பாவங்கள் போக்கும் பாலமலை அரங்கன்

இயற்கை எழிலுடன் காட்சி தரும் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகத் திகழ்கிறது, பாலமலை.ஆதிவாசி இனத்தவரகள் வசித்து வரும் இப்பகுதியில் அரங்கநாதருக்கு ஓர் ஆலயம் அமைந்துள்ளது.
அக்காலத்தில் இங்குள்ள கிராமத்தைச் சேர்ந்த ஆதிவாசி மக்கள் பசுமாடுகளை மேய்ச்சலுக்காக பாலமலைக்கு ஓட்டி வருவர்.
அப்போது ஒருவரது காராம் பசு அங்கிருந்த புதரின் மத்தியில் நின்று தானாகவே பாலைச் சொரிய, புதர்களை நீக்கிப் பார்த்தபோது, அங்கே பெருமாளின் சுயம்பு மூர்த்தம் ஒன்று பாதி மண்ணுக்குள் புதைந்த நிலையில் பிரகாசமாகத் தெரிந்தது.

விஷயத்தைக் கேள்விப்பட்டு அங்கே வந்த பெரியவர் ஒருவர். அந்த இடத்தில் ஒரு பர்ணசாலை அமைத்து சுயம்பு மூர்த்தத்துக்கு தினசரி பால் அபிஷேகம் செய்து பூஜித்து வந்தார். அவரது பூஜைக்கு ஆதிவாசி மக்களே உதவி வந்தனர்.சில நாட்களில் சுயம்பு மூர்த்தம் முழுமையாக வெளிப்பட, அருகேயுள்ள கிராமத்து மக்கள் அங்கே அரங்கனுக்கு கோயில் உருவாக்கத் திட்டமிட்டனர்.

பசு பால் சொரிந்த சுயம்பு மூர்த்தம் வெளிப்பட்ட தலம் என்பதால் பாலமலை என அழைக்கப்படுகிறது.கருவறை, அர்த்தமண்டபம் எழுப்பப் பட்டாலும் மண்டபங்கள் கட்ட ஆரம்பித்தபோது அதற்குத் தேவையான கல் கிடைக்கவில்லை. இது குறித்து அரங்கனிடமே முறையிட்டனர்.
இந்நிலையில் ஒருநாள் இரவு கோயிலின் மேற்ப்பகுதியில் பலத்த வெடிச் சத்தம் கேட்க, பயந்துபோனார்கள் கிராமத்து மக்கள். விடிந்த பின், ஓசை கேட்ட இடத்திற்கு விரைந்தார்கள்.
அங்கே, கோயில் மண்டபம் கட்டுவதற்குத் தேவையான அளவில், பாறையிலிருந்து பாளம் பாளமாக வெடித்துச் சிதறியிருந்தன கற்கள். இது பெருமாளே மண்டபம் கட்ட ஏற்பாடு செய்த கற்கள் என்பதை உணர்ந்து மெய்சிலிர்த்தனர். பின்னர் கோயில் பணி முழுமையடைந்தது.
அனைத்து கோயில் பணிகளும் முடிந்த நிலையில் அரங்கனின் உற்சவ மூர்த்தம் இல்லையே என்ற குறை அனைவரையும் வாட்டியது. இந்நிலையில் பாலமலையில் வசித்து வந்த ஒரு பெரியவரின் கனவில் தோன்றி பெருமாள், தனது உற்சவத் திருமேனி திருப்பதியில் இருப்பதாகவும் அதை வைத்திருப்பவருடைய அங்க அடையாளங்களை கூறியும் மறைந்தார். உடனே ஊர்ப் பெரியவர்கள் ஒன்று கூடி பேசி, திருப்பதிக்கு சென்று அரங்கன் சொன்ன அடையாளங்களுடன் கூடிய நபரைத் தேடிக் கண்டுபிடித்தார்கள். பின்னர் உற்சவ மூர்த்தங்களை பாலமலை அரங்கன் ஆலயத்தில் எழுந்தருளச் செய்தனர்.
இனி, கோயிலை வலம் வருவோம்.
அர்த்த மண்டப நுழைவாயிலில் துவார பாலகர்களான ஜெயன், விஜயன் காவல் பணியில் கம்பீரமாக ஈடுபட, கருவறையில் மூலவர் எழிலுற சேவை சாதிக்கிறார். வடக்குப்பகுதியில் பூங்கோதை தாயாரும், தெற்குப் பகுதியில் செங்கோதை தாயாரும் அருள்கின்றனர்.தன்வந்திர பகவான், ஆஞ்சனேயர், சக்கரத்தாழ்வார் தனித்தனியே எழுந்தருளியுள்ளனர். தேவியரோடு பரமவாசுதேவன் தனிச் சன்னதியில் சேவை சாதிக்க, அதன் முன்புறம் பன்னிரு ஆழ்வார்களின் திருமேனிகள் உள்ளன.கொடி மரத்தினருகில் பெரிய திருவடி எனப்படும் கருடாழ்வார் மூலவரை நோக்கி சேவை சாதிக்கிறார்.

கருவறையின் பின்புறம் தும்பிக்கையாழ்வார் சந்நதி, ராமானுஜர் சந்நதி உள்ளன. இக்கோயில் உருவாக பெரும் பங்கு வைத்த பெரியவரான காளிதாசருக்கும் ஒரு சன்னதி உள்ளது. கோயிலைச் சுற்றி விசாலமான சுற்றுச்சாலை உள்ளது. இவ்வழியாகத்தான் தேரோட்டம் நடைபெறுகிறது.
இம்மலையின் தெற்குப்பகுதியில் சுமார் 7 கி.மீ. தொலைவில் மேல்முடி ரங்கநாதப் பெருமாள் சந்நதி உள்ளது. இச் சந்நதிக்குச் செல்ல சுமார் நான்கரை மணி நேரம் நடக்க வேண்டியிருக்கும். இது சிரசு பாகம் என்றும், பாலமலை வயிற்றுப் பாகம் என்றும், காரமடை திருவடி பாகம் என்றும் சொல்கின்றனர்.

பாலமலை வயிற்றுப் பகுதி என்பதால், இக்கோயிலுக்கு வந்து பெருமாளை வழிபடும் பக்தர்களுக்கு உணவுப் பஞ்சமே ஏற்படாதாம்.சுயம்பு மூர்த்தத்திற்கு அருகில் பஞ்சலோகத்தினால் ஆன நான்கரை அடி உயரப் பெருமாள் சிலை பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது.கோயிலுக்கு வடக்குப் பகுதியில் கஜேந்திர தீர்த்தமும், அதையடுத்து சக்கரத்தீர்த்தம் எனப்படும் பத்ம தீர்த்தமும் உள்ளன.பாப விமோசனம் அளிப்பதிதல் இத்தலத்து பெருமாள் வல்லவர். அது குறித்து ஒரு புராணம் சம்பவம் சொல்லப்படுகிறது.கயிலாயத்தில் ஈசனை தரிசித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த வசிஷ்ட மகரிஷி, வழியில், விஸ்வாவஸு என்ற கந்தர்வனின் மகன் துர்தமனின் தீய நடவடிக்கைகளைக் காண நேரிட்டது. அவன்மீது கடுங்கோபம் கொண்ட வசிஷ்டர், அவனை அரக்கனாகப் போகும்படி சபித்துவிட்டார்.

அரக்க உருவம் கொண்ட துர்மதன், வனத்தில் ஸ்ரீமன் நாராயணன் குறித்து கடும் தவம் மேற்கொண்டிருந்த காலவ மகரிஷியை தொந்தரவு செய்ய ஆரம்பித்தான். உடனே காலவ மகரிஷி ஸ்ரீமன் லட்சுமி நாராயணனிடம், தன்னை அரக்கனிடமிருந்து காப்பாற்றுமாறு வேண்டினார்.அவரது வேண்டுகோளை ஏற்று தம் சக்கரத்தால் அரக்கனை சம்ஹாரம் செய்து காலவ மகரிஷியைக் காப்பாற்றினார், பரந்தாமன். அரக்கனும் பெருமாளின் திருச்சக்கர ஸ்பரிசத்தால் பாவவிமோசனம் பெற்று பழைய நிலைக்க மாறினான்.

இங்குள்ள பத்ம தீர்த்தத்தில் நீராடுவது மிகுந்த பலனை அளிக்கும். இது குறித்தும் ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது.சோம வம்சத்தைச் சேர்ந்த மன்னன் நந்த பூபாலனின் மகன் தர்மகுப்தன். தந்தை தவமேற்கொள்ள கானகத்திற்குச் சென்றுவிட, தர்மகுப்தன் நெறி தவறாமல் நாட்டை ஆண்டு வந்தான். ஒருநாள் தர்மகுப்தன் வேட்டையாட காட்டிற்குச் சென்றான். அங்கு நடந்த எதிர்பாராத ஒரு சம்பவத்தால், தர்மகுப்தன் மனநல பாதிப்புக்கு உள்ளானான்.

பதறிப்போன மந்திரிகள், தர்மகுப்தனை அழைத்துச் சென்று தவத்தில் இருக்கும் தந்தை முன் நிறுத்தினார்கள். மனம் வருந்திய பூபாலன், மகனை அழைத்துக் கொண்டு ஜைமினி மகரிஷியிடம் சென்றார்.
அவர், சக்ரவர்த்தியே பயம் வேண்டாம். மேற்குத் தொடர்ச்சி மலையில் பாலமலை எனும் ஷேத்திரம் உள்ளது. நீர் உம் மகனை அங்கு அழைத்துச் சென்று அங்குள்ள பத்ம தீர்த்தத்தில் நீராடி பகவானை ஆத்மார்த்தமாக துதித்தால், உனது மகனுக்கு ஏற்பட்ட உன்மத்த தோஷம் நீங்கி பழைய நிலைக்குத் திரும்புவான் என்றார்.

அப்படியே செய்தார் பூபாலன். அரங்கனின் திருவருளால் தர்மகுப்தனின் உன்மத்தம் நீங்க, முன்பைவிட நாட்டை சிறப்பாக ஆட்சி செய்தான்.
பத்ம தீர்த்தத்தில் நீராடியவர்கள் கங்கை, பிரயாகை முதலிய சர்வ தீர்த்தங்களில் நீராடிய பலனை அடைவர்; ஆயிரம் பசுக்களை தானம் செய்த பலனும், நான்கு வேதங்களை பாராயணம் செய்த பலனும் அடைவர் என புரணங்கள் தெரிவிக்கின்றன. பாவத்தையும் சாபத்தையும் தீர்க்க வல்ல இத்தீர்த்தத்தில் பஞ்ச பாண்டவர்களும் நீராடி அரங்கனை வழிப்ட்டிருக்கிறார்கள்.

புரட்டாசி, மார்கழி மாதம் முழுவதும் சிறப்பு அலங்காரத்துடன் ஆராதனைகள் நடைபெறுகிறது. ஏகாதசியும் பௌர்ணமியும் இங்கு சிறப்புமிக்க நாட்கள். இத்தலத்தின் தலையாய பெருவிழா, பிரம்மோற்சவமும் மற்றும் சித்ரா பௌர்ணமியன்று நிகழும் தேர்த் திருவிழாவுமாகும்.சித்ரா பௌர்ணமி உற்சவ காலத்தில் கிராம சாந்தி, கொடியேற்றம், அனுமந்த வாகனம், தெப்போற்சவம் மற்றும் தீர்த்தவாரி ஆகிய உற்சவங்களில் முக்கிய பங்கு பெறும் கட்டளைதாரர்கள் அப்பகுதி ஆதிவாசி மக்களே என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.
தரிசனத்திற்காக காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்ந்து ஆலயம் திறந்திருக்கும்.

கோயிலை அடைய மலைப்பாதை வழியாக ஒன்றரை மைல் நடந்து செல்லலாம். வாகனங்கள் செல்ல தார்சாலையும் அமைக்கப் பட்டுள்ளது.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்திலிருந்து மேற்கு திசையில் 11 கி.மீ. தொலைவில் பாலமலை உள்ளது. பெரிய நாயக்கன் பாளையத்திலிருந்து கோவனூர் வரை பேருந்தில் வந்து, அங்கிருந்து ஜீப் மூலம் கோயிலை அடையலாம். உதகையிலிருந்து பாலமலைக்கு காலை 6.45, 8.45; மாலை 4.40 மணிக்கு நேரடி பேருந்துகளும் உண்டு.

Comments