தெய்வம் இருப்பது எங்கே?

குருகுலம்! சீடர்கள் அனைவருக்கும் ஆளுக்கொரு மாம்பழம் கொடுத்த குருநாதர், 'யாரும் இல்லாத இடத்துக்குக் கொண்டுபோய் சாப்பிட்டு விட்டு வாருங்கள்'' என்றார். மாணவர்களும் தனித்தனியே இடம் தேடிச் சென்று, வேறு எவரும் பார்க்கவில்லை என உறுதி செய்துகொண்டு, பழத்தைச் சாப்பிட்டனர். ஒருவன் மட்டும் பழத்தைச் சாப்பிடவில்லை.
அவனை அழைத்து, பழம் சாப்பிடாத காரணத்தைக் கேட்டார் குருநாதர்.
''இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறார் என்று தாங்கள் போதித்தீர்கள். எனில், அவர் இல்லாத இடத்தில் சாப்பிடுவது சாத்தியம் இல்லாத ஒன்றல்லவா?!'' என்றான் அந்த சீடன்.
'கடவுள் எங்கே இருக்கிறார்?' என்ற கேள்விக்கு, 'கடவுள் எங்கு இல்லை?!' எனும் கேள்வியையே பதிலாகத் தருகிறது இந்து மதம். கடவுள் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவர். 'இறைவன்' என்ற சொல்லுக்கு, 'எங்கும் நிறைந்திருப்பவர்' என்று பொருள்!
குறிப்பிட்ட உருவம்- வடிவம் என்று இறைவனை வழிபடத் துவங்கி, மனப்பக்குவத்துக்காக அவரின் மீது பக்தியைப் பெருக்கி, கோயில் கோயிலாகச் சென்று இறைவனை வழிபட்டு, 'உள்ளமே கோயில்' என்று அமைதியும் நிறைவும் காண்பதில்தான், வழிபாடு நிறைவு பெறுகிறது. இதுகுறித்து...
நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும்தேடித் திரிந்து சிவபெரு மானென்றுபாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்கூடிய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்வனே
- என்று அழகுற விளக்குகிறார் திருமூலர்.
பிரமாண்டமாக- கற்பனைக்கு எட்டாமல் பரந்து விரிந்திருக்கும் இந்த உலகின் படைப்பாளியாக இறைவனை அறிமுகப்படுத்துகின்றன சாஸ்திரங்கள்!
நுண்ணுயிர் முதல் தேவர்கள் வரை எல்லாவற்றையும் எல்லாரையும் படைத்து, காத்து, அழித்து, மறைத்து அருளும் ஐந்தொழிலையும் புரிபவர் கடவுள்! 'இறைவன் உலகைப் படைத்தார்' என்பதுடன் நிறுத்திக்கொள்ளவில்லை வேதங்கள்; 'உலகமாகவே ஆனார் இறைவன்' என்றும் சொல்கிறது. பஞ்சபூதங்களாக விளங்குபவர் அல்லவா இறைவன்?!
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகிஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க் கோனாகி யானெனதென்று அவரவரைக் கூத்தாட்டுவானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே
என்கிறார் மாணிக்கவாசகர். இறைவனே, உலகம் முழுவதும் உள்ள நியதியாகத் திகழ்கிறார்.
'அட... நியதியா? இந்த உலகில் எங்கே இருக்கிறது?' என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
கண்ணுக்கும் கருத்துக்கும் எட்டாத மாபெரும் சக்தி ஒன்று, உலகை இயக்குகிறது; உலக மொத்தத்துக் குமான நியதியும் உடன் இயங்குகிறது. நாம் சாப்பிடும் உணவு ஜீரணமாவதும் நியதி யால்தான்! மாமரத்தில் மாங்காய், தென்னை மரத்தில் தேங்காய் என்று காய்ப்பதும் நியதியால்தான். தூங்கி எழுந்த பிறகும், அனைத்தும் நம் நினைவில் இருப்பதற்கும் நியதியே காரணம். சுற்றும் பூமியும் மற்ற கோள்களும் செவ்வனே இயங்குவதும் நியதியால்தான். இந்த உலகம் இருப் பதே நியதியால்தான்! அந்த நியதி... இறைவனைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?
எங்கும் நிறைந்தவர்- எல்லாமுமாக இருப்பவர் கடவுள்; கோயிலின் கருவறையில் மட்டும் இருப்பதாக எண்ணாதீர்கள். அங்கே... இங்கே... எங்கேயும் இருக்கிறார் என்று சொல்வதுகூட தவறுதான். ஏனெனில், இருப்பதெல்லாம் இறைவன்தான் என்கின்றன சாஸ்திரங்கள்.
பெரிய சந்திரன் உதயமாக... அதை, உன்னுடையது- என்னுடையது என்று சொந்தம் கொண்டாட முடியுமா? அதுபோல, 'உன் கடவுள்... என் கடவுள்' என்று சண்டையிடுவதும் சிறுபிள்ளைத்தனமே! ஏனெனில், மதங்களுக்கு அப்பாற்பட்டவர் கடவுள். அவருக்கு, மதம் தேவையில்லை. மனிதனுக்குத்தான், தன்னைப் பண்படுத்திக் கொள்ள மதம் தேவையாக உள்ளது.
சைவ முதல் அளவிலா சமயமும் வகுத்து, மேல்
சமயம் கடந்த மோன சமரச நிலையும் வகுத்த நீ
- என்று
இறைவனைப் புகழ்கிறார் தாயுமானவர்.
வழிபாட்டுத் தலங்கள், மூர்த்தங்கள், சமயச் சின்னங்கள் அனைத்தும் இறைவனை நாம் காணும் அடையாளங்களே!
தேசியக் கொடியைப் பார்த்ததும் மரியாதை செய்கிறோம்; அதை வணங்குவதன் மூலம் தாய்நாட்டையே வணங்குவதாக எண்ணி பூரிக்கிறோம். ஆனால் பரந்துபட்ட நம் தேசம், இந்தக் கொடியில் அடங்காது. கொடி என்பது அடையாளம். அதுபோல் உருவங்கள் என்பவை, கடவுளை வழிபடுவதற்கும் நெருங்குவதற்குமான அடையாளங் களே! ஆனால், கொடுமை என்ன வென்றால்... சமயச் சண்டைகள் நிகழ்வதெல்லாம் இதுபோன்ற அடை யாளங்களால்தான்!
எங்கும் நிறைந்த இறைத் தத்துவத்தைப் புரிந்து கொள்வதுதான் முக்கியம்!
பார்க்குமிடம் எங்குமொரு நீக்கமற
நிறைகின்ற பரிபூரணானந்தமே
- என்கிறார்
தாயு மானவர். ஆம்... குறியீடுகளுக்கு அப்பாற்பட்டவர் கடவுள்!
குறிகுணம் ஏதும் இல்லதாய் அனைத்தாய்குலவிடு தனிப்பரம் பொருளே - என்று
பாரதியாரும் அருமையாக விளக்குகிறார்.
சிதம்பரத்தில், ஆகாச தத்துவமாக விளங்கும் இறைவனை வழிபடுகிறோம். இந்தத் தலத்தில், ஆதி மூலநாதர் எனும் சிவலிங்கமூர்த்தி- உருவ தத்துவம்; சிதம்பர ரகசியம் எனப்படும் வெளி- அருவ தத்துவம்; ஸ்ரீநடராஜர்- அருவுருவ தத்துவம்.
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்குருவாய் வருவாய் அருள்வாய் குகனே - என
இறைத் தத்துவத்தைப் புகழ்கிறார் அருணகிரி நாதர்.
இறைத் தத்துவம் எங்கும் நிறைந்துள்ளது என்பதை அடிநாதமாகக் கொண்டது நமது பண்பாடு. தேசத்தில் எவ்வளவு பெரிய கோடீஸ் வரனும் ஒரு ரூபாய் நோட்டின் மீதேறி, அதனை மிதிக்கத் துணிவது இல்லை. காரணம், அதை வெறும் பணமாக அவன் நினைக்கவில்லை; லட்சுமியின் அம்சமாகப் பார்க்கிறான். செல்வம் லட்சுமியின் அம்சம்; கலைகள் சரஸ்வதியின் அம்சம்!
பூஜையறையில் மட்டுமின்றி, வீட்டின் நிலைப் படியிலேயே இறைவனை வழிபடத் துவங்கி விடுகிறோம். மரம், செடி- கொடி, விலங்குகள், நதிகள், மலைகள் ஆகியவையும் வணக்கத்துக்கு உரியவையே! இந்த தெய்விக சிந்தனை இழையோடு வதால்தான், நதி நீரை தலையில் தெளித்துக் கொண்ட பிறகே நதியில் கால் வைக்கிறோம்.
'உலகில், இறைவன் எப்படியெல்லாம் இருக்கிறார்?' - இதுகுறித்து இறைவனே கீதையில் கூறுகிறார்: ''அர்ஜுனா! நான், நீரில் சுவையாகவும், சந்திர- சூரியரிடம் ஒளியாகவும், வேதங்களில் ஓங்காரமாகவும், ஆகாயத்தில் ஒலியாகவும், பூமியில் நறுமணமாகவும், நெருப்பில் ஒளியாகவும் இருக்கிறேன். உயிர்களிடம் உயிர்சக்தியாகவும், மனிதர்களிடம் ஆற்றலாகவும், ஆசையும் பற்றும் அற்ற வலிமையாகவும், அறிவாகவும், அறத்துக்குப் புறம்பில்லாத ஆசையாகவும் இருக்கிறேன்'' என்கிறார்.
இதுபோன்ற பரந்து விரிந்த சிந்தனைகள் செறிந்திருந்த காரணத்தால்தான், நமது தேசத்தை புனிதபூமி என்று போற்றுகிறோம். 'இந்த தேசத்தின் தூசிகூட புனிதமானது' என்று சிலிர்க்கிறார் சுவாமி விவேகானந்தர். இந்த சிந்தனை வேரூன்றி இருப்பதால்தான், அந்நியர் படையெடுப்புகளில் அவர்களால் கோயில்களை உடைக்க முடிந்ததே தவிர, மக்களின் நம்பிக்கையை உடைக்க முடியவில்லை.
விநாயகரின் திருவுருவை உருவாக்கி வழிபட்டு, பிறகு பயபக்தியுடன் எடுத்துச் சென்று நீரில் கரைப் பது... உருவங்களுக்கு அப்பாற்பட்டவர் இறைவன் என்பதை விளக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட சடங்கு!
'இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான்' என்பதற் கான புராண விளக்கமே- பிரகலாதனின் கதை. 'உருவங்களைக் கடந்ததே பரம்பொருள் தத்துவம்' என்பதை மகாகவி பாரதியார் 'ஆத்திசூடி இளம்பிறை அணிந்து' பாடல் மூலம் அற்புதமாக விளக்குகிறார்.
இப்படி, எங்கும் நிறைந்த இறைத் தத்துவத்தின் தன்மையை நாம் உணர்ந்தால், நிறைவாழ்வு வாழலாம்!

Comments