராஜேந்திரன், நாயக்க மன்னர்கள் முதலானோர் இந்த ஆலயத்துக்கு திருப்பணிகள் பல செய்துள்ளனராம். கி.பி. 1256-ஆம் ஆண்டு கல்வெட்டில், 'ராஜேந்திர சோழ வள நாட்டு, புறக்கரம்பை நாட்டு சுத்தமல்லி சதுர்வேதி மங்கலத்து' என்று சித்தமல்லி ஊரின் பெயர் குறிப்பிடப் பட்டுள்ளது.
''பாண்டவர்கள் தங்களது வனவாசத்தின்போது, சித்தமல்லியில் சில நாட்கள் தங்கினராம். அப்போது இந்த ஊர், முன்னூதி மங்கல அக்ரஹாரம் எனப்பட்டது. இங்குள்ள ஸ்ரீகுலசேகர ஸ்வாமியை பாண்டவர்கள் வணங்கி வந்துள்ளனர்'' என்கிறார் ஆலய அர்ச்சகர். ஒரு காலத்தில் இந்த ஊரில் உள்ள அக்ரஹாரத்தில் ஏராளமான அந்தணர்கள் வசித்து வந்தனர். அப்போது, தினமும் இந்த குலசேகர ஸ்வாமி ஆலயத்துக்கு வந்து ஈசனையும் அன்னை அபிராமியையும் வணங்கிச் செல்வர். தவிர, கோயில் திருவிழாக்களிலும் ஒரு கட்டளையை ஏற்று, அதைச் சிறப்புற செய்து, ஈசனின் அருள் பெற்று சிறந்து விளங்கினர்.
முன் காலத்தில் எழிலார்ந்த கோலத்துடன் திகழ்ந்து வந்துள்ளது ஸ்ரீகுலசேகர ஸ்வாமி ஆலயம். தினப்படி பூஜைகள், விசேஷங்கள், விழாக்கள்... என திரண்ட பக்தர் கூட்டத்தின் நடுவே விமரிசையாக நடைபெற்றதாம்! கோயிலில் அனுதினமும் மேளம் வாசிக்க, வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு... முதலான நிரந்தர வழிபாடுகளுக்கு கட்டளைதாரர்கள் பலரும் இருந்துள்ளனர். சந்நிதியில் தீபம் ஏற்ற, இலுப்பை எண்ணெயைத்தான் பயன்படுத்துவார்களாம். இதற்காக கோயிலுக்குச் சொந்தமாக இலுப்பைத் தோப்பே இருந்ததாம்! ஸ்வாமி விக்கிரகங்களுக்கு அணிவிக்கப்படும் வஸ்திரங்களைத் தினமும் துவைத்து, சலவை செய்து முறைப்படி பராமரிக்க, தனியே தொழிலாளி ஒருவர் பணிபுரிந்த காலமும் உண்டு.
இவையெல்லாம் பழங்கதை! இன்றைக்கு ஆலயத்தைத் தரிசிக்கும் போது, ஏக்கப் பெருமூச்சுதான் மேலிடுகிறது. குடமுழுக்கு நடந்து பல வருடங்கள் ஆகி விட்டதாம். மண்டபங்கள், ராஜகோபுரம், விமானங்கள், பிராகாரம் மற்றும் சந்நிதிகள் ஆகியவை ரொம்பவே சிதிலம் அடைந்துள்ளன.
நித்திய பூஜைக்கே திண்டாட்ட மான நிலை! கோயிலுக்கு பெரிய வருமானம் என்று ஏதுமில்லை. உள்ளூர் பக்தர்கள் சிலரது கைங்கர்யத்தால் ஓரளவு பூஜைகள் நடந்து வருகின்றன. புராதன ஆலயத்தின் இப்போதைய நிலையைக் காண்போரது மனம் வேதனைப்படத்தான் செய் கிறது. நல்லுள்ளம் கொண்ட அன்பர்களது முயற்சி மற்றும் உள்ளூர்க்காரர்களின் ஒத்துழைப் பால், கடந்த 17.11.08 அன்று பாலாலயம் நடைபெற்றது. திருப்பணி வேலைகள் மெள்ள துவங்கி உள்ளன. பழைமை வாய்ந்த அருமையான சிவாலயம், மீண்டும் கம்பீரமாக நிற்க வேண்டும் என்பதே உள்ளூர்வாசிகளது விருப்பமும் பிரார்த்தனையும்!
இனி, ஆலய தரிசனம்!
மேற்கு நோக்கி அமைந்த திருக் கோயில். விசேஷ நாளில் மட்டும் இந்த வாசலைத் திறக்கின்றனர். மற்ற நாட்களில் தெற்கு வாசல் மட்டுமே திறந்திருக்கும்.
மேற்குத் திசை முகப்பில், செங்கல் கட்டுமானத்துடன் கூடிய மூன்றடுக்கு ராஜகோபுரம். பராமரிப்புக் குறைவால், கோபுரத் தின் மேற்புறத்தில், மரம்- செடி- கொடிகள் படர்ந்துள்ளன. எதிரில் திருக்குளம்; தேவர்குளம் எனப்படுகிறது. இந்த ஆலயத்தில் நடைபெறும் விழாக்களுள் வைகாசி விசாகம் முக்கியமான ஒன்று. அப்போது, தேவர்குளத்தில் தெப்பம் விடுவார்களாம். தெப்பத் தில் உலா வரும் இறைவனை தரிசிக்க வெளியூர் பக்தர்களும் திரளாக வந்து விடுவார்களாம்! கோயிலுக்கு எதிரில் மகான் ஸ்ரீசுப்ரமண்ய யதீந்திராளின் அதிஷ்டானம் (பார்க்க பெட்டிச் செய்தி) அமைந்துள்ளது.
விஸ்தாரமான ஆலயத்தினுள் நுழைகிறோம். பலிபீடம். நந்திதேவர் மண்டபம். இடப் பக்கம் நடந்தால் பிராகாரத் துவக்கம். நாகர் மற்றும் மூஞ்சூறு வாகனத்துடன் விநாயகர். இங்குள்ள ஸ்ரீதண்டாயுதபாணி ஸ்வாமியின் சிலா விக்கிரகம், கலைநயத்துடன் காணப்படுகிறது. கால்களில் பாதரட்சை அணிந்து, இடக் கையை இடுப்பில் வைத்து, வலக் கையில் இருக்கும் தண் டத்தை பீடத்தில் ஊன்றியபடி காட்சி தருகிறார் இவர். மொட்டைத் தலை மற்றும் கழுத்தில் ருத்திராட்ச மாலைகள். இவரது திருக்கரத்தில் இருக்கும் தண்டத்தை (தடியில்) சுண்டினால், வெண்கல உலோகத்தைச் சுண்டியது போல் ஓசை எழுகிறது. ஒரே கல்லால் ஆன அற்புத வடிவம் இந்த தண்டாயுதபாணி.
ஸ்ரீமீனாட்சி அம்மனுக்கும் ஸ்ரீசுந்தரேஸ்வரருக்கும் சந்நிதி உண்டு. பிராகார வலத்தின்போது கோஷ்டங்களில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீநர்த்தன விநாயகர் ஆகியோரை தரிசிக்கி றோம். தவிர ஸ்ரீவிநாயகர், வள்ளி- தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமண்யர், ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகியோருக்குத் தனிச் சந்நிதிகள். ஸ்ரீபைரவர், சூரிய பகவான், நவக்கிரகங்கள் முதலான தெய்வத் திருவுருவங்களையும் தரிசிக்கிறோம். தல விருட்சம்- வில்வம். பிராகார வலத்தின்போது கிணறு ஒன்று தென்படுகிறது.
''ஒரு காலத்தில் இந்தக் கிணற்று நீரைக் கொண்டு தான் ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்வார்கள். கோயிலைச் சுற்றி உள்ள இடங்களில், உப்புச் சுவையுடன் நீர் கிடைத்தாலும் இந்த கிணற்று நீர் இளநீர் போல் அத்தனை சுவையாக இருக்குமாம்! இந்த கிணற்றை அதிசய சுனை என்று குறிப்பிடுவோம். இங்கு வரும் வெளியூர் பக்தர்கள், இந்த நீரை பருகி விட்டு ஆச்சரியப்படுவர். இறை வழிபாட்டுக்காகவே அமைந்த அற்புத தீர்த்தம் இது'' என்றார் சித்தமல்லி அன்பர் ஒருவர்.
மேற்கு நோக்கிய ஈசன் சந்நிதி. வெளியே விநாயகர், துவார ஸ்கந்தர். இறைவனான ஸ்ரீகுலசேகர ஸ்வாமியை அகத்தியரும் பூஜை செய்து வழிபட்டதாகச் சொல் கிறார்கள். ஈசனின் கருவறைக்கு அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியன உண்டு. ஆவுடையாரின் மேல் பெரிய பாணம். லிங்கத் திருமேனியில் வலது பாகத்தில் வடு ஒன்று தெரிகிறது. அர்ஜுனன் எய்த அம்பால் ஈசனுக்கு ஏற்பட்ட வடுவாம் இது.
''பாண்டவர்கள், வனவாசத்தின் போது இங்கு தங்கி இருந்தனர். அப்போது, தனக்கு தரிசனம் தரும்படி குலசேகர ஸ்வாமியிடம் வேண்டினான் அர்ஜுனன். ஆனால், ஈசன் தரிசனம் தரவில்லை. இதில் கோபமுற்று லிங்கத் திருமேனியின் மேல் அம்பு எய்தானாம்! அதனால் ஏற்பட்ட தழும்பே இன்றும் காணப்படுகிறது'' என்கிறார் உள்ளூர் அன்பர் ஒருவர்.
வருடந்தோறும் மாசி மாதம் 21-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை மூன்று நாட்களிலும் மாலை வேளையில், சூரிய பகவான் தன் கிரணங்களால் ஸ்ரீகுலசேகர ஸ்வாமியை வணங்குவாராம். இந்த நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

சகல வளங்களையும் அருளும் சர்வேஸ் வரனை உளமாரத் தொழுகிறோம்.
இங்கு அருள் பாலிக்கும் அன்னையின் திருநாமம்- அபிராமி அம்மன். சுமார் நான்கடி உயரத்தில், நான்கு திருக்கரங்களுடன் தெற்கு திசை நோக்கி தரிசனம் தருகிறாள். கேட்ட வரம் அருளும் சர்வாலங்கார பூஷிதையை வணங்குகிறோம்.
இதுபோன்ற புராதன- புண்ணிய ஸ்தலங்கள் அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் காலங் களைக் கடந்து தரிசனம் தர வேண்டாமா?
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு; தனம் சேர்ந்தால் தரிசனம் உண்டு. இறைவனின் திருப்பணிக்கு இயன்ற வரை உறுதுணையாக இருப்போம்!
மகான் ஸ்ரீசுப்ரமண்ய யதீந்திராள்!
சித்தமல்லி கிராமத்தில் அவதரித்த மகா புருஷர்- ஸ்ரீசுப்ரமண்ய சாஸ்திரிகள் என்கிற சுப்ரமண்ய யதீந்திராள். குலசேகர ஸ்வாமி கோயிலுக்கு அருகிலேயே உள்ளது இவரது அதிஷ்டானம். கி.பி. 1866-ஆம் ஆண்டில் அவதரித்த இவர், இளம் வயதிலேயே சாஸ்திரம் மற்றும் வேதங்களை கற்றார். மஹாமஹோபாத்யாய மன்னார்குடி ராஜு சாஸ்திரிகளிடம் கல்வி கற்றார். காஞ்சி மகா ஸ்வாமிகளது இறைப் பணியில், தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டு சேவையாற்றி, மகா ஸ்வாமிகளின் அபிமானத்தையும் பெற்றார்.
ஒரு முறை மயிலாடுதுறையில் யாத்திரை மேற்கொண்டிருந்த மகா பெரியவாள், அருகே உள்ள கிராமமான கோழிகுத்தியில் சரஸ்வதி அம்மாள் என்பவரது இல்லத்தில் தங்கி இருந்தபடி, பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தார். ஒருநாள், திரண்டிருந்த பக்தர் கூட்டத்தின் நடுவே உரை நிகழ்த்தினார் மகா பெரியவாள். தனது பேச்சில் ஸ்ரீசுப்ரமண்ய சாஸ்திரிகளை வெகுவாகப் புகழ்ந்தார் மகா பெரியவாள். ''பொதுவா ஒண்ணு இருந்தா இன்னொண்ணு இருக்காது. இது உலகத்தோட இயற்கை. கல்வி இருக்கும் இடத்தில் பணம் இருக்காது; பணம் இருக்கும் இடத்தில் கல்வி இருக்காது. கல்வி, பணம் - இவை இரண்டும் இருந்தால் அங்கே குழந்தைச் செல்வம் இருக்காது. கல்வி, பணம், குழந்தைச் செல்வம் - இவை மூன்றும் இருந்தால், அவரது வீட்டில் எவருக்காவது உடல்நலன் படுத்திக் கொண்டே இருக்கும். ஒருவேளை இவை நான்குமே சுபமாக இருந்தால் அந்த கிரஹத்தில் நிம்மதி இருக்காது. இது பரவலாக நாம் பார்க்கக் கூடிய நிஜம். ஆனால், இதற்கு விதிவிலக்கானவர்- சித்தமல்லி சுப்ரமண்ய சாஸ்திரிகள். பக்தி, படிப்பு, செல்வம், ஆரோக்கியம் முதலான அனைத்து வளங்களையும் ஒருங்கே பெற்றவர் இவர். இது இறைவனின் அருள்! இப்போது அவருடைய மகளின் கிரஹத்தில் தங்கியபடிதான், உரை நிகழ்த்திக் கொண்டிருக்கிறேன்'' என்றாராம்!
வாழ்வில் சகல வளங்களையும் பெற்று, குறைவின்றி வாழ்ந்தவர், சுப்ரமண்ய சாஸ்திரிகள். இவருக்கு ஐந்து மகள்களும், நான்கு மகன்களும் உண்டு.
ஒரு முறை சுப்ரமண்ய சாஸ்திரிகள் உடல் நலக் குறைவுடன் காணப்பட்டார். அந்தக் காலத்தில் இது போன்ற தருணங்களில், 'ஆபத்சந்நியாசம்' வாங்கிக் கொள்வார்கள். அதாவது, இந்த சந்நியாசத்தை ஏற்றால், மறு பிறவி எடுத்ததாக ஆகிவிடுமாம். இதன் மூலம், தற்போது இருந்து வரும் நோய் உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து விடுதலை கிடைத்து விடும் என்பது சிலரது நம்பிக்கை.
ஆபத்சந்நியாசத்தை அவரவரே எடுத்துக் கொள்ள லாம். எனினும் பிறகு சந்நியாசியிடம் சென்று முறைப் படி ஆபத்சந்நியாசம் எடுக்க வேண்டுமாம்.
முதலை ஒன்று, ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த ஸ்ரீஆதிசங்கரரின் காலை கவ்வி இழுக்க... இந்த ஆபத்தில் இருந்து தப்பிக்க ஸ்ரீஆதிசங்கரர், ஆபத் சந்நியாசம் எடுத்துக் கொண்டாராம் (இதற்கு தன் அன்னையிடம் நிபந்தனை விதித்தார் என்பது தனிக் கதை). இதையடுத்து, முறைப்படி இந்த சந்நியாசத்தை எடுத்துக் கொண்டார்.
சுப்ரமண்ய சாஸ்திரிகளும் ஆபத்சந்நியாசம் எடுத்துக் கொண்டவர். எப்படி?
ஒரு நாள் காஞ்சிபுரத்தில் மகா பெரியவாளைச் சந்தித்து, ''எனக்கு ஆபத்சந்நியாசம் வழங்குங்கள்'' என்றாராம் சுப்ரமண்ய சாஸ்திரிகள். ''நீ ஊருக்குப் போ. பண்டிதர்களை அனுப்புகிறேன்'' என்றாராம் ஸ்வாமிகள். இதையடுத்து சில நாட்களில் சுப்ர மண்ய சாஸ்திரிகளின் உடல்நிலை மோசமானது. அப்போது, காஞ்சிபுரம் ஸ்ரீமடத்தில் இருந்து சாஸ்திரிகளுக்கு ஆபத்சந்நியாசம் வழங்குவதற்காக இரண்டு பண்டிதர்கள் சித்தமல்லிக்கு வந்தனர்.
ஆபத்சந்நியாசம் எடுத்துக் கொண்டால், மூன்று நாட்கள் மட்டுமே வீட்டில் தங்கலாம். சாஸ்திரிகளோ அப்போது உடல்நிலை முடியாமல் இருந்தார். இந்த நேரத்தில் எப்படி ஆபத்சந்நியாசம் கொடுப்பது என்று வந்தவர்களும் வீட்டில் இருந்தவர்களும் குழம்பினர். எனினும் ஆபத்சந்நியாசம் கொடுக்கப்பட்டது.
இரண்டு நாட்கள் கழிந்தன. 3-வது நாள்... சாஸ்திரிகளின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. மறுநாள்,
ஆபத்சந்நியாச தர்மப்படி சாஸ்திரிகள் வேறு இடத்தில் தங்க வேண்டும். அதற்காக, மடம் ஒன்றும் தயார் செய்யப்பட்டது. குடும்பத்தினர் மற்றும் உள்ளூர்க்காரர்கள் அனைவருக்கும் ஆசி வழங்கியவர், கிலோ கணக்கில் கற்பூரத்தைக் கொண்டு வந்து ஏற்றச் சொன்னார். கற்பூரம் கொழுந்து விட்டு எரியும்போது, சாஸ்திரிகளின் சிரசில் இருந்து ஓர் ஆத்ம ஜோதி புறப்பட்டு, கற்பூர ஜோதியுடன் இரண்டறக் கலந்து வானவெளியில் செல்வதைக் கண்ட தாகச் சொல்வர்.
அதே நேரத்தில் காஞ்சிபுரம் மடத்தில் இருந்த மகா பெரியவாள், ''அதோ... சுப்ரமண்ய சாஸ்திரிகள் மோட்சத்துக்குப் போயிண்டிருக்கார், பாருங்கோ'' என்று உடன் இருந்த சிஷ்யர்கள் மற்றும் பக்தர்களிடம் வானத்தைக் காட்டிச் சொன்னாராம்.
இது நடந்தது கி.பி. 1933-ஆம் ஆண்டில்! இதுவே இவரது மகாசமாதி வருடம். சுப்ரமண்ய சாஸ்திரிகளது 75-வது வருட ஆராதனை உற்ஸவம் கடந்த 17.12.08 அன்று சித்தமல்லியில் உள்ள அவரது அதிஷ்டானத்தில் நடந்தேறியது.
அதிஷ்டானம் வந்து வணங்கும் பக்தர்களுக்கு இன்றைக்கும் இன்னருள் புரிந்து வருகிறார் சுப்ரமண்ய சாஸ்திரிகள்.

தகவல் பலகை
தலம் : சித்தமல்லி.
மூலவர் :அருள்மிகு அபிராமி அம்மன் சமேத ஸ்ரீகுலசேகர ஸ்வாமி.
எங்கே இருக்கிறது?: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் இருந்து முத்துப்பேட்டை செல்லும் சாலையில் உள்ளது சித்தமல்லி. மன்னார்குடியில் இருந்து சுமார் 28 கி.மீ. தொலைவு. முத்துப்பேட்டையில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவு.
எப்படிப் போவது?: மன்னார்குடி- முத்துப்பேட்டை சாலையில் பேருந்து வசதி உண்டு. சித்தமல்லி பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால், சுமார் பத்து நிமிட நடை தூரத்தில் ஆலயத்தை அடையலாம்.
மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களில் இருந்து சித்தமல்லியை அடைய முடியும்.
தொடர்புக்கு:
எஸ். மகாலட்சுமி,
3, கீதகோவிந்தம், துளசி அபார்ட்மெண்ட்,
11/6, குப்புசாமி தெரு, தி.நகர்,
சென்னை 600 017.
போன் : (044) 2815 2533
மொபைல் : 98400 53289

Comments