பணிவுடன் இருக்கப் பழகுவோம். மலர்வோம். வளர்வோம்.

யற்கை முழுவதும் பெரிய ஆச்சரியங்கள் கொட்டிக் கிடக்கின்றன. பரந்து விரிந்த வானம், ஆர்ப்பரிக்கும் கடல், அசையாத மலை, வளைந்து நெளிந்து செல்லும் நதிகள், ஒளியை வாரி இறைக்கும் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள்... அனைத்தும் வியக்க வைக்கின்றன!
இயற்கையை உற்றுக் கவனித்தால் தெரியும்... இந்த பிரமாண்டத்தின் முன், நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பது!
ஓயாது தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் தன் முனைப்பு கொண்ட மனிதனால், இயற்கையை ரசிக்க முடியாது; தன்னை மட்டுமே ரசிக்க முடியும்.
பணிவுள்ள மனிதன்தான் பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தைக் கண்டு வியக்கிறான். கோள்களுக்கும் பாதை அமைத்த இறைவனை - கிளிகளுக்குப் பச்சை வண்ணம் பூசியவனை - கண்களுக்குத் தெரியாத தூரிகையால் வானத்தில் வண்ணக் கவிதை வரைபவனை வியந்து போற்றுகிறான்!
நாம் ஒவ்வொருவரும், அடுத்தவர்களிடம் நம்மைப் பற்றிச் சொல்லிக்கொள்ள ஆசைப் படுகிறோம். ஆனால், அவர்களும் தங்களைப் பற்றியே சொல்ல விரும்புகிறார்கள் என்பதுதான் உண்மை.

தன் முனைப்பு கொண்டவன், 'நான், நான்!' என்று... ஒரு தவளையைப் போல, எப்போதும் தன்னைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பான். அவன் செய்யும் தான- தர்மங்கள் கூட, தனது பெயரையும் புகழையும் நிலை நாட்ட வேண்டும் என்பதற்காகத்தான் இருக்கும்!
தானம் கொடுக்கும்போது, 'அதிகம் கொடுப்பதற்கு இல்லையே' என்ற வெட் கத்துடன்- விநயத்துடன் கொடுக்க வேண்டும் என்கின்றன சாஸ்திர நூல்கள்!
சிலர், எங்கு சென்றாலும்... தன்னை, மற்றவர்கள் எப்படிக் கவனிக்கிறார்கள்? தனது திறமை, செல்வாக்கு எவ்வாறு போற்றப்படுகிறது என்பதிலேயே குறியாக இருப்பர்; வந்த விஷயத்தைக் கோட்டை விட்டு விடுவர்.
எனக்குத் தெரிந்த ஒருவர் வெளியூர் கோயிலுக்குச் சென்று வந்தார். அவரிடம், 'தரிசனம் எப்படி இருந்தது?' என்று விசாரித்தேன்.
'அதை ஏன் கேட்கிறீர்கள்... ஏக மரியாதை! கூட்டம் அதிகம்தான். ஆனாலும் விசேஷ கவனிப்பு! அங்கு, வேலை செய்பவர்களுக்கு என்னைக் கண்டால், பயம் கலந்த மரியாதை. எனவே பரிவட்டம், பிரசாதங்கள் என்று ஒரே உபசரிப்பு!' என்றார் அவர்.
தன்முனைப்புடன் இருப்பது மனிதத்தன்மை. தன் முனைப்பு தடித்துப் போனால், மிருகத் தன்மை. அதையே முற்றிலும் நீக்கினால் - அது தெய்வீகத் தன்மை!
ஆணவம் மிகுந்த ஒருவர் சொற்பொழிவாற்றினார். தனது சுயபுராணத்தைக் கூறிக் கொண்டே வந்தவர், ''இவ்வளவு நேரம் நான் பேசினேன். இனி எனது சிறப்பை நீங்கள் பேச வாய்ப்பளிக்கிறேன்'' என்று கூறி அமர்ந்தார்!
நாம், உண்ட உணவையும் ஒழுங்காக ஜீரணம் செய்யும் சக்தி இல்லாதவர்கள் என்பதைப் பலரும் மறந்து விடுகிறார்கள். நமக்குத் தேவைப்படும் சக்தி அனைத்தையும் வழங்குபவர், நமக்குள்ளே இருக்கும் இறைவன் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
இளமை, அழகு, படிப்பு, பணம் ஆகியவை ஒருவரிடம் கடுகளவு இருந்தால் போதும், மலையளவு கர்வம் வந்து விடுகிறது. கர்வம் உடையவன், தன்னைத் தானே வியந்து கொள்கிறான். அவனது கவனம் முழுவதும் தன் மீது மட்டுமே இருக்கிறது.
சிலர், விருந்தினரை வீட்டுக்கு அழைப்பது கூட தற்பெருமைக்காகவே. இவர்களது வீட்டுக்குச் சென்றால், வரவேற்பறையில் உள்ள சிறு சிறு பொருட்களையும் புகைப்படங்களையும் பரிசுக் கோப்பையையும் பற்றி விரிவுரை நிகழ்த்திய பிறகே, தாகத்துக்கு தண்ணீர் தருவார்கள்!
சிலர், இளமையை பாதுகாக்கவே உயிர் வாழ்கிறார்கள். சிலர், பிறரது பார்வையில் தாம் அழகாகத் தெரிய வேண்டுமே என்பதற்காக ஓயாது மெனக்கெடுகிறார்கள். சிலர், தங்களின் பெயருக்குப் பின்னால் பட்டங்களையும் சேர்த்துச் சுமக்கிறார்கள். இன்னும் சிலர், பணம் சம்பாதிப் பதையே லட்சியமாகக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், அனைத்தும் கால வெள்ளத்தில் மூழகக் கூடியவை. உடற்கூட்டை விட்டு உயிர் பிரிய... அழகு, அவலட்சணமாக மாற... பெயர் உட்பட பார்த்தது- கேட்டது- படித்தது அனைத்தும் மறந்து போக... அத்தனை செல்வங்களும் அழிந்து போக ஒரே ஒரு நொடி போதும்!
'இன்று அழகாகத் தெரிய வேண்டுமே' என்ற கவலை இல்லாமல் இருப்பதால்தான், மலர்கள் உண்மையிலேயே அழகாக இருக்கின்றன!
கர்வம், வேற்றுமை உணர்ச்சியை வளர்க்கும். படிப்பு, அழகு மற்றும் செல்வம் போன்றவற்றில் நம்மை விட உயர்ந்தவர்களைக் கண்டு பொறாமை கொள்கிறோம். நம்மைவிட தாழ்ந்தவர்களைக் கண்டாலோ, மட்டமாக நினைக்கிறோம். இவை இரண்டுமே மன அமைதிக்குக் கேடு விளைவிப்பவை.
பொறாமையையும் கர்வத்தையும் அகற்ற பணிவே சிறந்த வழி. ஆண்டவனிடம் எப்போதும் பணிவுடன் இருக்க வேண்டும். நாத்திகர்களுக்குப் பணிவு ஏற்படுவது கஷ்டம். பணிவு என்ற குணத்தை சம்பாதிப்பதற்காகவா வது, கடவுளை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
பணிவு மிக அவசியம். பணியுமாம் என்றும் பெருமை. பணிவு கொண்டவனால் மட்டுமே தனது கவனத்தை, சுற்றி உள்ளவர்கள் மீதும், பிரபஞ்சத்தின் மீதும், இறைவன் மீதும் திருப்ப முடியும்.
அர்ஜுனனின் பணிவு, பகவத் கீதையை அளித் தது. அர்ஜுனன் பணிந்து கேட்காமல் இருந்திருந் தால், அது வெறும் புலம்பல் கீதையாகவே முடிந்திருக்கும். அனுமன் விஸ்வரூபம் எடுத்து, நடக்க முடியாததையும் நடத்திக் காட்டியது பணிவால்தான்.
பணிவுடன் வாழ்பவர்களை, அவர்கள் வாழும் காலத்தில் உலகம் கவனிக்கத் தவறலாம். ஆனால், சரித்திரம் அவர்களது பெயர்களையும் சுமந்து வருகிறது.
பணிவு உள்ளவர்களால்தான் தங்களைத் திருத்தி அமைக்க முடியும். பணிவு உள்ளவர்கள், தங் களது பொறிகளையும் மனதையும் இறை வழிபாட்டுக்கும், சமுதாய நலனுக்கும் பயன்படுத்துகிறார்கள். இவர்களின் இருப்பே உலகுக்குப் பெரிய வரமாக அமைகிறது.
சமூக சேவையில் ஈடுபாடு கொண்ட நண்பர்கள் இருவர், நீண்ட காலத்துக்குப் பிறகு சந்தித்தனர்.
ஒருவர் கேட்டார்: ''உங்களது சேவை எப்படிப் போய் கொண்டிருக்கிறது?'
''ஏதோ... அணில் போன்று சிறிய அளவுக்கு செய்து கொண்டிருக் கிறேன்'' என்றார் நண்பர்.
உடனே முதலாமவர் கேட்டார்: ''ஓ! அணில் அளவுக்குச் செய்கிறீர்களா?!''
அணிலின் சேவையை சிறியது என்று நினைக்கிறோம். ஆனால், ராமாயண கால அணிலைப் பற்றி இன்றும் உயர்வாகப் பேசுகிறோம் எனில், அணில் அன்று செய்தது சாதாரண காரியம் இல்லை என்று தெரிகிறது அல்லவா?
இறைவன் முன்பு பணிந்து, கோயில் எழுப்பிய ராஜ ராஜசோழன் இறவாப் புகழ் பெற்றான். அவனது பெயர் இன்றும் மக்களின் உள்ளத்தில் கல்வெட்டாகப் பதிந்திருக்கிறது.
பணிந்து நடக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தவே, அந்த காலத்தில் வீடுகளின் வாயில்கள், குனிந்து செல்லுமாறு அமைக்கப்பட்டிருந்தன.
பணிவும், இன்சொல்லும், இனிமையும், எளிமையும் மனிதனை மலரச் செய்கின்றன. பணிவு உடையவர்கள் ஆறு வயது குழந்தையிடம் இருந்தும் ஒரு விஷயத்தைக் கற்றுக் கொள்வார்கள். பணிவில்லாதவர்கள், ஆண்டவனே கற்றுக் கொடுத்தாலும் கற்றுக் கொள்ளத் தயாராக இருக்க மாட்டார்கள்.
'மெய்யறிவு பெற்ற குருநாதர் ஒருவரை முறையாக அணுகி, அவரைப் பணிந்து- பணிவிடைகள் செய்து, அவரிடமிருந்து மெய்யறிவை பெற வேண்டும்' என்கிறது கீதை. பணிவுள்ளனால்தான் குருவிடமும் இறைவனிடமும் சரணடைய முடியும்.
சர் ஐஸக் நியூட்டன் தனது கண்டுபிடிப்புகள் பற்றிக் கூறினார்: ''என் முன் பெருங்கடல் அளவு உண்மைகள் கண்டறியப்படாமல் இருக்க, கடற்கரையின் ஓரம் விளை யாடிக் கொண்டும், எப்போதும் கிடைப்பதைக் காட்டிலும் சற்று பெரிய சிப்பியோ, மென்மையான கூழாங்கல்லோ கிடைத்ததற்காக மகிழ்ந்து கொண்டும் இருக்கும் ஒரு சிறுவனாகத்தான் நான் இருக்கிறேன்.''
பணிவுடன் இருக்கப் பழகுவோம். மலர்வோம். வளர்வோம்.

Comments