'கிருஷ்ணா! நீயே வழிகாட்டு'

ளம் வயது சரணாகதிக்கு எதிரானது; 'உலக உருண் டையை கால்பந்து மாதிரி தன்னால் உதைத்து உருட்ட முடியும்' என்று நம்புகிற வயது!
இதனால் இளைஞர்களுக்கு, 'சரணாகதி' என்ற வார்த்தையை விட, 'தன்னம்பிக்கை' என்ற வார்த்தை மிகவும் பிடித்தமானதாக இருக்கும்.
தன்னையும் தனது வலிமையையும் நம்பாமல், பிறிதொரு சக்தியிடம் அடைக்கலமாகி, 'இது என் னால் முடியாது; நீதான் உதவ வேண்டும்' என்று மன்றாடுவதற்கு ஆணவம் இடம் தராது.
ஒவ்வொரு இளைஞனும் கடந்த காலத்தில், ஒரு பலூன் வாங்குவதற்கும் தன் தாயாரின் முந்தானைக் காசுகளை எதிர்பார்த்தவன்தான். வாங்கிய பலூனில் காற்று நிரப்பக் கூட சக்தியில்லாமல், 'அம்மா... இதை ஊது!' என்று கெஞ்சியவன்தான். ஆனால் இன்று நிலைமை வேறு. அவன் உடலில் வலிமை கர்ஜிக்கிறது. தாயும் தந்தையும் பிரமிடுகளில் இருந்து எழுந்து வந்தவர்கள் போலவும், தன் காலத் துக்கு சற்றும் பொருந்தாத இயல்பு உடையவர்கள் என்றும் மனதில் எண்ணம் தோன்றுகிறது.
தனக்கும், தனது மூத்தோருக்கும் இடையே தலைமுறை இடைவெளி விழுந்ததைச் சுட்டிக் காட்டி, 'அவர்களுக்கு, என்னைப் புரிந்து கொள்ள இயலவில்லை' என்று புலம்புகிறான் இன்றைய இளைஞன்.

தலைமுறை இடைவெளி என்பது உண்டு தான். அந்த இடைவெளி என்பது ஒளியாண்டு தூரமல்ல; ஒருவருக்கு ஒருவர் தொட்டுக்
கொள்ளும் தூரம்தான்!
இந்த இடைவெளியைக் கடந்து, மூத்த தலைமுறையினரின் உதவிகளை, கருத்துகளை, ஞானச் செல்வங்களை இளையவர்கள் பெற்றுக் கொள்ளாமல் இருப் பது, தம்மைத் தாமே ஏமாற்றும் செயலா கும். ஆதலால், தன்னிலும் பெரியோர்களை, சான்றோர்களை, எல்லாம் வல்ல இறைவனைச் சார்ந்து ஒழுகும் சரணாகதி நிலையை இளைஞர்கள் ஏற்க வேண்டும்.
அர்ஜுனன் எத்தனை வலிமையானவன். அவனது காண்டீபத்தின் மகிமைதான் என்ன! ஆனாலும் போர்க்களத்தில் அவன், கிருஷ்ணனைச் சரணாகதி அடைந்தான். ஓர் இக்கட்டான சூழலில்... தான் எவ்வாறு நடந்து கொள்வது என்பது அவனுக்குப் புரியவில்லை. பெரும் குழப்பத்தில் அழுது விதண்டாவாதம் பேசி... கடைசியில்... 'கிருஷ்ணா! நீயே வழிகாட்டு' என்றான் அவன். நாம் அந்த அர்ஜுனனை விடவும் ஆற்றல் மிக்கவர்களா? நமக்கு, நமது வாழ்வில் குழப்பங்கள் ஏற்படுவது இல்லையா? வந்த பிரச்னையைத் தீர்க்க வழி தெரியாமல் குழம்பி நின்ற தருணங்கள் இல்லையா?
ஆயினும் நமக்கு சரணடையத் தோன்றுவதில்லை. காரணம், இளமை முறுக்கு, கொஞ்சம் இருக்கு!
இளைஞர்களே! இந்த இடத்தில் நீங்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டும். சரணாகதி என்பது தன்னம்பிக்கையின் இழப்பு இல்லை. தன்னம்பிக்கைக்கு ஊட்டம் அது.
கடலில் கரைந்த ஒற்றை பனித்துளி, தன்னை இழந்து விடுவது இல்லை. மாறாக தன்னை... கடலளவு பெரிது படுத்திக் கொள்கிறது. அதுபோல, இறைவனிடம் சரணடைந்தால்... நமது தன்னம்பிக்கை வளர்கிறது; அழிவதில்லை!
அதனால் இளைய வயதிலேயே இறைவ னைச் சரணடைய வேண்டும். சரி, சரணாகதி என்றால் என்ன என்று பார்ப்போம். பொதுவாக சரணாகதிக்கு எல்லோரும் பாஞ்சாலி கதையைச் சொல்வது வழக்கம்.
பாஞ்சாலியின் புடவையை துச்சாதனன் உருவிய போது... அவள் தனது மானம் காக்க, சேலையை இரு கைகளாலும் பற்றிப் பிடித்துக் கொண்டு கதறினாள். ஆனால், துச்சாதனனின் முரட்டு பலத்துக்கு முன் அவளால் நெடுநேரம் போராட முடியவில்லை. கடைசியில்,
'கிருஷ்ணா... நீயே துணை' என்று தன் இரு கைகளையும் தன் தலைக்கு மேலே உயர்த்தி வணங்கினாள். தெய்வத்தின் உதவி கிடைத்தது.
ஆக, சுயமுயற்சி தோற்றுப் போகிற இடத்தில், தெய்வத்தின் துணையை நாட வேண்டும் என்பதும் இந்தக் கதையிலேயே இருக்கிறது.
சொல்லப்போனால், சுயமுயற்சி இல்லாதவனது சரணாகதியை, தெய்வம் ஏற்காது என்பதற்குகூட ஒரு கதை சொல்லப்பட்டிருக்கிறது.
ஒருவன் தேரில் சென்று கொண்டி ருந்தான். திடீரென தேர்ச் சக்கரங்கள், புதைச்சேற்றில் சிக்கிக் கொண்டன. 'இத்தனை பெரிய தேரை தன்னால் தள்ளவும் முடியாதே' என்று கடவுளிடம் கதறினான். கடவுள் வரவில்லை. யாராவது துணைக்கு வருவார்களா என்று அங்கும் இங்கும் தேடிப் பார்த்தான்; யாருமில்லை! பின்னர், தன்னால் முயன்ற அளவு தேரை நகர்த்த ஏதேதோ செய்தான். தேர் நகரவில்லை. இவன் மீண்டும், 'கடவுளே!' என்று கதறினான். இப்போது தேர் சற்றே நகர்ந்தது. வியப்படைந்தவன் தேரின் பின் பக்கத்தைப் பார்த்தான். அங்கு, ஸ்ரீகிருஷ்ணன் தேரைத் தள்ளிக் கொண்டிருந்தான்.
''கிருஷ்ணா! முன்பே உன்னை அழைத்தேனே... அப்போது ஏன் உதவிக்கு வரவில்லை?'' எனக் கேட்டான்.
கிருஷ்ணர் சொன்னார்: ''அப்போது, தேரை நகர்த்து வதற்கு நீ எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. பிறகு,ஏதேதோ முயற்சிசெய்து... தோற்றதும் என்னை அழைத்தாய். நானும் வந்தேன். முயற்சிஏதும் செய்யாத சோம்பேறிகளுக்கு எனது உதவி என்றும் கிடைக்காது. தெரிந்துகொள்!''என்றார்.
ஆக, சுயமுயற்சி வேண்டும். ஆனால், எல்லா தருணங்களிலும் சுயமுயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்று சொல்ல முடியாது. அதுபோன்ற தருணங்களில், தெய்வத்தின் துணையை நாட வேண்டும்.
சராசரி மனிதன், தனது துன்பங்களைப் போக்க தனக்கு வழி தெரியாதபோது, தெய்வத்தின் துணையை நாடுகிறான். 'திருநள்ளா றுக்குப் போய் தீபம் போடு' என்று
ஜோதிடர் சொன்னால், அதைச் செய்து பார்க்கிறான்! ஒவ்வொரு குருப் பெயர்ச்சிக்கும் குருபகவான் சந்நிதியில் கூட்டம் குவிகிறது. ராகு-கேது தோஷம், செவ்வாய் தோஷம் நீங்க... கோயில் மாற்றி கோயிலாக பெருங் கூட்டம் அலைகிறது. இது தப்பு இல்லை. கிராமத்து தாய்மார்கள், குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை என்றால், வைத்தியரிடம் காட்டுவர். மசூதியிலும் போய் மந்திரிப்பார்கள். 'நோய்க்கும் பார், பேய்க்கும் பார்...' என்று ஒரு பழமொழியே உண்டு. எதைச் செய்தாவது துன்பம் தீர வேண்டும் என்பதே முக்கியம்.
அந்த வகையில் துன்பத்தைப் போக்க வேண்டியும் இன்பத்தைச் சேர்க்க வேண்டியும் தெய்வீக உதவியை நாடிப் போகிறவர்கள் உலகெங்கும் நிறைந்து கிடக்கிறார்கள். தனது கோரிக்கையை தெய்வம் நிறைவேற்றினால்... அப்போது, தெய்வீக நம்பிக்கை மனதில் உரமிட்டு வளர ஆரம்பிக்கிறது.
பலரது வாழ்வில், தெய்வீக உதவிகள் கிடைத்திருக் கின்றன. ஒரு குடிசை தீப்பற்றிக் கொண்ட நேரத்தில், வானம் மழை பொழிந்து தீயை அணைத்த அதிசயம் போல்... எதிர்பாராத உதவிகள் கிடைத்து துன்பம் நீங்கியவர்களின் அனுபவங்களைக் கேட்டுப் பாருங்கள்... கதை கதையாகச் சொல்லுவார்கள்.
'எல்லாம் விதிப்படி நடக்கும்போது, இறைவனை வணங்கினால்- சரணாகதி அடைந்தால், விதி மாறுமா?' என்று சிலர் கேட்கிறார்கள்.
சில வகை வினைகள் மாறக்கூடியது. சில வகை வினைகள் மட்டுமே அனுபவித்துத் தீர்க்கப்பட வேண்டியது. இப்படி இரண்டு விதம் உண்டு.
இறைவனால் விதியை மாற்ற முடியாதபோது, அந்த விதியின் வேகத்தைத் தாங்கிக் கொள்ளும் வலிமை
அவனால் நமக்கு வழங்கப்படுகிறது. ஆக சரணாகதியால் துன்பம் நீங்கி விடும்.
இன்ப- துன்பங்களுக்கு அஞ்சி இறைவனைச் சரணடைகிற கூட்டமே இங்கு அதிகம். இன்னும் சிலபேர்... தன் சுயத்தை அறியவும், சீர்திருத்தவும் இறைவனின் உதவியை நாடுகிறார்கள். தன் மனதில் கொந்தளிக்கும் காமம், கோபம், லோபம் போன்ற மன மாசுகளைக் கண்டு பயந்து போய், அவற்றை நீக்க... மனதில்அமைதி வாய்க்க இறைவனின் பாதங்களைப் பற்றுகிறார்கள்.
என்னால் எவ்வளவு முயன்றும் சிகரெட் பழக்கத்தை விட முடியவில்லையே. குடிப்பழக்கத்தை விட முடியவில்லையே என்று புலம்புகிறவர்கள் எத்தனை பேர்? தான் உண்டாக்கிய பழக்க வழக்கத் தில் இருந்து தானே தப்பிக்க வழியற்று, இறைவனின்
துணையை நாடுகிறார்கள். இது ஒன்றும் தவறில்லை.தனது ஆன்மிக முன்னேற்றத்துக்காக இறைவனைச் சரணடைவது மேலான விஷயம்தான். இறைவன் இதற்கு நிச்சயம் உதவுவார்.
சுயம் சுயம் என்று நினைத்து, இறைவனைச் சரணடைய மறுக்கக் கூடாது. சுயநம்பிக்கை பேசுகிறவர்களைப் பாருங்கள்... அரசியல், சித்தாந்தம், பணம் என்று ஏதோ ஒரு தூணில் சாய்ந்து கொண்டு தான் நிற்கிறார்கள். மற்ற எல்லா தூண்களையும் விட, இறைவனே நம்பிக்கையான தூண்; சாய்ந்து விடாத தூண். எனவே, இதைப் பற்றியவர் வீண் போவதில்லை.

Comments