திருஆப்பனூர் (செல்லூர்)

ணல் எங்காவது சோறாகுமா? என்ன, மணலில் கயிறு திரிக்கிற கதை என்கிறீர்களா?
அதுதான் இல்லை!
அவர் ஒரு சிவவேதியர். சொக்கநாதர் என்று பெயர். எல்லோரும், 'சொக்கி குருக்கள்' என்று செல்லமாகக் கூப்பிடுவர். மிகவும் வறுமையில் வாடினார் சொக்கி குருக்கள். கோயிலில் பூஜை செய்து வந்த அவரால், ஸ்வாமி நைவேத்தியத்துக்குக்கூட எதுவும் செய்ய இயலாத நிலை... தவியாகத் தவித்தார்!
ஒரு நாள், பழக்க தோஷத்தில் நைவேத்தியம் சமைப்பதற்காக உலை வைத்து விட்டார். அப்புறம்தான், மணி அரிசி கூட இல்லை என்பது நினைவுக்கு வந்தது.
'ஐயோ அபசாரம் செய்து விட்டேனே' என்று கதறினார். அப்போது, 'கவலைப் படாதே சொக்கா' என்று அசரீரி கேட்டது.
கருவறைப் படியில் மோதி அழுது கொண்டிருந்தவர், அசரீரியைக் கேட்டு அயர்ச்சியுடன் தலை நிமிர்ந்தார். 'சொக்கா, வைகைக்குப் போ. கை நிறைய மணல் எடுத்து வந்து, அன்னபூரணியை மனதார வணங்கி பானையில் இடு. இன்று முதல், உனது பானை பொங்கப் பொங்கச் சோறளிக்கும்!' என்று ஆணை பிறக்க... அயர்ச்சி, அதிர்ச்சியானது!

சாத்தியமா? இது என்ன வேடிக்கையா? மந்திரத்தில் மாங்காய் விழுமா? மணல் சோறாகுமா?
இறைவனார் இணங்கிய பின்னர், எதுதான் நடக்காது? என்னதான் நடக்காது?
ஆற்று மணலெடுத்து வந்து சொக்கி குருக்கள் உலையிட... உலை கொதித்து, அரிசி வெந்து, சோறாகி, அன்னப் பூக்கள் மலர்ந்தன.
அன்னம் மலர்த்திய வைகைக் கரை ஈசனார், அன்ன வினோதன் எனும் திருநாமம் கொண்டார்.
ஆஹா! இப்படிப்பட்ட அன்னதானப் பிரபு எங்கே எழுந்தருளியிருக்கிறார்?
பொறுங்கள். அவர் அன்னதானப் பிரபுவான அன்ன வினோதர் மட்டுமில்லை; அதிசய வினோதர்!
சோழாந்தகன் என்றொரு பாண்டிய மன்னன். இவனது ஆட்சிக் காலத்தில், வைகையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளப் பாதுகாப்புக்காக இந்தக் கரைக்கும் அந்தக் கரைக்குமாகச் சென்று கொண்டிருந்த மன்னன், குறித்த காலத்தில் சொக்கநாதர் கோயிலை அடைந்து வழிபட நினைத்தான்.
ஆனால், வெள்ளம் இன்னும் அதிகமாக... அவனால், வைகையைக் கடந்து ஆலயத்தை அடைய முடியவில்லை. தவித்தான்; திணறினான்; அழுதான்; துடித்தான்; கையில் கிடைத்த ஆப்புத்துண்டு ஒன்றை, ஆற்றங்கரையில் வைத்து, ஆண்டவனாக பாவித்து வழிபட்டான். பாண்டிய மன்னன் பொருட்டு, அந்த ஆப்பிலேயே ஆண்டவன் எழுந்தருளினார். ஆப்பில் வந்ததால், இறைவனார் 'ஆப்புடையார்' ஆனார்; ஊரும் 'ஆப்பனூர்' ஆனது (இந்தச் சோழாந்தகன் யார்? பெண்ணின் கூந்தலுக்கு மணம் உண்டா என்று கேட்டு வம்பு தொடங்கிய பாண்டிய மன்னனை நினைவிருக்கிறதா? அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லத்தான், தருமிக்குப் பாட்டு கொடுப்பார் சிவனார். அது தவறு என்று நக்கீரர் சண்டை தொடங்குவார்; திருவிளையாடல் கதை தொடரும். ஐயம் கேட்ட பாண்டியன்... செண்பக பாண்டியன் என்றழைக்கப்பட்ட வங்கிய சூடாமணி பாண்டியன்.இவனுக்குப் பின்னர் வந்தவன் பிரதாப சூரிய பாண்டியன். இவனுக்கும் பிறகு வரிசையாக வம்சத் துவஜ பாண்டியன், ரிபு மர்த்தன பாண்டியன், சோழ வம்சாந்தக பாண்டியன். இந்த சோழ வம்சாந்தகனே... சோழாந்தகன்!).
ஆப்புக்குள் வந்து அருள்பாலித்த ஆண்டவன் எங்கிருக்கிறார்?
வாருங்கள்... அந்தமில் பரம்பொருள், அன்ன வினோதராகவும் ஆப்புடையாராகவும் காட்சி கொடுத்த திருத்தலத்துக்குச் செல்லலாம்.
ஆப்புடையார் கோயில் என்று தற்போது வழங்கப் பெறும் திருக்கோயில், மதுரை நகருக்குள், செல்லூர் பகுதியில் இருக்கிறது; வைகை ஆற்றின் வடகரையில் (தாழ் பாலத்துக்கு அருகில்) அமைந்துள்ளது. சிறிய கோயில்.
முகப்பு வாயிலில் நிற்கிறோம்; இடப் பக்கத்தில் ஆலய அலுவலகம். அருகிலேயே சிறிய நந்தவனம். முகப்பு தாண்டி உள்ளே நுழைந்தால், பிராகாரம். தூண்களுடன் கூடிய மண்டப அமைப்பு அப்படியே இருக்க, அதிலிருந்தே பிராகாரத்துள் செல்லலாம்.
தெற்குத் திருச்சுற்றில் திருமாளிகை அமைப்பு.தென்மேற்கு மூலையில் அருள்மிகு சுந்தர விநாயகர்; முன்னால் மூஞ்சுறு கம்பீரமாக வீற்றிருக்க, கரிசனமாகப் பார்க்கிறார் சுந்தர விநாயகர். அடுத்ததாக லிங்கம், நாகர், ரிஷபம். தொடர்ந்து பஞ்ச லிங்கங்கள். அடுத்து, அருள்மிகு முருகப் பெருமான். வள்ளி- தேவசேனா சமேதராக, பன்னிரு கரங்களுடன் மயிலேறுநாதராக தரிசனம் தருகிறார். அப்படியே வலத்தைத் தொடர்ந்தால், அம்மன் சந்நிதியையும் சேர்த்து சுற்றி வந்து விடலாம். பிராகாரத்தின் வடகிழக்கு மூலையில் வாகன மண்டபம். கிழக்குச் சுற்றுப் பகுதியில் லிங்கம், பைரவர், மகா லட்சுமி.
வலத்தை நிறைவு செய்து, பிராகாரத் துக்குள் நாம் முதலில் நுழைந்த வாயில் அருகே வந்து விடுகிறோம். கொடிமரம், பலிபீடம், நந்தி. வணங்கி, துவார விநாயகரையும் துவார சுப்பிரமணியரையும் வழிபட்டு, ஸ்வாமி சந்நிதிக்குள் நுழைகிறோம்.
உள்ளே, அருள்மிகு ஆப்புடையார்!
ஓ! சின்னஞ்சிறிய ஆப்புத் துண்டுக்குள் ஆவிர்பவித்து வந்தவரா இவர்?!
திருப்பரங்குன்றத்தில் வழிபட்ட பின்னர், ஆப்பனூர் அடைந்த திருஞானசம்பந்தர், குறிஞ்சிப் பண்ணில் ஆப்பனூர் பதிகம் பாடினார்.
முற்றும் சடைமுடிமேல் முதிரா இளம்பிறையான்
ஒற்றைப் பட அரவம் அதுகொண்டு அரைக்கணிந்தான்
செற்றமில் சீரானைத் திரு ஆப்பனூரானைப்
பற்று மனம் உடையார் வினைபற்று அறுப்பாரே

என்று கூறினார். ஆப்பனூரில் எழுந்தருளியிருக் கும் இறைவனார் பாம்பணிந்தவரே தவிர, அவருக்குச் சினம் இல்லையாம். இவரைப் பற்றிக் கொண்டவர்களுக்குப் பிற பற்றுகள் போய் விடுமாம்!
திருஆப்பனூர்க் காரணர், ஆப்பனூர் ஈஸ்வரர், ஆப்ப புரீஸ்வரர் முதலான திருநாமங்களும் கொண்ட இந்த இறைவனாரை வணங்கி நிற்கிறோம். 'ஆப்பனூர் மேவு சதானந்தமே' என்று ராமலிங்க வள்ளல் பெருமான் போற்றும் அருள்மிகு ஆப்புடையாரை மீண்டும் மீண்டும் வணங்கி மகிழ்கிறோம்.
இந்தப் பெருமானை வழிபடுவோரை வினைப் பயன் பற்றாது என்று போற்றுகிறார் சம்பந்தர்.
தகரம் அணியருவித் தடமால் வரைசிலையா
நகரம் ஒருமூன்றும் நலம் குன்ற வென்றுகந்தான்
அகர முதலானை அணி ஆப்பனூரானைப்
பகரு மனமுடையார் வினைபற்று அறுப்பாரே

- வேறொன்றும் வேண்டாம். இந்த ஆப்புடையார் திருநாமத்தைச் சொன்னால் போதுமாம்.
'பரவு மனம் உடையார் வினைபற்று அறுப்பாரே',
'பணியு மனம் உடையார் வினைபற்று அறுப்பாரே',
'பகரு மனம் உடையார் வினைபற்று அறுப்பாரே',
'பாடு மனம் உடையார் வினைபற்று அறுப்பாரே',
'பயிலு மனம் உடையார் வினைபற்று அறுப்பாரே',
'பருக்கு மனம் உடையார் வினைபற்று அறுப்பாரே',
'பைய நினைந்தெழுவார் வினைபற்று அறுப்பாரே'

என்று பாடலுக்குப் பாடல், சம்பந்தர் போற்று கிறார்.
ஸ்வாமி சந்நிதிக்கு அருகில், அதற்கு இணையா கவே அம்மன் சந்நிதி அமைந்துள்ளது. சந்நிதிக்கு முன்பாக கொடிமரம், பலிபீடம், ரிஷப வாகனம். அம்பாளுக்கு அருள்மிகு குரவம்கமழ் குழலி என்று திருநாமம். இது தேவாரத் திருநாமம்; ஞானசம்பந்த பெருமான் தமது பதிகத்தில் குறிப்பிட்ட பெயர்.
குரவம் கமழ் குழலாள் குடிகொண்டு நின்று விண்ணோர்
விரவும் திருமேனி விளங்கும் வளை எயிற்றின்
அரவம் அணிந்தானை அணி ஆப்பனூரானைப்
பரவு மனம் உடையார் வினைபற்று அறுப்பாரே
குரவ மலர்களைக் கூந்தலில் சூடியவளாக

குரவ மரங்கள் நிறைந்த வனத்தைத் தமது இருப்பிடமாகக் கொண்டு அருள்காட்சி தருபவள் இந்த அம்மை. மக்கள் வழக்கில், 'அம்பிகை அம்மை' என்றே திருநாமம். ஆமாம்... அம்மாவை, வேறு பெயர்கள் சொல்வதைவிட, அம்மா என்று அழைப்பதுதானே குழந்தைக்குப் பெருமை. அதுதானே அம்மாவுக்கும் அருமை. இந்த அம்மைக்கு அபயம் சொல்லி ஒரு பாடல் இருக்கிறது.
நிலத்தினில் பயிராய்
சலத்தினில் சுவையாய்
நெருப்பினில் வெம்மையாய் - காலில்
சொலத்தகு நடையாய்
காயத்தில் இடமாய்ச்
சுடரினில் கதிர்மதி நிலவாய்
நலத்தகு புயலில்
தாரையாய் விளங்கி
நல்லுயிர்த் தொகை புரந்தளிக்கும்
மலர்த்திகழ் குரவம் கமழ் குழல்
உமையே அஞ்சினேன்
அபயம் நின் அபயம்
'அம்மா' என்றழைத்து வணங்கி நிற்கிறோம்.

அம்மன் சந்நிதிக்கு முன்பாக, அருள்மிகு நடராஜ சபை. இந்தக் கோயிலின் நடராஜரும் சிவகாமி அம்மையும் வெகு சிறப்பானவர்கள். சிலா ரூபங்களாக... எழில் கொஞ்ச... காட்சி தருகிறார்கள். செப்புத் திருமேனிகளும் உண்டு. சற்றே முன்பாக, நவக்கிரகச் சந்நிதி. திருக்கோயிலில் உள்ள தூண்கள் பழைமையானவை. இவற்றில் ஆங்காங்கே உள்ள சிற்பங்கள் கருத்தைக் கவர்கின்றன. ஸ்ரீமுருகன், யானையுடன் கூடிய ஐயப்பன், பூதகணம், தண்டபாணி, ஆறுமுகன், அன்னமேறிய சரஸ்வதி, சாஸ்தா, குமரன், அகத்தியர், துர்கை, மீனாட்சிசுந்தரேஸ்வரர், ஸகி, சிவன் என்று ஏராளம்!
ஆப்பனூருக்கு ரிஷபபுரி (தமிழில் இடபபுரி) என்றும் ஒரு பெயர் காணப்படுகிறது. ரிஷபம் வந்து இறைவனாரை வழிபட்ட தலம் என்பதாக ஐதீகம். ஆகவே, இறைவனாருக்கு, 'ரிஷபபுரீஸ்வரர்' என்றும் ஒரு பெயர். வைகை நதிக் கரையில், 'ரிஷபதீர்த்தம்' இருப்பதாகக் கூறுகின்றனர். இந்த ஆலயத்துக்கு வைகையே தீர்த்தம். குரவமே தலமரம்; ஸ்வாமி சந்நிதிக்கும் அம்மன் சந்நிதிக்கும் இடைப் பட்ட இடத்தில் இருக்கிறது.
'மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது' என்பர். ஆப்புடையார் கோயில் சிறியதாக, ஆர்ப்பாட்டம் இல்லாமல், அடக்க ஒடுக்கமாகத்
தான் இருக்கிறது. ஆனால், மணலை நிவேதனம் ஆக்கினாலும் உலையிட்டு வதக்கினாலும் அப்படியே ஏற்று அருள் தரும் அன்பின்நாதர் எழுந்தருளியிருப்பதால், சொல்லறியா பெருமிதத்துடன் விளங்குகிறது! 'இதுதானா?' என்று வியக்கும்படியாக ஒதுங்கித்தான் இருக்கிறது. ஆனால், ஆப்புத் துண்டுக்குள்ளும் ஆண்டவனின் அருள் வந்து வாழ்த்தும் என்பதைப் புரியச் செய்த தலம் என்பதால், எண்ணறியா சிறப்புடன் திகழ்கிறது!
சொல்லுக்குள் சிக்காத பரம கருணாமூர்த்தியை, பக்கத்தில் நின்று பரவசப்படுத்தும் பெருமாட்டியை, வணங்கி விடைபெறுகிறோம்.

Comments