நெல்லை அருகே... 16 திருக்கரங்களுடன் திகழும் அபூர்வ நரசிம்மர்!

ஸ்ரீமந் நாராயணன் எடுத்த அவதாரங்கள்- பத்து. தசாவதாரம் எனப்படும் இவை ஒவ்வொன்றுமே காரண காரியத்துக்காக ஏற்பட்டவை. உதாரணத்துக்கு, கிருத யுகத்தில் ஸ்ரீநரசிம்மராக அவதாரம் எடுத்தார் பரமாத்மா. பக்தனான பிரகலாதனைக் காப்பாற்றுவதற்கும் உண்மையான பக்தியுடன் வணங்குபவர்களை, தான் கைவிடுவதில்லை என்பதை உலகத்தாருக்கு நிரூபிப்பதற்கும் நிகழ்ந்த அவதாரம் இது.
திரேதா யுகத்தில் நிகழ்ந்தது ஸ்ரீராம அவதாரம்! ஒரு சராசரி மனிதனாக ஆசாபாசங்களுக்கு உட்பட்டு வாழ்ந்து, தனக்கு உரிய கடமைகளை நிறைவேற்றி, கடைசியில் ராவணனை சம்ஹாரம் செய்தார் ஸ்ரீராமர்.
அடுத்து... துவாபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணாவதாரம் எடுத்து கம்சன், நரகாசுரன் ஆகிய அசுரர்களையும் அதர்மத்தை யும் அழித்து, தர்மத்தை நிலை நாட்டினார் பரமாத்மா. அது மட்டுமா? வாழ்க்கைக்கான 'பகவத் கீதை' எனும் அருளுரை யையும் அளித்தார்.
இவற்றில், நரசிம்ம அவதாரத்துக்கு தனிச் சிறப்பு உண்டு. காரணம்- சில நாழிகைகளுக்கு மட்டுமே பூலோகத்தில் கோலோச்சிய அவதாரம் இது. அதாவது ஸ்ரீராமர், ஸ்ரீபலராமர், ஸ்ரீகிருஷ்ணர் ஆகிய அவதாரங்கள் பல காலங்கள் பூலோகத்தில் வசித்தனர். ஆனால், ஸ்ரீநரசிம்மர் அப்படி அல்ல. வந்தார்; வேலையை முடித்தார்; சாந்தமானார்; அனைவருக்கும் காட்சி தந்தார்; வைகுந்தத்துக்குக் கிளம்பிச் சென்றார். இவை நடந்தது அனைத்தும் சில நாழிகைகளில்..!

ஸ்ரீநரசிம்மரின் திருநட்சத்திரம்- சுவாதி. இவரது அவதாரம் நிகழ்ந்தது, மாலை வேளையில் என்பதால் ஸ்ரீநரசிம்மரை மாலையில் வணங்குவது சிறப்பு. குறிப்பாக, பிரதோஷ நாளில், மாலை வேளையில் ஸ்ரீநரசிம்மரை ஆராதிப்பது சிறப்பு. செவ்வாய், புதன், சனி ஆகிய தினங்களில் ஸ்ரீநரசிம்மரை வணங்குவது விசேஷம்.
இவரை வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும்; வியாபார அபிவிருத்தி உண்டாகும்; ஜாதகத்தில் ராகுவால் ஏற்படும் தோஷம் மற்றும் தொல்லைகள் நீங்கும்; மேலும் பில்லி- சூன்யம், எதிரிகளின் அச்சுறுத்தல்- ஆகியவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும். பிரகலாதனைப் போல் ஆழ்ந்த பக்தி இருந்தால், வாழ்வில் மிக உன்னத நிலையை அடையலாம். நாம் எண்ணிய காரியம் இனிதே நிறைவேற, ஸ்ரீநரசிம்மரின் ஆசியும் அனுக்ரஹமும் வேண்டும்.
இரண்யன் அழியக் காரணமான நரசிம்ம அவதாரத்தின் கதையைக் கொஞ்சம் பார்போமா?
காசிப முனிவர்- திதி ஆகிய இரண்டு பேருக்கும் பிறந்தவன் இரண்யன் என்கிற இரண்யகசிபு. இவன், பிரம்மதேவனைக் குறித்து கடும் தவம் இருந்து, சாகா வரம் பெற்றான்.
'தேவர்கள், மனிதர்கள், மிருகங்கள், பறவைகள் மற்றும் எந்த ஜீவராசிகளாலும் எனக்கு மரணம் நேரக் கூடாது. தவிர, பஞ்சபூதங்களாலும் எனக்கு மரணம் சம்பவிக்கக் கூடாது' என்று நிபந்தனைகள் விதித்து, பிரம்மதேவனிடம் வரம் பெற்றான்.
இவனுக்கு பிரகலாதன், அனகிலாதன், ஹிலாதன், சம்கிலாதன் என நான்கு மகன்கள் (ஐந்து என்றும் சில புராணங்கள் கூறும்). இவர்களில் மூத்தவனான பிரக லாதன், வைணவ பக்தியில் சிறந்து விளங்கினான்.
ஆனால் இவனுடைய தந்தையான இரண்யனோ, 'நானே கடவுள்' என்று பிரகடனப்படுத்தி வந்தான். 'என்னைத் தவிர வேறு எவரையும் கடவுளாக வணங்கக் கூடாது' என்று சட்டம் இயற்றியவன், 'மூவுலகுக்கும் நானே அரசன்' என்றும் அறிவித்தான். தன்னை எதிர்க்கும் மன்னர்களை சின்னாபின்னப்படுத்தினான்.
இரண்யனின் அட்டூழியத்துக்குப் பயந்து இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் இடம் பெயர்ந்து பூலோகத்துக்கு வந்து மறைந்து வாழ்ந்தனர்.
தேசத்தில் உள்ள அனைத்து வித்யாசாலைகளிலும் தனது பெயரையே உச்சரிக்க வேண்டும்; தன்னையே வழிபட வேண்டும்; சிவ வழிபாடு, விஷ்ணு வழிபாடு என எதுவும் இருக்கக் கூடாது என்று உத்தரவிட்டான். இதற்கு பயந்து அனைவரும் இவனது நாமத்தையே துதித்தனர். ஆனால் பிரகலாதன் மட்டும், விஷ்ணு பக்தனாக இருந்து வந்தான். எப்போதும் 'ஓம் நமோ நாராயணாய' எனும் மந்திரத்தை மட்டுமே உச்சரித்தான்.
அத்துடன் இரண்யனிடம், ''தந்தையே... என்னையும் உங்களையும் மட்டுமின்றி உலகிலுள்ள சகல ஜீவராசி களையும் வாழ்விப்பவன் ஸ்ரீமந் நாராயணனே! எனவே, விஷ்ணு பகவான் மீது கோபப்படாதீர்கள். அவரையே நீங்கள் வணங்க வேண்டும். அவர் உங்களையும் நல்வழிப்படுத்துவார்'' என்று சொன்னான்.
இரண்யனால் கோபத்தைக் கட்டுப் படுத்த முடியவில்லை. பிரகலாதனை வதைக்கும்படி தன் ஏவலாட்களுக்கு கட்டளையிட்டான். ஆனால், ஸ்ரீமந் நாராயணனின் அருளால் எல்லாமே நிர்மூலமாயின.
தனது முயற்சிகள் அனைத்தும் தோற்றுப் போவதைக் கண்டு இரண்யன் திகைத்து நின்றான்.
அப்போது பிரகலாதன் இரண்யனிடம் சொன்னான்: ''தந்தையே... ஸ்ரீமந் நாராய ணனை, எவன் ஒருவன் மனதில் இருத்தி தூய பக்தியுடன் வழிபடுகிறானோ, அவனுக்கு வரும் இடர்ப்பாடுகளை எல்லாம், அந்த நாராயணனே ஏற்றுக் கொள்வார். இதுவே என் வாழ்வில் நிகழ்ந்தது. இனியும் நிகழப் போகிறது. எனவே, தாங்கள் ஸ்ரீமந் நாராயணனின் பெருமையை உணர்ந்து 'ஓம் நமோ நாராயணாய:' எனும் திருமந்திரத்தை உச்சரியுங்கள்'' என்றான்.
பிரகலாதனது ஆத்மார்த்தமான விஷ்ணு பக்திக்குக் காரணம் என்ன? பல வழிகளில் இவனைக் கொல்ல முயன்றும், ஏன் அனைத் திலும் தோற்றான் இரண்யன்?
இதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.
பிரகலாதன், தன் தாயாரின் கருவில் இருக்கும்போதே நாரதரின் அருளால் வேத உபதேசங்களைக் கேட்கும் பாக்கியத்தைப் பெற்றவன்.
அதாவது, கர்ப்பவதியான பிரகலாதனின் தாயாருக்கு பக்தி மற்றும் ஞான மார்க்கம் குறித்து தெளிவுற உபதேசித் தார் நாரதர். அவள் மட்டுமின்றி அவளது கருவில் இருந்த பிரகலாதனும் இவற்றை கேட்கும் பேறு பெற்றான். இதன் பலனாகவே நாராயண பக்தியில் திளைத்தான் பிரகலாதன்.
தனது முயற்சிகள் அனைத்திலும் தோற்ற இரண்யன் ஒரு கட்டத்தில் பிரகலாதனிடம், ''ஏன் என்னை அலட்சியம் செய்கிறாய்? ஒவ்வொரு மூச்சிலும் நீ உச்சரிக்கின்ற உன் நாராயணன் இங்கே எங்கு இருக்கிறான்? அவனைக் காட்டு, துவம்சம் செய்து விடுகிறேன். பிறகு தெரிந்து கொள்வாய்... உன் நாராயணன் உயர்ந்தவனா? அல்லது நான் உயர்ந்தவனா என்பதை!'' என்று கொக்கரித்தான்.
பிரகலாதன் புன்னகைத்தான். ''என் நாராயணன் எங்கும் இருக்கிறார். அவர் இல்லாத இடமே இல்லை'' என்றான் வணங்கியபடி.
''அப்படியா... இதோ, இந்தத் தூணில் உள்ளானா?'' என்று கேட்டான் இரண்யன், தனது ஆயுதமான கதையை உயர்த்தியவாறு.
''இருக்கிறார். இந்தத் தூணின் உள்ளும் அவர் இருக்கிறார்'' என்றான் பிரகலாதன்.
அவ்வளவுதான்! தன் பலம் கொண்ட மட்டும் கதையால் ஓங்கித் தூணை அடித்து சாய்க்க முற்பட் டான் இரண்யன். அது, அந்தி சாயும் வேளை. இரண்யனின் தாக்குதலுக்குப் பின் அந்தத் தூண் பெரும் ஓசையுடன் இரண்டாகப் பிளந்து கொள்ள... பிரகலாதனின் கூற்றை மெய்ப்பிக்கும் வண்ணம் நரசிம்ம ரூபத்தில் கர்ஜனையோடு அவதரித்தார் திருமால். சிம்ம முகம்; மனித உடல்; ரத்தமயமாக ஜ்வலிக்கும் கண்கள்; கைவிரல்களில் கூர்மையான நகங்கள்! நரசிம்மம் எழுப்பிய பேரொலி கேட்டு அண்டமே நடுங்கியது.
இந்த உருவத்தைப் பார்த்து இரண்யன் பிரமித்தான். வெகுவாக கர்ஜித்துக் கொண்டே அவதாரம் செய்த நரசிம்மம், இரண்யனை அலேக்காகத் தூக்கிக் கொண்டு நடந்தது. வாசல் படி அருகே வந்து உட்கார்ந்தது. இரண்யனைத் தன் மடியில் கிடத்தி, கூர்மையான நகங்களால் அவனது வயிற்றைக் கிழித்து, குடலை உருவி, மாலையாகப் போட்டுக் கொண்டு கூத்தாடியது நரசிங்கம். அழிந்தான் இரண்யன்.
- இதுதான் நரசிம்ம அவதாரத்தின் கதை.
நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த இடம் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள அஹோபிலம் என்பர்.
பிறகு ஒரு முறை... தன்னை வேண்டி தவம் இருந்த முனிவர்களுக்கு, இந்த அவதாரக் கோலத்தை மீண்டும் காட்டி அருளினார் ஸ்ரீநரசிம்மர்.
ஆம், தென்தமிழ்நாட்டில் பொதிய மலையில் தவம் புரிந்து வந்த காசியபர் உள்ளிட்ட முனிவர்களின் வேண்டுகோளை ஏற்று, இந்த தலத்தில் (கீழப்பாவூரில்) அவர்களுக்கு ஸ்ரீநரசிம்மராக காட்சி தந்து அருளியதாக தல புராணம் சொல்கிறது.
எனவே, நரசிம்ம சொரூபம் மீண்டும் காட்சி தரக் காரணமான கீழப்பாவூரை 'பாண்டி நாட்டு அகோபிலம்' என்பர். புராணம் சொல்லும் அந்த நிகழ்வைத் தெரிந்து கொள்வோம்.
காசியப முனிவர், நாரதர், வருணன், சுகோஷன் முதலானோர் பெருமாளின் நரசிம்ம அவதாரக் கோலத்தை மீண்டும் தரிசிக்கும் விருப்பத்துடன், திருமாலை வேண்டி தவம் இருந்தனர்.
இதில் மகிழ்ந்த பெருமாள் அவர்களுக்குக் காட்சி தந்து, ''பொதிகை மலைச் சாரலில் அகத்தியர் ஏற்படுத்திய மணிமுக்தா தீர்த்தத்தில் (தாமிரபரணி) இருந்து நாற்பது கல் தொலைவில் உள்ள சித்ரா நதிக்கரையில் அமர்ந்து, எம்மை வேண்டி தவம் இயற்றுங்கள். உங்களின் வேண்டுதலை நான் நிறை வேற்றுவேன்'' என்றார்.
இதையடுத்து தேவர்களும் முனிவர்களும் ஒரு சுப தினத்தைத் தேர்ந்தெடுத்து சித்ரா நதிக்கரையில் தவத்தைத் துவங்கினர். ஆண்டுகள் ஓடின.
முனிவர்களது தவத்தில் மாலவனும் மனம் குளிர்ந்தார். ஸ்ரீதேவி- பூதேவி தாயார்களுடன் மகா உக்கிர மூர்த்தியாக- நரசிம்ம வடிவம் எடுத்து அவர்களுக்குத் திருக் காட்சி தந்து அருளினார்.
முனிவர்கள் மகிழ்ச்சியில் பரவசம் அடைந்தனர்.
அது மட்டுமா... தான் காட்சியளித்த கீழப்பாவூர் சேத்திரத் திலேயே நிரந்தரமாகக் குடிகொண்டு விட்டாராம் ஸ்ரீநரசிம்மர். காசியபர் உள்ளிட்ட முனிவர் பெருமக்களுக்கு தரிசனம் தந்த அந்த நரசிம்ம பெருமானையே இன்று கீழப்பாவூரில் தரிசிக்கிறோம்.
தரிசனம் தரும் வேளையில், மகா உக்கிரத்துடன் இருந்தாராம் ஸ்ரீநரசிம்மர். இரண்யனை அழிக்க அவதாரம் எடுத்தபோது நரசிம்மரின் ஆக்ரோஷத்தைத் தணிக்க சரபர் வந்தார்.
ஆனால், பொதியமலைக்கு அரு கிலேயே ஒரு தீர்த்தம் உருவானது. இந்த தீர்த்தத்தின் குளுமையால்தான் நரசிம்மர் சாந்தமானதாகச் சொல் கிறார்கள். நரசிம்மரை சாந்தப்
படுத்துவதற்கென உருவான தீர்த்தம், அவர் பெயராலேயே 'நரசிம்ம தீர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீநரசிம்மரின் திருச்சந்நிதிக்கு வெகு அருகில் உள்ளது இந்தப் புண்ணிய தீர்த்தம்.
வாருங்கள், புகழும் புராதனமும் நிறைந்த கீழப் பாவூர் ஸ்ரீநரசிம்மர் ஆலயத்தை தரிசிப்போம்.
ஸ்ரீநரசிம்மர் ஆலயம் என்றே அழைக்கப்பட்டா லும், இங்கு தாயாருடன் அமைந்த பெருமாள் சந்நி தியும் உண்டு. சோழர்கள் கால கட்டமைப்புடன் கொண்ட கோயில் என்கின்றனர் சிலர்; 800 வருடங்களுக்கு முன் பாண்டியர்களால் அமைக்கப் பட்ட கோயில் என்று சொல்பவர்களும் உண்டு.
எந்த மன்னர்களின் கட்டுமானமாக இருப்பினும் ஆலய புனரமைப்புப் பணிகள் மன்னர்கள் காலத்திலேயே முற்றுப் பெறவில்லை போலும். ஆலயக் கட்டுமானம் அரைகுறையாகவே உள்ளது.
நினைவு தெரிந்தவரை இந்த ஆலயத்துக்குக் கும்பாபிஷேகம் நடந்ததே இல்லை என்கிறார்கள் ஊர்க்காரர்கள்.
அமைதியான சிறிய திருக்கோயில். இது, இந்துசமய அறநிலைய ஆட்சித்துறைக்கு உட்பட்டது. தென்காசி ஸ்ரீகாசிவிஸ்வநாதர் ஆலயத்தின் பராமரிப்பில் உள்ளது. தென்னைமரம், வேப்ப மரம் மற்றும் திருக் குளம் என்று பசுமையான சூழ்நிலை; குளுமையான காட்சி!
ஆலயத்துக்குள் நுழைந்ததும், திறந்த நிலையில் ஒரு மண்டபம். இதையடுத்து இன்னொரு மண்டபம். அடுத்து கருவறையில் குடி கொண்டுள்ளார் ஸ்ரீஅலர்மேல்மங்கா - பத்மாவதி சமேத ஸ்ரீப்ரசன்ன வேங்கடாசலபதி பெருமாள். நின்ற திருக்கோலத்தில், கிழக்கு பார்த்தபடி உள்ளார்.
பெருமாளுக்கு இடப் பக்கத்தில் பத்மாவதி தாயார் உள்ளார். ஆனால், வலப் பக்கத்தில் பீடம் மட்டுமே உள்ளது. அலர்மேலுமங்கா தாயார் விக்கிரகம் இல்லை.
ஆலயத்தை ஒட்டி உள்ள கிணற்றடிக்கு அருகில், பல நூறு ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப்பட்ட விக்கிரகங்களாம் இவை. அப்போதே அலர்மேலு மங்கா விக்கிரகம் கிடைக்கவில்லையாம். பிரஸ்ன வாக்குப்படியும் வானத்தில் வட்ட மிட்ட கருடனின் வழிகாட்டுதல்படியும் பூமியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்த விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப் பட்டனவாம்.
திருவோண நட்சத்திர நாள், ஸ்ரீப்ரசன்ன வேங்கடாசலபதி பெருமாளுக்கு விசேஷம்.
இந்தக் கோயிலில் கருடாழ்வார், விஷ்ணுதுர்கை ஆகிய திருவுருவங்களையும் தரிசிக்கலாம்.
ஸ்ரீப்ரசன்ன வேங்கடாசலபதிக்குப் பின்புறம் - அதா வது மேற்குத் திசை நோக்கிக் காணப்படுகிறார் ஸ்ரீநர சிம்மர். மிகப் பழைமையான திருவடிவம். புடைப்புச் சிற்பமாக... பதினாறு திருக்கரங்களுடன், இரண்யனை தன் மடி மீது கிடத்தி வதம் செய்யும் கோலத்தில் தரி சனம் தருகிறார் ஸ்ரீநரசிம்மர்.
இரண்டு கரங்கள் மடி மீது கிடக்கும் இரண்யனை தாங்கியிருக்க, நான்கு கரங்கள் இரண்யனின் வயிற்றைக் கிழிக்க, இன்னும் இரண்டு கரங்கள் உருவிய குடலை தூக்கிப் பிடித்திருக்க... மீதமுள்ள எட்டு திருக்கரங்களில் ஆயுதங்கள் ஏந்தியபடி காட்சியளிக்கிறார் இவர்.
தலைக்கு மேல் வெண்குடை மற்றும் சாமரம். ஸ்ரீநரசிம்மருக்கு அருகில் பிரகலாதன், அவனு டைய தாயார், காசியப முனிவர் மற்றும் காசி மன்னன் ஆகியோர் காட்சி தருகின்றனர்.
''ஒரு காலத்துல ரொம்ப உக்கிரமா இருந்திருக் கார், நரசிம்மர். இங்கே வந்து வழிபடவே பலரும் பயப்படுவாங்களாம். அபிஷேகங்கள், ஆராதனை என்று முறையாக நடக்க ஆரம்பித்த பிறகு சாந்தசொரூபி ஆகி இருக்கிறார் நரசிம்மர்.
சுமார் முந்நூறு வருஷத்துக்கு முன்னாடி சாயரட்சை வேளைகளில், ஆலயம் அமைந்துள்ள இந்தப் பகுதியில் சிங்கம் கர்ஜிக்கும் சத்தம் கேட்கும் என்று என் மூதாதையர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
நரசிம்மர் சிறந்த வரப்ரசாதி. சுவாதி நட்சத்திரத் தன்று மாலை நாலரை மணி முதல் ஆறு மணி வரை விசேஷ வழிபாடு நடைபெறுகிறது. அன்று சிறப்புத் திருமஞ்சனமும் உண்டு. உக்கிரமான நரசிம்மரை சாந்தப்படுத்த பால் மற்றும் இளநீரை அபிஷேகத்துக்கு அதிகம் பயன்படுத்துகின்றனர். பானகம் நைவேத்தியம் செய்யப்படும்'' என்கிறார் அர்ச்சகர்.
நிலுவையில் உள்ள வழக்குகள், விவாஹத் தடை, வயிறு தொடர்பான நோய், பில்லி சூன்யம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டோர் அவசியம் வணங்க வேண்டிய தலம் இது!
புரட்டாசி மாத சனிக்கிழமைகள், நரசிம்ம ஜயந்தி, சுவாதி நட்சத்திர தினம், பிரதோஷ தினம் உள்ளிட்ட நாட்களில் நரசிம்மருக்கு விசேஷ வழிபாடு உண்டு.
பதினாறு திருக்கரங்கள் கொண்ட அபூர்வ நரசிம்மரை வழிபட்டு, அவரின் அருள் பெறுவோம்!
தகவல் பலகை
தலம் : கீழப்பாவூர்
மூலவர் : ஸ்ரீஅலர்மேல்மங்கா- பத்மாவதி சமேத ஸ்ரீப்ரசன்ன வேங்கடாசலபதி; ஸ்ரீநரசிம்மர்
எங்கே இருக்கிறது?: திருநெல்வேலியில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் வரும் ஊர் பாவூர்சத்திரம். நெல்லையில் இருந்து பாவூர்சத்திரத்துக்கு சுமார் 37 கி.மீ.; தென்காசியில் இருந்து பாவூர்சத்திரத்துக்கு சுமார் 16 கி.மீ.! பாவூர்சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுரண்டை செல்லும் சாலையில், சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது கீழப்பாவூர். இந்தப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் ஐந்து நிமிட நடை தூரத்தில் அமைந்துள்ளது ஆலயம்.
எப்படிப் போவது?: நெல்லை- தென்காசி சாலையில் பேருந்துகள் அதிகம் உண்டு. இந்த வழியே செல்லும் அனைத்துப் பேருந்துகளும் பாவூர்சத்திரம் நிறுத்தத்தில் நின்று செல்லும். இங்கிருந்து வேறு பேருந்து மூலம் கீழப்பாவூர் செல்ல வேண்டும். பாவூர்சத்திரத்தில் இருந்து ஆட்டோ மூலமும் ஆலயத்தை வந்தடையலாம். தென்காசியில் இருந்து சுரண்டைக்கு செல்லும் பேருந்துகள் இந்த வழியே செல்கின்றன.
ஆலய நடை திறப்பு :காலை 7:30 - 10:30- மாலை 5:00 - 7:30
தொடர்புக்கு:
ஆர். ஆனந்தன், ஆலய அர்ச்சகர்,
39, தமிழ் தெரு, கீழப்பாவூர்,
ஆலங்குளம் தாலுகா,
நெல்லை மாவட்டம். பின்கோடு: 627 806
மொபைல்: 94423 30643

Comments