தாடி - மீசையுடன் அருளும் சென்றாய பெருமாள்!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது கோட்டைப்பட்டி. இங்குள்ள மலையின் மீது கோயில் கொண்டுள்ளார் ஸ்ரீசென்றாய பெருமாள்.
சுமார் 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீசென்றாய பெருமாள் திருக்கோயில் குறித்து ஒரு கதை உண்டு.
முற்காலத்தில், இந்தப் பகுதி அடர்ந்த வனமாகத் திகழ்ந்ததாம். சென்னம நாயக்கர் என்பவர், தினமும் இங்கு ஆடு- மாடுகள் மேய்க்க வருவது வழக்கம்.
ஒரு நாள், அவரது பசுக்களில் ஒன்று காணாமல் போனது. காடு முழுவதும் தேடியலைந்த சென்னம நாயக்கர், இறுதியாக அருகில் இருந்த மலையில் ஏறி அதன் உச்சியை அடைந்தார். அங்கு... இதுவரை கன்று ஈனாத இவரது பசு பால் சொரிய, பெருமாளே அந்தப் பாலை அருந்திக் கொண்டிருந்தார்!
பரவசம் அடைந்த சென்னம நாயக்கர், பெருமாளை வணங்கி நின்றார். அப்போது, ''இனி, இந்த மலையில்தான் வாசம் செய்யப் போகிறேன். என்னைப் பரிபாலிக்கும் உன்னை மட்டுமின்றி, உன் சந்ததியினரையும் நான் வாழ வைப்பேன்'' என்று அருள் புரிந்தார் பெருமாள்.

இதைக் கேட்ட சென்னம நாயக்கர், ''எனக்கு வாரிசு எவரும் இல்லையே... என்ன செய்வது?'' என்று பகவானிடம் முறையிட்டு அழுதார்.

''வருந்தாதே! உனக்கு வாரிசு உண்டாகும்; இனி, உனது வாக்குகள் யாவும் பலிக்கும்!'' என்று அருள் புரிந்தார் பெருமாள்.
நாட்கள் நகர்ந்தன. பெருமாள் அருளியபடியே சென்னம நாயக்கர் தம்பதிக்குக் குழந்தை பிறந்ததாம்.
பிற்காலத்தில் சென்னம நாயக்கரின் மூத்த மகன் கோவிந்தப்ப நாயக்கரே இந்த இடத்தில் பெருமாள் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து, திருக்கோயிலும் எழுப்பினாராம். சென்னம நாயக்கருக்குக் காட்சி தந்தவர் என்பதால் இங்குள்ள பெருமாளுக்கு 'சென்றாய பெருமாள்' என்ற திருநாமம் அமைந்ததாம்!
சென்னம நாயக்கருக்கு, ஒரு பங்குனி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையன்றுதான் பெருமாள் திருக்காட்சி தந்தருளினாராம். இதையட்டி, இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இங்கு நடைபெறும் விழா பிரசித்திப் பெற்றது. பங்குனி மாதம் முதல் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கும் விழா 22-ம் நாள் வரை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
இனி, ஆலய தரிசனம்!
பசுவின் மடியில் பெருமாள் பால் அருந்திய இடம்... இப்போது கோயிலின் மகா மண்டபமாகக் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில், தாடி- மீசையுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீசென்றாய பெருமாள். சென்னம நாயக்கருக்கு இந்தக் கோலத்தில்தான் பெருமாள் தரிசனம் தந்தாராம்!
கோயிலின் பிராகாரத்தில் 48 தூண்கள் உள்ளன. இந்தப் பிராகாரத்தை ஒரு முறை வலம் வந்து, ஸ்ரீசென்றாய பெருமாளை தரிசித்து வணங்கினால் 48 நாட்கள் விரதம் இருந்து தரிசித்த பலன் கிடைக்குமாம்!
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இங்கு வந்து ஸ்ரீசென்றாய பெருமாளை பிரார்த்தித்து, பிராகார வலம் வந்து வணங்கினால், விரைவில் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இங்கு, சென்னம நாயக்கர் வம்சாவளியினர், பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்கின்றனர். சனிக் கிழமைதோறும் சிறப்பு பூஜைகளும், அன்னதானமும் நடைபெறுகிறது.

Comments