யோக பரமானந்தர்

கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில், நடுவர் தனது சைகைகளால், பல விஷயங்களைத் தெரியப்படுத்துவார். இதேபோல், இறை வழிபாட்டிலும் நாம் மேற்கொள்ளும் பல செய்கை களுக்கு ஆழ்ந்த அர்த்தங்கள் உண்டு. குறிப்பாக, நம்மை விட வயதில் பெரியவர்கள், பெற்றோர் மற்றும் மகான்கள் ஆகியோரை... ஒரு தடியைப் போல் கீழே விழுந்து வணங்குகிறோம். அப்போது, அவர்களது பாதங்களுக்கு அருகே நம் தலை இருக்க வேண்டும்.
நம் உடலில் உள்ள பாகங்களில் தலையே பிரதான மானது. பார்க்கக் கூடிய கண்கள், கேட்கக்கூடிய காதுகள், பேசக்கூடிய வாய், சுவாசிக்கக்கூடிய நாசி ஆகிய அனைத்தும் தலை பாகத்தில்தான் அமைந்துள்ளன. முக்கியமாக, சிந்திக்கக் கூடிய மூளையானது தலையில்தான் அமைந்துள்ளது. எனவே, தலையை முன் வைத்து இறைவனை விழுந்து வணங்கும் போது, 'உடல், பொருள், ஆவி அனைத்தையும் அவருக்கே அர்ப்பணிக்கிறோம்!' என்பதை சொல்லாமல் சொல்கிறோம்.
பண்டரீபுரத்தில், யோக பரமானந்தர் என்ற பக்தர் ஒருவர் இருந்தார். இங்குள்ள புனித நதியை பீமா என்றும் சந்திரபாகா என்றும் அழைப்பர். பிறைச் சந்திரன் போல் வளைந்து ஓடுவதால், இந்தப் பெயர் அமைந்ததாம்!
யோக பரமானந்தரின் வழிபாட்டு முறை மிகவும் புதுமையானது. தினமும் காலையில் எழுந்ததும் பீமா நதியில் நீராடிவிட்டு, பகவத் கீதையில் உள்ள 700 ஸ்லோகங்களையும் கூறி, விழுந்து நமஸ்கரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதுவும் எப்படி? ஒரு ஸ்லோகத்தை சொல்லி முடித்ததும் விழுந்து நமஸ்கரிப்பார். சில தருணங்களில், காலையில் துவங்கிய இவரது வழிபாடு நிறைவடைய மாலை வரை

கூட ஆகிவிடுமாம். இதுபோல், பல ஆண்டுகளாகவே வழிபட்டு வந்தார் யோக பரமானந்தர்.
மழைக் காலம் வந்தது. ஒரு நாள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சால்வை மூட்டை களைத் தலையில் சுமந்தபடி வியாபாரி ஒருவர் பண்டரிபுரத்துக்கு வந்தார். அந்த நேரத்தில் மழை வெளுத்து வாங்கியது. 'அடடா... விலை உயர்ந்த காஷ்மீர் சால்வைகள் இந்த மழையில் நனைந்து வீணாகி விடுமே!' என்று கவலைப்பட்ட அந்த வியாபாரி, சிறிது நேரம் தங்குவதற்கு இடம் வழங்கி உதவும்படி அந்த ஊர்மக்களிடம் கேட்டார். ஆனால், எவரும் இடம் தரவில்லை.
வியாபாரியைக் கண்டு மனம் இரங்கிய யோக பரமானந்தர், அவரைத் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். ஆனால், யோக பரமானந்தரது இல்லம்- கூரை வீடு! தவிர, கூரையில் நிறைய ஓட்டைகள். அவற்றின் வழியே மழை நீர் வீட்டுக்குள் ஒழுகியது.
'நாம் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை; வியாபாரி நஷ்டப்படக் கூடாது' என்று எண்ணிய யோக பரமானந்தர், மழை ஒழுகாத இடமாகப் பார்த்து அவருக்கு இடம் கொடுத்தார்.
அவரது வீட்டார்தான் பாவம்... மழையில் தொப்பலாக நனைந்தே விட்டனர். ஆனால், சால்வை வியாபாரி யும் அவர் கொண்டு வந்த சால்வை மூட்டையும் நனையவே இல்லை.
மறு நாள்! மழை நின்றுவிட்டிருந்தது. யோக பரமானந்தர் தனக்கு செய்த மிகப் பெரிய உபகாரத்தை எண்ணி நெகிழ்ந்து போன வியாபாரி, தனது அன்பின் அடையாளமாக விலையுயர்ந்த சால்வை ஒன்றை, யோக பரமானந்தருக்கு வழங்கி விட்டு, வேறு ஊருக்குக் கிளம்பினார். இதையடுத்து, அந்த சால்வையை இடுப்பில் கட்டிக் கொண்டு தனது அன்றாட வழிபாட்டில் ஈடுபட்டார் யோக பரமானந்தர்.
அவ்வளவுதான்! அவரது மனம் வழிபாட்டில் ஈடுபடவே இல்லை. தான் அணிந்துள்ள சால்வையை பிறர் கவனிக்கிறார்களா என்ற எதிர்பார்ப்பு ஒரு புறம்; விலையுயர்ந்த சால்வை அழுக்காகி விடுமோ என்ற கவலை மறுபுறம்! இப்படி அவரது மனம் இங்கும் அங்குமாக அலை பாய்ந்தது. எப்போதும் போல், சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்காமல், பெண்கள் நமஸ்கரிப்பது போல வணங்கினார். காரணம்... சால்வை அழுக்காகி விடுமாம்!
பின்னர் வீட்டுக்கு வந்த யோக பரமானந்தர், தனது செயலை நினைத்துப் பார்த்துக் கூனிக் குறுகிப் போனார். அவருக்கே வெட்கமாக இருந்தது. தன் மீதே வெறுப்பு கொண்டார். 'இத்தனை வருடங்களாக செய்து வந்த வழிபாட்டை, கேவலம் ஒரு சால்வை இப்படிக் கவிழ்த்து விட்டதே...' என்று எண்ணி வேதனைப்பட்டார்.
தானே தனக்கான தண்டனையை விதித்துக் கொள்வது என்று முடிவு செய்தார். சால்வையை வீதியில் எறிந்து விட்டு, கால் போன போக்கில் நடந்தார் யோக பரமானந்தர்.
வழியில், வயல்வெளி ஒன்றில்... இரு காளைகள் ஏர் உழுவதைக் கண்டார். உடனே, அந்த ஏரில் தன்னையும் கயிறால் பிணைத்துக் கொண்டார். 'என் சரீரம், மாடு செல்லும் வழியில், கல்லிலும் முள்ளிலுமாக புரளட்டும்' என்று நினைத்தார். அந்த நிமிடமே கயிறு பட்டென அறுந்தது. அங்கே பகவான் கிருஷ்ணர் நின்று கொண்டிருந்தார்.
யோக பரமானந்தர், கண்களில் நீர் வழிய பகவானை நமஸ்கரித்தார்: ''நான் செய்த பிழைக்கு இந்தத் தண் டனை சரியானதுதான்'' என்றார்.
அதற்கு கிருஷ்ணர், ''தினமும் எழுநூறு முறை என்று பல வருடங் களாக என்னை நீ சேவித்திருக்கிறாய். அப்படியிருக்க, இந்த சரீரம் உனக்கு எப்படி சொந்தமாகும்? ஆக, உனது சரீரம் என்னுடையதே! உன் இஷ்டத்துக்கு இந்த சரீரத்தை தண்டிக்க உனக்கு எந்த உரிமையும் இல்லை'' என்று கூறியதுடன் அவருக்கு அருளை வாரி வழங்கினார்.
நாமும் இறைவனை இதுபோல் தினமும் வணங்கினால், நம் வாழ்வில் தினம் தினம் திருநாள்தான்!

Comments