கோலாப்பூர் மகாலட்சுமிக்கு திருப்பதி பெருமாளின் பரிசு

கோலாகலமாக நவராத்திரி விழா கொண்டாடப்படும் ஆலயங்களுள் ஒன்று, கோலாப்பூர் மகாலட்சுமி ஆலயம். கோலாசுரன் என்ற அரக்கனை சிம்ம வாகினியாக வந்து தேவி மகாலட்சுமி அடக்கி அருளிய தலம் என்று “கர வீர மகாத்மியம்’ கூறுகிறது.“ஸ்ரீ அம்பா’ என்று போற்றி வணங்கப்படும் கோலாப்பூர் மகாலட்சுமியை பக்த துக்காராம், பக்த ராமதாசர் போன்ற மகான்கள் போற்றிப் பாடியிருக்கிறார்கள்.
கோலாப்பூருக்கென்று பல தனிச் சிறப்புகள் உண்டு. சரஸ்வதி, சிவாநதி, கும்பி நதி, பாக்வதி, பத்ரா நதி என்ற ஐந்து புண்ணிய நதிகள், இங்கு கூடுவதால் இத்தலம் “பஞ்சகங்கா’ என்று சிறப்பிக்கப்படுகிறது.
இந்த பஞ்ச கங்கா நதிக்கரையில்தான் பல கோயில்களுக்கு நடுவே கம்பீரமாக காட்சி தருகிறது மகாலட்சுமி திருக்கோயில். இது சக்தி பீடங்களுள் ஒன்று.


மகாராஷ்டிரம் தேவி பூஜைகளுக்கு பெயர் போனது. இம்மாநிலத்தைச் சேர்ந்த குறுநில மன்னர்கள் மகாலட்சுமியை குலதெய்வமாகக் கொண்டவர்கள். அவர்கள் “மகாலட்சுமியின் அடிமை’ என்ற பட்டப் பெயருடன் பல சேவைகள் புரிந்துள்ளனர்.தடைப்பட்ட திருமணம் நடைபெறவும், குழந்தை பேறு கிட்டவும், வியாபாரம் பெருகி சுகமாக வாழவும் இங்கு வந்து அன்னையை வேண்டி பயன்பெற்றவர்கள் ஏராளம்.
கோலாப்பூர் மகாலட்சுமியை தரிசிக்க ஆண்டு முழுவதுமே பல பாகங்களிலிருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். தேங்காய், பழம், கடலை, இனிப்புகள், பேடா, குங்குமம் ஆகிய பொருட்கள் அன்னையின் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் “கோஹ்லா’ என்ற பழம் நைவேத்தியமாக வைக்கப்பட்டு பக்தர் அனைவர்க்கும் பிரசாதமாக அளிக்கப்படுகிறது.
மகாவிஷ்ணுவின் மார்பில் உறையும் தேவியல்லவா இவள்! அதனால் நவராத்திரிக்கு கோலாப்பூர் மகாலட்சுமியை அலங்கரிக்க திருப்பதி திருத்தலத்திலிருந்து பெருமாளின் பரிசாக பட்டுப்புடவைகள் வந்து சேர்கின்றன.


தங்க ஜரிகையுடன் ஒளிரும் அந்த அழகிய பட்டுப் புடவையை அணிந்து, முத்துமணி, ரத்தின மணி மாலைகள் புனைந்து மந்தஹாஸத்துடன் அருள் பொழியும் மகாலட்சுமியின் திவ்விய தரிசனக் காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும்.எத்தனையோ விழாக்கள் வந்தாலும் நவராத்திரி திருவிழாவே இவ்வாலயத்தில் மிகவும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.

Comments