ஓதிமலையில் அருளும் அபூர்வ முருகன்!

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்' என்பது வழக்கு. அதுவும் கோவை, திருப்பூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் முருகப் பெருமானுக்கு ஏராளமான மலைக் கோயில்கள் உண்டு. அலகுமலை, அனுவாவி, சென்னிமலை, மருதமலை என்று ஏராளமான உதாரணங்களைச் சொல்லலாம். இவற்றுள், கோவைக்கு அருகில் உள்ள ஓதிமலையும் ஒன்று. இங்கு அருள் பாலித்து வரும் முருகப் பெருமானின் திருநாமம் - ஸ்ரீகுமார சுப்ரமண்யர். இந்த மலைக்கு எண்ணற்ற சிறப்புகள் உண்டு.
_ முருகப் பெருமான் குடி கொண்ட மலைகளுள், மிகவும் உயர்ந்தது இந்த ஓதிமலையே என்று சொல்லப்படுகிறது. எழுபது டிகிரி கோணத்தில் செங்குத்தாக மலை அமைந்துள்ளது.
_ வேறெங்கும் காண்பதற்கு அரிதான நிலையில், ஐந்து திருமுகங்களும், எட்டுத் திருக்கரங்களும் கொண்டு முருகப் பெருமான் இங்கு தரிசனம் தருவது விசேஷம். ஐந்து முக வடிவம் என்பது 'ஐம்முகச் சிவன்' என்பர். அதாவது, சிவபெருமானும் முருகப் பெருமானும் வேறு வேறு வடிவங்கள் அல்ல என்பதை உணர்த்தும் திருவடிவம்தான் ஐந்து திருமுகம் கொண்ட 'ஸ்ரீகுமார சுப்ரமண்யர்'. அதனால்,

இந்தப் பெருமானை சிவகுமாரன் என்றும், குமாரசிவம் என்று சொல்கின்றனர்.
''அருணகிரிநாதர் திருப்புகழில் 'ஓதிமலை' என்று குறிப்பிடப்படும் தலம் கொங்கு மண்டலத்தில் உள்ள இந்த மலைதான் எனும் கருத்து இருந்து வந்தது. ஆனால், அருணகிரிநாதர் குறிப்பிடும் 'ஓதிமலை' சோளிங்கருக்கு அருகில் உள்ள ஞானமலை என சமீபத்தில்தான் அறியப்பட்டது'' என்கின்றனர் முருகன் அடியார்கள். எனினும் 'ஓம்காரத்தின் பொருளை, இங்குதான் தந்தைக்கு ஓதினார் முருகப் பெருமான். இதனால்தான் இந்த மலை ஓதிமலை ஆயிற்று' என்கிறது ஓதிமலை தல புராணம்.
இதுதொடர்பான கதையை சற்றே சுருக்கமாகப் பார்ப்போம்.
கயிலாய மலை அன்று கோலாகலமாக இருந்தது. தேவர்கள், ரிஷிகள் மற்றும் முனிவர்கள் அனைவரும் அம்மையையும் அப்பனையும் தரிசித்தபடி இருந்தனர். அப்போது, விநாயகப் பெருமானும் முருகப் பெருமானும் அங்கே இருந்தனர். பிரம்மதேவன், இறைவனை தரிசிக்க அங்கு வந்தான். நந்திதேவர், விநாயகர் என்று துவங்கி அவையில் வணங்கத்தக்க அனைவரையும் வணங்கி, இருக்கையில் அமர்ந்தான். முருகப் பெருமானை மட்டும் கண்டுகொள்ளவில்லை.
'ஈசனின் புதல்வனான என்னைக் கண்டு காணாமல் கர்வத்துடன் இருக்கிறாரே... கயிலையில் கால்பதிப்பவருக்கு இந்த கர்வம் இருக்கக் கூடாது' என்று தீர்மானித்தான் முருகப் பெருமான். பிரம்மனின் ஆணவத்தை தகர்த்தெறியவும் முடிவு செய்தான். உடனே, பிரம்மனை அருகே அழைத்து, அவரிடம் ''தாங்கள் யார்?'' என்றான் முருகன்!
''என்னைத் தெரியாதா? நீ பாலகன் ஆயிற்றே! உனக்குத் தெரியாதுதான்! நான்தான் பிரம்மதேவன். படைக்கும் கடவுள். சர்வ லோகங்களிலும் உள்ள ஜீவன்களை படைத்து வருபவன் நானே!'' என்று செருக்குடன் தெரிவித்தான்.
''அப்படியா? சரி... இந்த உலக ஜீவன்களின் படைப்புக்கு ஆதாரமாக இருப்பது எது? சொல்லுங்கள்'' என்று பிரம்மனிடம் வினவினான் முருகன்.
''இதென்ன கேள்வி... படைப்புத் தொழிலின் ஆதாரம் ப்ரணவம்தான்'' என்றான் கம்பீரமாக!
முருகன் விடவில்லை. ''ப்ரணவம் என்பதன் பொருள் என்ன?''
''ஓம் எனும் அட்சரம்தான் ப்ரணவம் விளக்கும் பொருள்.''
''தாங்கள் சொல்வது சரிதான்... ஆனால், ஓம் எனும் அட்சரத்தின் பொருளைப் புரியும்படியாக விளக்குங்களேன்'' என்றான். பிரம்மன் தடுமாறினான்; பதில் தெரியாமல் தலை குனிந்தான்.
தந்தைக்கே வேதத்தின் பொருளை உரைத்த அந்த ஸ்வாமிநாதக் கடவுள் வெகுண்டான். பிரம்மனைத் தண்டிக்கவும் தீர்மானித்தான். ''படைப்பின் மூலமான ஓம் எனும் அட்சரத்தின் பொருளை விளக்க முடியாதவர், படைப்புக் கடவுளாக இருப்பதா? அதற்கு உமக்குத் தகுதி இல்லை'' என்று சொல்லி, அவரது தலையில் குட்டி, பூலோகத்தில் இரும்புக் கம்பிகளால் ஆன சிறையில் (இன்றும் அந்த ஊரின் பெயர் இரும்பறை. இரும்பால் ஆன அறை எனும் பொருள் கொண்டது. ஓதிமலையில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் இருக்கிறது) அடைத்தான்.
அது மட்டுமா? அடுத்து படைப்புத் தொழிலையும் தானே ஏற்றான் முருகப் பெருமான். அப்போது அவர் தங்கி இருந்த இடமே ஓதிமலை. பிரம்மதேவன் சிறை வைக்கப்பட்டிருப்பதை அறிந்த சிவனார் அங்கே தோன்றி, முருகப் பெருமானிடம் நைச்சியமாகப் பேசி, பிரம்மனை விடுவித்தார். பின்னர் இரும்பறையிலேயே எழுந்தருளினார். இங்கு உள்ள இறைவனின் திருநாமம்- கயிலாசநாதர்; சுயம்பு லிங்கம். பிரம்மதேவன் சிறைப்பட்ட அதே இடத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஓதிமலையில் இருந்தபடியே ஓம்காரத்தின் பொருள், வேதத்தின் விளக்கங்கள் ஆகியவற்றைத் தந்தைக்கு எடுத்துரைத்தானாம் முருகப் பெருமான். இதனால்தான், 'ஓதியமலை' எனும் பொருளில் ஓதிமலை ஆனதாகச் சொல்வர்.
பதினெட்டுச் சித்தர்களில் பிரதானமானவ ரான போகர், இந்த ஓதிமலை குமார சுப்ரமண்யரைத் தரிசித்துள்ளார். அப்போது, முருகப் பெருமானுக்கு ஆறு திருமுகமும், 12 திருக்கரங்களும் இருந்ததாம். ஓதிமலையின் வடகிழக்கில் சுமார் ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பகுதியில் அக்னி வளர்த்து, மூன்று யாகங்கள் செய்து முருகப் பெருமானை வழிபட்டாராம் போகர். யாகத்தால் உண்டான சாம்பல் இன்றும் அந்தப் பகுதியில், வெண்ணிற மணல் போல் - விபூதியாய் காட்சி தருகிறது. எனவே, இந்த இடத்தை 'விபூதிக் காடு' என்று வழங்கி வந்தனர். இப்போது 'பூதிக் காடு' என அழைக்கப்படுகிறது.
யாகம் நடந்ததாகச் சொல்லப்படும் இந்த இடத்தில் இருந்து, தோண்டத் தோண்ட விபூதி நிறத்திலான மணல்தான் கிடைக்கிறது. அதனால், இந்தப் பகுதி முழுதும் உள்ள மணல், போகர் செய்த யாகத்தின் மிச்சமாகக் காட்சி தருவதாகச் சொல்வர். சில காலத்துக்கு முன் வரை, ஓதிமலை ஆலயத்தின் பக்தர்களுக்கு, இந்த வெண் மணலை விபூதிப் பிரசாதமாக வழங்கி வந்தனர்.
ஆறு தலையும், 12 திருக்கரமும் கொண்டு ஆதியில் விளங்கிய ஓதிமலை முருகப் பெருமான், இன்று ஐந்து திருமுகத்துடன் எட்டுத் திருக்கரங்கள் கொண்டு காட்சி தருவதற்கு போகரே காரணம்! எப்படி என்கிறீர்களா?
இந்தப் பகுதியில், மூன்றாவது யாகத்தை முடித்த பிறகு போகருக்கு தரிசனம் தந்தாராம் முருகப் பெருமான். இதையடுத்து, பழநியம்பதிக்கு சென்று அங்கே நவபாஷாண முருகப் பெருமானது சிலையை வடிக்க எண்ணினார் போகர். ஆனால், ஓதிமலையில் இருந்து பழநிக்குச் செல்லும் வழி தெரியாமல் தவித்த போகர், ஓதிமலை முருகனிடமே இதைத் தெரிவித்தார். உடனே, தன் திருமுகத்தில் இருந்து ஒன்றையும் நான்கு திருக்கரங்களும் கொண்டு வடிவமெடுத்து, போகருக்கு உதவுவதற்காக மலையில் இருந்து இறங்கினாராம் (இதனால்தான், எஞ்சிய ஐந்து திருமுகம் மற்றும் எட்டுத் திருக்கரங்களுடன் இங்கு காட்சி தருகிறார் குமார சுப்ரமண்யர்) முருகப் பெருமான். போகரும் பின்தொடர்ந்தார்.
ஓதிமலையில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள கிராமத்தை அடைந்ததும் பழநிக்குச் செல்லும் வழியைப் போகருக்குக் காட்டியருளிய முருகன், அங்கிருந்து மறைந்தார். குமரனது அருளைப் போற்றியபடியே பழநியை நோக்கிப் பயணித்தார் போகர்.
ஓதிமலையில் இருந்து இறங்கி வந்து, போகருக்குப் பழநி செல்லும் வழியைக் காட்டிய அதே இடத்தில் - அதே கோலத்தில்... கோயில் கொண்டார் முருகப் பெருமான். அந்த இடம்... குமாரபாளையம் என்று வழங்கப்படுகிறது. ஏக முகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் குமாரபாளையத்தில் அருள் பாலித்து வருகிறார்.
ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யர் ஆலயத் தைத் தரிசிப்போமா?
தரைமட்டத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ. உயரம். மலைக்கு மேலே செல்ல சுமார் 1,880 படிக்கட்டுக்கள். வாகனங்கள் மேலே செல்ல வசதி இல்லை. எனவே, வாகனங்களைக் கீழே நிறுத்தி விட்டு, படியேறிச் சென்றே முருகப் பெருமானைத் தரிசிக்க வேண்டும். வழியில் விநாயகரைக் கடந்து, கோயிலை நெருங்குவதற்கு முன்பு வரை சற்றே செங்குத்தாக உள்ளது. மற்றபடி, சுலபமான பயணம்தான். மலையில் தண்ணீர் வசதி கிடையாது; கடைகளும் இல்லை.
மிகப் பழைமையான ஆலயம். சுமார் 1,800 வருடங்களுக்கு முற்பட்டதாம். சேரமான் பெருமாள், மனுநீதிச் சோழன், வஜ்ரங்கபாண்டியன் ஆகிய மூவேந்தர்களின் காலத்தில் ஆலயத்தின் குடமுழுக்கு விமரிசையாக நடைபெற்றதாம்! அப்போது புண்ணிய நதிகள் பலவற்றிலும் இருந்து கலசத்தில் நீர் சேகரித்து வந்து, குடமுழுக்கு வைபவம் நடந்ததாம். இதை உறுதிப்படுத்தும் சான்றுகள் ஓலைச் சுவடிகளில் இருக்கின்றவாம். செங்கற்களால் ஆன இந்த ஆலயம், 1932-ல் கருங்கல் ஆலயமாக திருப்பணி செய்யப்பட்டு, கும்பாபிஷேக வைபவம் அரங்கேறியதாம்.
சிறிய கோயில். ஆலயத்தில் ஸ்ரீவிநாயகர், நாகர், இடும்பன், விஸ்வநாதர், விசாலாட்சி, ராஜராஜேஸ்வரி, சப்தமாதாக்கள் ஆகிய தெய்வங்களுக்கு சந்நிதி உண்டு. இதை அடுத்து, ஸ்ரீகுமார சுப்ரமண்யரைத் தரிசிக்கிறோம். 28 சிவாகமங்கள் மற்றும் குமார தந்திரம் ஆகியவற்றில் விளக்கப்படாத திருமேனி இது. ஐந்து திருமுகங்கள் மற்றும் எட்டுத் திருக்கரங்களுடன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். பெருமானின் பின்புறம் மயில் வாகனம். சூர சம்ஹாரத்துக்கு முன்பு அமைந்த தலம் என்பதால், இந்திரனே இங்கு மயிலாக அமர்ந்துள்ளானாம்.
குழந்தை முகம்... அலட்சியம் செய்த பிரம்மனை மிரட்டியதால் முகத்தில் அதிகார தோரணை தென்படுகிறது. ஒரு காலைச் சற்று முன்னே எடுத்து வைத்துக் காணப்படுகின்ற தோற்றம் (இதைச் சற்று கூர்ந்து கவனித்தால்தான் தெரியும்)... அதாவது, 'எதையும் நான் சாதிப்பேன்... உங்களுக்கு உதவுவதற்காக புறப்பட்டு வருகிறேன்' என்பது போல் பக்தர்களுக்கு உதவ முன் வரும் வடிவம்! வலக் கரங்களில் ஒன்று அபய முத்திரையில் இருக்க... மற்ற மூன்று கரங்களில் கத்தி, அம்பு, வஜ்ஜிரம் ஆகியவையும், இடக் கைகளில் ஒன்று வரத முத்திரையில் இருக்க... மற்ற மூன்று கரங்களில் கேடயம், வில், பாசம் ஆகியவையும் காணப்படுகின்றன. அலங்கார சொரூபனை உளமார தரிசிக்கிறோம்.
பிற ஆலயங்களில் இருப்பது போல், பெரிய பீடம் இல்லை. இங்கு திருகு பீடத்தில் தரிசனம் தருகிறார் ஸ்ரீகுமார சுப்ரமண்யர். தரையோடு தரையாக இருக்கும் பீடம் இது!
சிவபெருமானுக்கு ஓம்காரத்தின் பொருளை விளக்கிய நிகழ்வு, மூன்று யுகங்களுக்கு முன்பு இந்த நாளில் நடந்துள்ளது என்று அகத்திய நாடி சொல்கிறதாம்! எனவே அந்த நாளைப் போற்றும் வகையில் கடந்த 30.01.09 வெள்ளிக்கிழமை அன்று ஓதிமலை முருகப் பெருமானுக்கு சிறப்பு யாகங்களும் வழிபாடுகளும் நடைபெற்றன.
பல தலங்களில் தரிசித்திருந்தாலும் ஓதிமலையில் முருகப்பெருமானை தரிசித்து திரும்பும்போது ஏற்படும் பரவச அனுபவம், ஆனந்தமானது; அனுபவித்துப் பாருங்கள், புரியும்!
முருகன் தரும் உத்தரவு!
ஸ்ரீகுமார சுப்ரமண்யரிடம் பூ வைத்து வரம் கேட்டல் எனும் பிரார்த்தனை இங்கு விசேஷம். இல்லறம், திருமணம், தொழில், விவசாயம், வெளிநாட்டு உத்தியோகம் ஆகியவை குறித்து முருகப் பெருமானிடம் உத்தரவு பெற்ற பின்னரே செயல்படுத்துகின்றனர், இந்தப் பகுதியில் வசித்து வருபவர்கள்.
வெள்ளை மற்றும் செவ்வரளிப் பூவை, முருகப் பெருமானின் சிரசின் மேல் மேல் ஆலய அர்ச்சகர் வைப்பார். அப்போது அந்தப் பூ, முருகப் பெருமானின் வலது பக்கத்தில் விழுந்தால், அவர் உத்தரவு கொடுத்து விட்டதாக எடுத்துக் கொள்கின்றனர். இடப் பக்கத்தில் விழுந்தால், சிறிது காலம் காத்திருக்க வேண்டுமாம். பூ வைத்து உத்தரவு கேட்பதற்காகவே விசேஷ தினங்களில் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

தகவல் பலகை
தலம்: ஓதிமலை.
மூலவர்: ஸ்ரீகுமார சுப்ரமண்யர் (ஐந்து திருமுகம், எட்டுத் திருக்கரங்கள்)
எங்கே இருக்கிறது?: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை அருகே இருக்கிறது ஓதிமலை. கோவையில் இருந்து அன்னூருக்கு பேருந்து வசதி உண்டு. கோவை- அன்னூர் சுமார் 35 கி.மீ. தொலைவு. அன்னூர் ஜங்ஷன் சாலையில் இருந்து ஓதிமலை ரோடு துவங்கும். இங்கிருந்து சுமார் 16 கி.மீ. பயணித்தால் ஓதிமலை அடிவாரம் வரும். மேட்டுப்பாளையத்தில் இருந்து ஓதிமலைக்கு சுமார் 26 கி.மீ. தொலைவு.
எப்படிப் போவது?: கோவை தவிர மேட்டுப்பாளையம், திருப்பூர், அவினாசி ஆகிய ஊர்களில் இருந்தும் அன்னூருக்குப் பேருந்து வசதிகள் உள்ளன. அன்னூரில் இருந்து ஓதிமலைக்குப் பேருந்து வசதி உண்டு.
நடைதிறப்பு : நண்பகல் 11:00 மணி - மாலை 4:00 வரை (மதிய பூஜை நண்பகல் 12:00 மணி).
ஆலயம் திறந்திருக்கும் தினங்கள்: திங்கள், வெள்ளி, வளர்பிறை சஷ்டி, பௌர்ணமி மற்றும் அமாவாசை, கிருத்திகை ஆகிய தினங்களில் மட்டுமே ஆலயம் திறந்திருக்கும். விசேஷ தினங்கள் விதிவிலக்கு.
 
 

Comments